Search This Blog

Thursday, December 08, 2011

தனம் தரும் திருவிளக்கு! - கார்த்திகை ஸ்பெஷல்

 
தீபம் என்பது லக்ஷ்மி தேவியின் வடிவம். அதே தீபம் சரஸ்வதி தேவியின் பிம்பம். திரிபுரம் எரித்த சிவனையும், பார்வதி தேவியையும் நினைவுபடுத்தும் உருவமே தீபம்!தீபம் என்பது நம் உள்ளத்தின் இருளைப் போக்கி ஒளி பரவச் செய்யும். தீபம் ஞானத்தின் அறிகுறி. மங்கலத்தின் சின்னம். விளக்கு பூஜை செய்வது தொன்று தொட்டு இருந்து வருகிறது. பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய ‘ஒளி’யை வழிபடுகின்ற மரபிலே தோன்றியதே விளக்குப் பூஜை.தீபத்தை ஏற்றி வைத்து தெய்வ வழிபாடு செய்கின்றோம். தீபத்தையே தெய்வமாக வழிபாடு செய்வதும் உண்டு. 
 
திருவிளக்கின் சுடர் - சிவபெருமான்
சுடரிலுள்ள வெம்மை - பராசக்தி
சுடரின் செந்நிறம் - கணநாதனாம் கணபதி
சுடரின் ஒளி - கந்தவேல்

விளக்கின் ஐந்து முகங்களும் அன்பு, நிதானம், சமயோசிதம், சகிப்புத்தன்மை, மன வுறுதி என்னும் ஐந்து குணங்களைக் குறிக்கின்றன. விளக்கேற்றுவதும், வழி படுவதும், புண்ணியம் தரக்கூடியது. பூஜை செய்வதற்குரிய முறைகளை நன்கு அறிந்துகொண்டு அதன்படி செய்தால் பூஜைக்குரிய புண்ணியங்கள் கிடைக்கும்.

எந்த எண்ணெய் நல்லது?

விளக்கை நன்றாகத் தேய்த்து பின் ஏற்ற வேண்டும். விளக்கேற்ற உதவும் நெய், எண்ணெயினால் வரும் பலன்கள்:

பசு நெய்: சகல செல்வங்களும், சுகங்களும் கிடைக்கும். லக்ஷ்மி கடாட்சம் கிடைக்கும்.

நல்லெண்ணெய்: மகாவிஷ்ணுவின் அனுக்கிரஹம் கிடைக்கும். எதிலும் வெற்றி, நன்மைகள் நடைபெறும். சனி விலகும்.

விளக்கெண்ணெய்: கணவன்-மனைவி அன்னியோன்யமும் அன்பும் நீடிக்கும். உறவினர்கள் நன்மை அடைவார்கள்.

வேப்பெண்ணெய் + நெய் + இலுப்பெண்ணெய்: இவை மூன்றையும் சேர்த்துப் பயன்படுத்தினால் முன் ஜன்ம பாபம் நீங்கும். விரும்பியது கிடைக்கும். குலதெய்வம் வழிபாட்டுக்கு நல்லது.

தேங்காய் எண்ணெய்: விநாயகருக்கு உகந்தது.

திரி:-

பஞ்சுத் திரி: சகல சௌபாக்யங்களும் கிடைக்கும்.

வாழைத்தண்டு திரி: தெய்வக் குற்றம் நீங்கும்.

தாமரைத் தண்டு: ஐஸ்வரியம் பெருகும்.

வெள்ளெருக்கு இலைப் பட்டை: பாவங்கள் போகும்.
 
புதிய மஞ்சள் துணி திரி: தீராதகள் வியாதி குணமாகும்.

புதிய சிவப்புத் துணி திரி: திருமண யோகமும், புத்திர பாக்யமும் கிடைக்கும்.

திசை:-

வடதிசை: தடைகள் நீங்கும். கல்வித் தடை, திருமணத் தடை உடனடியாக நீங்கும்.

மேற்கு திசை: பகை நீங்கும், அமைதியான வாழ்க்கை கிடைக்கும்.

கிழக்கு: வீட்டுப் பிரச்னைகள், துன்பங்கள், பில்லி, ஏவல், சூன்யம் விலகும்.

திருவிளக்கு 5 முகம் அல்லது 2 முகம் ஏற்ற வேண்டும்.

பூஜை முறை:-

மரப்பலகை (அ) பித்தளை, வெள்ளித் தாம்பாளத்தில் விளக்கை வைக்க வேண்டும். இல்லாவிடில் வாழை இலையில் (நுனி) நடுவில் வைத்து பூஜிக்கலாம்.விளக்கிற்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும்.

குத்து விளக்கின் உச்சிப் பகுதியில் ஒரு பொட்டு. அதற்கு கீழே மூன்றும் அதனடியில் இரண்டும், கீழ்ப்பகுதியில் இரண்டு பொட்டு என மொத்தம் எட்டு பொட்டுகள் வைக்க வேண்டும்.

உச்சியில் இடம் பொட்டு தேவியின் நெற்றிப் பொட்டு. அதன் கீழே உள்ள மூன்றும் திருநயனங்கள் அதற்கடுத்த இரு பொட்டுகள் கைகளாகவும், கீழ்ப்பகுதியில் வைக்கப்படும் பொட்டுகள் திருப்பாதங்கள் எனவும் கூறப்படுகிறது.

‘விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே’ என்ற திருவிளக்கு பாடலை காலையும், மாலையும் விளக்கேற்றி வழிபடுவோம். எல்லா நன்மைகளும் பெறலாம்.  
 

கார்த்திகை மாத மகிமை!

கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் சூரிய உதயத்தின் போது நீராடுபவர்கள் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணிய பலனை அடைவார்கள்.விஷ்ணு பகவானை கார்த்திகை மாதத்தில் புஷ்பங்களால் அர்ச்சித்து பூஜை செய்பவர்கள் மோட்ச நிலையை அடைவார்கள்.கார்த்திகை மாதத்தில் விஷ்ணு பகவானை துளசி இலையால் அர்ச்சனை செய்பவர்கள் பகவானுக்கு சமர்ப்பிக்கும் ஒவ்வொரு துளசி இலைகளுக்கும் ஒவ்வொரு அசுவமேதயாகம் செய்த பலனை அடைவார்கள்.கார்த்திகையில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்மஹத்தி முதலான தோஷங்களிலிருந்து விடுபடுவார்கள். கார்த்திகை மாதத்தில் தினந்தோறும் இல்லங்களில் தீபங்களை ஏற்றி வழிபடுபவர்கள் புண்ணிய பலனை அடைவர்.கார்த்திகையில் மது, மாமிசம் முதலியவற்றை ஒழித்து விரதம் அநுஷ்டிப்பவர்கள் சகல பாபங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணு பதத்தை அடைவார்கள்.பஞ்சபூதங்களான நிலம், நீர், தீ, காற்று, வானம் இவற்றால் ஆனதே பிரபஞ்சம். அவற்றுள் அக்னியை வழிபடுவதுதான் தீபத் திருவிழா ஆகும்.நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுவது இக் கார்த்திகை மாதத்தில்தான்.குத்துவிளக்கில் இருக்கும் ஐந்து முகங்களையும் ஏற்றி வைத்தால் அந்த இடமே லட்சுமிகரமாகத் திகழும்.

ஆர். அனுராதா ரவீந்திரன் 

மாலதி நாராயணன் 

 

 

No comments:

Post a Comment