Search This Blog

Sunday, October 30, 2011

என்ன செய்யணும் விஜயகாந்த்?


உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க. சாதனை படைத்திருப்பதாக மதுரை அ.இ.அ.தி.மு.க.வினர் கிண்டலாகச் சொல்கிறார்கள். ‘தனியாக நின்றதால் தே.மு.தி.க.வின் சாயம் வெளுத்து விட்டது; அடுத்து ஆளப்போவது நாங்கள்தான் என்று சொல்லி வந்த இறு மாப்பில் இடி விழுந்தது; விஜயகாந்த் இனி அவ்வளவுதான். எழுந்திருக்க முடியாது’ என்ற எண்ணப் போக்கு மக்களிடம் இருக்க, ‘இதென்ன புதுக்கதை’ என்று மண்டை குடைகிறதா? ஐயா... விஷயம் இதுதான். மதுரை மேலூர் நகராட்சியின் 15வது வார்டில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்டவர் ஜோதிலட்சுமி. இவர் வாங்கிய வோட்டு பூஜ்யம். வேட்பாளர் அவருடைய வோட்டை யாருக்குப் போட்டார் என்று கேள்வி எழுகிறதா? வேட்பாளருக்கே அவர் போட்டியிட்ட வார்டில் வோட்டு இல்லையாம்! மேலூர் நகராட்சி சார்பில் பூஜ்யம் வாங்கியதைத்தான் ‘தே.மு.தி.க. சாதனை’ என்று அ.தி.மு.க.வினர் நக்கலடிக்கிறார்கள். 

அ.தி.மு.க.வுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களையும் வோட்டுகளையும் பிடித்து தே.மு.தி.க. அழுத்தமாகவே அசத்தும் என்பதே நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. தி.மு.க. அந்த அளவுக்கு பலவீனமாக இருந்ததால், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் இக்கருத்து நிலவியது. ஆனால், தமிழக அரசியலில் அ.தி.மு.க. வும் தி.மு.க.வும் ஒன்றுக்கொன்று மாற்றாக இருக்கின்றன என்பதையும் தே.மு.தி.க. வுக்கு அதில் ஒன்றைக் கழித்துக் கட்டும் அளவுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்பதையும் முடிவுகள் பளிச்சென்று சொல்கின்றன.  ஒவ்வொரு தேர்தலிலும் தங்கள் செல்வாக்கு உயர்ந்து வருவதாக தே.மு.தி.க. சொல்கிறது. 2006 சட்டமன்றத் தேர்தலில் 28 லட்சம் வாக்குகளைப் பெற்ற நாங்கள், 2009 மக்களவைத் தேர்தலில் 31 லட்சம் வாக்குகளைப் பெற்றோம். இப்போது கிட்டத்தட்ட 36 லட்சம் வாக்குகளைப் பெற்றிருக்கிறோமே! இது வளர்ச்சி இல்லையா?" என்று கேட்கிறார் தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர் மாஃபா பாண்டியராஜன். உள்ளாட்சியில் உள்ள மொத்த இடங்கள் கிட்டத்தட்ட 20,000. இதில் தே.மு.தி.க. பெற்ற இடங்கள் 863தான். கிராமப் பகுதிகளில்தான் பெரும்பாலான இடங்களைப் பிடித்திருக்கிறது தே.மு.தி.க. பத்து மாநகராட்சிப் பகுதிகளில் ஒரு மாநகராட்சியையும் பிடிக்காதது மட்டுமல்ல; அதற்குக் கிடைத்த கவுன்ஸிலர்கள் எட்டு பேர்தான். இரண்டே இரண்டு நகர சபைகளைத்தான் பிடித்திருக்கிறது. இத்தனைக்கும் விஜயகாந்தும் அவர் மனைவி பிரேமலதாவும் தமிழகம் முழுவதும் சுழன்றடித்துப் பிரசாரம் செய்தார்கள். சட்டமன்றத்தில் பெற்ற 29 இடங்கள்கூட ‘ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்ததால்தான் தே.மு.தி.க. வுக்குக் கிடைத்தது. தே.மு.தி.க. கூட்டணி இல்லாமலேயேகூட ஜெயலலிதா ஆட்சிக்கு வந்திருப்பார்," என்றெல்லாம் மக்களிடம் பேச்சு எழத் தொடங்கிவிட்டது. 


கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை கதையாக, ‘தேர்தல் முடிவுகளில் எந்த வியப்பும் இல்லை’ என்று விஜயகாந்த் அறிக்கை விட்டிருக்கிறார். ஆளும்கட்சி உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் வெற்றி பெறுவது வாடிக்கை. அரசின் திட்டங்களும் நிதியும் அப்போதுதான் உள்ளாட்சிகளுக்கு வந்து சேரும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த ஆட்சி பொறுப்பேற்று 5 மாதங்கள் முடியவில்லை. இந்தச் சூழலில் மக்கள் தங்கள் நம்பிக்கையை உள்ளாட்சித் தேர்தலிலும் ஆளும் கட்சி மீதே வைத்திருப்பது இயற்கைதான்," என்று சொல்கிறார் விஜயகாந்த். தோல்விக்கான காரணங்களை இதுபோல, அடுக்குவது எளிது. ‘எங்களது வோட்டு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது’ என்று சொல்லி ஆறுதல் அடைவதும் இயற்கை. வாக்காளர் எண்ணிக்கை உயர்வதற்கு ஏற்ப வோட்டுகள் அதிகரித்திருக்கிறதா என்று பார்த்துத்தான் செல்வாக்கை கணிக்க வேண்டும்.இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரை மக்கள் எதிர்பார்ப்பில் தே.மு.தி.க. சறுக்கியிருக்கிறது என்பதுதான் உண்மை நிலை. ஆகவே, தம்மையும் தன் கட்சியையும் நிலை நிறுத்திக் கொள்ள விஜயகாந்த் என்ன செய்ய வேண்டும். இரண்டு நடுநிலை அரசியல் விமர்சகர்களோடு பேசினோம்.விஜயகாந்துக்குப் பின்னடைவு இல்லை என்பதே என் கருத்து," என்கிறார் சோலை. ஆனால், அதிகமாக திருப்திப் பட்டுக் கொள்ளும் நிலையிலும் விஜயகாந்த் இருக்க முடியாது. தமது செயல்பாடு, அரசியல் யுக்தி ஆகியவற்றில் பளிச்சென ஒரு மாறுதலைக் கொண்டு வந்தால் 2014ல் நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு கழகங்களில் ஒன்றுக்கு மாற்றாக வர முடியும். தமது குரு எம்.ஜி.ஆர். என்று சொல்லும் விஜயகாந்த், எம்.ஜி.ஆரின் அரசியல் செயல்பாடுகளைப் பாடமாக ஏன் எடுத்துக் கொள்ளத் தயங்குகிறார் என்பது புரியவில்லை.


