Search This Blog

Friday, September 30, 2011

காயினாக தங்கம் வாங்கினால் என்ன கஷ்டம்?


தங்க காயின்களை விற்கும்போது கூவிக் கூவி அழைப்பவர்கள், அதை திரும்ப வாங்கிக்கொள்ள மட்டும் முகத்தைத் திருப்பிக்கொள்வது ஏன்?

வங்கியில் வாங்கும் காயின்கள்...

நகைக் கடைகளில் தங்க காயின்கள் விற்பனை சூடு பிடிப்பதைப் பார்த்த வங்கிகள், ஒருகட்டத்தில் தாங்களும் காயின்களை விற்கப் போவதாக அறிவித்தது. கடைகளைவிட வங்கிகளில் கிடைக்கும் காயின்கள் தரமானதாக இருக்கும் என்பதால், எதிர் பார்த்த மாதிரியே அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. இதெல்லாம் வாங்கும் போதுதான்; விற்கச் சென்றால் நிலைமையே தலைகீழ்தான்.

தாங்கள் விற்ற காயின்களை வங்கிகள் திரும்பி வாங்கு வதில்லை. அடுத்து கடை களுக்குக் கொண்டு சென்றால் அங்கேயும் பிரச்னை... அங்கே இந்த  காயின்களை வாங்கிக் கொண்டு பதிலுக்கு அங்கிருக்கும் நகைகளை வாங்கிக் கொள்ளத்தான் அனுமதிக்கிறார்களே தவிர, காயினை எடுத்துக்கொண்டு பணம் தரச் சம்மதிப்பதில்லை. அதாவது, எக்ஸ்சேஞ்ச் மட்டுமே செய்து கொள்ளலாம். அதுவும், ஒரு சில கடைகள்தான் இந்த எக்ஸ்சேஞ்சுக்கும் சம்மதிக் கின்றன. சில பிராண்டட் நகைக் கடைகளிலோ இந்த காயின்களை வைத்து நகையாகவும் வாங்க முடியாது, பணமாகவும் வாங்க முடியாது.

 சரி, விற்கத்தான் முடிய வில்லை, நகைக் கடனாவது பெற முடியுமா என்றால் அதற்கும் வழியில்லை. தற்போதுதான் அதுவும் ஒரு சில வங்கிகள் மட்டும் அவர்களது வங்கியில் வாங்கின காயின் என்றால் மட்டும் நகைக் கடன் கொடுக்கின்றன. மற்ற கடையில், மற்ற வங்கியில் வாங்கிய காயினுக்கு கடன் கொடுப்பதில்லை.  

நகைக் கடையில் வாங்கும் காயின்கள்...

பெரும்பாலான நகைக் கடைகள் தங்களது கடைகளில் வாங்கிய காயின் எனில் அதனைப் பெற்றுக் கொண்டு பணம் கொடுக்கின்றன. ஆனால், மற்ற கடைக் காயின் எனில், அதற்குப் பதில் நகைதான் கொடுக்கிறார்களே தவிர, பணமாகக் கொடுப்பதில்லை. அரை கிராம் காயின் என்றாலும் அதை விற்க வேண்டும் என்றால், வாங்கிய கடை எங்கிருக்கிறதோ அங்கே போனால்தான் ஆச்சு என்பதுதான் நிலைமை.

என்ன காரணம்?

 
 நகைக் கடைக்காரர்களிடம் ஏன் தங்க காயின்களை வாங்கிக் கொண்டு பதிலுக்கு பணம் தருவதில்லை என்று கேட்ட போது, ''காயின்கள் என்று இல்லை, தங்க நகையாக இருந்தாலும்கூட அவற்றை வாங்கிக்கொண்டு நாங்கள் பணம் தருவதில்லை. காரணம், விற்க வருபவர்கள் நல்லவர்களா, கெட்டவர்களா எனத் தெரிய வாய்ப்பில்லை. அவை திருடப் பட்டதாகக்கூட இருக்கலாம். ஒருவேளை அவை திருட்டுப் பொருளாக இருந்துவிட்டால் தேவையில்லாத பிரச்னையில் மாட்டிக் கொள்ள வேண்டிய தாகிவிடும். அதனாலேயே நாங்கள் தங்க காயின்களையோ நகைகளையோ பெற்றுக் கொண்டு பணம் கொடுப்ப தில்லை'' என்கின்றனர்.

வங்கிகளில் கேட்டால், ''நாங்கள் தங்க காயின்களை விற்பது வாடிக்கையாளர்களின் முதலீட்டு ஆர்வத்தை வளர்ப்பதற்காக மட்டுமே. எப்படி இன்ஷூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட் போன்ற நிதி சம்பந்தப்பட்டவற்றை விற்கிறோமோ அதுபோலத் தான் தங்கத்தையும் விற்கிறோம். தங்கத்தை வாடிக்கை யாளரிடமிருந்து வாங்கிக் கொண்டு பணம் கொடுப்பதற்கு நாங்கள் ஒன்றும் நகைக் கடை நடத்தவில்லை'' என்கிறார்கள்.

ஆக, அவசரத்துக்குப் பயன்படும் என்ற நினைப்பில் தங்க காயின்களை வாங்குவதாக இருந்தால் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்வதே நல்லது.
அதைவிட, கோல்டு இ.டி.எஃப். மூலம் யூனிட்களை வாங்கிச் சேமிக்கலாம். பணத்தேவை ஏற்படும்போது அந்த யூனிட்டுகளை விற்று எளிதாகப் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அதுவும் இல்லாமல் டீமேட் கணக்கு கூட தேவைப்படாத கோல்டு சேவிங்ஸ் திட்டம் வந்துள்ளது. இதன் மூலம்கூட முதலீடு செய்யலாம்!

விகடன் 

Thursday, September 29, 2011

கருணாநிதி வலையில் வீழ்ந்த ஜெயலலிதா!


வென்றாலும் வீழ்ந்தாலும் அரசியல் தன்னைச் சுற்றியே சுழல வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார் கருணாநிதி. அதனால்தான் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேலைகளை மாநிலத் தேர்தல் ஆணையர் சோ.அய்யர் தொடங்குவதற்கு முன்பே, ''இந்தத் தேர்தலில் தி.மு.க. தனித்துப் போட்டி!'' என்று கருணாநிதி அறிவித்தார். கடந்த 40 ஆண்டுகளாக சவாரி பாலிடிக்ஸ் செய்துவரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு, இதை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை. கருணாநிதியின் அறிவிப்புக்குக் கருத்து சொல்லாத தங்கபாலு, ''காங்கிரஸும் தனித்துப் போட்டி!'' என்று காமெடி பண்ணினார். ''இத... இதத்தான் எதிர்பார்த்தேன்' என்றார் இளங்கோவன். தீராத தலைவலியில் சிக்கி இருக்கும் சிதம்பரத்துக்கு இதைப்பற்றி எல்லாம் கவலைப்பட நேரம் இல்லை. ஜி.கே.வாசன் இப்போது கப்பலைப்பற்றி மட்டுமே பேசுகிறார். கட்சிபற்றிப் பேசுவது இல்லை. தி.மு.க-வுக்கும் காங்கிரஸுக்கும் ஃபெவிக்கால் வைத்து ஒட்டும் காரியத்தை எப்போதும் பார்க்கும் காங்கிரஸ் பத்திரிகையான 'தேசிய முரசு’கூட, 'இது தி.மு.க-வுக் கும் நல்லது... காங்கிரஸுக்கும் நல்லது’ என்றது. தன்னைச் சமாதானப்படுத்த டெல்லியில் இருந்து யாராவது வருவார்கள் என்று கருணாநிதி காத்திருந்தார்; ஏமாந்தார். மக்களவைத் தேர்தலைத் தவிர, வேறு எதிலும் அக்கறை காட்டாத காங்கிரஸ் மேலிடத்துக்கு, தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கப்போகும் விஷயம் தெரியுமா என்றே தெரியவில்லை!


கருணாநிதியின் அறிவிப்பு தொல்.திருமாவளவனுக்கு மட்டும்தான் பெரும் தொல்லையாகப் போனது. ''காங்கிரஸைப் பழிவாங்குவதாக நினைத்து சிறுத்தைகளையும் ஒதுக்கிவிட்டார்!'' என்று அவரால் ஒப்பாரிவைக்கவே முடிந்தது. ஈழத் தமிழர் விவகாரத்தில் கருணாநிதிக்காக எல்லா வலிகளையும் தாங்கிய திருமாவை உதாசீனப்படுத்தியது, கருணாநிதியின் அரசியல் தீண்டாமையாகவே கணிக்க வேண்டியுள்ளது. அன்றைய முகமூடிக்கு திருமா தேவைப்பட்டார். இன்று வேண்டாம் என்று கருணாநிதி நினைக்கிறார்.

இந்த அடிப்படையில் தி.மு.க, காங்கிரஸ், சிறுத்தைகள் மூன்றுமே தேர்தலை தனித் தனியாகச் சந்திக்கின்றன!

அடுத்து அ.தி.மு.க!

சட்டமன்றத் தேர்தல் வெற்றிச் செய்தி வர வர... பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜெயலலிதா, ''இது தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைத்த வெற்றி'' என்றார். மறு நாள் எம்.ஜி.ஆர். சிலைக்கு வெயிலில் மாலை அணிவித்து வணங்க வந்தபோது, ''இது அ.தி.மு.க-வுக்குக் கிடைத்த வெற்றி'' என்றார். தே.மு.தி.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சரத்குமார், டாக்டர் கிருஷ்ணசாமி என்று வலுவான கூட்டணி அமைத்து வென்றவர் மன நிலையில் அன்றே மாற்றம் தெரிந்தது. விஜயகாந்த்தை இந்தக் கூட்டணிக்குள் கொண்டுவர எத்தகைய திரைமறைவுப் பேச்சுவார்த்தைகளும் கெஞ்சல்களும் அ.தி.மு.க. தரப்பால் மேற்கொள்ளப்பட்டன என்பதை அறிந்தவராகவே இருந்தாலும், வெற்றியை விஜயகாந்த்துடன் பங்கிட்டுக்கொள்ள ஜெயலலிதா தயாராக இல்லை என்று அப்போதே வெளிச்சத்துக்கு வந்தது!


இத்தகைய சூழ்நிலையில், காங்கிரஸ் பக்கமாக அடித்த டார்ச்சை கருணாநிதி கட் செய்தது... ஜெயலலிதா சிந்தனையில் புது வெளிச்சம் பாய்ச்சியது. 'தோற்ற கருணாநிதியே தனியாக நிற்கும்போது, ஜெயித்த நமக்கு என்னவாம்?’ என்று ஜெயலலிதா நினைத்தார். சட்டமன்றத் தேர்தலில் தோற்ற கருணாநிதி, உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டால், பெரிய பிரச்னை எதுவும் இல்லை. சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற ஜெயலலிதாவுக்கு இதில் சிறு சறுக்கல் ஏற்பட்டாலும் பெரும் சங்கடம் ஏற்படும் என்பதை அவரிடம் சொல்வதற்கு எவரும் இல்லை!

