Search This Blog

Friday, November 25, 2011

உமர் அப்துல்லா Vs இந்திய ராணுவம்


முதலில் காஷ்மீர் அரசியல்வாதிகளுக்கு அளிக்கப்பட்டு வருகின்ற பாதுகாப்பை விலக்குங்கள் 
அதன்பிறகு ராணுவ சிறப்பதிகாரச் சட்டத்தை விலக்கலாம்.


சுய அழிவு என்பது ஒரு வகையான நிலை. அதற்கு எதிர்நிலை சுய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ஆகும். காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லாதான் பின்னிய வலையிலேயே சிக்கிக் கொண்டு விட்டார். அவருக்குத் தெரிந்த தப்பிக்கும் வழி, இந்திய ராணுவத்தின் மீது பழி சுமத்துவது மட்டுமே. ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீர்த்துப் போக வைப்பது தான் தனது அரசியல் எதிர்காலத்துக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று உமர் அப்துல்லா கருதுகிறார். அவரிடம் நிர்வாகத்தை நடத்திச் செல்லுகின்ற அளவுக்கு சாமர்த்தியமோ அல்லது விவேகமோ இருப்பதாகத் தெரியவில்லை. அரசு செயலிழந்து விட்டது. இதற்கான பழியை ராணுவத்தின் தலையில் அவர் தூக்கிப் போடுகிறார்.
 
கடந்த ஓராண்டு காலத்தில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூடு காரணமாக அப்பாவி குடிமகன் யாரும் பலியானதில்லை. பயங்கரவாதிகளின் துப்பாக்கிகளிலிருந்து பாய்ந்த குண்டுகள்தான் அப்பாவிகளின் உயிரைக் குடித்துள்ளன. ஆனால் இந்த அம்சத்தை அனைவரும் ஓரங்கட்டி விடுகிறார்கள். இதைப்பற்றி யாரும் வாய் திறப்பதே இல்லை. மாறாக, ராணுவத்தினர் மீது புழுதி வாரி தூற்றுகிறார்கள். இது ஏன்?இந்த கேள்விக்குப் பின்னால் அழுத்தமான, ஆழமான பரிமாணங்கள் உள்ளன. பிரிவினைவாதிகளும் பயங்கர வாதிகளும், உள்ளூர் போலீஸாரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரை திருப்பி அனுப்ப வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுக்காதது ஏன்?பிரிவினை வாதிகள் ஒருபுறம், அரசியல்வாதிகள் மறுபுறம் என இருமுனைத் தாக்குதலில் சிக்கி நமது ராணுவம் தத்தளிக்கிறது. முதலில் முக்கிய பிரமுகர்களுக்கு அளித்துள்ள பாதுகாப்பை வாபஸ் பெறுக:
 
 
ராணுவ சிறப்பு அதிகாரச் சட்ட த்தை வாபஸ் பெறவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அது தொடர்பான சர்ச்சையும் தீவிரமடைந்து வருகிறது. ராணுவத்தினரை எங்கே பயன்படுத்த வேண்டும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து ராணுவ உயர் அதிகாரிகள்தான் முடிவு செய்ய வேண்டும். அரசியல்வாதிகள் இதில் அனாவசியமாக குறுக்கிடக் கூடாது. ராணுவ தலைமைத் தளபதி வி.கே. சிங் ஜிஓசி 15 கார்ப்ஸ் ஜெனரல் ஹஸ்னைன் ஆகியோர் ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெறக் கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளார்கள். எல்லை தாண்டிய ஊடுருவல் முடிவுக்குவராத நிலையில் ராணுவத்தை வாபஸ் பெறுவது சரியல்ல என்பது அவர்களது கருத்தாகும். ஆனால் அரசியல்வாதிகள் இதற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் அவர்களில் யாரும், முதலமைச்சருக்கோ அமைச்சர்களுக்கோ அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பை குறைக்கவேண்டும் என்று கூறத் தயாராக இல்லை. காஷ்மீர் போலீஸில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இதில் 40 முதல் 50 சதவீதத்தினர் முக்கிய பிரமுகர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோரின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காஷ்மீர் டிஜிபி அலுவலகம், காஷ்மீர் சட்டசபை, அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களின் குடியிருப்புப் பகுதி ஆகியவை உச்ச பாதுகாப்புடன் கூடிய அரண்களாக உள்ளன. பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் நீங்கிவிட்டால், இந்த 40,000 முதல் 50,000 வரையிலான போலீஸாரை வேறு பணிக்கு திருப்பமுடியும் எல்லா அரசியல்வாதிகளும் பாதுகாப்பின்றி உலா வர முடியும் அதன்பிறகு தான் ராணுவ சிறப்பதிகாரச் சட்டத்தை நீக்குவது குறித்து முடிவு எடுக்கமுடியும்.
 
