Search This Blog

Saturday, December 31, 2011

நள்ளிரவில் பெற்றோம்!, ஓ பக்கங்கள் - ஞாநி

 
இந்த வருடம் முடிவதற்குள் இரண்டு மெகா பிம்பங்கள் நொறுங்கிப் போயிருக்கின்றன. ஒன்று அப்துல் கலாம். இன்னொன்று அண்ணா ஹசாரே. அப்துல் கலாமின் பிம்பமாவது சுமார் பத்து வருடங்கள் தாக்குப் பிடித்திருக்கிறது. அண்ணா ஹசாரே பிம்பம் 2011 ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டு வருடக் கடைசியில் கலைந்துவிட்டது. இரண்டு அசலான மக்கள் பிரச்னைகளில் இருவரும் எடுத்த நிலைதான் இருவரது பிம்பங்களும் காலியாகக் காரணம்.கூடங்குளம் அணு உலைப் பிரச்னையில் ஆயிரக்கணக்கான மக்கள் அன்றாடம் கூடிப் போராடிக் கொண்டிருக்கும்போது, அணு உலை பாதுகாப்பானது என்று அவசர அவசரமாக நற்சான்றிதழ் வழங்க, அப்துல் கலாமை மத்திய அரசு ஏவிவிட்டது. பதவியில் இருந்தபோது, குஜராத் முஸ்லிம் படுகொலைகள் உட்பட எந்தச் சமூகப் பிரச்னையிலும் கறாராகக் கருத்து சொல்லாதவர், இப்போது அணு உலைக்காக ஆக்ரோஷமாகக் குரல் எழுப்பினார். எங்களை நேரடியாக வந்து சந்தித்துப் பேசுங்கள் என்று கூடங்குளம் மக்கள் எழுப்பிய கோரிக்கையை அவர் கண்டு கொள்ளவே இல்லை. கலாம் வாழ்க்கை முழுக்கவும் ராணுவம் சார்பான தொழில்நுட்ப வளர்ச்சியில் மட்டுமே ஈடுபட்டவர். அவர், அணுகுண்டு, அணு உலைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால் எப்போதும் குழந்தைகளுடன் உட்கார்ந்து போஸ் கொடுத்து மீடியா வளர்த்த பிம்பத்தால் அவரைப் பெரிய சமாதான விரும்பி என்று தவறாக நம்பிய நம்மேல் தான் தப்பு. கூடங்குளத்தில் இன்னும் இயங்க ஆரம்பிக்காத உலையைப் பாதுகாப்பானது என்று சொல்ல முடிந்த கலாமுக்கு, தமிழ்நாட்டின் இன்னொரு பெரிய கவலையான முல்லைப் பெரியாறில் செயல்பட்டு வரும் அணை பாதுகாப்பானதா இல்லையா என்று சொல்ல தைரியமில்லை.அண்ணா ஹசாரே மீடியா உதவியுடன் அவர் நடத்திய லோக்பால் போராட்டம் ஜனநாயக விரோதமான போராட்டமாக மாறிவிட்டது. பிரதமர், நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம் அனைத்துக்கும் மேலே ஒரு சர்வாதிகாரியாக லோக்பாலை உருவாக்கியே தீருவேன் என்று அவரும் அவரது குழுவும் காட்டும் பிடிவாதம் ஜனநாயகத்துக்கே ஆபத்தானது. கடைசியில் ஹசாரே மூன்று மாதங்களுக்கொரு முறை உண்ணாவிரதம் நடத்திக் கொண்டே இருப்பது ஒரு தமாஷாகிவிட்டது. ஒரு லட்சம் பேர் திரளுவார்கள் என்று எதிர்பார்த்து, அவர் குழுவினர் பல லட்சம் ரூபாய் வாடகையில் மும்பையில் தேர்வு செய்த மைதானத்தில் கடைசியில் திரண்டது வெறும் ஐந்தாயிரம் பேர்தான். 
 
