Search This Blog

Saturday, December 17, 2011

ஷேவாக் இருநூறுகளில் ஒருவன்


டெஸ்ட், ஒருநாள் போட்டி இரண்டிலும் அதிக ரன்கள் அடித்த இந்தியர் என்ற ஓர் அசாத்தியத்தைச் செய்து முடித்திருக்கிறார் ஷேவாக். கடந்த 10 மேட்சுகளில் ஓர் அரை சதம்தான் அடித்திருந்தார். கம்பீரும் சரியாக ஆடாததால் இருவர் குறித்தும் சூடான விவாதங்கள், விமர்சனங்கள் எழுந்தன. இக்கட்டான நிலை 219 ரன் எடுத்தது ஷேவாக்குக்கு ஆசுவாசத்தைக் கொடுத்திருக்கும். சச்சின், குவாலியர் இரட்டை சதம்; ஷேவாக்கின் இந்தூர் இரட்டை சதம் இரண்டும் ம.பிரதேசத்துக்குள் நிகழ்ந்த சாதனைகள். சச்சின், திராவிட் போல ஷேவாக், துல்லியமான கிரிக்கெட் தொழில் நுட்பம் அறிந்தவர் இல்லை. ஆனால், தம் பலவீனங்களை மைதானத்தில் வெளிக்காட்டாமல் ஆடும் திறமை உண்டு. ஃபுட்வொர்க் இல்லாவிட்டால் கிரிக்கெட்டில் ரன்கள் எடுக்கமுடியாது என்கிற இலக்கணத்தை உடைத்தவர் ஷேவாக். ரன்கள் அடிக்க இன்னும் வேறுவிதமான தொழில்நுட்பங்கள் உண்டு என்று உலகுக்கு நிரூபித்துக் காட்டினார். 


கோல்ஃப் ஆடுபவருக்கு நிகராக பேட்டைச் சுழற்றுவதுதான் ஷேவாக்கின் பெரிய பலம். சரியான கால் நகர்த்தல், தோள்பட்டையை ஓர் ஆயுதமாகக் கொண்டு நுணுக்கமான பார்வையுடன் பந்துகளை எதிர்கொள்வதால் ஷேவாக்கால் சுலபமாக ரன்கள் எடுக்க முடிகிறது. மேலும், யாருக்கும் பயப்படாத ஆட்டமுறையால், ஷேவாக்கின் பேரைக் கேட்டாலே எதிரணியினர் அதிரும்படி ஓர் பிம்பத்தை உருவாக்கிவிட்டார். சென்னையில் அவர் 300 ரன்கள் அடித்தபோது, 100, 200, 300 ரன்களை சிக்ஸர் அடித்தே கடந்தார். எந்தப் பந்திலும் சிக்ஸர் அடிக்கப்படலாம் என்கிற பேரார்வம் ஷேவாக் ஆட்டத்துக்கு மட்டுமே பொருந்தும்.  சச்சினைப் போலவே ஷேவாக்குக்கும் ஒருநாள் போட்டியில் மிக மோசமான தொடக்கமே (முதலிரண்டு ஒருநாள் போட்டிகளில் சச்சின் ரன்கள் எதுவும் எடுக்கவில்லை) ஷேவாக், பாகிஸ்தானுடனான முதல் ஒருநாள் ஆட்டத்தில் 1 ரன் தான் எடுத்தார். உடனே அணியிலிருந்து நீக்கப்பட்ட ஷேவாக்குக்கு அடுத்த 20 மாதங்கள் வாப்புகள் கிடைக்கவில்லை. தம்முடைய நான்காவது ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆல்ரவுண்ட் திறமையை (58, 3/59) காண்பித்து அணியில் ஓர் இடம்பிடித்தார். 2001ல், இலங்கையில் நடந்த கோகோ கோலா கோப்பைப் போட்டியில் சச்சின் இல்லாத காரணத்தால் முதலில் யுவ்ராஜ் சிங்குக்கு ஓபனராக வாப்பு கிடைத்தது. ஆனால், அவர் தொடர்ந்து சோதப்பவே, ஷேவாக் களம் இறங்கினார். ஓபனராக ஆடிய நான்காவது ஆட்டத்திலேயே அதிரடியாக 69 பந்துகளில் செஞ்சுரி அடித்தார். 

இவர் தொடர்ந்து ஓபனராக தூள் கிளப்பியதால் சச்சினும் கங்குலியும் அடிக்கடி மிடில் ஆர்டருக்கு மாறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதிகமுறை அவுட் அஃப் ஃபார்மில் இருந்தபோதும் ஷேவாக் தம்முடைய ஆட்டத்தை மாற்றிக் கொண்டதேயில்லை.ஒருநாள் ஆட்டத்தை விடவும் ஷேவாக் மிகச்சிறந்த டெஸ்ட் வீரர். தம்முடைய முதல் டெஸ்ட் போட்டியை, தென் ஆப்ரிக்காவில் (2001) ஆடிய ஷேவாக், பொலாக், எண்டினி பந்துகளை எதிர்கொண்டு அட்டகாசமாக செஞ்சுரி அடித் தார். 2002ல், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில், டெஸ்ட் தொடரில் ஓபனராகக் களம் இறக்கப்பட்டார். இரண்டாவது டெஸ்டில் செஞ்சுரி அடித்து அந்தச் சோதனையையும் கடந்தார். 2004ல், பாகிஸ்தானுக்கு எதிராக, முல்டான் டெஸ்டில், முச்சதம் அடித்தார் ஷேவாக் (முதல் இந்தியர்). கூடவே லக்ஷ்மணின் 281 ரன் சாதனையையும் கடந்தார். இந்த டெஸ்டில் ஷேவாக்கால் பலமாகக் காயம்பட்ட ஸ்பின்னர் சக்லைன் முஸ்டாக் ஒரேயடியாக கிரிக்கெட்டிலிருந்து ஒழித்துக்கட்டப்பட்டார். இங்கிலாந்துக்கு எதிரான 2008 சென்னை டெஸ்டின் நான்காவது இன்னிங்ஸில், ஷேவாக் அதகளம் செய்து அடித்த 83 ரன்களை ரசிகர்கள் காலத்துக்கும் மறக்கமாட்டார்கள். அடிக்க வேண்டிய பந்தை, யார், எப்போது வீசினாலும் அதை வீணாக்காமல் ஸ்கோர் செய்ய வேண்டும் என்பதுதான் ஷேவாக்கின் தர்மம். இந்த அணுகுமுறையால் ரிச்சர்ட் ஸோடு அடிக்கடி ஒப்பிடப்படுகிறார் ஷேவாக். இதனால் ரிச்சர்ட்ஸுக்கும் பெருமைதான்!

ச.ந.கண்ணன்

No comments:

Post a Comment