பாகிஸ்தானில் ஜிஹாதி தொழிற்சாலைகள்:
 
 
பயங்கரவாதம் காஷ்மீரில் நெடுங்காலமாக உள்ளது. முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ஆட்சி காலத்திலும் பயங்கரவாதம் உக்கிரமாக இருந்தது. அப்போது 6,500 முதல் 7,500 வரையிலான எண்ணிக்கையில் பயங்கரவாதிகள் இருந்தார்கள். இவர்களை சமாளிக்க ராணுவத்தை அனுப்பாவிட்டால் காஷ்மீர் கைநழுவிப் போய்விடும் என்பதை வி.பி.சிங் உணர்ந்தார். இதையடுத்து, எல்லைப்பகுதியை பாதுகாக்கவும் பயங்கரவாதியை முறியடிக்கவும் ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டார்கள். ஆண்டுதோறும் 3000 முதல் 4000 வரை புதிது புதிதாக பயங்கரவாதிகள் ஊடுருவத் தொடங்கினார்கள். நமது ராணுவ வீரர்கள் இதை முறியடிக்கும் பணியில் முனைப்புடன் ஈடுபட்டார்கள். இந்த பணியில் சுமார் 5500 ராணுவ வீரர்கள் பலியாக நேரிட்டது. ராணுவத்தால் காக்கப்பட்டுவரும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே ஊடுருவலே இல்லை என்ற நிலையை உருவாக்கிவிட்டோம் ஆனால் வங்காள தேசம், நேபாளம் ஆகியவற்றின் எல்லைப் பகுதிகளிலும் கடலோரப் பகுதிகளிலும் ராணுவத்தினரின் நேரடிப் பாதுகாப்பு இல்லை. பாகிஸ்தானில் இப்போது கூட ஜிஹாதி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பயங்கரவாதிகள் உருவாக்கப்பட்டு வருகிறார்கள்.மனித உரிமை ஆர்வலர்களுக்கு அரசு போதுமான அவகாசம் கொடுத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அவர்கள் ராணுவத்தினரை தாக்குவதிலேயே குறியாக உள்ளார்கள். அவர்கள் வக்கிரமான சிந்தனையை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதன் காரணமாக நேர்மையான, மதிநுட்பம் வாய்ந்த ராணுவ அதிகாரிகள் பலர், அற்பத்தனமான கேள்விகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். தனியார் தொலைக்காட்சி சேனல்கள் காளான்கள் போல பெருகியுள்ளன. இவையும் மனித உரிமைகள் என்ற பெயரில் ராணுவத்தினருக்கு தொல்லை கொடுத்து வருகின்றன. ராணுவத்தினரை காயப்படுத்தி வருகின்றன. ராணுவத்தினர் எவ்வளவு காயமடைந்தாலும் சரி, துன்பமடைந்தாலும் சரி அதைப் பற்றி யெல்லாம்  இந்த சேனல்களுக்கு கவலை கிடையாது, ஆனால் யாரேனும் ஒரு பயங்கரவாதி பலியாகிவிட்டால், இந்த ஊடக உலக மனித உரிமை ஆர்வலர்கள் அதை விசுவரூபப்படுத்தாமல் விட மாட்டார்கள். பல முக்கியமான தேசிய செய்திப் பத்திரிகைகளும், பயங்கரவாதிகளின் ஊதுகுழல்களைப் போல செய்திகளை வெளியிட்டு வருகின்றன. பயங்கரவாதிகளின் நிலைப்பாடுதான் முதன்மைப்படுத்தப்பட்டு வருகிறது.
 