 
அண்ணாவைப் பின்னாலிருந்து இயக்குவது ஆர்.எஸ்.எஸ். சார்பாளர்கள்தான் என்பது மெல்ல மெல்ல அம்பலமாகிவிட்டது. 1983ல் அண்ணா ஹசாரே, ஆர்.எஸ்.எஸ்ஸில் பங்கேற்றவர் என்பதை நயி துனியா ஏடு வெளிப்படுத்தியிருக்கிறது. இப்போது ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி வகையறாக்களின் நோக்கம், காங்கிரஸ் ஆட்சிக்குத் தொல்லை கொடுத்து, முடியுமானால் இடைத்தேர்தல் வரச் செய்வதுதான். அதற்கு அண்ணா ஹசாரே ஒரு கருவி. அவருடைய லோக்பால் மசோதாவை எந்தக் கட்சியும் முழுமையாக ஒப்புக் கொள்ளாத போதும், காங்கிரசுக்கு எதிராக மட்டுமே தேர்தல் பிரசாரம் செய்தார். கடைசியாக இந்த வாரம் லோக்பால் மசோதாவை அவையில் நிறைவேற்ற காங்கிரஸ் ஆட்சி நடவடிக்கை எடுத்தபின்னர் கூட, இன்னும் மூன்று நாட்களில் நிறைவேற்றாவிட்டால் ஐந்து மாநிலத் தேர்தல்களிலும் காங்கிரசுக்கு எதிராகப் பிரசாரம் செய்வேன் என்றார். மசோதாவை நிறைவேற்ற விடாமல் தடுத்தது பி.ஜே.பி.தான். திரும்பவும் கமிட்டிக்கு அனுப்பி சில மாதங்கள் கழித்து நிறைவேற்றலாம் என்று சுஷ்மா ஸ்வராஜ் வற்புறுத்திக் கொண்டே இருந்தார்.  இதையெல்லாம மீறி காங்கிரஸ் சொன்னபடி லோக்பால் மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியிருக்கிறது. தவிர, எதிர்க்கட்சிகள் சொன்ன சில திருத்தங்களோடும். லோக்பாலுக்கு அரசியல் சட்ட அந்தஸ்து தரும் தீர்மானம் மட்டுமே தோல்வி. இதுகூட எதிர்க்கட்சிகள் ஒத்துழைத்திருந்தால் நிறைவேறியிருக்க முடியும். லோக்பாலை, தணிக்கை அதிகாரி, தேர்தல் கமிஷன் போல அரசியல் சட்ட ஒப்புதல் உடைய அமைப்பாக ஆக்கியிருந்தால் லோக்பால் நிச்சயம் பலமுள்ளதாக இருக்க முடியும். அப்படி ஆகவிடாமல் தடுத்தது பி.ஜே.பியும் இடது சாரிகளும்தான்.இப்போது மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள லோக்பால் சட்டம் மாநிலங்களவையில் நிறைவேறுமா என்பது சந்தேகம். அங்கே வேறு திருத்தங்களுடன் நிறைவேறினால், மறுபடியும் அதற்கு ஒப்புதல் தர மக்களவைக்கு வரவேண்டி இருக்கும். மாநிலங்களவையில் சிக்கல் இருந்தால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி அங்கே நிறைவேற்ற காங்கிரஸ் அரசு முயற்சிக்கலாம். இந்த இதழ் வெளிவரும்போது நிலைமை தெரிந்துவிடும். முதற்கட்டமாக இப்போதைய லோக்பால் மசோதாவைக்கூட கொண்டு வரவிடாமல் எதிர்க்கட்சிகள் ஒரேயடியாகத் தடுத்தால், அவர்கள்தான் மக்களிடம் அம்பலப்பட்டுப் போவார்கள்.இப்போது வந்திருக்கும் லோக்பால் மசோதாவில் அண்ணா ஹசாரே கோரியபடி பிரதமரையும் விசாரிக்கும் அதிகாரம் தரப்பட்டாகிவிட்டது. லோக்பால் குழுவுக்கு உறுப்பினர்களைப் பரிந்துரைக்கும் குழுவிலும், லோக்பால் குழுவிலும் 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகள், சிறுபான்மை மதத்தினர் ஆகியோருக்குத் தரப்பட்டிருக்கிறது. இந்த இட ஒதுக்கீட்டை அண்ணா ஹசாரே குழுவும் பி.ஜே.பி.யும் எதிர்க்கின்றன. பாராளுமன்ற ஜனநாயக அமைப்பில், தேர்தலில் நிற்காத சிவில் சொசைட்டி சொல்வதையும் கேட்கவேண்டுமென்று வாதாடுபவர்கள், போராடுபவர்கள், சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு லோக்பாலில் பிரதிநிதித்துவம் தருவதை மட்டும் எதிர்ப்பது அவர்களுடைய அசல் நோக்கத்தைக் காட்டிக் கொடுக்கிறது. 
 