தே.மு.தி.க-வுக்கு அ.தி.மு.க-விடம் இருந்து அழைப்பே இல்லை. பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டும்தான் பழகிய பாசத்துக்காக சீனியர் அமைச்சர்களிடம் பேசிப் பார்த்தார். ''அம்மா சொன்னதும் முதல் போன் உங்களுக்குத்தான் வரும்'' என்றார்கள் அமைச்சர் கள். ஜெ. சொல்லவும் இல்லை... போன் வரவும் இல்லை. கம்யூனிஸ்ட்டுகளுக்கு மட்டும்தான், நிறைவேறாத கோரிக்கை என்று தெரிந்தும் தீர்க்கமான பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளும் இயல்பு உண்டு. மேயர் வேட்பாளர் 10 பேரை ஜெயலலிதா அறிவித்த பிறகும் நம்பிக்கையோடு பேச வந்தார்கள். 'இன்னுமா வருகிறீர்கள்?’ என்று நகராட்சிப் பட்டியலை விட்டார் ஜெ. 'இது சரியல்லவே’ என்று உடன்பாடான விமர்சனத்தையே மார்க்சிஸ்ட் விட்டது. 'இன்னுமா நம்புகிறீர்கள்?’ என்று ஊராட்சித் தலைவர் பட்டியலை விட்டார் ஜெ. மார்க்சிஸ்ட்டுகளுக்கு லேசாக ரோஷம் வந்தது. ஆனாலும், தா.பாண்டியனின் பக்தி தொடர்ந்தது. 'அவசரப்பட வேண்டாம்’ என்று மார்க்சிஸ்ட்டுகளுக்கு அறிவுரை சொன்னார். பெரிய வேட்டிகளே பறந்தபோது, சரத்குமார், டாக்டர் கிருஷ்ணசாமியால் என்ன செய்ய முடியும்? வேறு வழி இல்லாமல் தே.மு.தி.க. பட்டியலை வெளியிட்டது. மார்க்சிஸ்ட் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. கடந்த தேர்தலில் 'வைகோ வேண்டாம்’ என்று முதலியே முடிவு எடுத்துக் காலம் கடத்தியது போல, இந்த முறை விஜயகாந்த், கம்யூனிஸ்ட்டுகள் விஷயத்தில் ஜெயலலிதா நடந்துகொண்டார். இது நல்ல அரசியலும் அல்ல... கூட்டணி தர்மமும் அல்ல. சக அரசியல் சக்திகளை வெறும் கறிவேப்பிலையாகக் கருதும் எண்ணம், எதிர்பாராத நேரத்தில் சறுக்கலையே கொடுக்கும். நல்லதையும் அல்லதையும் சொல்ல நண்பன் இல்லாதது சொந்த வாழ்க்கைக்கு மட்டும் அல்ல; பொது வாழ்க்கைக்கும் இழப்பாகவே ஜெயலலிதாவுக்கு இருக்கப்போகிறது!

இதை ஜெயலலிதா உள்ளாட்சித் தேர்தலில் உணர்வாரோ, இல்லையோ திருச்சி மேற்கு இடைத்தேர்தல் உணர்த்தும்!

'தி.மு.க, அ.தி.மு.க. இரண்டுடனும் கூட்டணி இல்லை’ என்று அறிவித்த வைகோ, எல்லா இடங்களுக்கும் வேட் பாளர் அறிவித்தார். பாரதிய ஜனதா எப்போதும் தனியாகவே இருக்கும். இப்போதும் அப்படியே. திருமாவளவனுடன் கூட்டணி போடலாம் என்று நினைத்த டாக்டர் ராமதாஸ், அதையும் செய்யாமல் தனியே நிற்கிறார். இப்படி எல்லோருமே தனியாக நிற்கிறார்கள்.தமிழ் மக்கள் பார்ப்பது வித்தியாசமான காட்சி. எல்லாக் கட்சிகளும் இப்படி தனித்து எப்போதும் நின்றது இல்லை. ''தனித்துப் போட்டியிடும் தைரியம் எனக்கு மட்டும்தான் உண்டு'' என்ற விஜயகாந்த், ஜெயலலிதாவுடன் சேர்ந்தார். ''எல்லோரும் தனித்து நின்றால் நானும் தயார்'' என்ற டாக்டர் ராமதாஸ் எல்லாக் கூட்டணியிலும் இருந்துவிட்டார். ஆனால், அப்படிப்பட்ட எந்தத் திட்டமிடல்களும் இல்லாமலேயே கட்சிகள் பிரிந்துவிட்டன. முதன்முதலாக தமிழ்நாட்டில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு செல்வாக்கு என்பதைத் தெரிந்துகொள்ளப்போகிறோம். மொத்த வாக்காளர்களைக் கட்சிரீதியாகக் கணக்கிடப்போகிறோம்.

வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இந்த உள்ளாட்சித் தேர்தல்தான் முன்னோட்டம். ஒவ்வொரு கட்சியும் தங்கள் பலத்தைக் காட்டி, அந்தத் தேர்தலில் கூட்டணி அமைக்க இதுவே அடித்தளம் அமைக்கப்போகிறது என்ற அடிப்படையில் பார்த்தால், கருணாநிதி நாட்டுக்கு நல்லதே செய்திருக்கிறார்!
விகடன்

Wednesday, September 28, 2011

கரெக்ட் ரேட்டில் கட்டலாம் வீடு! - விரயம் தவிர்க்க விவரமான பட்ஜெட்...


டுத்தர மக்களின் வாழ்நாள் கனவு சொந்தமாக ஒரு வீடு கட்டுவது. இந்த கனவை நனவாக்குவதில் சிக்கலாக இருப்பது இரண்டு விஷயங்கள்தான். சிக்கல் நம்பர் ஒன், எகிறிக் கிடக்கும் ரியல் எஸ்டேட் விலை. குறைந்தபட்சம் ஆறேழு வருடங்களுக்கு முன்பு நிலம் வாங்கியிருந்தீர்கள் என்றால் நீங்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்தான். நீங்கள் வாங்கிய நிலத்தின் மதிப்பு இன்றைக்கு பல மடங்கு பெருகி இருப்பதைப் பார்த்து நீங்களே உங்களை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால், அன்றைக்கு வாங்கத் தவறியவர்கள் இன்று வாங்க நினைத்தால் அதைவிட பல மடங்கு பணம் கையில் இருக்க வேண்டும்.

சிக்கல் நம்பர் டூ, மணல், ஜல்லி, சிமென்ட் போன்ற கட்டடம் கட்டத் தேவையான பொருட்களின் விலை வானத்துக்கும் பூமிக்கும் தாவிக் கொண்டிருப்பது. மணல் விலை ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. சென்னையில் இருக்கும் விலை வேறு; நெல்லையில் இருக்கும் விலை வேறு. செங்கல்லின் கதையும் அதேதான். இவை தவிர, கட்டடம் கட்டுபவர்களுக்கான கூலியும் பாரதூரமாக மாறுகிறது. இப்படி சந்துக்குச் சந்து கட்டடம் கட்டுவது தொடர்பான அத்தனை விஷயங்களும் வெவ்வேறாக இருக்க, புதிதாக வீடு கட்ட நினைப்பவர்கள் ஏகத்துக்கும் குழம்பித்தான் போவார்கள்.

''என் பக்கத்து வீட்டுக்காரர் கட்டுற அதே அளவுக்குத்தான் நானும் வீடு கட்டுறேன். ஆனா, என்னைவிட கம்மியாத்தான் அவரு செலவு பண்றாரு. நான்தான் ஏமாந்துட்டேன்'' என்று புலம்புவர்கள் ஒருபக்கம்...

''எட்டு லட்ச ரூபாய்க்குள்ள வீடு கட்டி முடிச்சுடலாம்னு நெனைச்சு ஆரம்பிச்சேன்... இன்னைக்கு பன்னிரண்டு லட்சத்தைத் தாண்டிடுச்சு'' என்று புலம்புவர்கள் இன்னொரு பக்கம்... ஆக மொத்தத்தில், இன்றைக்கு கரெக்ட்-ஆன செலவில் வீடு கட்டுவது எப்படி என்பது சிதம்பர ரகசியமாகவே இருக்கிறது. உள்ளபடி ஆயிரம் சதுர அடி வீடு கட்ட எவ்வளவு பணம் செலவாகும்? கான்ட்ராக்ட் முறையில் வீடு கட்டப் போவதாக இருந்தால் எவ்வளவு தரலாம்? ஃபிளாட்-ஆக இருக்கும் பட்சத்தில் எவ்வளவு விலை கொடுத்து வாங்கலாம்? என்பதை யாராவது எடுத்துச் சொன்னால் கோடி புண்ணியமாகப் போகும் என்கிறீர்களா?

இதோ உங்களுக்காகவே சரியான செலவில் வீடு கட்ட சூப்பர் மாடல் பட்ஜெட்... ஒவ்வொரு இடத்தைப் பொறுத்து ஒவ்வொரு விலை இருந்தாலும் இந்த பட்ஜெட்டை வைத்துக்கொண்டு ஓரளவு சரியான விலைதான் நாம் கொடுக்கிறோமா என்பதை செக் செய்து கொள்ளலாம்.

வீடோ, ஃபிளாட்டோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், பில்டர் அல்லது புரமோட்டர்கள் பல்வேறு டெக்னிக்கல் வார்த்தைகளைச் சொல்லி நம்மை குழப்ப வாய்ப்பிருப்பதால், முதலில் சில விஷயங்கள் பற்றி நமக்குள் ஒரு தெளிவை ஏற்படுத்திக் கொள்வோம்.

கார்பெட் ஏரியா

நான்கு சுவர்களுக்கு இடைப்பட்ட அளவு. அதாவது, வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டுக்குள் கார்பெட் விரித்தால் எவ்வளவு இடத்தை அடைத்துக் கொள்ளுமோ அந்த அளவுதான் கார்பெட் ஏரியா.

பிளின்த் ஏரியா

கார்பெட் ஏரியாவுடன் சுவர்களின் தடிமன் சேர்ந்தது.

