Search This Blog

Tuesday, May 31, 2011

அறிவியல் - விண்வெளி அன்னம்


நிலா இல்லாத வானத்துல அழகு இல்லைதான். ஆனா, வீனஸ் என்னும் வெள்ளி கிரகத்துக்கும், புதன் கிரகத்துக்கும் நிலாவே கிடையாது. பூமிக்கு ஒரு நிலா; செவ்வாய்க்கு இரண்டு; நெப்டியூனுக்கு 13, யுரேனஸ் கிரகத்துக்கு 27; சனிக்கு 30; ஜூபிடர் என்கிற வியாழனுக்கு 63 என்று நிலாக்கள். ‘

அன்னக் கூட்டம்

வானத்தில் அன்னப் பறவையா? விண்வெளியில் வட பகுதியில் அமைந்திருக்கும் நட்சத்திரத் தொகுதி ‘சிக்னஸ்’ (cygnus) எனப்படுகிறது. வடசிலுவை (northern cross) எனவும் குறிப்பிடுகின்றனர். இதில் மொத்தம் 88 நட்சத்திரத் தொகுதிகள் உள்ளன. அதில் ஒன்றுதான் ‘சிக்னஸ்’. கிரேக்க மொழியில் இதற்கு ‘அன்னம்’ எனப் பொருள். இதில் ஒன்பது நட்சத்திரங்கள் உள்ளன. சிக்னஸில் உள்ள மிகப் பிரகாசமான நட்சத்திரம் டெனிப் (Deb Neb). இது சூரியனைவிட சுமார் 60,000 மடங்கு பிரகாசமானதாம். அட, ஆச்சரியமான அன்னப் பறவை!


450 கோடி ஆண்டுகள்

450 கோடி ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருப்பது நம் சூரியன். இதனுடைய மொத்த ஆயுட்காலம் சுமார் 1000 கோடி ஆண்டுகள் என்கிறார்கள். வாயுப் பொருள்களால் ஆன சூரியன், நெருப்புக் கோளம். நிறம், வெள்ளை. ஆனால், பூமியின் மேற்பரப்பிலிருந்து பார்க்கின்றபோது, இது மஞ்சளாகத் தெரிகிறதாம். இதில் ஹைட்ரஜன் 73.46 சதவிகிதம், ஹீலியம் 24.85 சதவிகிதம் உள்ளன. இவை தவிர ஆக்சிஜன், கார்பன், இரும்பு, சல்பர், நியான், நைட்ரஜன், சிலிகான், மக்னீஷியம் போன்ற தனிமங்களும் காணப்படுகின்றன. பூமியிலிருந்து 150 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

இறங்குவது எங்கே?

ஜூபிடர் கோளில் விண்கலன்கள் இறங்கும் வகையிலான தரை போன்ற மேற்பரப்பு இல்லையாம். இது வாயுக்களால் சூழப்பட்டுள்ள கோள். இதைப் பற்றிக் குறிப்பிடுகின்றபோதே ‘பெரிய வாயுப்பந்து’ (gas giant) என்கிறார்கள். இதன் சுற்றுப்புறத்தில் சுமார் 75 சதவிகிதம் ஹைடிரஜன், 24 சதவிகிதம் ஹீலியம் காணப்படுகின்றன. தவிர மீத்தேன், அமோனியம், ஈத்தேன், நீர், ஹைடிரஜன் டியூட்ரைட் போன்றவையும் காணப்படுகின்றன. தமிழில் வியாழன் என அழைக்கப்படும் இந்தக் கோள், சூரியனிலிருந்து 77,28,00,000 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. பூமியைவிட 11 மடங்கு பெரியது. சரி;

முனைவர் ஆசுரா


மீண்டும் டிஸ்கவர் 125

மிடில் கிளாஸ் மக்களின் சூப்பர் பைக் மார்க்கெட்டான 125 சிசி செக்மென்ட் டில், மீண்டும் தனது டிஸ்கவரைக் களமிறக்கியிருக்கிறது பஜாஜ். 

2004-ம் ஆண்டு பஜாஜ் அறிமுகப்படுத்திய டிஸ்கவர் 125 சிசி பைக் செம ஹிட். ஆனால், மார்க்கெட்டில் மிகவும் வெற்றி பெற்ற பைக்காக இருந்த இதை, எக்ஸீட் 125 சிசி பைக்கை அறிமுகப்படுத்தி டிஸ்கவரின் விற்பனையை நிறுத்திவிட்டது பஜாஜ். ஆனால், தற்போது விற்பனையில் இருக்கும் பஜாஜின் ஒரே 125 சிசி பைக்கான பிளாட்டினா 125, வாடிக்கையாளர்களிடம் ஹிட் ஆகாததால், மீண்டும் இப்போது 125 சிசி டிஸ்கவரை விற்பனைக்குக் கொண்டு வந்துவிட்டது.


2009-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட டிஸ்கவர் 100 அதிக மைலேஜ் தரும் பைக் என்பதால், நாடு முழுவதும் மாதந்தோறும் சுமார் 80 ஆயிரம் பைக்குகள் விற்பனையாகி வருகிறது. அதேபோல், 2010-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட டிஸ்கவர் 150 சிசி பைக்கும் மாதந்தோறும் சுமார் 35 ஆயிரம் பைக்குகள் வரை விற்பனையாகிறது. ஸ்ப்ளெண்டருக்கு அடுத்தபடியாக டிஸ்கவர் பைக்தான் உலகிலேயே அதிகமாக விற்பனையாகும் பைக். ஆனால், 100 சிசி மற்றும் 150 சிசி பைக்குக்கு இடையே பெரிய இடைவெளி இருப்பதாலும், வாடிக்கையாளர்கள் டிஸ்கவர் 125 சிசி பைக்கை விரும்புவதாலும், மீண்டும் டிஸ்கவர் 125 சிசி இப்போது விற்பனைக்கு வந்திருக்கிறது.  

தோற்றத்தில் பொதுவாக 100, 150 சிசி பைக் போலவே இருந்தாலும், ஸ்டிக்கர் மாற்றங்களில் தன்னை வேறுபடுத்திக் கொள்கிறது டிஸ்கவர் 125.



124.6 சிசி திறன் கொண்ட இது, 8000 ஆர்பிஎம்மில் அதிகபட்சமாக 10.8 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. இதன் அதிகபட்சமாக 5500 ஆர்பிஎம்-ல் 1.1 kgmடார்க்கை வெளிப்படுத்துகிறது. மேலும் இது டிஸ்க் மற்றும் டிரம் பிரேக் ஆப்ஷன்களுடன் விற்பனைக்குக் கிடைக்கிறது. 5-ஸ்பீடு கியர் பாக்ஸைக் கொண்ட டிஸ்கவர் 125 மைலேஜ் மற்றும் பர்ஃபாமென்ஸ் இரண்டிலுமே டாப் - கிளாஸாக  இருக்கும் என்கிறது பஜாஜ்.


100, 150 சிசி டிஸ்கவர் பைக்குகளுக்கிடையே, இப்போது அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் 125 சிசி பைக்கான டிஸ்கவர் நிச்சயம் மார்க்கெட்டில் வெற்றி பெறும் என்றே எதிர்பார்க்கலாம். விலையும் குறைவு என்பது இதன் மிகப் பெரிய ப்ளஸ் ஆக இருக்கிறது!


Monday, May 30, 2011

மாயமாய் மறையும் தீவுகள்!


பிற நாடுகள் சிலவற்றில் அந்த விபரீதம் நடந்தபோது பரிதாபப்பட்டுக் கொண்டிருந்தோம். ‘சிட்டிஸன்’ படத்தில் அத்திப்பட்டி என்ற கிராமமே இந்திய வரை படத்திலிருந்து மறைந்ததைக் கண்டபோது ‘சுவாரஸ்யமான சினிமாக்கதை’ என்று கருதினோம். எல்லாமே உண்மையாகி வருகிறது. தீவுகள் மறைந்து கொண்டு வருகின்றன.

மால்டீவ்ஸ் எனப்படும் மாலத்தீவுகளின் அருகே உள்ள கடலின் மட்டம் உயர்ந்து கொண்டே வருவதால் 2100ல் அந்த நாட்டுக்குப் பெரும் பாதிப்பு உண்டாக வாய்ப்புண்டு. சொல்லப்போனால் அந்த நாடே இல்லாமல் போய்விடும் அபாயமும் எழுந்திருக்கிறது. எனவே அந்தத் தீவுகளின் அதிபர், இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா என்று பல நாடுகளில் நிலம் வாங்கிப் போடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.????

இதற்கு ஒரு முன்னோட்டம் மாதிரி தமிழகத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்பு தாக்கிய சுனாமி மாலத்தீவுகளை மேலும் அதிகமாகவே தாக்கியிருக்கிறது.சென்ற அக்டோபர் மாதத்தில், உலக வெப்பமயமாக்கலால் தன்னைப் போன்ற நாடுகளுக்கு ஏற்பட்டிருக்கும் அபாயத்தை உணர்த்தும் வகையில், ‘உலகின் முதல் கடலுக்குக் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட அமைச்சரவை’ மாலத்தீவுகளில் நடத்தப்பட்டது.


பசிபிக் கடலின் நடுப்பகுதியில் அமைந்த தீவு நாடு தூவாலு. ‘அந்தத் தீவு விரைவில் மூழ்கிவிடும்’ என்று கூறுகின்றன சில ஆராய்ச்சிகள். அலைகள் மேலும் உயரமாக அந்த நாட்டின் கரையை மோதிக் கொண்டிருக்கின்றன. கடற்கரைப் பரப்பு குறைந்து கொண்டே வருகிறது. தேசத்தையே கடல் காவு வாங்கும் நாள் அதிகமில்லை. தூவாலுவைச் சேர்ந்த பலரும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்குக் குடிபெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். 


மன்னார் வளைகுடாவிலுள்ள இரண்டு தீவுகள் கடந்த சில மாதங்களில் காணாமல் போய்விட்டிருக்கின்றன. அவை பூமரிச்சான் மற்றும் விலங்குசல்லி ஆகிய தீவுகள். பவழத்தீவுகளில் நடைபெற்ற அளவுக்கதிகமான சுரங்க செயல்பாடுகள் இதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் சுற்றுச் சூழல் விஞ்ஞானிகளின் கருத்து உலக வெப்பமயமாக்கலின் விபரீத விளைவுதான் இது என்பதாக இருக்கிறது. ஆக, இனி இந்திய வரைபடத்தில் சில புள்ளி நிலப் பகுதிகள் இடம்பெறாது. 