லோக்பாலின் தலைவரைத் தேர்வு செய்யும் குழுவில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று மசோதாவில் வகை செய்யப்பட்டிருக்கிறது. இது நிச்சயம் ஆரோக்கியமான அணுகு முறைதான். லோக்பாலின் கீழ் சி.பி.ஐ.யைக் கொண்டு வரவேண்டுமென்ற அண்ணாவின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. அதற்குப் பதில் சி.பி.ஐ.யை அரசு ஏவலாக இல்லாமல் சுயேச்சையாக ஆக்க ஒரு நடவடிக்கையை எடுக்க அரசு முன்வந்திருக்கிறது. சி.பி.ஐயின் இயக்குனரை நியமிக்கும் குழுவில் பிரதமருடன் எதிர்க்கட்சித் தலைவரும், உச்ச நீதிமன்ற நீதிபதியும் இருப்பார்கள் என்று அரசு அறிவித்திருக்கிறது. இதுவும் வரவேற்கத்தக்கதுதான்.லோக்பாலின் கீழேயே விசாரணை அமைப்புகளைக் கொண்டு வரவேண்டுமென்று அண்ணா குழு சொல்வது நிராகரிக்கப்பட்டது சரி. அதில் லோக்பால் இன்னொரு போட்டி அரசு போல ஆகிவிடும் ஆபத்து உள்ளது. அதே சமயம் மத்திய கண்காணிப்பு ஆணையம், சி.பி.ஐ ஆகியவற்றின் விசாரணையைக் கண்காணிக்கும் அதிகாரம் லோக்பாலுக்குத் தரப்படுகிறது. இது நல்ல அம்சம். இப்படி சி.பி.ஐ.யின் விசாரணையைக் கண்காணிக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் உச்ச நீதி மன்றம், ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் பல நல்ல கடும் நடவடிக்கைகளை எடுக்க முடிந்தது. எனவே இப்போது காங்கிரஸ் அரசு கொண்டு வந்திருக்கும் லோக்பால் மசோதாவை முழுக்கவும் மோசடியானது என்றோ பலவீனமானது என்றோ ஒதுக்க முடியாது. இன்னும் கூடுதல் அதிகாரங்கள் தருவது இன்னொரு போட்டி அரசாக லோக்பாலை ஆக்கும் ஆபத்து கண்டிப்பாக உள்ளது. உண்மையில் இப்போது கொண்டு வரப்பட்டுள்ள லோக்பாலைக் கொண்டே பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும். தேர்தல் ஆணையத்தில் டி.என்.சேஷன் தொடங்கி வந்த ஆணையர்கள் பலரும் செய்த முக்கிய பணிகள் எதற்கும் புது சட்டங்கள் போடப்படவில்லை. ஏற்கெனவே ஆணையத்துக்கு இருந்த அதிகாரத்தைக் கொண்டே அவை செயப்பட்டன. எனவே தேர்தல் ஆணையமானாலும், உச்ச நீதிமன்றமானாலும் லோக்பாலானாலும் யார் அங்கே பொறுப்புக்கு நியமிக்கப்படுகிறார்கள் என்பதே முக்கியம். இருக்கும் சட்டங்கள் போதுமானவைதான்.லோக்பாலுடன் சேர்த்து ஒவ்வொரு மாநிலத்திலும் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த, இப்போதைய மசோதா வழி செய்திருக்கிறது. இதற்காக அரசியல் சட்டம் 253ம் பிரிவைப் பயன்படுத்தியுள்ளது. இதற்கு தி.மு.க., அ.தி.மு.க., திரிணமூல் உள்ளிட்ட பல மாநிலக்கட்சிகள் எதிர்ப்பு காட்டுகின்றன. மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு இதன் மூலம் தலையிடுவதாக அவை சொல்வது சரியல்ல. நீங்கள் விரும்பினால் லோக் ஆயுக்தாவை நியமியுங்கள் என்று சொன்னால் கருணாநிதியோ ஜெயலலிதாவோ, லாலு பிரசாத் யாதவ் போன்றவர்களோ நிச்சயம் செய்யமாட்டார்கள். லோக் ஆயுக்தா வந்தால் முதலில் நேரடியாக, புழல் சிறைக்கு அனுப்பப்படக் கூடியவர்கள், எப்படித் தாங்களே சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்வார்கள்? லோக் ஆயுக்தாவால் எடியூரப்பாவுக்கு ஏற்பட்ட கதி அவர்களுக்கு மறக்குமா? மனித உரிமைகள் ஆணையத்தை ஒவ்வொரு மாநிலமும் இப்போது அமைத்திருப்பதற்குக் காரணம் அது 253ம் பிரிவின் கீழ் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டதினால்தான். லோக் ஆயுக்தாவும் அப்படி வற்புறுத்தினால்தான் வரும். இப்போதைய மசோதாவில் தனியார் நிறுவனங்கள், காப்பரேட் கம்பெனிகள், மீடியா ஆகியவை உட்படுத்தப்படவில்லை. என்.ஜி.ஓ. எனப்படும் தொண்டு நிறுவனங்கள் மறைமுகமாகக் கொண்டு வரப்பட்டுவிட்டன என்று சொல்லலாம். பொது நன்கொடையோ, அரசு உதவியோ பெறும் அமைப்புகளும் லோக்பால் அதிகாரத்துக்கு உட்பட்டவை என்ற விதியின் கீழ் இவை வரும். இன்னும் லோக்பால் கீழ் என்னவெல்லாம் சேர்க்க வேண்டும் என்று கருதுகிறோமோ அதை காலப்போக்கில் ஒவ்வொன்றாகச் செய்யலாம். அடிப்படை அமைப்பு இப்போது வந்துள்ள மசோதாவினால் அமைக்கப்பட்டுவிட்டால், அடுத்த கட்டம் எளிது தான்.
 