சூப்பர் பில்ட் அப் ஏரியா

பிளின்த் ஏரியா அளவில் 15% முதல் 20% அதிகரிப்பது சூப்பர் பில்ட் அப் ஏரியா. இந்த பரப்புக்குதான் விலை சொல்வார்கள். பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நடைபாதை, மாடிப் படிக்கட்டு, லிஃப்ட் அறை, மோட்டார் அறை, உடற்பயிற்சி கூடம் போன்றவற்றின் அளவுகள் பிளின்த் ஏரியாவுடன் சேர்க்கப்பட்டு, சூப்பர் பில்ட்அப் ஏரியா கணக்கிடப்படும்.

யூ.டி.எஸ்.

அடுக்குமாடிக் குடியிருப்பின் சதுர அடி விகிதாசாரத்துக்கு ஏற்ப, அந்த மனையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சதுர அடி மனை சொந்தம் என்பதை குறிப்பது. 'பிரிக்கப்படாத மனைப் பரப்பு’ (Undivided Share) என்று கிரய பத்திரத்தில் இது குறிப்பிடப்பட்டிருக்கும். (யூ.டி.எஸ். எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை பெட்டிச் செய்தியில் பார்க்க!)

மேற்சொன்ன இந்த நான்கு விஷயங்களையும் நீங்கள் புரிந்து கொண்டுவிட்டால், உங்களுக்குத் தேவையான அல்லது உங்களுக்கு கிடைக்கப் போகும் கட்டடத்தின் அளவு தெரிந்துவிடும். இனி, இந்த கட்டடம் கட்ட என்னென்ன பொருட்கள் தேவைப்படும்? அதன் விலை என்ன? என்பதைப் பார்ப்போம்...




என்ன செலவாகும்?

ஆயிரம் சதுர அடி பிளின்த் ஏரியா கட்டடம் கட்ட சுமார் 15 லட்ச ரூபாய் செலவாகும். (ஒவ்வொரு பொருளுக்கும் எவ்வளவு செலவாகும் என்பது மேலே தனியாகக்  கொடுக்கப் பட்டுள்ளது.)

சொல்லப்பட்ட கணக்கி லிருந்து விலைவாசி உயர்வைப் பொறுத்து மணல், செங்கல், சிமென்ட், கம்பி மற்றும் இதர பொருட்களின் விலை 2% முதல் 3% வரை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

இந்த கணக்குபடி ஒரு சதுர அடி கட்ட சுமார் 1,500 ரூபாய் ஆகிறது. இது பில்டர்கள் கட்டுவதற்கான செலவு. நீங்களே முன்நின்று கட்டும்போது 1,400 ரூபாயிலிருந்து 1,350 ரூபாய் வரை குறைய வாய்ப்பிருக்கிறது. முதல் தரமான பொருட்களை வாங்குவதாக நினைத்தே இந்த கணக்கு போடப்பட்டுள்ளது. சென்னையைவிட மதுரை, சேலம், திருநெல்வேலியில் மணல், செங்கல் போன்ற கட்டுமானப் பொருட்களின் விலை குறைவு என்பதால், செலவு இன்னும்கூட குறைய வாய்ப்பிருக்கிறது.

நாம் வாங்கும் ஒரு பிளாட்டின் விலை ஓரளவு நியாயமானதாக இருக்கிறதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது என்ற விஷயத்துக்கு இப்போது வருவோம்... உதாரணமாக நீங்கள் சென்னை தாம்பரத்திற்கு அருகில் ஒரு ஃபிளாட்டை வாங்குவதாக முடிவு செய்கிறீர்கள். அந்த ஃபிளாட்டின் விலை ஒரு சதுர அடி சுமார் 3,000 ரூபாய் என்று பில்டர் சொல்கிறார்... நீங்கள் வாங்கப்போகிற ஃபிளாட்டின் சூப்பர் பில்ட் அப் ஏரியா 952 ச.அடி. என்றும் உங்களுடைய யூ.டி.எஸ். 555 ச.அடி. என்றும் அவர் சொல்கிறார்.

ஆனால், நம் கணக்குப்படி எவ்வளவு செலவு ஆகும் ஃபிளாட்டின் விலை எவ்வளவு வரும் என்று பார்க்கலாம்...

அங்கு மனை விலை ஒரு சதுர அடி 1,400 ரூபாய் என்று விசாரித்தபோது நமக்குத் தெரிய வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்... அடுத்து கட்டுமானச் செலவு எவ்வளவு ஆகும் என்று பார்க்கலாம்... நாம் முன்பு கணக்கிட்டபடி ஒரு சதுர அடி 1,400 ரூபாய் எனும்பட்சத்தில் 952 ச.அடிக்கான கட்டுமானச் செலவு 13,32,800 ரூபாய் வரும். அதேபோல் 555 சதுர அடி மனைக்கான விலை (சதுர அடி விலை 1,400 ரூபாய்) 7,77,000 ரூபாய் ஆகும். ஆக, மொத்தம் 21,09,800 ரூபாய் ஆகும்.

இந்த கணக்கின்படி பார்த்தால் ஒரு ச.அடிக்கான விலை சுமார் 2,220 ரூபாய் வருகிறது. இதற்கு மேல் பில்டர் சொல்லும் விலை அவரது லாபமாகும். ஒருவேளை அவர் 20% லாபம் வைத்தால் சதுர அடி 2,660 ரூபாய் என்று வைத்து விற்பார். ஒருவேளை அவர் பத்திரிகை மற்றும் டி.வி-களுக்கு விளம்பரம் எல்லாம் கொடுத்திருந்து, மேலும் புராஜெக்ட்டுக்கு கடனும் வாங்கி இருந்தால், கடனுக்கான வட்டி என எல்லாவற்றையும் சேர்ப்பார். அந்த வகையில் அவர் சுமார் 2,900-3,000 ரூபாய் வரை சொல்ல வாய்ப்பிருக்கிறது.  



கவனிக்க வேண்டியவை..!

கட்டிய வீட்டை வாங்கும்போது!

* தனி வீடுகளைப் பொறுத்தவரையில் பிளின்த் ஏரியா 1,000 சதுர அடி என்றால் கார்பெட் ஏரியா 750-800 சதுர அடி வரை இருக்கும். ஃபிளாட் என்று வரும்போது, 600-650 சதுர அடிதான் இருக்கும். பொது இடங்கள், பார்க்கிங் என பொதுவான வசதிகள் அதிகமாக அதிகமாக, கார்பெட் ஏரியா என்பது குறைந்து கொண்டே வரும்.

* எப்போது ஃபிளாட் வாங்கினாலும் கார்பெட் ஏரியாவை அளந்து உறுதி செய்யுங்கள். கட்டி முடித்த ஃபிளாட் என்றால் சுவர்களுக்கு இடையிலான தரையின் அளவை துல்லியமாகக் கணக்கிடுங்கள். பில்டர் சொல்லும் பிளின்த் ஏரியாவிலிருந்து சூப்பர் பில்ட் அப்  ஏரியா 15 முதல் 20 சதவிகிதம் அதிகமாக இருந்தால் அந்த பில்டர் நியாயமானவர். அதற்கு மேல் இருந்தால் எதற்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கேளுங்கள்.

ஏனென்றால், நீங்கள் விற்கும்போது இந்தப் பிரச்னை எழும். மிக உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள், நீச்சல் குளம், தோட்டம், வாக்கிங் செல்லும் நடைபாதை போன்றவை விடப்பட்டிருக்கும் புராஜெக்ட்களில் பிளின்த் ஏரியா, சூப்பர் பில்ட் அப் ஏரியா 30-35 சதவிகிதமாக இருக்கும் என்பது வேறு விஷயம்.

* அடுக்குமாடி குடியிருப்பு களில்தான் விதிமுறை மீறல்கள் அதிகம் நடைபெறுகிறது. அதனால் அப்ரூவல் பிளான்படி விதிமுறைகள் மீறாமல் கட்டப்பட்டிருக்கிறதா என்பதை சரி பார்ப்பது அவசியம். வீட்டுக் கடன் வாங்காத பட்சத்தில் முறைப்படி அப்ரூவல் வாங்காமல் கட்டப்பட்ட வீடுகளை குறைந்த விலைக்கு தள்ளிவிடுவது நடக்கிறது. இதுபோன்ற வீடுகளை வாங்கினால் பிற்காலத்தில் பிரச்னை வர வாய்ப்பு இருக்கிறது. அவசரத்துக்கு வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்க முடியாது.  

* காமன் ஏரியா அனைவரும் பயன்படுத்தும்படி இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள். சில பில்டர்கள்/புரமோட்டர்கள், காமன் ஏரியா என்று ஒரு பகுதியைக் காட்டி விட்டு, அதில் அறை அல்லது கடை கட்டி விற்று விடுவது சர்வ சாதாரணமாக நடக்கிறது.

* சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி, கார் நிறுத்தும் இடம் சூப்பர் பில்ட் அப் ஏரியாவில் சேர்க்கப்பட்டிருக்கும் பட்சத்தில் கார் நிறுத்தும் இடத்துக்குப் பணம் கொடுக்கத் தேவையில்லை. திறந்தவெளி கார் நிறுத்தும் வசதி என்கிறபோது நயா பைசா கூட கொடுக்கத் தேவையில்லை.

* தனி வீடு என்கிறபோது அஸ்திவாரம் எத்தனை அடி என்பதை கவனியுங்கள். குறைந்தது நான்கு அடி போடுவது கட்டடத்துக்கு நல்லது. சில பில்டர்கள் இரண்டு அடிதான் தோண்டுவார்கள் என்பதால் உஷாராக இருப்பது நல்லது. இதேபோல், வீட்டில் அறையின் உயரம் குறைந்தது 10 அடி இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். சில பில்டர்கள் ச.அடி விலையைக் குறைத்துச் சொல்லிவிட்டு, வீட்டின் உயரத்தை 9.5 அடி அல்லது 9 அடியாக குறைக்கவும் வாய்ப்புண்டு!  

* வீட்டைச் சுற்றி குறைந்தது 5 அடி விட்டிருக்கிறார்களா என்பதைக் கவனியுங்கள். பல பில்டர்கள் 2 அடிதான் விடுகிறார்கள். இது பிற்காலத்தில் பிரச்னை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.  


சொந்தமாக வீடு கட்டும்போது..!

* செப்டிக் டேங், மாடிப் படி, தண்ணீர் தொட்டி, போர்ட்டிகோ, சுற்றுச்சுவர் கணக்கை எல்லாம் மொத்த சதுர அடி கணக்கில் சேர்க்க விடாதீர்கள். உதாரணத்துக்கு சுற்றுச் சுவர் கட்ட ஒரு சதுர அடிக்கு 200 ரூபாய்தான். அந்த வகையில் மேற்கண்ட செலவுகளை தனியாக கணக்கிட்டால் மொத்த செலவு குறைய வாய்ப்பு இருக்கிறது.