எம்.ஜி.ஆர். முதலில் சந்தித்த திண்டுக்கல் தேர்தலில் அவருடன் கூட்டணி கண்டன இரு கம்யூனிஸ்ட் இயக்கங்கள். உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டைச் சேர்த்துக் கொண்ட விஜய காந்த், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை ஏன் கை விட்டு விட்டார்? அதையும் சேர்த்துக் கொண்டிருந்தால் அவர் பெற்ற இடங்கள் ஆயிரத்தைத் தாண்டி இருக்கும். இது மட்டுமல்ல; இரு கம்யூனிஸ்ட் இயக்கத்தோழர்களும் தே.மு.தி.க. இளைஞர்களுக்கு, தேர்தலைச் சந்திப்பது குறித்து யுக்திகளைச் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். இந்த அனுபவப் பாடம் ஒவ்வொரு கட்சித் தொண்டருக்கும் தேவை. 2014க்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்க்காமல் தி.மு.க.- அ.தி.மு.க.வுக்கு நல்ல மாற்று அணியை அமைக்க உடனடியாகக் களத்தில் இறங்க வேண்டும் விஜயகாந்த்.  அரசியலில் பொத்தாம் பொதுவாக விமர்சனம் செய்து வோட்டுகளைப் பெறுவது கடினம். அதிகாரத்தில் இருப்பவர்களே கல்லடி பெறுவார்கள். அந்த வகையில் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல், ஆளும் கட்சியைப் பாரபட்சமில்லாமல் விமர்சித்து மக்கள் பிரச்னைகளுக்குக் குரல் கொடுத்து வந்தால் எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் பளிச்சிடுவார். விஜயகாந்துக்குப் பின்னடைவு என்று இப்போது கிளம்பியிருக்கும் பேச்சு, மீடியாவின் உருவாக்கம்," என்கிறார் சோலை.கருணாநிதி...எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர், நல்ல எதிர்க்கட்சித் தலைவர்களாக மக்களிடம் நம்பிக்கை பெற்ற பிறகே முதல்வராக வர முடிந்தது என்பதை விஜயகாந்த் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, அந்த நம்பிக்கையை அவர் மக்களிடம் துளிர்விட வைத்தால் ஐந்து வருடம் கழித்து ஆட்சி இவர் கைவசமாகும்," என்கிறார் தமிழருவி மணியன்.விஜயகாந்த் என்ன செய்ய வேண்டும் என்று சற்று விஸ்தாரமாகவே பேசினார் தமிழருவி மணியன். தி.மு.க., அ.தி.மு.க. இரண்டுக்கும் மாற்றாகத் தம்மை அடையாளப் படுத்திக் கொண்ட விஜயகாந்த் ஒரு புதிய எழுச்சியையும், நம்பிக்கையையும் மக்களிடம் உண்டாக்கினார் என்பது யதார்த்தம். அவரும் மக்களோடும், தெய்வத்தோடும்தான் கூட்டணி என்று 2006 முதல் 2009 வரை எல்லா தேர்தல்களிலும் தனித்தே களம் கண்டார். அதனால் அவரது வாக்கு வங்கி வளர்ந்தது. 