ராணுவத்தினருக்கு சிறப்பு அதிகாரம் ஏன் வேண்டும்?
 
 
”ஏ ஃப் எஸ் பி ஏ” (AFSPA) எனப்படும் ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டம் –1958, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கொண்டு வரப்பட்டது. பயங்கரவாதிகளின் கொட்டம் அதிகமாக இருந்த போது அவர்களை ஒடுக்குவதற்காக இது கொண்டு வரப்பட்டது. பயங்கரவாதிகள் வன்முறை நிகழ்வுகளில் ஈடுபட்டுவிட்டு மாயமாகி விடுவார்கள். அவர்களை ராணுவத்தினர் துரிதமாகவும் துணிச்சலாகவும் ஒடுக்க இந்த சட்டம் இன்றியமையாதது. உயர் அதிகாரிகளிடமிருந்து ஆணை வரட்டும் என்று காத்திருந்தால் பயங்கரவாதிகளை ஒடுக்க முடியாது. அதுமட்டுமல்லாமல், ராணுவ அதிகாரிகளுக்கு, வீரர்களுக்கு பாதுகாப்பு தேவை. அவர்களுக்கு நூறு சதவீத பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. அவர்கள்  மீது வழக்குத் தொடரலாம். ஆனால் அதற்கு மத்திய அரசிடமிருந்து முன் கூட்டியே அனுமதி பெறவேண்டும். ராணுவ வீரர்கள் சிலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை மிகவும் அபூர்வமானவை.
 
ராணுவம், ராணுவமாகவே செயல்படமுடியும்:
 
ஒரு குறிப்பிட்ட பகுதி, கலவரப் பகுதி என பிரகடனப்படுத்தப்பட்டால்தான் அங்கு ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டத்தை பிரயோகிக்க முடியும். ராணுவத்தினர் எப்போது பார்த்தாலும் பயங்கரவாதிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அப்படி நினைத்துக் கொண்டிருப்பது ராணுவத்தினரின் பணியுமல்ல. ஆனால் துரதிஷ்டவசமாக 50 ஆண்டுகளுக்கும் மேலாக வன்முறை நிகழ்வுகள் தொடந்து கொண்டிருக்கின்றன. இந்த கிளர்ச்சிகளை மாநிலப் போலீஸாராலும் மத்திய போலீஸாராலும் ஒடுக்க முடியவில்லை. இதனால்தான் பயங்கரவாதிகளை ஒடுக்கும்பணியில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.பயங்கரவாத ஒழிப்பில் ராணுவத்தினரை ஈடுபடுத்த வேண்டாம் என்ற தேசிய தலைமை முடிவு எடுத்தால், அது குறித்து ராணுவத்தினருக்கு எந்த ஆட்சேபமும் இருக்கப் போவதில்லை. ராணுவத்தினர் தங்களது வழக்கமான பணிகளைத் தொடர்வார்கள். பயங்கரவாத ஒழிப்பில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்படும் போது அவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு அளிக்கப்படுவது இன்றியமையாதது. இவ்வாறுதான் இயல்பு நிலை முழுமையாக திரும்ப வழிவகை செய்ய வேண்டும், இதற்கு அரசியல் தலைவர்கள் ஆவன செய்யவேண்டும். அதிகாரிகள் நிர்வாகத்தைச் செம்மைப் படுத்த வேண்டும் என்று ராணுவ வீரர்கள் எதிர்பார்க்கிறார்கள். இவை யாவும் நடந்து முடிந்து விட்டால் ராணுவம் எப்படி செயல்படுமோ அப்படி இயங்கும்.ராணுவ வீரர்கள் அதிக பணிச்சுமையால் திணறுகிறார்கள். பயங்கரவாத ஒழிப்பில் இடைவிடாமல் ஈடுபடுத்தப் படுகிறார்கள். அவர்கள் மாதக் கணக்கில், வருட கணக்கில் தங்கள் குடும்பத்தினரை பிரிந்திருக்கிறாகள். பதுங்கு குழிகளிலும், தற்காலிக கூடாரங்களிலும் காலத்தைக் கழித்து வருகிறார்கள். எப்போது கண்ணி வெடி வெடிக்குமோ, கைஎறி குண்டு வீசப்படுமோ என்ற அச்சம் நிறைந்த சூழ்நிலையில் அவர்கள் காலத்தை கழித்து வருகிறார்கள்.ராணுவ வீரர்களுக்கு இருந்து வந்த தனித் தன்மை, மதிப்பு மரியாதை படிப்படியாக குறைந்து விட்டது. ராணுவ அதிகாரிகள் பலர் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வெளியே வந்துவிடுகிறார்கள். இன்றைய இளைஞர்களுக்கு ராணுவத்தில் சேர நாட்டமே இல்லை. அவர்கள் கார்ப்பரேட் துறைகளில் பணிபுரியவே விரும்புகிறார்கள். இந்திய ராணுவத்தின் தனித்தன்மை, புகழ், மாட்சி ஆகியவை காப்பாற்றப்படவேண்டும். போர்முனையில் சாகசம் நிகழ்த்திய ராணுவ வீரன், தற்கொலைப் படையின் குண்டுக்கு பலியாகி உயிர் துறப்பதைப் போல வேறு எதுவும் சோகமானது இல்லை. ராணுவ வீரர்கள் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் ஆற்றலுடன் விளங்கினால் தான் பொது மக்கள் பாதுகாப்பாக வாழ முடியும்.
 