* கீழ்தளத்தை விட மேல்தளம் கட்டும்போது செலவு 10-15% குறையும். கணக்குபடி இன்னும் அதிகமாககூட குறைய வேண்டும். ஆனால், பொருட்களை மேல் தளத்துக்கு எடுத்துச் செல்ல கூடுதல் கூலி கொடுக்க வேண்டியிருக்கும்.  


விகடன் 






Tuesday, September 27, 2011

அமெரிக்கா அதிரடி : பணக்காரர்களுக்கு தனி வரி!


''நாங்கள் நிறைய சம்பாதிக்கிறோம். முன்பைவிட இப்போது  நிறைய சம்பாதிக்கிறோம். ஆனால், அரசாங்கமோ நெருக்கடியில் இருக்கிறது. இந்நிலையில் என்னைப் போன்ற பெரும் கோடீஸ்வரர்களிடம் பிரத்யேகமான வருமான வரியை அரசாங்கம் ஏன் வசூலிக்கக் கூடாது?''

கடகடவென ஆடிக் கொண்டி ருக்கும் அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சற்று தூக்கி நிறுத்த இப்படி ஒரு 'பளிச்’ ஐடியாவைச் சொல்லியிருக்கிறார் பங்குச் சந்தையின் பிதாமகனான வாரன் பஃபெட்!வாரன் பஃபெட்டின் இந்த யோசனையை உடனடியாக ஏற்றுக்கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா, ஒரு மில்லியன் டாலருக்கும் அதிகமாகச் சம்பாதிக்கும் அமெரிக்கர்கள் இனி தங்கள் வருமானத்தில் கணிசமான பகுதியை வரியாகச் செலுத்தும் வகையில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறார். அதுமட்டுமல்ல, இந்தத் திட்டத்திற்கு 'பஃபெட் ரூல்’ என்றே பெயரும் வைத்துவிட்டார். இத்திட்டத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் இன்னும் அனுமதி அளித்துவிடவில்லை. என்றாலும், இத்திட்டம்  முழுமையாக வெற்றி அடைந்தால் அதன் மூலம் குறிப்பிடுகிற அளவுக்கு வரி வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார் ஒபாமா.


அமெரிக்க தொழிலதிபர்களைப் பொறுத்தவரை அவர்கள் தாங்கள் வாழும் சமூகத்தின் மீதான அக்கறையை, தேவை ஏற்படும்போது எல்லாம் வெளிப் படுத்துகிறார்கள். பில்கேட்ஸ் உலகின் மிகப் பெரும் பணக்காரராக அறியப்பட்ட நாட்களில் தான் அவருடைய 'பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ்’ அறக்கட்டளை உலகின் மிகப் பெரிய நன்கொடையாளர்களில் ஒன்றாக மாறியது. ஏழை நாடுகளின் கல்வி மற்றும் மருத்துவத் தேவை களுக்குத் தேடித் தேடி உதவத் தொடங்கியது.

ஆனால், நம்மூரில்?

இந்தியாவில் கடந்த பத்து ஆண்டு காலத்தில் பணக்காரர்கள் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித் திருக்கிறது. 'பெயின் அண்ட் கோ கன்சல்டன்ஸி’யின் ஆய்வின்படி, 2000-க்குப் பின்னர் இந்தியாவில் பணக்காரர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 11% என்கிற அளவில் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு 'ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை உலகெங்கும் ஒரு பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் 4.8 ஆயிரம் கோடி) மேல் சொத்துகள் வைத்து இருப்போரின் பட்டியலை வெளியிட்டது. ஏறத்தாழ ஆயிரம் பேர் கொண்ட அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்த இந்தியர்களின் எண்ணிக்கை 49. இந்த 49 பேருடைய மொத்த சொத்து களின் மதிப்பு 222.1 பில்லியன் டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 10.67 லட்சம் கோடி!).

அதே சமயம் இந்திய அரசின் 2011-12-ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த வரி மற்றும் வரியில்லாத வருவாய் மதிப்பீட்டு அளவு 10.57 லட்சம் கோடி ரூபாய்தான். அதாவது, இந்திய அரசாங்கத்தின் வரி மற்றும் வரி அல்லாத வருமானத்தின் அளவுக்கு இந்த 49 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு இருக்கிறது! ஆனால், நம் நாட்டில் வரி செலுத்துவதில் பணக்காரர் களின் பங்கு எந்த அளவுக்குப் பிரதிபலிக்கிறது? இந்தியாவின் மக்கள் தொகை 120 கோடி. வருமான வரி செலுத்துபவர்கள் 4 சதவிகிதத்துக்கும் குறைவு. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிட்டால், மொத்த வரியின் பங்கு சுமார் 10 சதவிகிதம்தான். இந்தியாவில் எட்டு லட்ச ரூபாய்க்கு அதிகமாக ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி 30% விதிக்கப்படுகிறது. சாஃப்ட்வேர் கம்பெனியில் மாதம் 70 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறவருக்கும் 30% வரி; அவர்போல பல நூறு பேருக்கு வேலை தருகிற பிஸினஸ்மேனுக்கும் அதே 30% வரிதான். இதை மாற்றி நம் நாட்டிலும் பெரும் பணக்காரர்களுக்கு எனப் பிரத்யேக வரி ஏன் விதிக்கக் கூடாது அமெரிக்கா ஆண்டுக்கு ஒரு மில்லியன் டாலர் என்று வரையறுத்திருப்பதுபோல, நாம் ஒரு கோடி ரூபாய் என ஒரு தொகையை நிர்ணயித்து, அதற்கு மேல் சம்பாதிப்பவர்களுக்குப் புதிய வரிவிதிப்பு முறையைக் கொண்டுவருவது குறித்து யோசிக்கலாமே! பணவீக்கமும் விலைவாசி உயர்வும் பொருளாதார மந்தநிலையை நோக்கி நாட்டை விரட்டிக் கொண்டு இருக்கும் சூழலில், அமெரிக்கா செய்வது போல நாமும் ஏன் செய்யக் கூடாது?


Monday, September 26, 2011

தமிழ் சினிமாவின் கிளாடியேட்டர்! - ‘கரிகாலன்’


கரிகாலனைப் பத்தி சொல்லுங்க?

 “நாம பள்ளி சரித்திரப் பாடத்துல படிச்சோமே அதே கரிகால் சோழனைப் பத்தின கதைதான் இது. நிஜமான கதாபாத்திரமாக இருந்தாலும்கூட, அதைத் திரையில் காட்டும் போது, சுவாரசியமில்லாத ஒரு வறண்ட கதையாக - டாக்குமென்டரி போல் காட்ட முடியாதில்லையா? அதனால, கொஞ்சம் ஃபான்டசி கலந்து கரிகால்சோழன் கதையைச் சொல்லப் போறேன். இன்று நம்மால் பார்க்கமுடியாத ஒரு காலக்கட்டத்தை, ஊரை, சூழ்நிலையை, கதாபாத்திரங்களை நான் இந்தப் படத்தில் காட்டப் போகிறேன்.” 

“நாம பள்ளி சரித்திரப் பாடத்துல படிச்சோமே அதே கரிகால் சோழனைப் பத்தின கதைதான் இது. நிஜமான கதாபாத்திரமாக இருந்தாலும்கூட, அதைத் திரையில் காட்டும் போது, சுவாரசியமில்லாத ஒரு வறண்ட கதையாக - டாக்குமென்டரி போல் காட்ட முடியாதில்லையா? அதனால, கொஞ்சம் ஃபான்டசி கலந்து கரிகால்சோழன் கதையைச் சொல்லப் போறேன். இன்று நம்மால் பார்க்கமுடியாத ஒரு காலக்கட்டத்தை, ஊரை, சூழ்நிலையை, கதாபாத்திரங்களை நான் இந்தப் படத்தில் காட்டப் போகிறேன்.”  

கரிகால் சோழனைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?

“நம் ஊரில் கல்லணையையும், கரிகால் சோழனையும் தெரியாதவர் யாராவது இருக்க முடியுமா? தென்னிந்தியா முழுவதும் அவர் நன்றாக அறியப்பட்டவர். சோழ மன்னர்களில், கரிகால் சோழன் ரொம்ப பவர்ஃபுல்லான ஒரு கேரக்டர். ஆகவே, கரிகாலனை என் ஹீரோவாக ஆக்கினேன்.”


கதைக்கு எங்கே ஆதாரங்கள் பிடித்தீர்கள்?

“ரொம்பக் கஷ்டப்பட்டோம். கரிகால் சோழன் இவ்வளவு பெரிய மன்னர் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறோம். ஆனால், அவரைப் பற்றிய சரித்திரபூர்வமான விஷயங்களைக் கணிசமான அளவில்கூட நம் முன்னோர்கள் பதிவு செய்யவில்லை. நம் பாடப் புத்தகங்களில் சில தகவல்கள்தான் கொடுக்கப்பட்டுள்ளன. புறநானூறில் இரண்டு பாடல்கள் கரிகால் சோழனைப் பற்றி இருக்கின்றன. மற்றபடி பொன்னியின் செல்வனில் ஆதித்ய கரிகாலன் பற்றி வருகிறது. சாண்டில்யனின் யவன ராணியில் கொஞ்சம் விஷயம் கிடைத்தது. நீலகண்ட சாஸ்திரி எழுதிய புத்தகங்களில் சில உபயோகமான தகவல்கள் கிடைத்தன. விஷயங்களோடு, கற்பனையான சில விஷயங்களைச் சேர்த்து சினிமாவுக்குக் கதை எழுதி இருக்கிறேன்; ‘கரிகாலன்’ படத்தின் ஸ்கிரிப்ட்டுக்குப் பின்னால், சுமார் பத்து பேர்களின் ஒரு வருட கால உழைப்பு இருக்கிறது.”
விக்ரம் எப்படி கரிகாலன் ஆனார்?

“இந்தக் கதையின் ஹீரோவுக்குத் தேவையான கம்பீரமும், களையும் விக்ரமுக்கு இருப்பதாக எனக்குத் தோன்றவே, ஒரு தயாரிப்பு நிர்வாகி மூலமாக விக்ரமைச் சந்தித்தேன். கதையின் அவுட் லைனைச் சொன்னதோடு, இந்தப் படத்தில் விக்ரமின் பங்களிப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து விஷுவலாக ஒரு பவர் பாயிண்ட் பிரசன்டேஷன் போட்டுக் காட்டினேன். அதைப் பார்த்த மாத்திரத்தில் ரொம்ப இம்பிரஸ் ஆகி, என் படத்தில் நடிக்கச் சம்மதித்தார். படத்தின் ஸ்டில்ஸ்களைப் பார்த்தாலே, விக்ரமை நான் தேர்வு செய்தது ரொம்ப கரெக்ட் என்று தெரியும். விக்ரம் வெறும் நடிகர் மட்டுமில்லை; அவருக்கு கேமரா கோணங்கள், லைட்டிங் பற்றி ஆழமான அறிவு உண்டு. அவர் ஒரு முழுமையான சினிமா கலைஞர். படம் பத்தின சில விஷயங்களை இப்போதைக்கு நான் ரகசியமாகவே இருக்கட்டும் என்று நினைக்கிறேன். இந்தப் படத்தைப் பார்க்கிறபோது, கிளாடியேட்டர் போன்ற ஹாலிவுட் படங்களைப் பார்க்கிற மாதிரி இருக்கும்.”