மன்னார் உயிரிவெளி (biosphere) பகுதியை நான்காகப் பிரித்திருக்கிறார்கள். இவை தூத்துக்குடி, வேம்பார், கீழக்கரை, மண்டபம். மறைந்த பூமரிச்சான் தீவு மண்டபம் பகுதியைச் சேர்ந் தது. விலாங்குசல்லி தூத்துக்குடியைச் சேர்ந்தது. கடல் மட்டம் உயர்ந்து இந்தத் தீவுகளை காவு கொண்டிருக்கிறது. பவளத்திட்டுகள் ஒரு தடுப்புச்சுவர் போலச் செயல்பட்டு விசையுடன் வரும் அலைகளால் தீவுகள் அரிக்கப்படாமல் பாதுகாக்கின்றன. அந்தத் திட்டுகள், சுரண்டப்பட்டு அரிக்கப்படும் போது அரண் போலப் பாதுகாக்கும் தீவுகள் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்று.

பவளத்திட்டுகளையும் சதுப்புநிலக் காடுகளையும் (Mangrove forests) பாதுகாக்கும் விதத்தில் அந்தப் பகுதிக்குள் நுழையத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை பெயரளவில்தான். மீனவர்களும் சுற்றுலாப் பயணிகளும் இரு வேறு காரணங்களுக்காக இந்தத் தடையை தினமுமே மீறிக்கொண்டிருக்கிறார்கள். 2006 டிசம்பரிலேயே எச்சரிக்கை மணி ஒன்று இந்தியாவில் ஏற்கெனவே ஒலித்தது. முதன் முறையாக மக்கள் வாழும் தீவு ஒன்று மறைந்தது. கங்கையும் பிரம்மபுத்திராவும் பாயும் பகுதியான சுந்தரவனக் காடுகளில் தேமே என்று இருந்தது லோஹசரா தீவு. ஆம், இருந்தது. இப்போது இல்லை.  

Sunday, May 29, 2011

காளான் வளர்ப்பு ..


சைவ பிரியர்களுக்கு மட்டுமல்ல, இப்போ தெல்லாம் அசைவ பிரியர்களுக்கும் பிடித்த உணவாகிவிட்டது காளான். நாக்கிற்கு நல்ல சுவை, உடலுக்கு நல்ல சத்து தரும் உணவாக இருக்கும் இதில், வைட்டமின் சி மற்றும் டி அதிகளவிலும் மற்றும் தாது வகைகளான இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பேட், காப்பர் மற்றும் பொட்டாசியம் சத்துகளும் இருக்கின்றன. பல்வேறு சத்துக்களும் சரியான விகிதத்தில் இதில் கலந்திருப்பதால் ஒரு பர்ஃபெக்ட்டான சரிவிகித உணவாகவும் சிபாரிசு செய்கிறார்கள் டயட்டீஸியன்கள்.

காளானில் பட்டன் காளான், பால் காளான் மற்றும் சிப்பி காளான் என பலவகை இருக்கிறது. இதில் சிப்பி காளான் வளர்ப்பது சுலபமானது.

சந்தை வாய்ப்பு!


காளான் வளர்ப்பு வளர்ந்த நாடுகளில் ஏற்கெனவே வர்த்தக அந்தஸ்தை பெற்றுவிட்டது. தற்போது வளரும் நாடுகளிலும் இந்த தொழிலுக்கு நல்ல வர்த்தக வாய்ப்பு உருவாகி வருகிறது.சூப் தயாரிக்க, காய்கறிகளுடன் சேர்த்து சமைக்க, வெஜிடபிள் பிரியாணி செய்ய, ஊறுகாய் செய்ய என  பல வகைகளில் உணவுப் பிரியர்களால் விரும்பப் படுகிறது. காளான் பவுடர் பால் கொதித்த நீரில் கலந்து டானிக்காக குடிக்கவும் பயன்படுகின்றது.பெரிய நகரங்களில் இப்போது அதிகளவில் காளான் பயன் படுத்தப்படுவதால் நகரங்களில் காளான் வளர்ப்பு யூனிட் அதிகளவில் வரத் துவங்கியுள்ளது. தவிர, காளான் வளர்ப்பில் இன்னமும் பலரது கவனம் அதிக அளவில் விழாததால், இத்தொழி லுக்கு இப்போது நல்ல சந்தை வாய்ப்பு இருக்கிறது.

 

உற்பத்தி முறை


தரமான சிப்பி காளானை உற்பத்தி செய்ய வேண்டும் எனில், அதனை சிறந்த முறையில் வளர்க்க வேண்டும். அதாவது, சிறந்த மூலப்பொருள் மற்றும் சரியான வெப்பநிலை போன்றவை காளான் வளர்ப்புக்கு அத்தியாவசிய தேவைகள் ஆகும். 20 முதல் 25 சென்டிகிரேடு வெப்பநிலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சிப்பி காளான் தயாரிக்க வைக் கோலை அதற்கென இருக்கும் பிரத்யேக இயந்திரத்தில் போட்டு வேக வைக்க வேண்டும். பிறகு அதனை 50% காய வைத்து பாலித்தீன் கவரில் போட வேண்டும். இதே கவருக்குள் காளான் விதையையும் போட்டு கட்டி தொங்கவிட வேண்டும். 300 கிராம் எடை கொண்ட காளான் விதைக்கு நான்கு கிலோ வைக்கோல் போட வேண்டும். இது ஒரு பாலித்தீன் பைக்கான அளவு.

இதற்கென பிரத்யேகமாக  550 சதுர அடிக்குள் தென்னை ஓலையால் குடிசைக் கட்ட  வேண்டும்.  கீழே தரையில் ஆற்று மணலைப் பரப்பி அதில் தண்ணீர் ஊற்றி வரவேண்டும். இந்த சூழ்நிலை காளான் வளர்ப்பிற்கு ஏற்ற தட்டவெப்ப நிலையைக் கொடுக்கும். விதைகள் போட்டிருக்கும் பாலிதீன் பைகளில் 20 ஓட்டை போட வேண்டும்.இந்நிலையில் 30-35 நாட்களுக்குப் பிறகு சிப்பி காளான் வெளியில் வர தொடங்கும். காலை இரண்டு மணிநேரம் மாலை இரண்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். முளைத்திருக்கும் காளானை மாலையில் அறுவடை செய்தால் மறுநாள் காலையில் பயன் பாட்டிற்கு கொண்டு போய் சேர்த்துவிட வேண்டும். காளான்களை அறுவடை செய்ததும் உடனடியாக சப்ளை செய்துவிட வேண்டும் என்பது முக்கியமான விஷயம். 

நிலம் மற்றும் கட்டடம்

10 கிலோ காளான் உற்பத்தி செய்ய 700 சதுர அடி நிலம் தேவைப்படும். நிலத்தில் குடிசை கட்டுவதற்கு 2.50 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.

இயந்திரம்   

ஒரு நாளைக்கு 350 கிலோ வீதம் ஆண்டுக்கு 300 நாட்கள் வேலை செய்தால் 105 டன் காளான் தயாரிக்க முடியும். வைக்கோலை வேக வைக்கப் பயன்படுத்தப்படும் இயந்திரமான ஆட்டோகிளேவ் சென்னை, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் கிடைக்கிறது.

தண்ணீர்

தினமும் 15 ஹெச்.பி. மின்சாரம் மற்றும் 1,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். தண்ணீர் தொடர்ந்து கிடைக்கும்படி இருக்க வேண்டும்.

ஃபைனான்ஸ்

இந்த உற்பத்தி திறனுக்கான நிலத்திற்கு 60,000 ரூபாய் (தேர்ந்தெடுக்கப்படும் இடத்தைப் பொறுத்து விலை மாறுபடும்), கட்டடம் 2,50,000 ரூபாய் என மொத்தம் 3,10,000 ரூபாய் தேவை. இயந்திரத்திற்கான செலவு 1.98 லட்சம் ரூபாய்.

    

ரிஸ்க்

காளான் வளர்க்கும் இடம் மிகவும் சுத்தமாக இருப்பது அவசியம். காரணம், அசுத்தமான கையுடன் வேலை செய்தால்கூட பாக்டீரியாவால் பாதிப்படைந்து காளான் ஒழுங்காக வளராமல் கெட்டுப்போக வாய்ப்புண்டு. ஒரு பாலித்தீன் கவர் கெட்டு போனால்கூட அனைத்து பாலித்தீன் கவரும் கெட்டுப் போய்விடும். கோடை காலத்தில் வெயில் அதிகமாக இருக்கும், எனவே குறைந்த அளவே காளான் உற்பத்தியாகும். இதனை சரி செய்ய மற்ற நேரங்களில் காலை, மாலை மட்டும் தெளிக்கும் தண்ணீரை வெயில் நேரங்களில் நாள் முழுவதும் தெளிக்க வேண்டும். சொட்டு நீர் பாசன முறையில் தண்ணீரை விட்டு வந்தால் காளான் வளரத் தேவையான தட்பவெப்ப நிலை கிடைக்கும். பனிக் காலத்திலும் காளான் வளர்வது குறையும்.

பிளஸ்

அசைவ உணவுகளுக்கு மாற்றாக மட்டுமின்றி சர்க்கரை நோய் உள்ளவர்களும் காளானைப் பயன்படுத்துகிறார்கள். சர்க்கரை நோயைக் குணப்படுத்த தயாரிக்கப் படும் மாத்திரைகளில் காளான் பொடிகள் பயன்படுத்தப்படுகிறது என்பது முக்கியமான விஷயம்.

நல்ல ஏற்றுமதி வாய்ப்பு உள்ள இத்தொழிலில் பெண்கள் அதிகளவில் ஈடுபட வாய்ப் புள்ளது. தற்போது அதிக எண்ணிக்கையில் காளான் உற்பத்தி யூனிட்டுகள் இல்லாத தால் இத்தொழிலுக்கு பிரகாச மான எதிர்காலம் இருப்பதை மறுக்க முடியாது!

நன்றி : ITCOT Consultancy..   

  

Saturday, May 28, 2011

காய்களைப் பழுக்க வைக்கும் எளிய முறைகள் ......