2006 உள்ளாட்சித் தேர்தலைவிட இந்த உள்ளாட்சித் தேர்தலில் குறைவாகவே வாக்கு சதவிகிதம் பெற்றிருக்கிறார் விஜயகாந்த். ஆனால், சென்ற சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்ததை ஒரு வகையில் நியாயம் என்று சொல்லலாம். ஒட்டுமொத்த தமிழகத்தையும் கபளீகரம் செய்து வந்த கருணாநிதியை, பதவியில் இருந்து அகற்ற எடுக்கப்பட்ட சரியான முடிவு. விஜயகாந்த் தனித்தே நின்றிருந்தால் வோட்டுகள் பிரிந்து தி.மு.க. மூச்சு விடு வதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கும். எனவே, ஜெயலலிதாவுடன் அவர் கூட்டணி அமைத்ததை மக்கள் தவறாகக் கருதவில்லை.  ஆனால், சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அவரது அணுகுமுறையை மக்கள் ஆதரிக்கவில்லை. ‘காமராஜர் வழியில் அரசை ஆறு மாதம் விமர்சிக்க மாட்டேன்’ என்றார் விஜயகாந்த். இது அரசியல் பிழை. 1967ல் தி.மு.க. முதன்முறையாக அதிகாரத்துக்கு வந்தது. அனுபவம் இல்லாத தி.மு.க.வினர் பொறுப்புக்கு வந்ததால் ஆறு மாதம் அவகாசம் கொடுத்தார் காமராஜர். ஆனால், மூன்றாவது முறையாக முதல்வரான ஜெயலலிதாவுக்கு காமராஜர் பாணியில் ஆறு மாதம் அவகாசம் கொடுத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்தின் பங்களிப்பு சரியாக இல்லையென்பதே மக்களின் கருத்து. சமச்சீர் கல்வி, பரமக்குடி துப்பாக்கிச் சூடு இரண்டிலும் அவர் கருத்து அழுத்தமாக இல்லை. கொஞ்சம் மென்மையான போக்கைக் கடைப்பிடித்து உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.விடம் கூட்டணி தொடர்ந்து 20 சதவிகித இடங்களையாவது பெற்றுவிட வேண்டும் என் பதே அவரது ஒரே நோக்கமாக இருந்தது. எனவே, விஜயகாந்த் அடக்கி வாசித்தார். அவரது எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களுக்குப் போட்டியாக முதல்வரைப் புகழ்ந்தார்கள்! மாற்று அரசியலுக்குத் தகுதியான மனிதர் என்று நம்பிய வாக்காளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். எல்லா அரசியல் தலைவர்களைப் போல சந்தர்ப்பவாதம் காட்டும் சாதாரண அரசியல் தலைவர்தானோ விஜயகாந்த் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். அதன் வெளிப்பாடுதான் உள்ளாட்சித் தேர்தல் முடிவு," என்கிறார் மணியன்.தமிழக அரசியலில் இனி விஜயகாந்துக்கு இடமே இல்லை என்று நான் சொல்லவில்லை" மணியன் தொடர்கிறார்... இரண்டு திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக ஜாதி, மத உணர்வு கடந்த, மக்கள் நலனையே முக்கிய நோக்கமாகக் கொண்ட ஒரு மாற்று அணியை விஜயகாந்த் உருவாக்க வேண்டும். இடதுசாரி இயக்கங்களோடு கொள்கைவாத இயக்கமாக இயங்கும் ம.தி.மு.க.வையும் சேர்த்துக்கொண்டு ஒரு மாற்று அணியை விஜயகாந்த் கட்டமைத்து நேர்மையான அரசியலை நடத்தினால், இன்று சரிந்திருக்கும் செல்வாக்கை நாளை நிச்சயம் தூக்கி நிறுத்த முடியும். விஜயகாந்த் முக்கியமாகச் செய்ய வேண்டியது சட்ட சபைக்குத் தவறாமல் சென்று, வாதங்களில் கலந்து கொள்ள வேண்டும். எந்தப் பிரச்னையிலும் நழுவல் இல்லாமல் மக்கள் சார்பாகக் கருத்துக்களை எடுத்து வைக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு வோட்டுப் போட்டவர்களைத் தவிர, மற்ற எல்லா கட்சிகளுக்கும் வோட்டுப் போட்ட மக்களின் பிரதிநிதியாக அவர் செயல்பட வேண்டும். இந்த வகையில் தமது பணியை அமைத்துக் கொண்டால் கழகங்களுக்கு மாற்றான ஒரு சக்தியாக அவர் உருவாவது நிச்சயம்," என்கிறார் தமிழருவி மணியன்.


மீடியா எங்கள் செல்வாக்கை மிகவும் குறைத்து மதிப்பிட்டு விமர்சிக்கிறது. தனித்தே களம் கண்டதால் எங்கள் தொண்டர்கள் உற்சாகமாக வேலை செய்தார்கள். ஆளும் கட்சிக்கு இயல்பாகவே அமைந்துவிட்ட அதிகார பண பலத்தையும் மீறி நாங்கள் வாக்குகளை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறோம்," என்கிறார் தே.மு.தி.க. முக்கியஸ்தர் மாஃபா பாண்டியராஜன். ‘தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் சிலர், பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் கட்சியை விட்டு விலகுகிறார்கள்’ என்ற வதந்தியும் கிளம்புகிறது. இதுவும் மீடியா கிரியேஷன்தான்," என்கிறார் பாண்டியராஜன்!


No comments:

Post a Comment