சோழர் காலத்து இடங்களிலேயே ஷூட்டிங் நடத்தப் போகிறீர்களா?

“அப்படி இல்லை. இந்தியாவின் பல பகுதிகளிலும் லொகேஷன்கள் தேடி அலைந்திருக்கிறோம். தொல்பொருள் ஆய்வுத் துறையில் இருக்கும் என் நண்பர்கள் சிலர், ஏராளமான சரித்திரபூர்வமான இடங்களைப் பற்றிச் சொன்னார்கள். பல காட்சிகளுக்கு செட் போட வேண்டி இருக்கும். ஷூட்டிங் முடியவே டிசம்பர் மாதமாகிவிடும்.”

சென்னை காசிமேட்டில் படத்தின் ஷூட்டிங் நடந்ததாமே! கரிகாலனுக்கும், காசிமேட்டுக்கும் என்ன சம்பந்தம்?

“கடலுக்கும், கரிகாலனுக்கும், காவிரிப் பூம்பட்டினத்துக்கும், கரிகாலனுக்கும் சம்பந்தம் உண்டே! அதே மாதிரிதான் என் சினிமா கரிகாலனுக்கும், காசிமேட்டுக்கும் சம்பந்தம் உண்டு.”

மூணு ஹீரோயின்களாமே?

“ஆமாம்! சல்மான் கானுக்கு ஜோடியாக இந்திப் படத்தில் நடித்துள்ள சரைன் கான், ரத்த சரித்திரா படத்தில் விவேக் ஓபராய்க்கு ஜோடியாக நடித்த ராதிகா ஆப்தே மற்றும் மித்ரா குரியன் என்று மூன்று ஹீரோயின்கள். ஓர் அயல்நாட்டுப் பெண், ஒரு டான்சர், ஒரு கிராமத்துப் பெண் என்று மூன்றுவிதமான கேரக்டர்களில் இவர்கள் நடிக்கிறார்கள்.”

“தமிழ் சினிமாவில் இப்போது சி.ஜி. என்று செல்லமாக அழைக்கப்படும் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், இயக்குனருக்கு இணையான இடத்தைப் பிடித்துக் கொண்டுவிட்டது. ஒரு சினிமாவில் எந்தக் காட்சியில் எங்கே, எந்த அளவுக்கு சி.ஜி. பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது துளிகூடத் தெரியாத வகையில் அது பயன்படுத்தப்படுவதால் சினிமாவில் எதை வேண்டுமானாலும், சி.ஜி. பயன்படுத்திக் கொண்டு வந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், நிஜம் அதுவல்ல. நான் இயக்கும் ‘கரிகாலன்’ படத்தில் பயன்படுத்தப்போவது வெறும் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் மட்டுமில்லை. ஆர்ட் டைரக்ஷன், கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், அனிமேடிரானிக்ஸ் ஆகிய மூன்றும் சேர்ந்ததுதான். இந்தத் தொழில் நுட்பம்தான் ‘எந்திரன்’ படத்தில் பயன்படுத்தப்பட்டது.

அண்மையில் தெலுங்கில் வந்த ‘அனகனகா ஒக தீரடு’ அமெரிக்காவின் வால்ட் டிஸ்னி நிறுவனத் தயாரிப்பு. ‘எந்திரன்’ படத்தில் பயன்படுத்திய டெக்னாலஜியைத்தான் அதிலும் பயன்படுத்தினார்கள். படம் சூப்பர் ஹிட். இந்தப் படங்களில் செய்ததைத்தான் ஹாலிவுட்டிலும் செய்கிறார்கள். கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், அனிமேடிரானிக்ஸ், திரி டி எஃபெக்ட்ஸ் விஷயங்களில் நம் நாட்டு இளைஞர்கள் கில்லாடிகள். இவர்கள் வேகமாக வேலையை முடித்துக் கொடுக்கிறார்கள். செலவிலும் சிக்கனம். எனவே இந்த வேலைகள் எல்லாம் ஹாலிவுட்டிலிருந்து இந்தியாவுக்கு அவுட்சோர்ஸ் செய்யப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை,” என்கிறார் ‘கரிகாலன்’ படத்தின் இயக்குனரான கண்ணன். கரிகாலனாக நடிப்பது நம்ம சீயான் விக்ரம்.
கண்ணனுக்கு இதுதான் முதல் படம். இவர் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு, சினிமாத் துறைக்கு வந்தவர். ‘அறை எண் 302ல் கடவுள்’, ‘சிவகாசி’, ‘அந்நியன்’, ‘எந்திரன்’ என்று பல படங்களுக்கு கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், அனிமேடிரானிக்ஸ், திரி டி எஃபெக்ட்ஸ் விஷயங்களில் பணியாற்றிய அனுபவசாலி. அவரது லட்சியம் டைரக்ஷன்தான். எனவே, தாமாகவே கேமரா, எடிட்டிங் போன்ற சினிமாவின் பல்வேறு சமாச்சாரங்களையும் ஆர்வமுடன் தெரிந்துகொண்டார். கடைசியில், தமக்கு பலம் என இவர் நினைக்கும் அனிமேடிரானிக்ஸ் விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் ஒரு கதையை ரெடி பண்ணி, டைரக்டர் ஆகிவிட்டார்.










Sunday, September 25, 2011

"அணிவதற்கு ஷூ இல்லை" இந்திய ஹாக்கியின் அவல நிலை


* இந்திய ஹாக்கி வீரர்களின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது? இந்திய அணியின் கேப்டன் ராஜ்பால் சிங்கின் வாக்குமூலம் இது - ‘ஹாக்கி வீரர்களிடம் ஷூவே கிடையாது. எங்களுக்கு வழங்கப்படும் உபகரணங்களும் மிக மோசமானதாக இருக்கும். 25,000 ரூபாயைப் பரிசாகக் கொடுப்பதால் யாருக்கும் சந்தோஷம் இல்லை. இது எங்களை நிலை குலைய வைத்துள்ளது. எங்களுக்கு மரியாதை தராவிட்டாலும் பரவாயில்லை. அவமானப்படுத்த வேண்டாம்.’ 

இந்திய அணியின் கேப்டனே ஹாக்கி நிர்வாகத்தை இப்படியெல்லாம் வெளிப்படையாகக் கண்டித்த பிறகு தான் நிலைமை மாறத் தொடங்கியது. இந்திய விளையாட்டு அமைச்சகம், ஹாக்கி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்தது. இது தவிர, பஞ்சாப் அரசாங்கம் ஹாக்கி அணிக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கியது. இந்திய ஹாக்கி நிர்வாகத்தில் நிலவும் குளறுபடிகளால் இந்தியாவில் நடக்கவிருந்த சாம்பியன்ஸ் டிராபி, நியூசிலாந்துக்குச் சென்று விட்டது. ஆனாலும், ஒலிம்பிக் தகுதிச்சுற்றுப் போட்டிகள், அடுத்த பிப்ரவரியில், இந்தியாவில் தான் நடக்கவுள்ளன. லண்டன் ஒலிம்பிக்குக்குத் தகுதி பெறாவிட்டால் இருக்கிறது இன்னொரு ரகளை!  கிரிக்கெட் உலகக் கோப்பை நடந்தபோது அதைப் பயன்படுத்திக் கொண்டு சர்ச்சைக்குரிய வாக்குறுதிகளை அள்ளி வீசினார் பூனம் பாண்டே. விளைவு, இன்று இந்தியாவின் முன்னணி மாடலாகி விட்டார். இப்போது, இந்திய ஹாக்கியில் நிலவும் சர்ச்சைகளை முன்வைத்து, டிஜே ஜென்னி என்கிற இன்னொரு மாடலும் குளிர்காயக் கிளம்பிவிட்டார். தன் நிர்வாணப் படங்களை விற்று ஹாக்கி வீரர்களுக்கு உதவுவதாகக் கிளம்பியிருக்கிறார். ‘நான் பூனம் பாண்டே போல பொய்யர் கிடையாது. சொன்னதைச் செய்து தருவேன்’ என்றெல்லாம் சபதமளிக்கிறார். 


* ஒலிம்பிக் தங்க மகன் அபினவ் பிந்திரா, சுயசரிதை எழுதியுள்ளார்.
‘எ ஷாட் அட் ஹிஸ்டரி’ என்கிற நூலை எழுதி முடித்துள்ளார். ‘ஒரு துப்பாக்கி சுடும் வீரனின் போரடிக்கும் கதையை யார் படிக்கப் போகிறார்களோ?’ என்று தன்னடக்கத்தோடு பேசுகிறார் பிந்திரா. 


* தேர்வுக்குழு தலைவரான ஸ்ரீகாந்த், இங்கிலாந்து தொடரில் ஏற்பட்ட தோல்விகளால் தம் பதவியை ராஜினாமா செய்யப் போகிறார் என்று ஆங்கிலச் செய்தி சேனலொன்றில் அரை மணி நேர நிகழ்ச்சியொன்று சூடாக நடைபெற்றது. ஆனால், ஸ்ரீகாந்த்தின் பதவிக்காலம் அடுத்த வருடம்தான் முடிகிறது. அதுவரை அப்பதவியில் நீடிப்பார் என்று தெரிகிறது. ஸ்ரீகாந்த் பல குளறுபடிகள் செய்தாலும் தமிழக வீரர்களின் திறமை வெளிப்பட்ட போதெல்லாம் உடனடியாக அவர்களை இந்திய அணிக்குத் தேர்வு செய்தார். முரளி விஜய், பத்ரிநாத், அஸ்வின், முகுந்த் போன்ற வீரர்கள் இதனால் அனுகூலம் அடைந்தார்கள். ஸ்ரீகாந்த் இடத்தில் வேறொருவர் இருந்திருந்தால் உடனடியான இத்தனை வாய்ப்புகள் கிடைத்திருக்குமா என்று யாரும் யோசித்தது போல தெரியவில்லை.  


