Search This Blog

Saturday, October 22, 2011

டாட்டூ வரலாறு


இந்த பிரபஞ்சம் முழுவதும் விசித்திரம் நிறைந்து கிடக்கிறது. இன்று எதெல்லாம் புதுமை, கண்டுபிடிப்பு என்று தலையில் வைத்துக் கொண்டாடுகிறோமோ அதெல்லாம், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நடந்திருக்கிறது. அப்படியானால், நம்மைவிட முன்னோர்கள் திறமையானவர்களா, இன்று நமக்கு கிடைக்கும் அத்தனை வசதி வாய்ப்புகளும் அவர்களுக்கும் கிடைத்திருக்குமா என்ற சந்தேகமும் நம் முன்னால் எழுந்துகொண்டுதான் இருக்கிறது. 

நம் தாத்தா, பாட்டி காலங்களில் பச்சைக் குத்துவது என்பது சர்வ சாதாரணம். அது அப்படியே நாகரிகம் கருதி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்தது. ஆனால், இன்று மேற்கத்திய கலாசாரம் என்ற பெயரில் இளைஞர்களும் இளைஞகளும் கை, கால் ஆரம்பித்து, உடலில் சகல இடங்களிலும் டாட்டூ வரைந்து கொள்கின்றனர். இன்று நம் இளைஞர்கள் எது ஃபேஷன் என்று கலர் கலராக உடலில் வரைந்து கொள்கிறார்களோ, அதே டாட்டூ 5000 ஆண்டுகளுக்கு முன், ஓர் இனத்தின் ஒதுக்கப்பட்ட பிரிவினரைத் தனியே பிரித்துக் கண்டறியும் ஓர் அடையாளமாகப் பயன்பட்டிருக்கிறது என்று சொன்னால்... அது வியப்புக்குரிய விஷயம் தானே!.  பிரிட்டனில் உள்ள யோர்க் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர் ஜோன் பெட்ச்சர். அவருக்கு மனித நாகரிகம் பற்றிய வளர்ச்சியைத் தெரிந்து கொள்வதில் எப்போதும் ஒரு தேடல் தான். பெரும்பாலான நாள்கள் தன் ஆராய்ச்சி மாணவர்களுடன் ஊர் ஊராகச் சுற்றுவதுதான் அவருக்கு வேலை. அப்படித்தான் அன்றும் நடந்தது. 1991ம் ஆண்டு. இத்தாலிக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான பனிகொட்டும் ஆல்ப்ஸ் மலை அது. அந்த மலைதான் ஜோனுக்கு மனித நாகரிகத்தைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி இடமாக இருந்தது. மலைகளின் பல இடங்களில் தோண்டிப் பார்த்தாகி விட்டது. கிடைத்தது என்னவோ, மலை ஆடுகளின் எலும்புகளும் விலங்குகளின் படிமங்களும்தான். ஆனால், அந்தப் படிமங்கள் அனைத்தும் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக இறந்து கிடந்த படிமங்கள்தான். இருந்தாலும் மனம் தளரவில்லை ஜோன். அந்தப் பனிப் பிரதேசத்தின் மூலையில் ஒரு விசித்திரமான ஐஸ்கட்டி, பாறைகளுக்கு இடையில் கிடந்ததைப் பார்த்தார். அந்த விசித்திர ஐஸ் கட்டியை எப்படியாவது உடைத்துப் பார்த்துவிட வேண்டும். அதில் நம் தேடலுக்கான விடை கிடைக்கலாம் என்பது ஜோனின் எண்ணம். பாறைகளுக்கு ஊடே சிக்கிக் கிடந்த அந்த விசித்திர ஐஸ் கட்டியை ஜோன் தன் மாணவர்களின் உதவியுடன் எடுத்தார். 

ஐஸ் பகுதியைக் கொஞ்சம் கொஞ்சமாக உடைத்துப் பார்த்தபோதுதான் தெரிந்தது, அது பல ஆண்டுகளுக்கு முன் இறந்துபோன ஒரு மனிதன் என்று. ஜோனுக்கு ஒருபுறம் அதிர்ச்சி என்றாலும், மனிதனின் கலாசாரத்தைச் சொல்லப்போகும் ஒரு பொக்கிஷமாக அந்தச் சடலம் தெரிந்தது. பாதுகாப்புடன் தன் சோதனைக் கூடத்துக்கு அந்தச் சடலத்தை எடுத்து வந்தார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான மனிதனின் சடலமாக இருக்கலாம் என்பதுதான் ஜோனின் கணிப்பு. கார்பன் வயது சோதனைக்கு அந்தச் சடலத்தை உட்படுத்தியபோது, சுமார் 5,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது தெரிய வந்தது.ஜோனுக்கு ஆச்சரியம். சடலத்தில் முதுகு, முழங்கால், கணுக்கால், மூட்டுப் பகுதிகளில் கறுப்பு நிறத்தில் புள்ளிகள் தொடர்ச்சியாக வட்டமாகவும் கோடாகவும் தெரிந்தன. தொடர் ஆராய்ச்சியில் ஜோன் ஈடுபட்டபோதுதான் அது டாட்டூ என்பது தெரிய வந்தது. இந்த ஆய்வை ஜோன் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்தபோது, அக்குபஞ்சர் மூலம் நோய்களை எப்படித் தற்காலத்தில் குணப்படுத்துகிறார்களோ அதேபோல ஒரு வைத்தியமுறையாக டாட்டூவை அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்று ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டார்கள். ஆனால், அதுவல்ல உண்மை. இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எகிப்து மம்மிகள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்தபோது, ஒரு சில பெண் சடலங்களில் இதேபோல டாட்டூ ஓவியங்களைக் காண முடிந்தது. நோயுற்ற பெண்களை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தி, நோய் பரவாமல் இருப்பதற்காக இவ்வாறு டாட்டூ குத்தியிருக்கலாம் என்பது மற்றொரு தரப்பின் ஆராய்ச்சி. 


