Search This Blog

Friday, February 03, 2012

நேர்மையான வீரர் தோனி!


ரன் அவுட் ஆன இங்கிலாந்து வீரர் இயன் பெல்லைத் திரும்ப ஆட அழைத்தது தோனிக்குப் பிரமாதமான பாராட்டுகளைத் தேடித்தந்தது. இப்போது, சர்வதேச விளையாட்டு ஊடகசங்கம், தோனியை நேர்மையான விளையாட்டு வீரருக்கான விருதுக்குத் தேர்வு செய்திருக்கிறது. ஏப்ரல் 4-ல், ஐபிஎல் போட்டி தொடக்கவிழாவின்போது இவ்விருது தோனிக்கு வழங்கப்படும். 

இந்திய ஹாக்கி அணி, இந்த வருட லண்டன் ஒலிம்பிக்குக்கு இன்னும் தேர்வாகவில்லை. இதற்கான தகுதிச் சுற்றுப் போட்டி, டெல்லியில் பிப்ரவரி 18-26 வரை நடைபெற இருக்கிறது. இந்தியா, சர்வதேச அளவில் 10வது இடத்தில் இருக்கிறது. ஒலிம்பிக்கில் 12 அணிகள் ஆடவுள்ளன. இதில், 9 அணிகள் ஏற்கெனவே தேர்வுசெய்யப்பட்டு விட்டன. மீதமுள்ள 3 இடங்களுக்குத் தான் தகுதிச்சுற்றுப் போட்டிகள். 


இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் மீண்டும் ஃபார்முக்குத் திரும்பியிருக்கிறார் ரிக்கி பாண்டிங். இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கடும் நெருக்கடிக்கு மத்தியில் சதமடித்த பாண்டிங், ‘என் வாழ்க்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சமீபத்தில் கடும் நெருக்கடிக்கு ஆளானேன். அதனால் கடுமையாக உழைத்தேன். நான் பெருமை மிக்க மனிதன். கிரிக்கெட்டில் இருந்து விலகும்போது அதே புகழோடு வெளியேற விரும்புகிறேன். ரன் குவிக்கும் வேட்கை குறைந்தால் கிரிக்கெட்டில் இருந்து விலகிவிடுவேன்’ என்று கூறியிருக்கிறார்.

2012 ஐபிஎல்-லில் பல நட்சத்திர வீரர்கள் பங்குபெற மாட்டார்கள் என்று தெரிகிறது. ஏப்ரல் 4-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் மே 27-ம் தேதி முடிகிறது. மொத்தம் 9 அணிகள் பங்கேற்கின்றன. 12 நகரங்களில் மொத்தம் 76 போட்டிகள் நடத்தப்படவுள்ளன. ஆனால், ஐபிஎல் நடக்கும் சமயத்தில், இலங்கை - இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள் - ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத்தீவுகள் - இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கிடையே போட்டிகள் நடைபெறவுள்ளன. இதனால் அந்த நாட்டு வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதில் சிக்கல் ஏற்படப்போகிறது. 

No comments:

Post a Comment