Search This Blog

Sunday, October 16, 2011

ராணா கதை - படம் வருமா? வராதா?


இன்றைக்கும் கோடம்பாக்கத்தின் மந்திர வார்த்தை ரஜினி. அவரது புதுப்பட அறிவிப்பு வந்தாலே பற்றிக்கொள்ளும். அப்படித்தான் ராணாவும். ஆனால், இப்போது அந்தப் படம் வருமா... என்ற சந்தேகம் பலமாக அடிபடுகிறது கோடம்பாக்கத்தில். ரஜினியை 3 டி அனிமேஷனில் சௌந்தர்யா ரஜினி எடுத்த ‘சுல்தான்’தான் ‘ராணா’ என்று பெயர் மாற்றமாகி இருப்பதாக முதலில் செய்தி வந்தது. ஆனால், சில காரணங்களுக்காக ‘ராணா’ என்கிற ‘சுல்தான்’ ட்ராப் ஆனது. அடுத்த கட்டம் தான் ‘ராணா’ என்ற டைட்டிலிலேயே கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பது முடிவானது. அதில்கூட சௌந்தர்யா ஆசைப்படி, ஏற்கெனவே எடுத்த ‘சுல்தான்’ படத்துக்கான அனிமேஷன் காட்சிகளை ரஜினி சேர்க்கச் சொல்லியும், கே.எஸ். ரவிக்குமார், புது கதைதான் என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டாராம். நின்று போன ஒரு படத்தின் காட்சிகளை வேறு படத்துக்குப் பயன்படுத்துவது ராசியாக இருக்காது என்ற சென்டிமென்ட் ரஜினிக்குச் சொல்லப்பட்டதாம். தொடர்ந்த சில சிட்டிங்குகளில் ‘ராணா’ கதையை ரவிக்குமார் சொல்ல, ரஜினி கன்வின்ஸ். 

ராணா கதை என்ன?  

ராஜா-ராணி கதையாம். ஒரே ஒரு ஊர்ல ஒரு ராஜா-ராணி. அவங்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. ராஜா புத்திர பாக்கியத்துக்காக இரண்டாவது கல்யாணம் செய்கிறார். அந்த இரண்டாவது ராணிக்கு இரண்டு தம்பிகள். ஒருவர் நல்லவர்; இன்னொருவர் கெட்டவர். இந்த நல்ல, கெட்ட இரண்டு தம்பிகளுமே ரஜினிதானாம். இரண்டு ராணிகளுமே ஏறத்தாழ ஒரே நேரத்தில் கர்ப்பமாவதுதான் கதையில் முதல் ட்விஸ்ட். இது இரண்டாவது ராணி வயிற்றில் புளியைக் கரைக்க, தம் தம்பிகளோடு சதி செய்கிறார். கெட்ட தம்பி ரஜினி, மூத்த ராணியின் குழந்தையைக் கொன்றுவிட்டு, ராணியையும் நாட்டை விட்டு விரட்டிவிடலாம் என்கிறார். ஆனால் நல்ல தம்பி ரஜினி அதை ஆட்சேபிக்கிறார். எனவே நல்ல தம்பி ரஜினி அடித்து விரட்டப்பட்டு, தம் சதித் திட்டத்தை கெட்ட தம்பி அரங்கேற்றினாலும் குழந்தை தப்பிக்கிறது. 

விரட்டி அடிக்கப்பட்ட மூத்த ராணிக்குப் பிறக்கும் குழந்தை வளர்ந்து ரஜினியாகிறது. (மூன்றாவது ரஜினி!) அரண்மனைவாசிகளின் கண்ணில் படாமல் ரகசியமாக தம் மகனை வளர்க்கும் மூத்த ராணி, ரஜினியிடம் அரண்மனைப் பக்கமே தலை காட்டக் கூடாது என்று சத்தியம் வாங்குகிறார். ஆனால், அரண்மனையில் முறைப்பெண் தீபிகா படுகோன் வளருகிறார். ரஜினி கண்ணில் தீபிகா பட காதல் பற்றிக் கொள்கிறது. அம்மாவின் தடை அடிக்கடி மீறப்படுகிறது. காமெடி, டூயட் காதல் வளர்கிறது. ரஜினியின் பிறப்பு ரகசியம் தெரிய வருகிறது. சித்தியின் சதியை முறியடித்து, அரியணையையும், தீபிகாவையும் கைப்பற்றுவதுதான்

க்ளை மாக்ஸ்.சென்டிமென்ட் ஆதிக்கம் செலுத்தும் சினிமா உலகில், ‘ராணா’ முதல் நாள் ஷூட்டிங்கிலேயே ரஜினியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது அவரது குடும்பத்தினரையும், ராணா யூனிட்காரர்களையும் பெரும் கவலையில் ஆழ்த்தியது. சிங்கப்பூர் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பிய ரஜினி சீக்கிரமே நடிக்க வந்துவிடுவார் என்பது பலரது எதிர்பார்ப்பு. ஆனால், அவரது உடல் மிகவும் பலவீனமாக இருக்கிறது; தன் உடல் நலம் பற்றி அதிக அக்கறை செலுத்தாத ரஜினியின் ‘கேர் ஃப்ரி’ லைஃப் ஸ்டைல்தான் இன்றைய நிலைமைக்குக் காரணம் என்கிறது லதா ரஜினியின் உறவு வட்டம்.

இதற்கிடையே ஷாருக்கானின் ‘ரா.ஒன்’ படத்தில் நடிக்க மும்பை செல்கிறார் என்ற தகவல் ரஜினி ரசிகர்கள் மத்தியில் சந்தோஷப் பூவாசம் பரப்பியது. ஆனால், படத்தில் ரஜினி முகம் காட்டினாலே போதும். அவரை சிரமப்படுத்த வேண்டாம் என்று லாங்க் ஷாட்களில் டூப் போட்டு விட்டு, ரஜினியின் ஒரு சில குளோஸ்-அப் ஷாட்களை மட்டுமே எடுத்தார்களாம்.ரஜினிக்கு சிங்கப்பூர் டாக்டர்களின் க்ளியரன்ஸ் வந்தால்தான் அவர் நடிக்க முடியுமாம். அவர்கள் ஓ.கே. சொன்னாலும் உடல் பலவீனமாக இருக்கும் ரஜினியால் ஷூட்டிங் ப்ரஷரைத் தாங்க முடியுமா? துடிப்பான சண்டைக் காட்சிகளோடு ரஜினியின் அக்மார்க் ஸ்டைல் இருக்குமா? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.‘ராணா’ எப்போ வரும் என்பதல்ல இன்றைய கேள்வி. ‘ராணா’ படம் வருமா? வராதா? என்பதுதான் இன்றைய மில்லியன் டாலர் கேள்வி!  

No comments:

Post a Comment