 பச்சைக் குத்தும் முறை முற்றிலும் எகிப்திய காலத்தில்தான் உருவானது. எகிப்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட போது மம்மிகளுடன் கிடைத்த சில நுண்ணிய ஊசிப் போன்ற பொருள்கள், முற்றிலும் டாட்டூ வரைவதற்கான கருவிதான் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் வரைந்து வைத்திருந்த பெண் ஓவியங்களில் கூட டாட்டூ வரையாமல் விட்டுவைக்கவில்லை. மருத்துவ வசதியில்லாத அந்தக் காலத்தில் கர்ப்பம் தரித்த பெண்கள் பிரசவ காலத்தில் பிரசவ வலியைக் குறைப்பதற்காகத்தான் இந்த டாட்டூ வரையும் கலாசாரத்தைப் பின்பற்றியிருக்க வேண்டும். ஏனெனில் கிடைத்த மம்மிகள் சடலங்களில் தொடை, அடிவயிறு, மார்பகங்களிலேயே அதிகளவில் டாட்டூகள் வரையப் பட்டிருக்கின்றன என்று ஓர் ஆராய்ச்சி சொல்ல, இல்லவே இல்லை பெண்கள் மட்டுமல்ல... ஆண்களும் எகிப்தில் டாட்டூ வரையும் கலாசாரத்தைப் பின்பற்றியிருக்கிறார்கள். அவர்கள் ஓவியம், சிற்பம் வடிப்பதில் கைத்தேர்ந்தவர்கள், அவர்களின் கலை ரசனைக்கான ஓர் அடையாளம் மட்டுமே இந்த டாட்டூ என்கிறது இன்னோர் ஆராய்ச்சி. எகிப்து ஆரம்பித்து அதன்பின் கிரீன்லாந்து, சைபீரியா மற்றும் நியூசிலாந்து போன்ற அகழ்வாராய்ச்சியிலும் 1000 ஆண்டுகளுக்கு முன் டாட்டூ வரையப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1700-ம் ஆண்டுகள் வாக்கில் பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட போர் காரணமாக மக்கள் அடிமைகளாகவும் நாடோடிகளாகவும், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் மூலமாகவே டாட்டூ கலை பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. அதுமட்டுமல்லாமல், இரண்டாம் உலகப்போர் முடிந்த சமயம் அது. தெற்கு சைபீரியாவில் உள்ள அல்டி மலைகளில் ஏராளமான கல்லறைகள். அந்தக் கல்லறையில் சடலங்களாக அடைப்பட்டுக் கிடந்தது மன்னர் குலத்து தளபதிகள். கல்லறைகள் முழுவதும் உறைந்த பனியால் மூடிக்கிடந்தன. அவற்றையெல்லாம் அகற்றி விட்டு கல்லறைகளைத் தோண்டினார்கள் அகழ்வாராய்ச்சியாளர்கள். பெரும்பாலான சடலங்களில் விளையாட்டு மற்றும் விலங்குகளைக் குறிக்கும் டாட்டூகள் வரையப்பட்டிருந்தன.

வாணிபம், போர், உள்நாட்டுக் கலவரம் ஏதோ ஒரு ரூபத்தில் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு இன்று நாம் கொண்டாடும் டாட்டூ வரையும் பழக்கம் பரவியுள்ளது.ஒவ்வோர் ஆராய்ச்சித் தரப்பும் டாட்டூவுக்கு ஒவ்வொரு காரணங்களை முன்வைத்தாலும், டாட்டூ தோன்றியது எகிப்தில்தான் என்பதை யாரும் ஏற்றுக் கொள்ளாமல் இல்லை. அப்படியானால், மனித இனத்தின் நவீனம், பொழுது போக்கு, கலைகள் எல்லாவற்றுக்குமே எகிப்துதான் முன்னோடியா...? ஆராய்ச்சிகள் நீள்கின்றன!



1 comment:

  1. டாட்டூ பற்றிய வரலாறு, பல புதிய தகவல்களை அளித்திருக்கிறது. நன்றி நண்பரே

    ReplyDelete