Search This Blog

Tuesday, November 22, 2011

சமையல் கேஸ் தட்டுப்பாடு...சுலபமாக சமாளிக்கும் சூத்திரங்கள் !

 
'சிலிண்டர் தட்டுப்பாடு'... சமீப நாட்களாக நம் தினசரி பிரச்னையாகி பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. சிலிண்டர் கிடைக்காமலிருப்பது... கிடைப்பதற்கு அநியாயத்துக்கு தாமதம் ஆவது... என்பது போன்ற காரணங்களால், கிச்சன் சுமையும், டென்ஷனும் கூடிப்போக, 'என்னதான் செய்றது..?’ என்று விரக்தியில் இருக்கிறார்கள் மக்கள்.
 
''ஏன் இந்த தட்டுப்பாடு?''  
 
''கேஸ் நிரப்பும் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. தொடர்ந்து பெய்த மழையும் ஒரு காரணம்". 
 
தீர்வு :
 
''விலை உயர்வு, தட்டுப்பாடு என்பதற்காக மட்டுமல்ல... ஒரு காலத்தில் இந்த சமையல் கேஸே இல்லாமல் போகப் போகிறது. ஆம்... சமையல் கேஸ், பெட்ரோலியம், டீசல் போன்ற எரிபொருள்கள்... வற்றிப் போகக்கூடிய சக்திகள்தான். சமீப ஆண்டுகளில் இவற்றை அதிக அளவு  மக்கள் பயன்படுத்த ஆரம்பித்திருப்பதால், டிமாண்ட் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் எல்லா எரிபொருட்களுக்கும் தட்டுப்பாடு உண்டாகலாம். எரிபொருட்களுக்கான மானியத்தை நிறுத்தும் முயற்சியில் இருக்கிறது மத்திய அரசு. அப்படி வரும்போது ஒரு சிலிண்டர் விலை 700 ரூபாயைத் தாண்டக்கூடும். எனவே, எதிர்வரும் காலத்தில் சமையலுக்கு முழுக்க முழுக்க எல்.பி.ஜி. கேஸை மட்டுமே நம்பியிருக்காமல், மாற்று வழிமுறைகளைத் தேடிக்கொள்வதும் கற்றுக்கொள்வதும் காலத்தின் அவசியம்".
 
 
''உங்கள் வீட்டில் மிச்சப்படும் காய்கறி மற்றும் உணவுக்கழிவிலிருந்தே எரிவாயு உற்பத்தியை செய்துவிட முடியும். அதற்காகவே 'சக்தி சுரபி' எனும் எரிவாயு  இருக்கிறது.இதில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று... இடம் விட்டு, இடம் பெயர்ந்து எடுத்துச் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட சக்தி சுரபி. இது பிளாஸ்டிக் கலனால் ஆனது. மற்றொன்று நிலையானது. இது சிமென்ட் கட்டுமானத்தால் ஆனது. கழிவுகளை உள்ளே செலுத்தும் குழாய், ஜீரணிப்பான், வாயுகொள்கலன், தண்ணீர் வெளியேறும் பாதை, உரம் வெளியே வரும் பாதை... இத்தனையும் சேர்ந்ததுதான் சக்தி சுரபி. வேண்டாம் என நாம் வீசி எரியும் சமையலறைக் கழிவுகள் மட்டுமே இதற்குத் தீனி. ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கலன் மூலம் ஒரு நாளைக்கு ஒரு கனமீட்டர் வாயுவை உற்பத்தி செய்யலாம். ஒரு நாளைக்கு ஐந்து கிலோ கழிவுகள் (காய்கறி மற்றும் உணவு) தேவைப்படும். இதுவே நான்கு பேர் உள்ள சராசரி குடும்பத்துக்குப் போதுமானதாக இருக்கும். இந்த கலனை நகர்ப்புறத்தில் உள்ளவர்களும் தாராளமாக அமைத்துக் கொள்ள முடியும்.
 
 
மாநகரம் அல்லாத பிற நகரங்கள் மற்றும் கிராமங்களில் கால்நடை வளர்ப்பது சாத்தியமானதுதான். அப்படி வளர்ப்பவர்களுக்கு சாண எரிவாயு கலன் ஒரு வரப்பிரசாதம். வீட்டில் இரண்டு மாடு வளர்ப்பவர்கள்கூட துணிந்து எல்.பி.ஜி. கேஸுக்கு குட்பை சொல்லிவிடலாம். அல்லது அக்கம்பக்கம் யாராவது மாடு வளர்த் தால் கூட சாணத்தை வாங்கிக் கொள்ளலாம். தினமும் 25 கிலோ சாணத்தை கலனுக்குள் செலுத்தினால், ஒரு கன மீட்டர் வாயு உற்பத்தி யாகிவிடும். இது நான்கு பேர் உள்ள சராசரி குடும்பத்துக்கு ஒரு நாளுக்குப் போதுமானதாக இருக்கும். இதற்கு அரசு மானியமும் இருக்கிறது.
 
விறகு அடுப்பு
 
''இதைக் கேட்டதுமே... 'ஐயையோ... விறகு அடுப்பை ஊதி ஊதியே உயிரு போயிடுமே' என்று கலங்க ஆரம்பித்து விடாதீர்கள்.இன்னும் கிராமங்களில் விறகுதான் பிரதான எரிபொருள். அவர்களுக்காகவே டிசைன் செய்யப்பட்ட அடுப்புகள் இவை. 'சிங்கிள் பாட்’ என்றழைக்கப்படும் ஒற்றை அடுப்பு, 'டபுள் பாட்’ எனப்படும் இரட்டை அடுப்பு, 'பயோ கேஸ் ஸ்டவ்’ எனப்படும் வெப்ப எரிவாயு அடுப்பு என மூன்று வகை அடுப்பு உள்ளன. விறகு, நம் பாரம்பரிய அடுப்புகளில் எரியும்போது 7 சதவிகித எரிசக்திதான் கிடைக்கும். அதுவே இந்த வகை அடுப்பு களில் 25 சதவிகித எரிசக்தி கிடைப்பதுபோல் டிசைன் செய்யப்பட்டிருப்பதுடன், புகையும் அதிகம் உண்டாகாமல் இருப்பதால், இதற்கு அதிக வரவேற்பு உண்டு. குறிப்பாக, சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு இது பெரிய அளவில் கைகொடுக்கும்''
 
 நன்றி 
 
- வாசுதேவ், மைய செயலாளர்,
  விவேகானந்தா கேந்திரா 
  கன்னியாகுமரி
 
- பேராசிரியர் டாக்டர் வெங்கடாசலம்
   'பயோ எனர்ஜி’ துறைத் தலைவர்
    தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்  
 
மற்றும்
 
விகடன்   
 

1 comment:

  1. பயனுள்ள அருமையான பதிவு
    பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete