Search This Blog

Tuesday, February 21, 2012

ஜகம் நீ... அகம் நீ..! -1

'சின்ன காஞ்சிபுரத்துல, வரதராஜபெருமாள் ஸ்வாமி கோயிலில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவுல, தென்கிழக்கே, வேகவதி ஆற்றுக்கும் பாலாற்றுக்கும் இடையிலே இருக்கிற சிற்றூர்தான் தேனம்பாக்கம்.1952-ல், தெற்கே யாத்திரை எல்லாம் முடிஞ்சு, மகா பெரியவா காஞ்சி புரம் திரும்பினார். காஞ்சிபுரம் வர்ற வழியிலே பாழடைஞ்சு, சிதிலமாகிக் கிடந்த ஒரு கோயிலைப் பார்த்தார்!' என்று ஆரம்பித்தார், சங்கர பக்த ஜன சபாவின் செயலர் ஜி.வைத்தியநாதன்.  ஸ்ரீகாமாட்சி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயில் அது. சிவபெருமானை பிரம்மா பூஜை பண்ணின புண்ணிய ஸ்தலம்! 'இப்படி சிதிலம் அடைஞ்சு கிடக்கே...’ என்று மகா பெரியவாக்கு முதலில் ரொம்பவும் தாபமாக இருந்தது. கஜ பிருஷ்ட விமானம் உள்ள விசேஷமான கோயில் அது. அதாவது, யானையின் பின்புறம் போல அந்தக் கோயில் விமானமும் கோஷ்டமும் அமைஞ்சிருக்கும். காஞ்சி எல்லை வரையில், காமாட்சியைத் தவிர வேறு அம்பாளே கிடையாது. அதனால் அதை, காஞ்சிபுரம் எல்லை என்றுதான் சொல்வார்கள்.பெரியவா பார்த்தபோது, அந்தக் கோயிலைச் சுற்றி ஒரே காடாக இருந்தது.  பூச்சி பொட்டெல்லாம் நிறைய இருந்தது. கோயிலும் நல்ல நிலைமையில் இல்லை. ஆனா, பெரியவா மனசை யாரால புரிஞ்சுக்க முடியும்?  

'நான் இங்கயேதான் தங்கப் போறேன்’னு தீர்மானமா சொல்லிட்டார், பெரியவா. கோயிலைச் சுத்தம் பண்ணி, சின்னதா ரூம் ஒண்ணு கட்டி, கொட்டகையும் போட ஏற்பாடு ஆச்சு. 1954-ல், ஜெயேந்திரர்கிட்ட மடத்துப் பணிகளை ஒப்படைக்கிறவரைக்கும், அடிக்கடி தேனம்பாக்கம் வந்து போய்க் கொண்டிருந்தா பெரியவா. அதுக்கப்புறம் கிட்டத்தட்ட இருபது வருஷம் போல, அங்கேயேதான் பெரியவா தங்கியிருந்தார்!  அங்கே, பிரம்மா ஸ்நானம் பண்ணின பிரம்ம தீர்த்தமும் இருந்துது. அதுலதான் பெரியவா தினமும் ஸ்நானம் பண்ணுவார். அங்கேயே தங்கிண்டு,அனுதினமும் ஈஸ்வர தரிசனம் பண்ணிண்டு இருக்கிறதுன்னு பெரியவா தீர்மானம் பண்ணிட்டார். அங்கே நிறைய வி.ஐ.பி. எல்லாம் வந்திருக்கா. க்ரீஸ் தேசத்து ராணி எப்போ இந்தியா வந்தாலும் பெரியவரை தரிசனம் பண்ணாமல், ஓரிரு வார்த்தை பேசாமல் போக மாட்டார்.  இந்திராகாந்தி வந்து பெரியவாளைத் தரிசனம் பண்ணினதும் இங்கேதான்.அந்த இடம் அப்போ குருக்கள் அதாவது சிவாச்சார்யர்கள் ஆதிக்கத்தில் இருந்தது. இந்து சமய அறநிலையத்துறைகிட்டே இல்லே. அதனால், சிவாச்சார்யர்கிட்டே சொல்லி, குருக்கள் ஆதீனத்தில் இருந்த அந்த பாத்யதையை, அதாவது உரிமையை சங்கரபக்த ஜன சபா பேரில் பெரியவா ரிஜிஸ்தர் பண்ணிட்டார். அங்கே நித்திய பூஜைக்கான ஏற்பாடுகளைக் கவனிக்க ஒரு டிரஸ்ட்டும் அமைச்சார். இரண்டு கால பூஜை, அன்னாபிஷே கம் எல்லாம் ஒழுங்கா பண்ற மாதிரி ஏற்பாடு பண்ணினார்.  