* ராகுல் திராவிட் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இங்கிலாந்து தொடரில், தோனிக்கு அடுத்து சிறப்பாகவும் பொறுப்பாகவும் ஆடியது திராவிட் மட்டும்தான். ஒருநாள் போட்டியில் பத்தாயிரம் ரன்களைக் கடந்தும் திராவிடுக்கு உரிய மதிப்பை யாருமே அளிக்கவில்லை. எளிமையான மனிதராக இருப்பதால் இவரை அலட்சியப்படுத்தியே அவருடைய கிரிக்கெட் காலத்தை முடித்துவிட்டார்கள். ஆனால், திராவிட் அளவுக்கு அணிக்காக, தலையைக் கூட கொடுக்கத் தயாராக நின்ற ஒரு வீரர் என்று யாரையும் கை நீட்ட முடியாது. விக்கெட் கீப்பராகவும் ஓப்பனராகவும் திராவிட் ஆடிய போதெல்லாம் அவர் பலி ஆடாகவே பார்க்கப்பட்டார். ஆனாலும், என்ன பொறுப்பு கொடுத்தாலும் அதைத் தட்டிக் கழிக்காமல் அந்தப் பணிக்குச் சிறப்பு சேர்த்தவர் திராவிட். 



Saturday, September 24, 2011

தயவு செய்து பிடிவாதமாக இருங்கள்... ஜெயலலிதாவுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்! - ஓ பக்கங்கள், ஞாநி

அன்புள்ள முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு வணக்கம்.


கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் பெரும் போராட்டத்தை மக்கள் திரண்டு நடத்தியதையடுத்து ஒரு வாரம் கழித்தேனும் நீங்கள் போராட்டக் குழுவினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்ததை முதலில் பாராட்டுகிறேன். பிரச்னைக்கு தீர்வு காணும்வரை அணு உலை வேலைகளை நிறுத்திவைக்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதியதையும், அதே போன்ற ஒரு தீர்மானத்தை அமைச்சரவைக் கூட்டம் நடத்தி நிறைவேற்ற ஒப்புக் கொண்டதையும் பாராட்டுகிறேன். மக்களின் உணர்வுக்கு இவையெல்லாம் தற்காலிகமான ஆறுதல்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 

அடுத்தது என்ன என்பதே முக்கியம். பிரதமரைச் சந்திக்க ஒரு அனைத்துக் கட்சி, மக்கள் அமைப்பினர் குழுவை அனுப்பப் போவதாக அறிவித்திருக்கிறீர்கள். அந்தக் குழு மாநிலத்தின் சார்பில், மக்கள் சார்பில் பிரதமரிடம் என்ன சொல்லப் போகிறது என்பதும் அவர் பதிலுக்கு என்ன சொல்லப் போகிறார் என்பதும்தான் இனி முக்கியமானவை.கூடங்குளம் அணு உலைக்கு செர்னோ பில், ஃபூகுஷிமா உலைகளுக்கு ஏற்பட்ட கதி நிச்சயம் ஏற்படாது என்று மன்மோகன் சிங், சோனியா காந்தி தலையில் அடித்துச் சத்தியம் செய்வார். அதைக் கேட்டு ஒப்புக் கொண்டு உங்கள் குழு திரும்பிவரப் போகிறது என்றால், அதைவிட தமிழக மக்களுக்கு பெரிய துரோகம் எதுவும் இருக்க முடியாது. உலகத்தில் நூறு சதவிகிதம் பாதுகாப்பான அணு உலை என்று எதுவும் கிடையாது என்பது விஞ்ஞானிகளே ஒப்புக் கொள்ளும் உண்மை. அமெரிக்காவில் இரட்டை கோபுரத்தில் சென்று மோதிய விமானம் போல ஒன்று கல்பாக்கத்தில் மோதினால், கோபாலபுரம், போயஸ் கார்டன் உட்பட சென்னை நகரமே கதிர்வீச்சில் காலியாகிவிடும் என்பதுதான் உண்மை.


சில அடிப்படை உண்மைகளை தயவு செய்து உங்கள் குழு இந்தச் சமயத்தில் மனத்தில் கொள்ள வேண்டும்மன்மோகன் அரசு, வெளிநாட்டு அரசுகளுடன் இப்போது போட முற்படும் வர்த்தக ஒப்பந்தங்களின்படி, அணு உலைகள் நிர்மாணிக்கும் பணி இனி தனியாரிடம் தரப்படும். அந்த அரசுகள் தங்கள் நாட்டுத் தனியார் நிறுவனங்கள் நிர்மாணிக்கும் அணு உலையில் விபத்து ஏற்பட்டால், நஷ்ட ஈட்டை ஓரளவுக்கு மேல் தரமுடியாது என்றும் இந்திய அரசேதான் தரவேண்டுமென்றும் சொல்லுகின்றன. போபால் விபத்தில் நஷ்ட ஈடு பிரச்னையே இன்னும் தீரவில்லை. சாதாரண ரசாயன ஆலை விபத்து அது. அதுவே பல தலைமுறைகளுக்கு ஆயிரக்கணக்கான மக்களை பாதித்துவிட்டது. அணு உலை விபத்து பல மடங்கு அதிகமாக பாதிக்கக்கூடியது என்பதற்கு ஜப்பான் சாட்சி.கூடன்குளம் உலைக்கு எந்த விபத்தும் நேராது, எந்தத் தாக்குதலும் நடக்காது, எந்த இயற்கைப் பேரழிவும் வராது, அப்படி எது நடந்தாலும் அந்த உலை பத்திரமாகவே இருக்கும் என்ற பிரும்மாண்டமான கற்பனையை ஒரு வாதத்துக்காக ஒப்புக் கொண்டாலும், அணு உலை இயங்குவது என்பதே சுற்றிலும் வாழும் மக்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது என்பதை நீங்கள் கவனித்தாக வேண்டும். அதிலிருந்து வரும் கதிரியக்கம் மெல்ல மெல்ல சுற்றுப்பகுதி மக்களின் உடல் நிலையை பாதிக்கிறது என்பதும், அதிலிருந்து கடலில் வெளியேற்றப்படும் சூடான நீர், மீன்வளத்தை பாதிக்கிறது என்பதும் மறுக்கமுடியாத உண்மைகள். 


ஒரு அணு உலை கட்டுவதற்கு 10 முதல் 20 வருடங்கள் வரை ஆகிறது. கட்டி இயங்க ஆரம்பித்தால் அதன் ஆயுட்காலம் அதிகபட்சம் 40 வருடங்கள்தான். ஆனால் அதில் உருவான அணுக்கழிவுகளின் கதிர் இயக்கம் பத்தாயிரம் வருடங்களுக்கு மேல் நீடிக்கும் என்பதால் அத்தனை காலமும் அதை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். முழு பத்திரமாக வைத்திருக்க உலகில் எங்கேயும் இன்னமும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்படவில்லை. உலகம் முழுவதும் அணுக் கழிவுகள் வைக்கப்பட்டிருக்கும் பல இடங்களில் கதிரியக்கக் கசிவு ஏற்பட்டு மக்களுக்கு ஆபத்து ஏற்படும் செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.  கல்பாக்கத்தில் பல அணு உலைகள் உள்ளன. அவற்றில் இதுவரை பல விபத்துகள் நடந்திருக்கின்றன. ஊழியர்கள் இறந்த சம்பவங்களும் உண்டு. எட்டு வருடங்களுக்கு முன்னால் அங்கே ஊழியர்களின் தொழிற்சங்கம் நிர்வாகத்துக்கு அனுப்பிய கடிதத்தில் பல விபத்துகள் குறிப்பிடப்பட்டுள்ளன. வேலை நிறுத்தம் செய்வோம் என்று அச்சுறுத்திய பிறகுதான் சில பாதுகாப்பு ஏற்பாடுகள் அரைகுறையாக செய்யப்பட்டன. ஒவ்வொரு ஊழியரும் ஓராண்டில் அதிகபட்சம் எந்த அளவு கதிர் வீச்சுக்கு உள்ளாகலாம் என்ற வரையறைகள் மீறப்படுகின்றன. முழு விவரத்தை ஊழியருக்கே சொல்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.


தற்காலிக வேலைகளுக்காக சுற்றிலும் உள்ள கிராமங்களிலிருந்து தினக்கூலிக்கு அழைத்து வரப்படும் ஊழியர்களுக்கு என்ன கதிர்வீச்சு ஏற்படுகிறது என்ற தகவல் கூட சொல்லப்படுவதில்லை. அணு உலை நிர்வாகம் எப்போதும் பொய் சொல்வதையும் மூடி மறைப்பதையும் மழுப்புவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் இந்தியாவில்தான் அணு உலையை நடத்துபவர்களே அதைக் கண்காணிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். முற்றிலும் சுயேச்சையான அமைப்பாக கண்காணிப்பு அமைப்பு இதுவரை இல்லை.எந்தத் தகவலைக் கேட்டாலும் அணுசக்தி சட்டத்தின் கீழ் ரகசியம் என்று சொல்லி மறுக்கப்படுகிறது.கல்பாக்கத்தை சுற்றியும் உள்ள கிராமங் களில் புற்றுநோய் ஏற்படுவது அதிகமாக உள்ளது.மலட்டுத்தன்மை, பிறவியிலேயே உடல் ஊனம் போன்ற சிக்கல்கள் உள்ளன. கதிரியக்கம் செல்களை பாதிப்பதால் ஆறு விரல்களுடன் குழந்தைகள் பிறப்பது கல்பாக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இது பற்றி மருத்துவர் புகழேந்தி தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு பல வருடம் முன்பே தெரிவித்தார். ஆனால் அவர்கள் எந்த ஆய்வையும் மேற்கொள்ள வில்லை.மாசுக் கட்டுப்பாட்டு வாரிய ஒப்புதல் அணு உலைகளுக்கும் தேவை. சூழல் பாதிப்பு பற்றிய அறிக்கை தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெற்ற பின்னரே அணு உலை கட்டும் பணி ஆரம்பிக்க வேண்டும். ஆனால் கூடங்குள உலைகள் கட்ட ஆரம்பிக்கும் முன்பு அப்படிப்பட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அவற்றை வெளியிடவும் இல்லை. வெளியிட்டு மக்கள் ஆட்சேபங்களை பரிசீலித்த பிறகே கட்ட அனுமதி தந்திருக்க வேண்டும். 