தயவு செய்து ராணுவத்தினரை அலைக்கழிக்காதீர்கள். அவர்களை நிம்மதியாக வாழ விடுங்கள்.
 
ராணுவ சிறப்பதிகாரச் சட்டம் கொடூரமானது அல்ல, அதை விலக்காதீர்கள்
 
உமர் அப்துல்லாவுக்கு ராணுவம் கடிதம்:
 
ராணுவ சிறப்பதிகாரச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வற்புறுத்தி வருகிறார். இந்நிலையில், ராணுவ உயர் அதிகாரிகள் இச் சட்டத்தை வாபஸ் பெறாதீர்கள் என்று வற்புறுத்தி அவருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர். அதன் சாராம்சம் வருமாறு:
 
பாகிஸ்தான் ராணுவம், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ எஸ் ஐ, பிரிவினை வாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் தங்களது ஆதாயத்துக்காக ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று சில அமைப்புகளை ஏவி விட்டுக் கொண்டிருக்கின்றன.சில பகுதிகளில் அமைதி பூரணமாகவும் குறிப்பிட்டு சொல்லத்தக்க அளவிலும் உள்ளது என்றால் அதற்கு ராணுவ வீரர்களின் அயராத பணிதான் காரணம். எனவே ராணுவ வீரர்களை தொடர்ந்து செயல்பட அனுமதியுங்கள்.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 2500 பயங்கரவாதிகள் உள்ளனர். நம் நாட்டை ஒட்டியுள்ள மற்ற பாகிஸ்தான் பகுதியிலும் கணிசமான எண்ணிக்கையில் பயங்கரவாதிகள் உள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 400 பயங்கரவாதிகள் உள்ளனர். 20,000 பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் 42 பயங்கரவாத முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. இப்பின்னணியில், ராணுவ சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெற வேண்டுமா?சில அமைப்புகள் தொடர்ந்து பிரிவினை வாதத்துக்கு ஊக்கமளித்து வருகின்றன. ராணுவ சிறப்பு அதிகார சட்டம் கொடூரமானது அல்ல. இதைப் பயன்படுத்த சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதனால் மனித உரிமை மீறலுக்கு இடமில்லை.ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டத்தை ஓரளவுக்கு வாபஸ் பெறலாம் என்பது ராணுவத்தினரின் செயல்பாட்டுக்கும் ராணுவ வீரர்களின் மனோ திடத்துக்கும் உகந்தது அல்ல. எல்லைப் பாதுகாப்புக்கும் இது உகந்தது அல்ல. எனவே இப்போதுள்ள சூழ்நிலையில் ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெற முயற்சி செய்வது தேச நலனுக்கு உகந்த தல்ல.   
 
ப்ரீகேடியர். ஹேமந்த் மகாஜன்
 

 

No comments:

Post a Comment