இது மாம்பழ சீசன். விதவிதமான மாம்பழங்களை கடைகளில் அடுக்கி வைத்திருக்கிறார்கள். வாங்கி சாப்பிட ஆசையாக இருந்தாலும், பயமாக இருக்கிறது. காரணம், 'ஒரு வேளை கல் (கார்பைட்) வைத்து பழுக்க வைத்ததாக இருக்குமோ’ என்கிற அச்சம்தான். இயற்கைக்கு மாறாக, கல் பயன்படுத்தி பழுக்க வைத்த மாம்பழங்கள், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னையைக் கிளப்பி விடுகிறது. அதன் காரணமாக, இப்படி பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை அவ்வப்போது அரசு அதிகாரிகள் பறிமுதலும் செய்து வருகிறார்கள். 'இத்தகையப் பழங்களைச் சாப்பிடக்கூடாது' என்கிற விழிப்பு உணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்கள்.

 

இந்நிலையில், 'எதற்காக கல் வைத்து பழுக்க வைக்க வேண்டும்... இயற்கை முறையிலேயே பழுக்க வைப்பது எப்படி?'  

விவசாயிகள் யாரும் கல் வைத்து பழுக்க வைப்பதில்லை. தோப்புகளை குத்தகைக்கு எடுக்கும் வியாபாரிகள், அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு, காய்கள் 100% முதிர்ச்சி அடைவதற்கு முன்பாகவே, அதாவது 70 அல்லது 80% அளவுக்கு மட்டுமே முதிர்ந்த காய்களை அறுவடை செய்து விடுகிறார்கள். இந்தக் காய்கள், இயற்கையாகவே பழுக்காது, அதனால்தான் கல் வைத்து பழுக்க வைக்கிறார்கள். இதை சாப்பிடும் மனிதர்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

அத்துடன் கல் வைத்து பழுக்க வைக்கும் பழங்களில் இயற்கையானச் சுவை, தரம், நிறம் எதுவும் இருக்காது. இந்தப் பழங்களை அதிக நாள் இருப்பு வைக்கவும் முடியாது, ஆனால், இயற்கையாகவே முதிர்ந்து பழுத்த பழங்கள் நல்ல சுவை, நிறம், தரத்துடன் இருக்கும், நீண்ட நாட்களுக்கு இருப்பு வைக்கவும் முடியும்''.

காய்களை கவனமாக கையாள வேண்டும்!  

''இயற்கை முறையில் பழுக்க வைக்க, அறுவடையில் இருந்தே கவனமாக இருக்க வேண்டும். முதலில் நன்றாக விளைந்த, முற்றியக் காய்களை மட்டுமே அறுவடை செய்ய வேண்டும். நன்கு முதிர்ந்த காய்களின் காம்பு அருகே லேசாக ஒரு குழி ஏற்படும். இதை கவனித்து இந்தக் காய்களை மட்டும் அறுவடை செய்தால், அடுத்த நாளே பழுத்து விடும்.

 

அறுவடை செய்யும்போது மரத்தை உலுக்கி, காய்களை உதிர வைத்து அறுவடை செய்கிறார்கள். இது தவறான முறை. இப்படிச் செய்யும்போது காய்களில் அடிபட்டு, அந்த இடங்களில் பழம் அழுகி விடும். அறுவடை செய்த காய்களை மொத்தமாகக் கட்டி கீழே தூக்கி போடுவது போன்ற செயலையும் செய்யக்கூடாது. காயும் ஒரு உயிருள்ள பொருள் என்ற எண்ணத்தோடு கையாள வேண்டும். தற்போது, காய்களை அடிபடாமல் அறுவடை செய்வதற்காக காய்கள் பறிக்கும் வலை கிடைக்கிறது. இதை பயன்படுத்தி அறுவடை செய்யலாம். பெரியத் தோப்புகளில் அறுவடை செய்வதற்கு கிரேன் இயந்திரம்கூட இருக்கிறது. பழுக்க வைக்கும்போது, அடிபட்ட, முற்றாத காய்களை ஒதுக்கிவிட்டு, தரமான காய்களை மட்டும் பழுக்க வைத்தால், விரைவில் பழுத்து விடும்.

பால் படக்கூடாது!  

காய்களைக் கையாளும் போது, கையுறை அணிந்து கொள்ள வேண்டும். விரல்களில் நீளமாக நகம் இருக்கக்கூடாது. அறுவடை செய்த காய்களில் வழியும் பால் மற்ற காய்களில் படக்கூடாது. மாங்காய்களை அறுவடை செய்யும்போது, 10 செ.மீ அளவுக்கு காம்புடன் அறுவடை செய்தால், பால் விழுவதைத் தவிர்க்கலாம்.பிறகு, மொத்தமாக ஓரிடத்தில் வைத்து, காம்பின் அளவை ஒரு செ.மீ. அளவுக்கு விட்டுவிட்டு, மீதியை வெட்டிவிட வேண்டும். பின்பு, பழைய பேப்பரை கீழே விரித்து அதில் காம்புகள் தரையில் படுமாறு காய்களைத் தலைகீழாக அடுக்கி வைத்தால்... பால் முழுவதும் வடிந்து விடும். பிறகு, இதை எடுத்து தண்ணீரில் கழுவி, மறுபடியும் வரிசையாக அடுக்கி, ஈரம் காய்ந்ததும் அதன் மேல் சணல் சாக்கை போட்டு மூடி வைத்து விட்டால், ஒன்று அல்லது இரண்டு நாளில் பழுத்து விடும். 

வைக்கோலில் பழுக்க வைக்கலாம்! 

இயற்கையாக பழுக்க வைக்க இன்னும் சில முறைகளும் இருக்கின்றன. நாள்பட்ட வைக்கோலைப் பரப்பி, அதன் மீது காய்களை அடுக்கி, வைக்கோலால் மூடி விடவேண்டும். வைக்கோலில் கிளம்பும் வெப்பத்தினால் காய்கள் ஓரிரு தினங்களில் பழுத்து விடும்.இருட்டு அறைக்குள் காய்களை அடுக்கி வைத்து, அறையை மூடி எலுமிச்சைப் புல்லை (லெமன் கிராஸ்) எரித்து, புகையை உண்டாக்க வேண்டும். இந்தப் புகையினால் காய்கள் பழுத்து விடும். ஆனால், இம்முறையில் பழுக்க வைக்கும்போது, இயற்கையான நிறம் கிடைக்காது.சூரிய ஒளி புகாத இருட்டு அறையில் காய்களை அடுக்கி வைத்தால், அறை வெப்பம்கூடி, புழுக்கம் உண்டாகும். இதன் காரணமாகவும் காய்கள் பழுத்து விடும்.


பழுக்க வைக்கும் முன்பாக காய்களை மிதமான சுடுதண்ணீரில் அமிழ்த்தி எடுத்து, ஈரத்தைத் துணியால் துடைத்து விட்டு பழுக்க வைத்தால், விரைவில் பழுத்து விடும். கடினமானத் தோல் உள்ள ரகத்தை மட்டுமே சுடுதண்ணீரில் அமிழ்த்த வேண்டும். லேசான தோல் உள்ளவற்றை இப்படி அமிழ்த்தக்கூடாது. வேப்பம் இலை, ஆவாரம் இலை என்று ஒவ்வொரு பகுதியிலும் இயற்கையாகக் கிடைக்கும் இலை, தழைகளைப் பயன்படுத்தியும் பழுக்க வைப்பது விவசாயிகளிடம் வழக்கத்தில் இருக்கிறது. இம்முறைகளும் ஏற்றவையே! கொய்யா, வாழை போன்றவற்றையும் இயற்கை முறையில் பழுக்க வைக்க மேலே சொன்ன முறைகளையே கையாளலாம்.

முனைவர். செல்வராஜ்,
அலைபேசி: 90030-27732
முனைவர். சுப்பையா,
அலைபேசி: 94420-91219. 
பெரியகுளம், தோட்டக்கலைக் கல்லூரி

Friday, May 27, 2011

இரண்டு மாயைகள் ( கனிமொழி & சமச்சீர் கல்வி ), ஓ பக்கங்கள் - ஞாநி

1. கனிமொழி மாயை


கலைஞர் கருணாநிதி தன் 43வது வயதில் முதன்முறையாக அமைச்சரானார். அதன் பிறகு தான் நிர்வாக முறைகேடுகள், ஊழல், லஞ்ச லாவண்யம், வழக்கு, கைது எல்லாம்... அவர் மகள் கனிமொழி தன் 43வது வயதில் ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கிறார். இன்னும் அமைச்சர் பதவியைக் கூட அடையவில்லை. இதைத்தான் தமிழ் மரபில் தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாய்கிறது என்கிறார்களோ!

அரசியலுக்கு வந்த கருணாநிதியின் வாரிசுகளிலேயே ஆழமானவர், ஆபத்தானவர் கனிமொழிதான் என்று நான் அவர் பொது வாழ்க்கையில் நுழைந்த நாட்களிலிருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறேன். அழகிரியின் அதிரடிகள் பகிரங்கமானவை. எனவே எளிதில் அம்பலமாகிவிடக் கூடியவை. ஸ்டாலினுக்கு பொதுமக்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டுமென்ற ஆசை அவரை எப்போதும் எதிலும் அடக்கி வாசிக்கவே வைக்கிறது.கனிமொழிதான் கருணாநிதியின் உண்மையான அரசியல் வாரிசு. தன் அரசியல்ரீதியான அவப்பெயர்களையெல்லாம் மறைக்கும் முகமூடிகளாக ஆரம்பத்திலிருந்து கருணாநிதி தமிழையும் பகுத்தறிவையும் திறம்படக் கையாண்டு வந்திருக்கிறார். ஸ்டாலின், அழகிரி இருவரிடமும் அப்படி எந்த முகமூடியும் இல்லை. எதுவும் அவர்களுக்கு வசப்படவும் இல்லை.