இந்தியா, பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றது ஒரு நள்ளிரவில்தான் நடந்தது. அதே போல லோக்பால் மசோதாவும் மக்களவையில் நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. (என்னை 12 மணிக்கு எழுப்பி புதிய தலைமுறை டி.வி.யில் கருத்து கேட்டார்கள்!) சுதந்திரத்தை விமர்சிக்கும் புதுக் கவிதைகளில் என்னால் மறக்க முடியாதது அரங்கநாதன் எழுதிய இரவிலே வாங்கினோம். இன்னும் விடியவே இல்லை." லோக்பாலும் இரவிலே வந்திருக்கிறது. ஊழலுக்கு விடிவு காலம் வருமா? 
 
இந்த வருட கண்டனம்:
 
1.தன் மகள் கனிமொழிக்காக, பாரம்பரியம் உள்ள திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியையே பணயம் வைத்து பலவீனமாக்கிவிட்ட கலைஞர் கருணாநிதிக்கு. 
 
2. சி.பி.ஐ.யால் குற்றவாளி என்று நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு ஜாமீனில் வெளிவந்திருக்கும் கனிமொழியைச் சந்தித்ததன் மூலம் தம் கீழ் இருக்கும் சி.பி.ஐ.யை அவமதித்திருக்கும் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு.
 
இந்த வருட புதிர்!
 
மாறன் சகோதரர்கள் இன்னமும் திஹாருக்கு அனுப்பப்படாமல் இருப்பது.
 
இந்த வருடப் பூச்செண்டுகள்
 
1.உச்ச நீதிமன்றத்துக்கும் சி.பி.ஐ.க்கும்.ஊழல்களை சகித்துக் கொள்ளத் தேவையில்லை என்று மக்களுக்கு நம்பிக்கை ஊட்டியதற்காக.

2.வலுவான அமைதியான போராட்டத்தின் மூலம் மத்திய அரசை அதிர வைத்திருக்கும் கூடங்குளம், இடிந்தகரை மக்களுக்கு.
   


 

No comments:

Post a Comment