பெரியவா வந்து மாடிப் படியிலே நின்னு, கோபுர தரிசனம் பண்ண வாகா வசதி பண்ணியிருந்தா. ஒரு வருஷ காலம் பெரியவா அந்த அறையை விட்டு வெளியே வரவே இல்லே. அவரே அடுத்தாப்பல இருந்த கிணத்துலே இருந்து, தானே ஜலம் சேந்தி எடுத்துப்பார். அங்கே ஒரு கதவைத் திறந்தால், பிள்ளையாரை தரிசிச்சுடலாம். ஒரு கவுன்ட்டர் மாதிரி சின்ன இடம் பண்ணி இருந்துது. அது வழியாத்தான் பெரியவாளுக்கு நித்யம் பிட்சை கொடுப்போம். அவரும் ஆகாரம் பண்ணிட்டு, பிட்சைப் பாத்திரத்தை அங்கே கவுன்ட்டரில் வச்சுடுவார்.அங்கே ஸ்ரீவிஷ்ணு துர்கை விசேஷம்! நவராத்திரி ஒன்பது நாளும் கோலாகலமா இருக்கும். இன்னொண்ணு, இங்கே ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி சிரிச்ச முகத்தோடு இருப்பார். தன்னைப் பார்க்க வரவா கிட்டே எல்லாம், 'கொஞ்சம் கிட்டே போய் தக்ஷிணாமூர்த்தி முகத்தைத் தரிசனம் பண்ணிட் டுப் போங்கோ!’ என்பார் பெரியவா.இது 54-ல் சிவராத்திரி அன்னிக்கு நடந்தது. ஓம் ராமச்சந்திர அய்யர்னு ஒரு பக்தர்... அகஸ்தியர் நாடி ஜோஸ்யத்தில் அவருக்கு ரொம்பவே நம்பிக்கை. அவர் அங்கே வந்து நாடியைப் படிச்சுட்டு, 'பெரியவா அன்னிக்கே அங்கே சமாதி ஆகிடுவா’ அப்படின்னார்.பெரியவா உடனே, 'நீங்கபாட்டுக்கு அங்கே பூஜை பண்ணிண்டிருங்கோ. நான் இன்னிக்குச் சாயங்காலத்துக்குள்ளே செத்துப் போயிடுவேன்னு இவர் சொல்றார். நான் இதோ, இங்கேயே இருக்கேன்!’ அப்படின்னு அங்கேயே உட்கார்ந்துட்டார். நாங்கள்லாம் பதறிப் போயிட்டோம். ஆனா,  நல்ல காலம்... அப்படியெல்லாம் விபரீதமா ஒண்ணும் நடக்கலே. பெரியவா அதுக்கப்புறம், 40 வருஷ காலம், 94-ஆம் வருஷம் வரை நம்மோடு இருந்து, நமக்கெல்லாம் அனுக்கிரஹம் பண்ணினார். அந்த இடத்திலே, பெரியவா ஸித்தியானப்புறம் சின்னதா ஒரு கோயில் கட்டியிருக்கோம். கருங்கல்லிலேயே கட்டினது. உள்ளே பெரியவாளோட மார்பிள் விக்கிரகம். அதற்கும் கும்பாபிஷேகம் நடத்தியாகி விட்டது. பெரியவாளுக்கு குலதெய்வம், சுவாமிமலை ஸ்ரீசுவாமிநாத ஸ்வாமி. பெரியவாளின் பூர்வாஸ்ரமப் பெயரும் சுவாமி நாதன்தானே! அதனால, அங்கே ஸ்ரீசுவாமிநாத ஸ்வாமிக்கும் ஒரு கோயில் கட்டி, கும்பாபிஷே கமும் பண்ணிட்டோம்.  பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்கும் அஞ்சு தடவை கும்பாபிஷேகம் பண்ணிட்டோம். தேனம்பாக்கத்தில், இந்திரா காந்தி வந்து பெரியவாளைத் தரிசனம் பண்ணினா இல்லையா... கிணத்தடியிலேதான் அவர் அந்தப் பக்கமும், பெரியவா இந்தப் பக்கமுமாக உட்கார்ந்தார்கள்.   பெரியவா பேசவே இல்லே. முதல்ல இந்திராகாந்தியை உட்காரச்சொன்னார். ஆனா, பெரியவா உட்கார்ந்த அப்புறம்தான் உட்காரு வேன்னு நின்னுண்டிருந்தார் இந்திராகாந்தி. கையை உயர்த்தி ஆசீர்வாதம் பண்ணினார் பெரியவா.  அதுவே தனக்குக் குறிப்பா ஒரு செய்தி சொல்றாப்பல இருந்துது இந்திராகாந்திக்கு. அதுவரை பசுமாடு - கன்று சின்னம் வச்சுண்டிருந்தார் தன்னோட காங்கிரஸ் கட்சிக்கு. அதைத்தான் முடக்கிட்டாளே! அதனால பெரியவா ஆசிர்வாதம் பண்ணின கை மனசுல பதிஞ்சு போகவும், கையையே தன் கட்சிக்குச் சின்னமா வச்சுட்டார். அவர் வந்து உட்கார்ந்திருந்த இடத்திலே அடையாளமா ஒரு சிவப்புக் கல் பதிச்சு வைக்கத் தீர்மானிச் சிருக்கோம்.
மகா சுவாமிகளுக்கு மனசுக்கு ரொம்பவும் பிடிச்ச இடம், தேனம்பாக்கம். இன்னும் நிறைய விசேஷங்கள் நடந்திருக்கு இங்கே. ஒவ்வொண்ணா சொல்றேன்!' என்றார் வைத்தியநாதன்.
சாருகேசி  
விகடன்

No comments:

Post a Comment