வேறு எந்த தொழிற்சாலையில் விபத்து நடந்தாலும் அதன் பாதிப்பு அந்த தலை முறையோடு முடிந்துவிடும் வாய்ப்பு உண்டு. ஆனால் அணு உலை விபத்தோ, கதிரியக்கமோ பல தலைமுறைகளுக்கு பாதிப்பை தருபவை. இவ்வளவு ஆபத்தான அணு உலையை ஏன் ஆரம்பிக்க வேண்டும்?வேறு வழியில்லை. நமக்கு மின்சாரம் வேண்டும் என்ற வாதம் உங்களிடம் அதிகாரிகளால் சொல்லப்படும் பொய். அணு உலைகளால் இந்தியாவின் மின் பற்றாக்குறையை தீர்க்கவே முடியாது. இப்போது இயங்கும் 20 அணு உலை களுமாக சேர்ந்து இந்தியாவின் மொத்த மின்சாரத்தில் மூன்று சதவிகிதத்தைக் கூட தர முடியவில்லை. இந்த வெறும் மூன்று சதவிகிதத்துக்காக பல தலைமுறைகளுக்கு ஆபத்தான கதிரியக்கக் கழிவுகளை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறோம். இதற்காக 3897 கோடிகளை வருடந்தோறும் மத்திய அரசு செலவிடுகிறது. ஆனால் அதே அரசு தரும் வெறும் 600 கோடி ரூபாயில், நமக்கு ஐந்து சதவிகித மின்சாரத்தை ஏற்கெனவே கொடுப்பவை காற்றாலைகளும் சூரிய சக்தியும்தான். அணு உலைக்கு ஒதுக்கும் ஆயிரக்கணக்கான கோடிகளை காற்று, சூரியசக்தி போன்றவற்றுக்கு ஒதுக்கினால், இன்னும் அதிக மின்சாரம் கிடைக்கும். அடுத்த 20 வருடங்களில் மேலும் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்தாலும் அணு சக்தியிலிருந்து கிடைக்கப்போகும் மின்சாரம் ஆறு சதவிகிதம்தான். 25 சதவிகித மின்சாரத்தை அணுசக்தியிலிருந்து பெறும் பிரான்ஸ் நாடு அடுத்த 20 வருடங்களுக்குள் அத்தனை உலைகளையும் மூடிவிட முடிவெடுத்திருக்கிறது. 

அணு சக்திக்கு இந்தியா அதிக பணம் ஒதுக்குவதற்குக் காரணம் மின்சாரமே அல்ல. அணுகுண்டு தயாரிக்க அதிலிருந்து தான் கச்சாப்பொருள் கிடைக்கிறது என்பது தான் ஒரே காரணம். எனவே மின்சாரம் தேவையென்றால் மாற்று எரிசக்தி பற்றி யோசியுங்கள். ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனிலும் வீணாகக் கிடக்கும் வேலிகாத்தான் உடைமரங்களை ஆவியாக்கி மின்சாரம் தயாரிக்கும் சிறு ஆலைகளை நிறுவி உள்ளூர் மின்தேவையை அதிலேயே சந்தித்துவிடலாம். பல்லடம் அருகே சுல்தான்பேட்டையில் இது நடந்து கொண்டிருக்கிறது. ஆந்திர மாநிலம் இதை பெரும் வீச்சில் செய்ய திட்டமிட்டிருக்கிறது. தமிழகத்திலும் பஞ்சாயத்து யூனியன் ஒவ்வொன்றிலும் சிறு மின் திட்டங்களை ஆரம்பிக்கலாம்.கூடங்குளம் பாதுகாப்பானதுதான் என்று சொல்லி உங்கள் குழுவினரை ஏமாற்ற மத்திய அரசு அதிகாரிகள் எல்லா முயற்சிகளும் செய்வார்கள். அவர்களிடம் ஒரே ஒரு கோரிக்கையை முன்வையுங்கள். கடந்த இருபதாண்டுகளாக இயங்கும் கல்பாக்கம் அணு உலைகளில் என்னென்ன விபத்துகள் நிகழ்ந்தன, ஏன் நிகழ்ந்தன, கல்பாக்கத்தின் சுற்று வட்டாரத்தில் கதிர் வீச்சு பாதிப்பு பற்றிய மருத்துவ ஆய்வையும் அணுசக்தித் துறைக்கு தொடர்பில்லாத விஞ்ஞானிகளைக் கொண்டு அடுத்த மூன்று மாதங்களில் விசாரணை நடத்தி அறிக்கை தரச் சொல்லுங்கள். அதன் பிறகு தான் கூடங்குளம் பற்றி முடிவெடுங்கள். 

1988-89ல் அணு உலைகளின் ஆபத்து பற்றி நானும் நண்பர்களும் முரசொலி மாறனுக்கு எடுத்துச் சொன்னோம். அதையடுத்து கூடங்குளம் அணு உலை வேண்டாம் என்று தி.மு.க செயற்குழுவில் தீர்மானம் போட்டது. அடுத்த சில மாதங்களில் ஆட்சிக்கு வந்ததும், மத்திய அரசின் உருட்டல் மிரட்டலுக்கு அஞ்சி, போதிய பாதுகாப்புகளுடன் அணு உலையை ஆரம்பிக்கும்படி மாற்றித் தீர்மானம் போட்டது. அன்று அந்த துரோகம் நடக்காமல் இருந்திருந்தால், கூடங்குளம் உலை கட்டும் வேலையே நடந்திராது. கேரளாவைப் போல நாமும் நம் மாநிலத்தில் அணு உலை வேண்டவே வேண்டாம் என்று சொல்லியிருக்க முடியும்.  ஏறத்தாழ ஆரம்பிக்கத் தயார் நிலையில் கூடங்குளம் அணு உலையை எப்படி ஒரேயடியாக மூடுவது என்று கேட்பார்கள். கட்டி முடிக்கப்பட்ட சட்டமன்றக் கட்டடம் வசதிக் குறைவானது என்பதால், அதை காலி செய்துவிட்டுப் போனவர் நீங்கள். வசதிக் குறைவுக்கே அப்படி செய்யலாம் என்கிறபோது, பல தலைமுறைகளுக்கே ஆபத்தான ஆலையை மூடத் தயங்க வேண்டியதில்லை. சூழலுக்குக் கேடான சேது சமுத்திரம் திட்டம் பல கோடி ரூபாய் செலவுக்குப் பின் இப்போது நிறுத்தப்படவில்லையா? இதுவரை எவ்வளவு செலவாயிற்று என்பது முக்கியமில்லை. இனி தரப்போகும் விலை என்ன என்பதே முக்கியம்.

உங்கள் புகழ் பெற்ற பிடிவாதத்தை இதில் நீங்கள் காட்டினால் தமிழர்கள் பல தலைமுறைகளுக்கு உங்களை வாழ்த்துவார்கள்.





அம்மாவின் கைகள் ..


சில வருடங்களுக்கு முன்பு, வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டுக்குச் சென்று இருந்தேன். அவரது வரவேற்பறையில் இரண்டு கைகளின் புகைப்படம். யாரோ ஒரு புனிதரின் கைகளாக இருக்கக்கூடும் என்று நினைத்து, அதைப்பற்றிக் கேட்கவே இல்லை. அவரோடு காரில் பயணம் செய்யும்போது, அதேபோன்ற கைகளின் புகைப்படத்தை மறுபடியும் பார்த்தேன். ஆவலில் அது யாருடைய கைகள் என்று கேட்டேன்.

அவர் புகைப்படத்தைக் கையில் எடுத்துப் பார்க்கும்படியாகச் சொன்னார். புகைப்படத்தை அருகில் தொட்டுப் பார்த்தபோது, அது வயதான ஒரு பெண்ணின் கைகள் என்பதைக் கண்டுகொண்டேன். முதுமையின் ரேகை படிந்த நீண்ட விரல்கள். நகங்கள் சுத்தமாக வெட்டப்பட்டு இருக்கின்றன. நரம்புகள் புடைத்துத் தெரிகின்றன. யாராக இருக்கும் என்று மனது ஏதேதோ துறவிகளை, ஞானிகளை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது.

அவர் அந்தக் கைகளைப் பெருமூச்சுடன் பார்த்து ஆதங்கமான குரலில் அது என் அம்மாவின் கைகள் என்று சொன்னார். ஆச்சர்யமாக இருந்தது. "எதற்காக அம்மாவின் கைகளை மட்டும் புகைப்படமாக வைத்திருக்கிறீர்கள்?" என்று கேட்டேன்.

"அந்தக் கைகள்தான் என்னை வளர்த்தன. என் நினைவில் எப்போதுமே அம்மாவின் கைகள்தான் இருக்கின்றன. அம்மாவின் முகத்தைவிட, அந்தக் கைகளைக் காணும்போதுதான் நான் அதிகம் நெகிழ்ந்துபோகிறேன்.

அம்மா இறப்பதற்குச் சில மணி நேரம் முன்பாக இந்தப் புகைப்படத்தை எடுத்தேன். இந்தக் கைகள் இப்போது உலகில் இல்லை. ஆனால், இதே கை களால் வளர்க்கப்பட்டவன் உங்கள் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். என் அம்மா எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஓய்வு எடுத்ததே இல்லை.
 
 
அப்பா பொறுப்பற்ற முறையில், குடித்து, குடும்ப வருமானத்தை அழித்து 32 வயதில் செத்துப் போனார்.அம்மாதான் எங்களை வளர்த்தார். நாங்கள் மூன்று பிள்ளைகள். அம்மா படிக்காதவர். ஒரு டாக்டரின் வீட்டில் பணிப் பெண்ணாக வேலைக்குச் சேர்ந்தார். பகல் முழுவதும் அவர்கள் வீட்டினைச் சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, நாய்களைப் பராமரிப்பதுபோன்ற வேலைகள். மாலையில் இன்னும் இரண்டு வீடுகள். அங்கும் அதேபோல் சுத்தம் செய்யும் வேலைதான். எத்தனை ஆயிரம் பாத்திரங்களை அம்மாவின் கைகள் விளக்கிச் சுத்தம் செய்து இருக்கும் என்று நினைத்துப்பார்க்கவே மனது கஷ்டமாக இருக்கிறது.

இரவு வீடு திரும்பிய பிறகு, சமைத்து எங்களைச் சாப்பிடவைத்து உறங்கச்செய்துவிட்டு அதன் பின்னும் அம்மா இருட்டிலேயே கிணற்றில் தண்ணீர் இறைத்துக்கொண்டு இருப்பார்கள். சமையல் அறையில்தான் உறக்கம். அப்போதும் கைகள் அசைந்தபடியேதான் இருக்கும். எங்கள் மூவரையும் பள்ளிக் கூடம் அழைத்துப் போகையில் யார் அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு நடப்பது என்பதில் போட்டியே இருக்கும்.
 