கனிமொழியும் அப்பாவின் இலக்கிய முகமூடியையே தானும் அணிந்தவர். அப்பாவுக்கு சங்க காலம். மகளுக்கு சமகால கவிதை. கருணாநிதியின் எழுத்தை எப்படி ஒருபோதும் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, அசோகமித்திரன், பிரபஞ்சன் போன்றோரின் தரத்துக்கு நிகராக வைத்துப் பார்க்க முடியாதோ, அதே நிலைதான் கனிமொழியின் கவிதையும் அவரது சம காலக் கவிஞர்கள் பலரின் தரத்துக்குக் கிட்டவே நெருங்காதது.  அப்பாவின் இலக்கிய வாரிசாகவே தன்னை கனிமொழி முதலில் காட்டிக் கொண்டதால் அழகிரியும் ஸ்டாலினும் அவரைத் தங்களுக்குப் போட்டியாகக் கருதவில்லை. முரசொலி மாறனின் வாரிசாக தயாநிதி மாறன் அரசியலில் கொண்டு வரப்பட்ட பிறகு, மெல்ல மெல்ல கூடாரத்தில் மூக்கை நுழைத்த ஒட்டகமாக கனிமொழியும் நுழைவதை ஸ்டாலினும் அழகிரியும் தடுக்க முடியவில்லை. அவர்களின் ஆசியுடன் அரசியலில் தான் இருப்பதாக ஒரு பிரமையையும் கனிமொழி ஏற்படுத்தினார். ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இல்லாத ஒரு ஜாதி வளையமும் கனி மொழியின் உள்வட்டத்தில் இருந்தது.


எப்படி கருணாநிதி எப்போதும் மீடியாவுடன், பத்திரிகைகளுடன் (எவ்வளவு எரிந்து விழுந்தாலும் கடிந்துகொண்டாலும்) நட்புறவை விடாமல் வைத்துக் கொண்டே இருக்கிறாரோ அதே அணுகுமுறையை சென்னையிலும் டெல்லியிலும் கனிமொழியும் கையாண்டு வந்திருக்கிறார். அவரைப் பற்றிய சாதகமான செய்திகள், குறிப்பாக ஆங்கில மீடியாவில் வெளிவர, இந்த நட்பு பயன்பட்டிருக்கிறது. மாறன் சகோதரர்கள் கருணாநிதியின் உடல்நலத்தைப் பொருட்படுத்தாமல் அவரை தேர்தல் வேலைக்காக சிகிச்சையை தள்ளிப் போடச் செய்வதைப் பற்றி ஆங்கில ஏடுகளுக்கு தகவல்கள், செய்திகள் கனிமொழி வட்டாரத்திலிருந்து தான் கசியவிடப்பட்டன.  


ஸ்பெக்ட்ரம், ஆனைக்கும் அடிசறுக்கிய வாழைப்பழத் தோலாகிவிட்டது. அடுத்தடுத்து நடப்பவை கருணாநிதியையும் கனி மொழியையும் மேலும் மேலும் அம்பலப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. பெண்ணியவாதி பிம்பம், ஜாமீனுக்காக கோர்ட்டில் வைக்கப்படும் மன்றாடலில் நொறுங்கிப்போய் விட்டது. பெண் என்பதால், தாய் என்பதால் கருணை காட்ட வேண்டும் என்று ராம்ஜெத்மலானி மன்றாடினார்.இன்னும் சில வாதங்கள் படுவிசித்திரமானவை. நீதி மன்றத்தில் கண்ணியமாக நடந்து கொண்டதால், ஜாமீன் தரவேண்டுமாம். எந்தக் குற்றவாளியும் நீதிமன்றத்தில் ரகளை செய்வதில்லை. அமைதியாக இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பது போல கண்ணியமாகத்தான் நடந்து கொள்வார்கள். மூன்று மாதமாக ராசா கூடத்தான் நீதி மன்றத்தில் கண்ணியமாக நடந்து கொள்கிறார்.


தன் கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால், கனிமொழி சென்னையில் பள்ளிக்குச் செல்லும் தன் மகனை கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது என்பது இன்னொரு வாதம். அப்படியானால் இத்தனை ஆண்டுகளாக எப்படி அவரால் டெல்லியில் எம்.பி.யாக இருக்க முடிகிறது? சென்னையில் மகனைக் கவனிக்க வேண்டும்; டெல்லிக்கு எம்.பியாகச் செல்ல விரும்பவில்லை என்று அவர் சொன்னதே இல்லையே? மூன்று மாதங்களாக சிறையில் இருக்கும் ராசாவைப் பார்க்க டெல்லிக்குப் போகாத கருணாநிதி, கனிமொழிக்காகப் பதறிக் கொண்டு செல்கிறார். குடும்பம்தான் தனக்கு எல்லாம், குடும்பத்துக்காகத்தான் தன் அரசியல் எல்லாம் என்று திரும்பத் திரும்ப அவர் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.


ஒரு கம்பெனியின் பங்குதாரரை அதன் எல்லா நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக்க முடியாது என்று வாதாடுகிறார் கருணாநிதி. இந்த வாதப்படி அவர் அரசு, சசிகலா மீது ஒரு வழக்கு கூடப் போட்டிருக்கக் கூடாதே? குற்றம் சாட்டப்பட்ட கம்பெனிகளில் அவர் பங்குதாரர் என்பதால்தானே தி.மு.க அரசு வழக்கு தொடுத்தது?ஒரு பாவமும் அறியாதவர் கனிமொழி என்றால் ஏன் அவர் ராசாவுக்கு மந்திரி பதவி வேண்டும், அதுவும் டெலிகாம்தான் வேண்டும் என்று நீரா ராடியாவிடம் மன்றாடினார்? ஏன் அந்த டேப்புகள் பற்றி கருணாநிதியோ, கனிமொழியோ, வக்கீல் ராம்ஜெத்மலானியோ எதுவுமே சொல்வதில்லை?ஸ்பெக்ட்ரம் ஊழலில் பயனடைந்த டெலிகாம் கம்பெனிகள் ஏன் கனிமொழி இருக்குமிடம் நோக்கியே செல்கின்றன? கனிமொழி பங்குதாரராக இருக்கும் கலைஞர் டி.வி.க்கு கடன் கொடுக்கின்றன. கனிமொழி டிரஸ்டியாக இருந்த தமிழ் மையத்துக்கு நன்கொடைகள் அளிக்கின்றன? 



ஆனால், கனிமொழி கைதானது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று நிருபர்கள் கேட்டபோது, உங்கள் வீட்டில் உங்கள் பெண் ஒரு குற்றமும் செய்யாமல் சிறைக்கு அனுப்பப்பட்டால், என்ன மனநிலையில் இருப்பீர்களோ, அதே நிலையில் இருக்கிறேன் என்று தீர்ப்பை எழுதத் தயாராகிறார் கருணாநிதி.ஒரு குற்றமும் செய்யாமல் 40 வருடங்களுக்கு முன்னால் சிதம்பரத்தில் போலீஸ் வன்முறையில் செத்துப் போன கல்லூரி மாணவன் உதயகுமாரின் அப்பாவின் ஞாபகம் கருணாநிதிக்கு வராவிட்டாலும் நமக்கு வரவேண்டும். உதயகுமார் செய்த ஒரே குற்றம் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் அளிப்பதை எதிர்த்து அண்ணா மலைப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டதுதான். இறந்து கிடக்கும் உதயகுமாரின் உடலைப் பார்த்து, இது என் மகன் இல்லை என்று சொல்லும்படி கருணாநிதியின் போலீசால் நிர்ப்பந்திக்கப்பட்ட உதயகுமாரின் தந்தையின் மனநிலையை நாம் மறக்கமுடியுமா? 

தி.மு.க.வை அழிவின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தியது அவரும் அவர் குடும்பமும்தான் என்றே வரலாறு குறிக்கும். இதிலிருந்து மீள வேண்டுமானால் கருணாநிதி உருவாக்கி வைத்திருக்கும் ஒவ்வொரு மாயையிலிருந்தும் தி.மு.க தொண்டன் விடுபடவேண்டும். ஒவ்வொரு மாயையாகக் கரைந்து கொண்டிருக்கிறது.

2. சமச்சீர் கல்வி மாயை: 
சமச்சீர் கல்வித் திட்டத்தை செயல்படுத்தப் போவதில்லை என்று ஜெயலலிதா அரசு அறிவித்ததை வரவேற்றும் எதிர்த்தும் குரல்கள் எழுந்துள்ளன. தி.மு.க. அரசு அறிமுகப்படுத்தியது அசலான சமச்சீர் கல்வியே அல்ல. சமமான வசதிகள், சமமான கல்வி பயிற்று விக்கும் தரம், சமமான கல்விக் கட்ட ணம், சமமான தேர்வு முறை எல்லாம் இருந்தால்தான் சமச்சீர் கல்வி. 

தி.மு.க. அரசு செய்ய முயற்சித்ததெல்லாம் மெட்ரிக், ஸ்டேட் போர்ட், சி.பி.எஸ்.ஈ, ஆங்கிலோ இந்தியன் போர்ட் எனப்படும் பலவிதமான போர்டுகளுக்கும் பொதுவான ஒரு பாடத்திட்டத்தை அறிமுகம் செய்வது மட்டும்தான். அதில் மெட்ரிக்கில் ஏற்கெனவே இருந்ததைக் குறைத்து நீர்க்கச் செய்துவிட்டார்கள் என்பது ஒரு சாரார் குற்றச்சாட்டு. மறுபக்கம் பாடப் புத்தகங்களை சி.பி.எஸ்.ஈ முறையில் உள்ளதுபோல, உணர்ந்து படிக்கும் முறைக்கு மாற்றி எழுதியது சிறப்பானது என்பது ஒரு சாராரின் பாராட்டு.


அசல் பிரச்னை பாடப் புத்தகமோ பாடத் திட்டமோ அல்ல. பயிற்றும் முறையும் தேர்வு முறையும்தான் அசல் பிரச்னைகள். மெட்ரிக், ஸ்டேட் போர்ட் தேர்வு முறைகள் மாணவரின் மனப்பாட சக்தியை மட்டுமே சோதிக்கின்றன. கீவேர்ட்ஸ், கீ டெர்ம்ஸ் அடிப்படையில் மட்டுமே மதிப்பெண்கள் தரப்படுகின்றன. சி.பி.எஸ்.ஈ. தேர்வு முறை, சிந்தித்து சுயமாக எழுதுவதை சோதிப்பதாக இருக்கிறது. 

கூடவே மாற்றப்பட வேண்டியது பயிற்று முறை. அரசு ஆசிரியரின் சம்பளம் தனியார் ஆசிரியரைவிட பல மடங்கு அதிகமானது எனினும் எந்த தனியார் பள்ளியிலும் குறைந்த பட்சப் பயிற்றுதல் தரம் என்பது அரசுப் பள்ளியின் சராசரித் தரத்தை விட மேலாகவே இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் சிறந்த ஆசிரியர்கள் விதிவிலக்கு. தனியார் பள்ளிகளில் தரம் குறைந்த ஆசிரியர்கள் விதிவிலக்கு.  சமச்சீர் கல்வியை நோக்கிச் செல்வதற்கு அரசு கீழ்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

1. எல்லா அரசு அதிகாரிகளும் ஊழியர்களும், குறிப்பாக கல்வித்துறையில் பணியாற்றுவோர், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் வீட்டுக் குழந்தைகளை அரசுப் பள்ளியில்தான் படிக்க வைக்க வேண்டும். அப்படிச் செய்யாதவருக்கு அரசு வேலை கிடையாது. இதைச் செய்தாலே அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தில் பெரும் மாறுதல் ஏற்படும். 

2. பாடப் புத்தகங்களும் தேர்வுமுறையும் மனப்பாட அடிப்படையிலிருந்து, சிந்தித்து உணர்ந்து அறியும் அடிப்படைக்கு மாற்றப் படவேண்டும். இது எளிது. இருப்பதிலேயே சிறப்பானது என்று கல்வியாளர்களால் கருதப்படும் சி.பி.எஸ்.ஈ முறையை எல்லாருக்குமாக்கி விடலாம்.

3. ஆண்டுதோறும் ஆசிரியர்களின் பணிப் பங்களிப்பு மதிப்பிடப்பட்டு அதன் அடிப்படையிலேயே ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும். 

4. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளைக் கடுமையாக முறைப்படுத்த வேண்டும். கரெஸ்பாண்டென்ஸ் முறையில் ஆசிரியர் பயிற்சி அளிப்பது என்ற அபத்தம் ஒழிக்கப்பட வேண்டும். ஆசிரியர் பயிற்சிப் படிப்புக்கு தனி நுழைவுத் தேர்வு அடிப்படையிலேயே அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால் சமச்சீர் கல்வி இப்போதைக்கு ஒரு மாயைதான். கோடிக்கணக்கான ரூபாய் புத்தகங்களை வீணடிக்காமல், கருணாநிதி ஜால்ரா பாடங்களை மட்டும் ஜெயலலிதா நீக்கியிருந்தால் போதுமானது. ஜெயலலிதா பழையபடி ‘கொண்டதை விடாத’ பிடிவாதம் உடையவராக இல்லை. சொன்னபடி வாரா வாரம் நிருபர்களை சந்திக்கிறார். மாறிவிட்டார் என்று சொல்லப்படுவது இன்னொரு மாயை இல்லை என்று நிரூபிக்க அவருக்கு இது ஒரு வாய்ப்பு. இப்போது கூட, ஒவ்வொரு பாடப் புத்தகத்துக்கும் ஓர் அறிஞர் குழுவை நியமித்து ஒரு வாரத்துக்குள் அந்தப் புத்தகம் தகுதியானதா என்று பரிசீலித்து முடிவு தெரிவிக்கச் சொல்லலாம். சரியானவற்றை இந்த ஆண்டே பயன்படுத்தலாம். மாற்றப் படவேண்டிய புத்தகங்களை மட்டும் அடுத்த ஆண்டுக்குத் தள்ளி வைத்துக் கொள்ளலாம். அச்சிட்ட புத்தகங்களும், நேரமும் வீணாவதைக் குறைக்கலாம். செய்வாரா?  

இந்த வாரக் கேள்வி?


கிரிக்கெட் ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா தரவேண்டும் என்று அவர் ரசிகர்கள் கோரினார்கள். அவரோ வெளிநாட்டில் தான் சம்பாதித்த விளம்பர வருமானத்துக்கு வரிவிலக்கு பெறுவதற்காக தன்னைத் தொழில் முறை நடிகர் என்று அறிவித்திருக்கிறார். எனவே அவருக்கு நடிப்பிற்கான தாதா சாகிப் பால்கே அல்லது பாரத் விருது தரவேண்டும் என்று இனி கேட்பார்களா?

இந்த வாரத் திட்டு 

மேலவையை உருவாக்கி அரசுக்கு ஆக்கப்பூர்வமான விமர்சனங்களைச் சொல்லும் அறிஞர் சபையாக அதை செயல்பட வைக்கும் நல்ல வாய்ப்பைத் தூக்கி எறிந்ததற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இ.வா.தி.
 

அறிவியல் - அறியாததை அறிவோம்

 
நீர் நிரம்பிய வாளியில் கையை விட்டுச் சுழற்றும்போது நடுவில் சுழி உண்டாவதேன்?
 

 
    நீர் நிரம்பிய வாளியில் கையை விட்டுச் சுழற்றும்போது, வாளியிலுள்ள நீர் சுழலுகிறது. இவ்வாறு சுழலும் நீருக்கு மைய விலக்கு விசை உண்டு. இது சுற்றுவேகத்தின் வர்க் கத்துக்கு நேர்விகிதத் தொடர்பு கொண்டிருக்கும். நீரை வேக மாகச் சுற்றச் சுற்ற இந்த விசையும் கூடுகிறது. மைய நோக்கு விசையால், வாளியில் மையத்திலிருந்து நீர் விலகி விளிம்புக்கு நகரும். இதனால் நீர்மட்டம் தாழ்ந்தும், விளிம்பில் உயர்ந்தும் காணப்படும். சுழலும் நீரின் மையப் பகுதியில் ஏற்படும் குழி சுழியாகிறது. 
 
சுண்ணாம்பில், நீர் ஊற்றினால் புகை வருவது ஏன்?


 
    சுட்ட சுண்ணாம்பு என்பது கால்ஷியம் ஆக்ஸைடு ஆகும். இதில் நீரை ஊற்றும் போது, கால்ஷியம் ஆக்ஸைடும் நீரும் சேரும்போது, கால்ஷியம் ஹைட்ராக்ஸைடு உண்டாகிறது. இந்த வேதிவினையில் வெப்பம் வெளிப்படுகிறது. அப்போது நீரின் ஒரு பகுதி நீராவியாக மாறும். கூடவே சுட்ட சுண்ணாம்புத் தூள்களும், நீராவியோடு கலந்து வருவதால் புகை மண்டலம் போல் காட்சி தருகிறது. இந்த கால்ஷியம் ஹைட்ராக்ஸைடு நீர்மத்தை சுவரில் பூசிய பின், அது காற்றிலுள்ள கார்பன் டை ஆக்ஸைடு (Co2) உடன் வினை புரிந்து கால்ஷியம் கார்பனேட்டாக மாறுகிறது. இது சுவருக்கு வெண் மையைக் கொடுக்கும்.
 
வெண்ணிறப் பூக்கள் பெரும்பாலும் இரவில் மலர்வது ஏன்?
 
 
     இனப்பெருக்கத்துக்குக் காரணமான மகரந்தச் சேர்க்கையின் (pollination) பொருட்டு, பூச்சிகளைக் கவர்ந்து இழுப்பதற்கே, பூக்கள் பல வண்ணங்களைக் கொண்டிருக்கின்றன. பகல் நேரத்தில் பூச்சிகளை ஈர்க்க, பூவின் நிறம் பெரும் பங்காற்றும். ஆனால், இரவில் இந்த நோக்கத்துக்கு வண்ணங்கள் பயன்படுவதில்லை; மாறாக நல்ல நறுமணம் பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும் சக்தியாக விளங்குகிறது. மல்லிகை, முல்லை ஆகியன இதற்குச் சிறந்த உதாரணம். பகல் நேரத்தில் பட்டாம்பூச்சி, தேனீ, பறவை ஆகியவை பூக்களின் நிறங்களால் கவரப்பட்டு மகரந்தச் சேர்க்கைக்குக் காரணமாக விளங்குகின்றன. இரவு நேரங்களில் அந்துப் பூச்சி, விட்டில் பூச்சி, வௌவால் போன்றவை நறுமணக் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு இதற்கு உதவுகின்றன. எனவே இரவு நேரங்களில் பூக்களின் வண்ணத்துக்கு முக்கியத்துவமே இல்லை. இதனால்தான் அவை வெளிறிய நிறங்களில் பெரும்பாலும் வெண்மை நிறத்தில் மலர்கின்றன.

Thursday, May 26, 2011

அறிவியல் பெயர்க் காரணம் !

 
‘ஹிமாலயா’ என்பது உலகின் உயரமான மலை என்று நமக்குத் தெரியும். அந்தப் பெயர் எப்படி வந்தது தெரியுமா?
 
‘ஹிமாலயா’ என்பது சமஸ்கிருதச் சொல். ‘ஹிம்’ என்றால் அம்மொழியில் ‘பனி’ என்றும், ‘ஆலயா’ என்றால் ‘இடம்’ என்றும் பொருள். ‘பனி படர்ந்த இடம்’ என்பதே ஹிமாலயா என்பதன் முழு அர்த்தம்.
 
 

பாராளுமன்றத்துக்கு ஆங்கிலத்தில் ‘பார்லிமெண்ட்’ என்கிறோம். அச்சொல் எப்படி வந்தது தெரியுமா?

‘பார்லிம்’ எனும் லத்தீன் மொழிச் சொல்லுக்கு ‘கூடிப் பேசும் இடம்’ என்று பொருள். அமைச்சர்கள் பலரும் கூடிப் பேசும் இடம் என்பதால், ‘பார்லிமெண்ட்’ என்று பாராளுமன்றத்துக்குப் பெயர் வந்தது.  


செஸ் :

 ‘செஸ்’ என்னும் சதுரங்க விளையாட்டுத் தோன்றியது இந்தியாவில்தான். மகாபாரதத்தில் சகுனி ஆடியதும், நளன் என்னும் அரசன் ஆடியதும் இந்த விளையாட்டுதான். அரசன் மற்றும் நான்கு காய்கள். யானை, குதிரை, தேர், வீரர்கள் நால்வரும் அதில் பயன்படுத்திய காய்களே, ‘ரத, கஜ, துரக, பதாதி’-யை இவை குறிப்பதால் இதற்குச் சதுரங்கம் (நால்வகைப் படை) என்று பெயர் ஏற்பட்டது!


Wednesday, May 25, 2011

பத்ரிநாத் - இந்திய மைக் ஹஸ்ஸி!


