Search This Blog

Sunday, October 09, 2011

உதிக்குமா...துளிர்க்குமா? - திருச்சி இடைத்தேர்தல் ட்ரெய்லர்


திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் (அக்டோபர் 13) வாக்களித்த பிறகு மூன்று நாட்கள் கழித்து, (அக்டோபர் 17) மாநகராட்சித் தேர்தலுக்கு வாக்களிக்க உள்ளனர் இத்தொகுதி வாக்காளர்கள். இந்த அடுத்தடுத்த தேர்தல் சராசரி வாக்காளர்களுக்கு, தீபாவளி நெருங்கிவரும் வேளையில் டபுள் போனஸ்!

* கடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேருவைத் தோற்கடித்து வெற்றி பெற்றவர் அ.தி.மு.க.வின் மரியம்பிச்சை. அமைச்சராக உறுதிமொழி ஏற்று, சட்டமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்கப்போன நேரத்தில் சாலை விபத்தில் மரணம் அடைய, அதனால் உருவான இடைத்தேர்தல் இது.


* வரிசைகட்டி நிற்கின்ற ‘நில அபகரிப்பு’ புகார்களின் அடிப்படையில் ‘உள்ளே’ இருக்கிற நேருதான் தி.மு.க. வேட்பாளர். திருச்சி, குமரன் நகரைச் சேர்ந்த டாக்டர் ராணி, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தம்மை ஏமாற்றிவிட்டதாக புகார் மனு தாக்கல் செய்யப்பட்டு, அவர் குற்றம் சாட்டும் பரஞ்ஜோதி என்பவர் அ.தி.மு.க. வேட்பாளர்.

* தி.மு.க. வேட்பாளர் மத்திய சிறைக்குள் அடைக்கப்பட்டிருப்பதால், அவரது வேட்பு மனுவை நேரில் வந்து தாக்கல் செய்தவர் முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின். உள்ளாட்சித் தேர்தலில் தனித்தே போட்டியென கருணாநிதி அறிவித்திருந்தாலும், சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு மாநகரின் முக்கிய காங்கிரஸ் பிரமுகர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரியுள்ளார் ஸ்டாலின்.

* கடந்த தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ்,விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி. அ.தி.மு.க., தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் சில கட்சிகள் கூட்டணி. இரு தரப்பிலும் கூட்டணிக் கட்சிகள் தனித்தனியே சிதறிப் போக, தற்போது திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் தி.மு.க.-அ.தி.மு.க. இரு கட்சிகள் மட்டுமே தங்கள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அதனால் தி.மு.க.- அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு இடையே கடுமையான போட்டி.


* கம்யூனிஸ்டுகளுக்கென்று நிலையான வாக்கு வங்கி இத்தொகுதிக்குள் உண்டு. அ.தி.மு.க. கூட்டணி முறிவினால் எங்கள் தோழர்களின் வாக்குகள் எந்தப் பக்கம் என்று இன்னமும் முடிவாகவில்லை!" என்கிறார் சி.பி.எம். கட்சியின் திருச்சி மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர். உள்ளாட்சித் தேர்தலில் அ.தி. மு.க.வுடன் உடன்பாடு எட்டாதது சற்று வருத்தம்தான். அதற்காக அ.தி.மு.க.வின் அரசியல் நிலையிலிருந்து, தி.மு.க. அரசியல் நிலைக்கு நாங்கள் மாறவில்லை. திருச்சி மேற்கு இடைத்தேர்தலில் யாருக்கு வாக்களிப்பதென, எங்கள் கட்சியின் செயற்குழு கூடி முடிவு அறிவிக்கும்!" என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் இந்திரஜித்.

* தேர்தல் பாதுகாப்புக்கென ஐந்து துணை ராணுவப் படைகள் வந்துள்ளன. கண்கொத்திப் பாம்பாகக் கவனிக்கும் தேர்தல் பார்வையாளர்கள், கெடுபிடியாகத் துரத்திப் பிடிக்கும் காவல்துறையினர் மத்தியில் மிகவும் அரண்டு போயுள்ளனர் தி.மு.க.வினர். நான்கு சால்வைகள், நான்கு வேட்டிகள் மட்டுமே தம் காரில் வைத்திருந்த மாநகராட்சி நான்காவது வார்டு தி.மு.க. வேட்பாளர் ஜப்பான் ரெங்கன், வாக்காளர்களுக்கு வேட்டி வினியோகம் சம்பந்தமாகக் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ளார்!

* தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர். செல்வகணபதி, ரகுமான்கான், டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் செல்வராஜ் என ஒரு பெரும் படையே நேருவுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

* தொடரும் நில அபகரிப்புப் புகார்களினால் ஜாமீனில்கூட வெளியே வர இயலாமல் இருக்கும் தி.மு.க. வேட்பாளர் மீது, தொகுதி மக்களிடையே ஒருவித வெறுப்பு நிலவுகிறதே என்றதற்கு, ஆளும் அ.தி.மு.க. அரசு வேண்டும் என்றே திட்டமிட்டு நேருவைச் சிறையில் அடைத்துள்ளது. இதனால் தொகுதி மக்களிடையே நேரு மீதான அனுதாபம் அதிகரித்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் தம் தொகுதிக்கு நிறைய திட்டங்களைக் கொண்டு வந்து செயல்படுத்தியவர் நேரு. அதனால் வெற்றி உறுதி!" என நம்பிக்கை தெரிவிக்கிறார் முன்னாள் அமைச்சர் வேலு. 

* கட்சியின் வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில் (அக்டோபர் 2), திருச்சி மாநகருக்குள் சுற்றிச் சுற்றிப் பிரசாரம் செய்து விட்டுச் சென்றுள்ளார் தே.மு. தி.க. கட்சி நிறுவனர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா!

* நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் பதினான்கு அமைச்சர்கள் தொகுதிக்குள் முகாமிட்டுத் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். 22 வார்டுகளை உள்ளடக்கிய இத்தொகுதியில் வார்டுக்கு ஓர் அமைச்சர் வீதம் மேலும் அமைச்சர்களை வரவழைத்து, வாக்கு சேகரிக்கத் திட்டமிட்டுள்ளது ஆளுங்கட்சி. 

* ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த் என ஒவ்வொரு நாளும் அடுத்தடுத்து வந்து திருச்சியில் வாக்கு சேகரிக்க உள்ளனர். திருச்சி மேற்கில் உதிக்குமா சூரியன்? மீண்டும் துளிர்க்குமா இரட்டை இலை? கூட்டணி முறிவுகளால் யாருக்கு வெற்றி மாலை என்பது மதில் மேல் பூனையாக அமர்ந்துள்ளது.



No comments:

Post a Comment