‘இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற பத்ரிநாத்துக்கு எல்லாத் தகுதிகளும் உள்ளன’ என்று 2006ல் கிரேக் சேப்பலிடம் பாராட்டு பெற்றபோது பத்ரிநாத்தின் வயது 26. நான்கு வருடங்கள் கழித்து 3 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட்கள் எனக் குறைந்த அளவிலேயே இந்திய அணியில் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இப்போது 31 வயதை நெருங்கும் நேரத்தில் மீண்டும் இந்திய அணிக்குத் தேர்வாகியிருக்கிறார், ‘இந்திய மைக் ஹஸ்ஸி’ என்றழைக்கப்படும் பத்ரிநாத். 


வேறு யாராக இருந்தாலும் நம்பிக்கை இழந்திருப்பார்கள். அவ்வளவு தடங்கல்கள் பத்ரிநாத்தின் வாழ்க்கையில். ஆனால் பத்ரிநாத் விடவில்லை. சென்ற வருடம் உள்ளூர்ப் போட்டிகளில் அவர்தான் ஹீரோ. பிராந்திய பேதம் இல்லாமல் எல்லோரும் பார்த்து ஆச்சர்யப்படும் பேட்ஸ்மேனாக உயர்ந்தார். சென்ற வருட ரஞ்சியில் பத்ரிநாத்தான் அதிக ரன்கள் எடுத்திருந்தார். பரபரப்பாக நடந்த அரையிறுதியில் இவரை அவுட் ஆக்க படாதபாடு பட்டது ராஜஸ்தான் அணி. ஐ.பி.எல். வந்தது. ஹஸ்ஸி, விஜய், ரைனா, தோனி ஆடுகிற அணியிலும் தனியாகத் தெரிந்தார். அதிரடியாக ஆடமாட்டார் என்கிற குற்றச் சாட்டையும் இந்த ஐ.பி.எல்.லில் உடைத்தார். முழுக்க முழுக்க திறமையின் அடிப்படையில் மேற்கு இந்தியத் தீவுடனான ஒருநாள் போட்டிக்குத் தேர்வாகியிருக்கிறார் பத்ரிநாத்.  


பத்ரிநாத்தின் பூஸ்ட், மைக் ஹஸ்ஸி. 30 வயதுக்கு மேல் ஆஸ்திரேலிய அணியில் தேர்வாகி இன்று ‘மிஸ்டர் கிரிக்கெட்’ என்கிற பட்டத்தைப் பெற்றிருப்பவர் அவர். ஐ.பி.எல்.லிலும் இருவரும் ஒரே அணி என்பதால் ஹஸ்ஸியிடமிருந்து பல தைரியங்களைப் பெற்றிருக்கிறார் பத்ரி. 2008ல் இந்திய அணியில் நிச்சயம் இடம்பிடிப்பார் என்று அனைவரும் நம்பிக் கொண்டிருந்த போது, இலங்கைச் சுற்றுப் பயணத்துக்கான வீரர்கள் பட்டியலில் பத்ரியின் பெயர் இடம்பெறவில்லை. பொங்கி எழுந்தார் பத்ரி. மீடியா முன் தன் கோபங்களைக் கொட்டினார்.  


‘தேர்வாகாத நிலையில் இனி நான் என்ன செய்யமுடியும் என்று தெரியவில்லை. நான் தோற்றுவிட்டேன். மற்றவர்களுக்கு மத்தியில் என் நிலை என்ன; என்ன செய்தால் நான் தேர்வாக முடியும் என்பதைத் தேர்வாளர்கள் குறிப்பிட்டுச் சொன்னால் எனக்கு உபயோகமாக இருக்கும். ஒரு வாய்ப்பளித்து அதில் நான் தோற்றுப்போகிறேனா என்று மட்டும் பாருங்கள். என்னால் சர்வதேச அளவில் சாதிக்கமுடியாவிட்டால் ஓர் ஓரமாக ஒதுங்கிவிடுகிறேன்’ என்கிற ஆவேசப் பேச்சுக்கு பலன் கிடைத்தது. காயம் காரணமாக சச்சின் இலங்கை டூரிலிருந்து விலகிவிட, பத்ரிக்கு முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டது. முதல் ஒருநாள் போட்டியிலேயே மோசமான நிலையில் இருந்து அணியைக் காப்பாற்றி வெற்றி பெறச் செய்தார் பத்ரி. ஆனால் அடுத்து ஏற்பட்ட சிறு தோல்விகளால் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.  

சிறப்பாக ஆடுபவர்களுக்கான எந்த உத்தரவாதமும் இந்திய கிரிக்கெட்டில் கிடையாது என்பதற்குச் சிறந்த உதாரணம் பத்ரி. பத்ரியைப் புறக்கணித்து கோலி, கம்பீர், மனோஜ் திவாரி போன்றோருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில் ஒரு பெரிய போராட்டத்துக்குப் பிறகே இப்போது அணிக்குள் நுழைந்திருக்கிறார். ‘சென்ற வருடம் அணியில் இருந்து நீக்கப்பட்டதோடு கான்ட்ராக்ட்டும் கிடைக்கவில்லை. இதனால் நான் மீண்டும் முதலிலிருந்து போராட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டேன். அடுத்து நான் என் னென்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு உழைத்தேன். தோல்வியிலிருந்து தான் கற்றுக் கொள்ள முடியும் என்பார்கள். என் வாழ்க்கையில் அது உண்மையே’ என்கிறார் பத்ரி.


‘எந்த ஒரு நெருக்கடியிலும் பத்ரியை நம்பலாம். பத்ரியிடம் தென்படும் நம்பிக்கையான ஆட்டம் இந்திய அணியின் எதிர் காலத்துக்கு உகந்தது’ என்று பத்ரியின் தேர்வு பற்றிக் கருத்துத் தெரிவித்துள்ளார் ரவி சாஸ்திரி. வயது பற்றிப் பேசுபவர்களுக்கும் பத்ரி பதில் வைத்திருக்கிறார். ‘எல்லோரும் வயதைக் குறிப்பிடுவதற்குக் காரணம், உடல் தகுதியின்மைக்காகத்தான். ஆனால், எந்த ஓர் இளம் வீரரை விடவும் நான் மிகவும் ஃபிட்டாக இருக்கிறேன். இந்த விஷயத்தில் யாரும் என்னைக் குறைசொல்ல முடியாது.’ 

Tuesday, May 24, 2011

புலிகள்..

 
இந்தியா... புலிகளின் தேசம். அந்த அளவுக்கு இங்கே கணக்கு, வழக்கில்லாமல் புலிகள் நிறைந்திருந்தன. ஆனால், ஒரு கட்டத்தில் அவை தாறுமாறாக அழிக்கப்படவே... அருகி வரும் விலங்கினங்கள் பட்டியலில் இடம் பிடிக்க வேண்டிய துரதிர்ஷ்டசாலிகளாக அவை மாறிப் போயிருக்கின்றன. 2006-ம் ஆண்டில் 1,413 என்ற கவலை தரும் எண்ணிக்கைக்கு புலிகள் குறைந்து போகவே... அவற்றுக்கு ஆதரவாக இயற்கை ஆர்வலர்கள் ஆர்த்தெழுந்து குரல் எழுப்பினர். அதையடுத்து, பல்வேறு தனியார் நிறுவனங்களும் அவர்களுக்கு நேசக்கரம் நீட்ட... அரசுத் தரப்பிலிருந்தும் உதவிகள் வந்து சேர... புலிகளைக் காப்பாற்றும் முயற்சிகள் முடுக்கவிடப் பட்டன. இதையடுத்து, சமீபத்திய கணக்கெடுப்பின்படி 1,711 என்று நம்பிக்கை தரும் எண்ணிக்கைக்கு உயர்ந்திருக்கின்றன புலிகள்!
 
புலி, மிகவும் அடர்ந்த காட்டில் மட்டுமே வாழும். நம்நாட்டில் இருந்த அடர்காடுகளில் 93% காடுகளை நாம் அழித்து விட்டோம். இருப்பினும் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. புலிகளை, அவற்றின் கால்த்தடங்கள் மூலம் கணக்கிடும் உத்தேச முறைக்கு மாற்றாக, புலிகளின் உடம்பில் உள்ள வரிகளை வைத்து மிகத் துல்லியமாக கணக்கிடும் 'கேமரா ட்ராப்பிங்’ முறையைக் கண்டறிந்தவர் டாக்டர் உல்லாஸ் கரந்த்.
 
தற்போது, வனங்களின் பாதுகாப்பு திருப்திகரமாக இல்லை. வனங்களைப் பாதுகாக்க வேண்டுமென்ற அக்கறை, வனத்துறை ஊழியர்கள் அத்தனைப் பேரிடமுமே இருப்பதில்லை. அவர்களில் பலரின் துணையோடுதான் வனமும், விலங்குகளும் சூறையாடப்படுகின்றன. காடுகளில் சாலை வசதி, அணைக்கட்டுகள், தொழிற்சாலைகள் என வனங்களை அழிக்கும் பல திட்டங்களை அரசே இயற்றுகிறது.

 
 சமூக விரோதிகள், தங்கள் அன்றாடத் தேவைக்களுக்காக வனச் செல்வங்களைத் திருடிய காலம் போய், இன்று அதனை ஒரு தொழிலாகவே செய்து வருகிறார்கள். இவை எல்லாவற்றையும்விட வனங்களைக் காப்பதில் நீயா... நானா... போட்டி மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே  தீர்க்கப்படாமலேயே இருக்கிறது. இத்தகையச் சூழலில், வனவிலங்குகளை நாம் எப்படி காப்பாற்ற முடியும். இனியாவது, அதற்கான முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால், அதை அரசாங்கமோ... அதிகாரிகளோ நிச்சயமாக எடுக்கமாட்டார்கள். அதை எதிர்பார்ககவும் கூடாது. ஏனென்றால்... வனங்களைப் பாதுகாக்க வேண்டும் என்கிற உணர்வு நம் ஒவ்வொருவருக்குமே வேண்டும். தனிமனிதனில் இருந்து அதை ஆரம்பித்தால்தான் மிகப்பெரிய வெற்றியைப் பெற முடியும்''
 

Monday, May 23, 2011

எரியும் மனிதர்கள்!


1673ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு நீதிமன்றம் ஒரு விசித்திரமான வழக்கை சந்தித்தது. கணவன் மனைவிக்கு இடையே சண்டை. இதில் மனைவி தீப்பிடித்து இறந்துவிட்டாள். கொன்றது கணவர் என்பதுதான் வழக்கு. நீண்ட நாள் நடந்த பரபரப்பான இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கும் இறுதி நாளும் வந்தது. இந்த வழக்கில், கணவர் குற்றமற்றவர்; அவர், மனைவியை தீ வைத்துக் கொலை செய்யவில்லை. அவர் மனைவி தானாகவே தீப்பற்றி எரிந்துபோனார் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பு எல்லாருக்கும் திகைப்பாக இருந்தது. மருத்துவ பரிசோதனைக் குழுவும் நீதிபதியின் தீர்ப்பை ஆமோதித்திருந்தது. இப்படி மனிதர்கள் தாமாக தீப்பற்றி எரிந்துபோவதை ஸ்பான் டேனியஸ் ஹியூமன் கம்பஷன் என்று மருத்துவ உலகம் பெயரிட்டது.

கடந்த 300 ஆண்டுகளில் இதுபோன்ற 200 சம்பவங்கள் நடந்துள்ளன. 300 வருஷத்துக்கு இவ்வளவுதானே என்று எளிதாக ஒதுக்கிவிடும் விஷயம் அல்ல இது. காட்டில் இரண்டு மூங்கில் மரங்கள், ஒன்றுக்கொன்று உரசிக் கொள்வதன் மூலம், காட்டுத்தீ ஏற்படுகிறது. சற்றும் நம்ப முடியவே முடியாதபடி மனிதன் எப்படித் தானாக எரிய முடியும்?

இதேபோல ஒரு சம்பவம் 1951ஆம் ஆண்டு ஜூலை இரண்டாம் தேதி நடந்தது. இம்முறையும் ஒரு பெண்மணிதான். அவர் பெயர் மேரி ரீசர். 67 வயதான இந்த மூதாட்டியைப் பார்க்க அவரது உறவினர்கள் வீட்டுக்கு வந்தபோது, வீட்டுக்குள் ஏதோ எரிந்துபோன நெடி வீசியது. பதற்றத்துடன் கதவைத் திறந்து பார்த்திருக்கிறார்கள். அங்கு,மேரி ரீசர் நாற்காலியில் அமர்ந்தபடி தீப்பிடித்து இறந்து கிடந்தார். இதைப் பார்த்த உறவினர்களுக்கு அதிர்ச்சி. பிரேத பரிசோதனை, தடயவியல் சோதனை இப்படி எல்லா பரிசோதனைகளுக்குப் பிறகு மருத்துவ அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த மருத்துவ அறிக்கையில் மேரி ரீசர் தானாக எரிந்து போயுள்ளார். அவர் உடலில் 2500 டிகிரி வெப்பம் தாக்கப்பட்டதால் உடல் கருகி இறந்துள்ளார் என்ற தகவலை மருத்துவர்கள் வெளியிட்டனர்.


இதேபோல 1938ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவிலும் ஒரு சம்பவம் நடந்தேறியது.  இம்மாதிரி செய்தியை எல்லாரும் ஆச்சர்யமாகப் படித்தார்களே தவிர இதனுள் மறைந்துகிடந்த விபரீதத்தை யாரும் உணரவில்லை. முதன்முதலில் ஸ்பான்டேனியஸ் ஹியூமன் கம்பஷன் என்ற விபத்து குறித்த தொகுப்பை, 1763ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜோனஸ் டூபாண்ட் என்ற அறிஞர் வெளியிட்டார்.இந்தக் கட்டுரையின் தாக்கம் மக்களிடையே பரவலாக இருந்தது. இதைத் தொடர்ந்து 1800ஆம் ஆண்டு, சார்லஸ் டிக்கன்ஸ் என்பவர் ஸ்பான்டேனியஸ் ஹியூமன் கம்பஷனை மையக் கருவாகக் கொண்டு ‘பிளீக் ஹவுஸ்’ என்னும் நாவலை எழுதினார். இந்த நாவல் வாசகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்தக் கதையில் நாயகி தானே தீப்பிடித்து இறந்து போவது போல் கதை சித்தரிக்கப்பட்டிருக்கும். அதில் மதுவில் உள்ள ஆல்கஹாலின் அளவு அதிகரிக்கும்போது, உடல் இம்மாதிரி தாமாகத் தீப்பற்றி எரிந்துவிடும் என்ற காரணத்தைச் சொல்லியிருப்பார். இந்தக் காரணம் கதைக்காகச் சொல்லப்பட்ட காரணமாக இருந்தாலும், இதிலும் உண்மை இருப்பதாக மருத்துவ உலகம் இறுதியில் உறுதி செய்தது.

பெரும்பாலானவர்கள் அருந்திய கட்டுக்கடங்காத ஆல்கஹால் ஒரு கட்டத்தில் ஹைட்ரஜனாகவும், பற்றி எரியும் எரிவாயுவாகவும் உற்பத்தியாகி, அது முற்றிலும் அதிக தசை கொண்ட உடல் பகுதியில் சேமிக்கப்பட்டிருக்கும். உடலில் அளவுக்கு அதிகமான வெப்பமோ அல்லது ஏதோ ஒரு வகையில் லேசான மின் தூண்டலுக்கோ உடல் உட்படும்போது, இந்த எரிவாயு பற்றி எரிய ஆரம்பிக்கிறது என்று ஆராச்சியாளர்கள் தங்கள், ஆவறிக் கையைத் தெரிவித்தனர். நடந்து முடிந்த சம்பவங்கள் அனைத்தும் ஏதோ அமானுஷ்யங்கள் கிடையாது. தானாக மனிதன் எரிவது ஆச்சர்யமூட்டும் செய்திதான் என்றாலும், மது உடலை அழிக்கும் என்ற செய்தியும் இந்தக் கட்டுரை உணர்த்தவே செய்தது! 

Sunday, May 22, 2011

என்னதான் செய்யும் திமுக!


இந்த அளவுக்கு மோசமான ஒரு சோதனையை திமுக இதுவரை சந்தித்ததே இல்லை என்கிற அளவுக்குக் கனிமொழியின் கைது அந்தக் கட்சியை அனைத்து மட்டங்களிலும் புரட்டிப் போட்டுவிட்டிருக்கிறது. ஆ. ராசாவின் கைது, கலைஞர் தொலைக்காட்சியில் சோதனை, முதல்வரின் மனைவி தயாளு அம்மாள் விசாரிக்கப்பட்டது, என்று ஒன்றன் பின் ஒன்றாக சோதனைகள் வந்தபோதுகூடத் தனது நெஞ்சுரத்தையும், எதையும் சந்தித்துக் கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையையும் இழக்காத திமுக தலைவர் கருணாநிதி, கனிமொழியின் கைது செய்திக்குப் பிறகு ஆடிப் போயிருக்கிறார் என்பதை விட இடிந்து போயிருக்கிறார் என்பதுதான் உண்மை.


÷முந்தைய நிகழ்வுகளின்போது பதவி பலம் துணிவைக் கொடுத்தது. தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால், காங்கிரஸ் தனக்குத் துணை நிற்கும் என்றும், நீதித்துறைகூடத் தனது குடும்பத்தினருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கத் தயங்கும் என்றும் கருணாநிதி கருதினார் என்றுகூட அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். அவர் நம்பினார் என்பதைவிட அவரைச் சுற்றி இருந்தவர்கள் அவரை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டனர் என்பதுதான் உண்மை. 

÷""தலைவரே, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை பணம் முறையாகப் பட்டுவாடா செய்யப்பட்டிருக்கிறது. நமது ஐந்தாண்டு ஆட்சியில் ஏதாவது ஒரு இலவசத்தால் பயனடையாத குடும்பமே தமிழகத்தில் கிடையாது. குறைந்தபட்சம் திமுக 80 இடங்களிலும், கூட்டணிக் கட்சிகள் 50 இடங்களிலும் வெற்றி பெற்று விடும்'' என்று அவரை நம்ப வைத்தவர்கள் அமைச்சர்களும் கட்சிக்காரர்களும் மட்டுமல்ல, அவருக்கு நெருக்கமானவர்கள் என்று கருதப்பட்ட மாநில புலனாய்வுத் துறை அதிகாரிகளும், பத்திரிகையாளர்களும்கூட.


÷""நீதிபதி சைனியின் உறவினர்களை நன்றாகத் தெரியும். அவர்கள் மூலம் அவரைச் சரிக்கட்டியாகிவிட்டது. சந்தேகம் ஏற்படாத வகையில் கனிமொழிக்கு ஜாமீன் வழங்க அவர் சம்மதித்துவிட்டார்'' என்றுகூட ஒரு மாநிலங்களவை உறுப்பினர் உறுதி அளித்திருந்தாராம். மூத்த வழக்கறிஞர் ஜேட்மலானியை கனிமொழிக்காக வாதாட ஒப்பந்தம் செய்ததிலேயேகூட ஊழல் நடந்ததாகவும், ஜேட்மலானி வாதிட்டதாலேயே வழக்கு ஜெயிக்கவில்லை என்றும்கூட கூறப்படுகிறது.

÷1977-ல் எம்.ஜி.ஆரின் அதிமுகவிடம் தோற்றுப் போய் ஆட்சி இழந்தபோதும், 1991-ல் ராஜீவ் காந்தி படுகொலையைத் தொடர்ந்து மிகப்பெரிய தேர்தல் தோல்வியைச் சந்தித்தபோதும் கருணாநிதியால் கட்சியை நிலைகுலையாமல் காப்பாற்ற முடிந்தது. அதற்குக் காரணம், அவருக்கு வயதும் துணிவும் சாதகமாக இருந்தன. இப்போது முதுமை ஒரு புறமும், முன்பு போலப் பம்பரமாய்ச் சுற்றிச் சுழன்று செயல்பட முடியாமல் உடல்நலக் குறைவு இன்னொரு புறமும் கருணாநிதியை முடக்கிப் போட்டிருக்கிறது. போதாக் குறைக்குக் குடும்பப் பிரச்னைகள் வேறு.

  
÷""தலைவரைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. குடும்பத்தை கவனிக்க வேண்டிய நேரத்தில், தனது மனைவி மக்களைப் பற்றிக் கவலையே படாமல் கட்சியைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். இப்போது கட்சியைக் காப்பாற்ற வேண்டிய நேரத்தில் அவர் குடும்பத்தைப் பற்றிய கவலையில் மூழ்கி இருக்கிறார். 2001 தேர்தலில் "இதுதான் எனது கடைசித் தேர்தல்' என்று அறிவித்தது போல, அவர் தேர்தல் தோல்விக்குப் பிறகு அரசியலிருந்து விலகி இருந்தால் இன்று அவருக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது'' என்று சிஐடி காலனி வீட்டில், கனிமொழியின் கைது செய்திக்குப் பிறகு கூடியிருந்த முன்னாள் அமைச்சர்களில் ஒருவர் கூறியதைத் தொண்டர்கள் பலரும் பேசத் தொடங்கிவிட்டனர்.

÷2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடில் நடந்த முறைகேடுகள் பற்றிய விசாரணை ஒருபுறம் தீவிரமடைந்து வருவதால் ஆ. ராசாவின் நிலைமை மேலும் தர்மசங்கடமாகிறது. கலைஞர் தொலைக்காட்சிப் பிரச்னை, கனிமொழி கைதுக்குப் பிறகு என்னவாகும் என்பதை உடனடியாகச் சொல்ல முடியவில்லை.  அதிகாரத்தை எல்லாம் நிர்வாக இயக்குநர் சரத்குமாருக்கு தான் அளித்துவிட்டதாகக் கூறி தயாளு அம்மாள் தப்பித்துக் கொள்ள முடியுமா என்பதும் சந்தேகமாக இருக்கிறது. 60% பங்குகளை வைத்திருக்கும் ஒருவர் தனக்குத் தொடர்பே இல்லை என்று பிரச்னையிலிருந்து நழுவ முடியுமா என்று கேள்வி எழுப்புகிறது சி.பி.ஐ.


÷இனி அடுத்த கட்டமாகக் கலைஞர் தொலைக்காட்சி முடக்கப்படக் கூடும். முன்பு ஜெ.ஜெ. டிவியை முடக்குவதற்காகக் கூறப்பட்ட எல்லா காரணங்களும் இப்போது கலைஞர் தொலைக்காட்சிக்கும் பொருந்தும் என்று கூறுகிறார்கள்.

÷மிகவும் மோசமான நிலையில் இருப்பது கருணாநிதி குடும்பத்தில் காணப்படும் குழப்பம்தான். "கனிமொழிக்காகக் கட்சியை ஏன் காவு கொடுக்க வேண்டும்?' என்கிற கேள்வியுடன் மு.க. அழகிரியும், மு.க. ஸ்டாலினும் இருக்கிறார்கள் என்றும், "20% பங்கு வைத்துக் கொண்டிருக்கும் எனது மகள் சிறையிலும், 60% பங்கு வைத்திருக்கும் தயாளு அம்மாளும் குடும்பமும் ஸ்பெக்ட்ரம் பணத்தை அனுபவிப்பது என்ன நியாயம்?' என்று ராஜாத்தி அம்மாள் தரப்பும் கருணாநிதியைத் தொந்தரவு செய்வதாகக் கூறப்படுகிறது.

÷""இத்தனை பிரச்னைக்கும் காரணமே தயாநிதி மாறன்தான்'' என்று கட்சியினர் மத்தியில் பரவலாக அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. மாறன் சகோதரர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பும், தயாநிதி மாறன் எப்படியாவது ஆ. ராசாவை அகற்றிவிட்டுத் தான் மீண்டும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராவதற்குச் செய்த பின்னணி வேலைகளும்தான் இத்தனைக்கும் காரணம் என்று கூறி வருத்தப்படாத கட்சிக்காரர்களே கிடையாது.

   
÷""ஆ. ராசா பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறார்'' என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார், முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சருக்கு நெருக்கமான வழக்கறிஞர் ஒருவர். ""2009 மக்களவைத் தேர்தலுக்கு ஆ. ராசா கொடுத்த பெரும் பணம்தான் திமுக கூட்டணி தமிழகம் (27), புதுவை (1) இடங்களில் வெற்றி பெறக் கை கொடுத்தது. கலைஞர் தொலைக்காட்சி தொடங்குவதற்கும் ஆ. ராசாவிடமிருந்துதான் பணம் பெற்றுக் கொண்டார்கள். அது ஏன்? இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இவர்கள் செலவழித்த பணம் எங்கிருந்து வந்தது?' ராசா கைதானபோது கவலைப்படாதவர்கள், அவருக்கு ஜேட்மலானி போன்ற மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாட வேண்டும் என்று நினைக்காதவர்கள் இப்போது கனிமொழிக்கு ஒன்று என்றால் மட்டும் துடிதுடித்துப் போகிறார்களே, அது என்ன நியாயம்?'' என்று கேள்வி எழுப்பினார் அந்த ராசாவின் நண்பர்.

÷""ராசா ஒரு "தலித்' என்பதால் பழிவாங்கப்படுகிறார் என்று தலைவர் சொன்னபோது அதை நாங்கள் நம்பினோம். இப்போதுதான் தெரிகிறது, ராசா ஒரு தலித் என்பதால்தான் தலைவர் அவரைப் பலிகடா ஆக்கப் பார்த்திருக்கிறார். தனது மனைவியும் மகளும் நிரபராதிகள், ஒன்றும் தெரியாதவர்கள் என்றும், ஆ. ராசாதான் அத்தனை தவறுகளுக்கும் காரணம் என்றும் நீதிமன்றத்தில் வாதாட எப்படி மனம் வந்தது?'' தன்னை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாத, கடந்த திமுக ஆட்சியில் பொறுப்பான பதவி வகித்த "தலித்' ஒருவரின் குமுறல் இது. 

   
 ÷""தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் மீது கருணாநிதிக்கு எப்போதுமே உதட்டளவுப் பாசம்தான் இருந்திருக்கிறது. இதற்கு நேர் எதிராக முதல்வர் ஜெயலலிதாவைப் பாருங்கள்.  சீனியர்கள் பலர் இருந்தும்கூட, தாற்காலிக பேரவைத் தலைவராக குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு. தமிழரசனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். முதல்வர் ஜெயலலிதாவிலிருந்து அத்தனை சட்டப்பேரவை உறுப்பினர்களையும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த செ.கு. தமிழரசன் மூலம் பதவிப் பிரமாணம் செய்ய வைத்து நிஜமாகவே ஒரு புரட்சியைச் செய்து காட்டி இருக்கிறார் முதல்வர். இதை கருணாநிதி நிச்சயமாகச் செய்திருக்க மாட்டார்'' என்று கருத்துத் தெரிவித்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் கணிப்பின்படி, ஆ. ராசா அப்ரூவராகக் கூடும்.

÷இன்றைய நிலையில் திமுக மத்திய அமைச்சரவையில் தொடருமா என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது. காங்கிரஸ் திமுகவைக் கழற்றி விடுமா என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இரண்டுமே நடக்காது என்கிறார்கள் தில்லியிலுள்ள அரசியல் நோக்கர்கள்.

÷""ஆட்சியையும் இழந்துவிட்ட நிலையில் திமுகவுக்கு இருக்கும் கொஞ்சநஞ்சப் பாதுகாப்பு மத்திய அரசில் அங்கம் வகிப்பதுதான். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதால் திமுகவுக்கு என்ன லாபம் ஏற்பட்டுவிடப் போகிறது. நிலைமை மேலும் மோசமாகக் கூடும். அந்தத் தவறைக் கருணாநிதி ஒருநாளும் செய்யமாட்டார்'' என்பதுதான் பரவலான கருத்து.

    

÷காங்கிரஸýம் சரி, திமுகவைத் தனது கூட்டணியிலிருந்து விலக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை. ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பு, காமன்வெல்த் போன்ற ஊழல்களில் சிக்கி இருக்கும் நிலையில் திமுகவை ஊழல் என்று காங்கிரஸ் கூறுவது "ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை' என்ற கதையாகத்தான் இருக்கும்.

÷""தமிழகத்தில் அதிமுக ஆட்சியுடன் சுமுகமான உறவை வைத்துக் கொள்ள நிச்சயமாகக் காங்கிரஸ் தலைமை விரும்பும். அதற்காக, திமுகவை வெளியே அனுப்பிவிட்டு அதிமுகவுடன் உடனடியாகக் கைகோர்க்குமா என்பது சந்தேகம்தான். பலவீனமான திமுகவின் தோழமையும், வலிய நேசக்கரம் நீட்டும் அதிமுகவின் ஆதரவும் கிடைத்தால் காங்கிரஸýக்குக் கசக்கவா செய்யும்? அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு மூன்று ஆண்டுகள் இருப்பதால், இப்போதைக்கு உறவில் மாற்றம் இருக்காது. ஆனால், திமுகவுக்கு அதனால் எந்தவித லாபமும் இருக்காது. இதுதான் நிலைமை'' என்று கணிக்கிறார்கள் தில்லி அரசியல் பார்வையாளர்கள்.

  
÷திமுகவின் நிலைதான் என்ன? என்ன செய்வது என்று சிந்திக்கக்கூட முடியாத நிலையில் இருக்கிறது திமுக. எந்தக் கருணாநிதியால் பல சோதனைகளைக் கடந்து திராவிட முன்னேற்றக் கழகம் காப்பாற்றப்பட்டதோ, அதே கருணாநிதியின் குடும்பப் பாசத்தால் திமுக இப்போது நிலைகுலைந்து போயிருக்கிறது.

 கருணாநிதியை விலக்கி நிறுத்திவிட்டுக் கட்சித் தலைமையிடத்து திமுகவை வழிநடத்தக் கூடிய திறமை யாருக்குமே இல்லை என்பதுதான் எதார்த்த உண்மை. திமுக சார்பாக ஆங்கிலத் தொலைக்காட்சிச் சேனல் விவாதங்களில் பங்கேற்க நடிகை குஷ்பு அனுப்பப்படுகிறார் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள். சுயமரியாதை, பகுத்தறிவு என்றெல்லாம் பேசி ஆட்சியைப் பிடித்த கட்சி இப்போது சுயமரியாதையை முற்றிலுமாக இழந்து, "விதிவிட்ட வழி' என்கிற பகுத்தறிவுடன் செயல்பட வேண்டிய நிலைமை.

÷இதையெல்லாம் முன்கூட்டியே எதிர்பார்த்து இருந்ததால்தானோ என்னவோ, அறிஞர் அண்ணா தனது தம்பிகளிடம் "எதையும் தாங்கும் இதயம் வேண்டும்' என்று வலியுறுத்தினார்? என்னே அண்ணாவின் தீர்க்க தரிசனம்!    

அஜாதசத்ரு

நன்றி - தினமணி