அந்தக் கைகளைப் பிடித்துக்கொள்வதில் அப்படி ஒரு நெருக்கம், நம்பிக்கை கிடைக்கும். அதுபோலவே உடல் நலம் இல்லாத நாட்களில் அம்மாவின் கைகள் மாறி மாறி நெற்றியைத் தடவியபடியே இருக்கும். அம்மா நிதானமாகச் சாப்பிட்டு நான் பார்த்ததே இல்லை. தனது சகலச் சிரமங்களையும் அம்மா தன் கைகளின் வழியே முறியடித்து எங்களை வளர்த்தபடியே இருந்தார். மருத்துவரின் வீட்டில் அம்மா ஒருநாள் ஊறுகாய் ஜாடியை உடைத்துவிட்டார் என்று அடி வாங்குவதைப் பார்த்தேன். அம்மாவின் கன்னத்தில் மருத்துவரின் மனைவி மாறி மாறி அறைந்துகொண்டு இருந்தார். அம்மா அழவே இல்லை.

ஆனால், நாங்கள் பார்த்துக்கொண்டு இருப்பதைத் தாங்க முடியாமல், விடுவிடுவென எங்களை இழுத்துக்கொண்டு அந்த வீட்டில் இருந்து வெளியேறினாள். வழியில் பேசவே இல்லை. அம்மாவை எந்தக் கைகளும் ஆறுதல்படுத்தவோ, அணைத்துக்கொள்ளவோ இல்லை. அவள் கடவுள் மீதுகூட அதிக நம்பிக்கைகொண்டு இருந்தாள் என்று தோன்றவில்லை. வீட்டில் சாமி கும்பிடவோ, கோயிலுக்குப் போய் வழிபடவோ, அதிக ஈடுபாடு காட்டியதே இல்லை. வேலை... வேலை... அது மட்டுமே தன் பிள்ளைகளை முன்னேற்றும் என்று அலுப்பின்றி இயங்கிக்கொண்டு இருந்தார்.
 

சிறு வயதில் அந்தக் கைகளின் முக்கியத்துவத்தை நான் புரிந்துகொள்ளவே இல்லை. ஆசையாகச் சமைத்துத் தந்த உணவைப் பிடிக்கவில்லை என்று தூக்கி வீசி இருக்கிறேன். கஷ்டப்பட்டுப் பள்ளியில் இடம் வாங்கித் தந்தபோது படிக்கப் பிடிக்கவில்லை என்று போகாமல் இருந்திருக்கிறேன். கைச் செலவுக்குத் தந்த காசு போதவில்லை என்று அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டில் திருடி இருக்கிறேன். மற்ற சிறுவர்களைப்போல சைக்கிள் வாங்கித் தர மாட்டேன் என்கிறாள் என்று கடுமையான வசைகளால் திட்டிஇருக்கிறேன். அம்மா எதற்கும் கோபித்துக்கொண்டதே இல்லை.அம்மா கஷ்டப்படுகிறாள் என்று தெரிந்தபோதும் யார் அவளை இப்படிக் கஷ்டப்படச் சொன்னது என்றுதான் அந்த நாளில் தோன்றியது. கல்லூரி வயதில் நண்பர்களோடு சேர்ந்து சுற்றவும், புதுப் புது ஆடைகள் வாங்கவும் குடிக்கவும் எத்தனையோ பொய்கள் சொல்லி இருக்கிறேன். என் அண்ணனும் தங்கையும்கூட இப்படித்தான் செய்திருக்கிறார்கள். ஆனால், அம்மா அதற்காக எவரையும் கோபித்துக்கொள்ளவே இல்லை.

கல்லூரி இறுதி ஆண்டில் மஞ்சள் காமாலை வந்து, நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் அம்மா. அப்போதுதான் அவர் எங்களை எவ்வளவு அக்கறையோடு, ஆதரவோடு காப்பாற்றி வந்திருக்கிறார் என்று புரிந்தது. அதன் பிறகு, என்னைத் திருத்திக்கொண்டு தீவிரமாகப் படிக்கத் துவங்கி, ராணுவத்தில் வேலைக்குச் சேர்ந்து கடுமையாக உழைத்துப் பதவி உயர்வுபெற்றேன். அம்மாவை என்னுடனே வைத்துக்கொண்டேன். நான் சம்பாதிக்கத் துவங்கியபோதும், அம்மா ஒருபோதும் எதையும் என்னிடம் கேட்டதே இல்லை. நானாக அவருக்கு எதையாவது வாங்கித் தர வேண்டும் என்று நினைத்து, தங்க வளையல் வாங்கித் தருகிறேன் என்று அழைத்துப் போனேன்.
 
முதிய வயதில் அம்மா மிகுந்த கூச்சத்துடன், 'எனக்கு ஒரே ஒரு வாட்ச் வேண்டும். சின்ன வயதில் வாட்ச் கட்டிக்கொண்டு வேலைக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், அது நடக்கவே இல்லை. அதன் பிறகு, எனக்குள் இருந்த கடிகாரம் ஓடு... ஓடு... என்று என்னை விரட்டத் துவங்கியது. அலாரம் இல்லாமலே எழுந்துகொள்ளப் பழகிவிட்டேன். இப்போது வயதாகிவிட்டது. சில நாட்கள் என்னை அறியாமல் ஆறு மணி வரை உறங்கிவிடுகிறேன். இரவு உணவை ஏழு மணிக்குச் சாப்பிட்டுவிடுகிறேன். ஒரு வாட்ச் வாங்கித் தருவாயா?' என்று கேட்டார்.

அம்மா விரும்பியபடி ஒரு வாட்ச் வாங்கித் தந்தேன். ஒரு பள்ளிச் சிறுமியைப்போல அதை ஆசையாக அம்மா எல்லோரிடமும் காட்டினாள். அதை அணிந்துகொள்வதில் அம்மா காட்டிய ஆர்வம் என்னை நெகிழ்வூட்டியது. அதன் பிறகு அம்மா, நான் திருமணம் செய்து டெல்லி, பெங்களூரு என்று வேலையாக அலைந்தபோது கூடவே இருந்தார். டெல்லியில் எதிர்பாராத நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நான் கூடவே இருந்தேன்.

'நாங்கள் ஏமாற்றியபோது எல்லாம் ஏன் அம்மா எங்களை ஒரு வார்த்தைகூடத் திட்டவே இல்லை?' என்று கேட்டேன். அம்மா, 'அதற்காக நான் எவ்வளவு அழுதிருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியாது. ஆனால், அன்று நான் கோபப்பட்டு இருந்தால், என் பிள்ளைகள் என்னைவிட்டுப் போயிருப்பார்கள்' என்று சொல்லி, தன் கையை என்னுடன் சேர்த்துவைத்துக்கொண்டார்.
  
அப்போதுதான் அந்த முதிய கைகளைப் பார்த் தேன். அது எவ்வளவு உழைத்திருக்கிறது. எவ்வளவு தூய்மைப்படுத்தி இருக்கிறது. எவ்வளவு அன்பைப் பகிர்ந்து தந்திருக்கிறது. அதை ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. பிறகு ஒருநாள், எனது கேமராவை எடுத்து வந்து, புகைப்படம் எடுத்துக்கொண்டேன். இன்று அம்மா என்னோடு இல்லை. ஆனால், இந்தக் கைகள் என்னை வழி நடத்துகின்றன. ஒவ்வொரு நாளும் நான் எப்படி வளர்க்கப்பட்டேன் என்பதை இந்தக் கைகள் நினைவுபடுத்துகின்றன. இதை வணங்குவதைத் தவிர, வேறு நான் என்ன செய்துவிட முடியும்?" என்றார்.

ராணுவ அதிகாரியினுடைய முகம் தெரியாத அந்தத் தாயின் கைகளை நானும் தொட்டு வணங்கினேன். அந்தக் கைகள் யாரோ ஒருவரின் தாயின் கைகள் மட்டும் இல்லை. உலகெங்கும் உழைத்து ஓய்ந்துபோன தாயின் கைகள் யாவும் ஒன்றுபோலத்தான் இருக்கின்றன. அவை எதையும் யாசிக்கவில்லை. அணைத்துக்கொள்ளவும், ஆதரவு தரவும், அன்பு காட்டவுமே நீளுகின்றன. அதை நாம் புறந்தள்ளிப் போயிருக்கிறோம். அலட்சியமாகத் தவிர்த்து இருக்கிறோம்.

இலக்கு இல்லாத எனது பயணத்தில் யார் யார் வீடுகளிலோ தங்கியிருக்கிறேன். சாப்பிட்டு இருக்கி றேன். எனது உடைகளைத் துவைத்து வாங்கி அணிந்து இருக்கிறேன். அந்தக் கைகளுக்கு நான் என்ன நன்றி செய்து இருக்கிறேன். ஒரு நிமிடம் என் மனம் அத்தனை கைகளையும் வணங்கி, தீராத நன்றி சொன்னது.

'கை விரல்களுக்கு இடையில் இடைவெளி இருப்பது இன்னொரு கைகள் நம்மோடு சேர்ந்துகொள்ளத்தான்' என்று எங்கோ படித்தேன். அதை நிறைய நேரங்களில் நாம் உணர்வதே இல்லை. நம் மீது அன்பு காட்டும் கைகளுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்?

முடிவு நம்மிடமே இருக்கிறது!
 
 
நேற்று மின்அஞ்சலில் வந்த செய்தி  

 

 

 

Friday, September 23, 2011

வித்தியாசமான பந்துகள் !

 
சினிமாவுக்குப் போனா சாப்பிடும் நொறுக்ஸ் சமாச்சாரங்களில் பாப்கார்ன் இருக்கும். அமெரிக்காவில் மட்டும் ஒரு வருடத்தில் சராசரியா 17 பில்லியன் குவார்ட்ஸ் பாப்கார்ன் விற்பனை ஆகுதாம் (ஒரு குவார்ட் என்பது 946 மில்லி லிட்டர்). சும்மா இருப்பாங்களா பாப்கார்ன் கம்பெனிக்காரங்க, 'தேசிய பாப்கார்ன் மாதம்’ என்று கொண்டாடுறாங்க. அப்படி 2006 அக்டோபர் மாதம் கொண்டாடியபோது... உலகின் பெரிய பாப்கார்ன் பந்தை உருவாக்கினாங்க. சிகாகோவுக்கு வடகிழக்கே உள்ள இல்லினாய்ஸ் நகரில், பிரபலமான பாப்கார்ன் கம்பெனியில்... 8 அடி உயரம், 1700 கிலோ எடையில் உருவாக்கி அசத்திட்டாங்க!
 
 
ஜமைக்காவில் பிறந்தவர் முப்பது வயது ஜோயல் வாவுல். சின்ன வயதில்  டிவியில் வருகிற வித்யாசமான உலக சாதனை களைப் பார்ப்பார். தானும் எதையாவது செய்ய நினைச்சார். ரப்பர் பேண்ட்களைப் பந்து மாதிரி செய்ய ஆரம்பிச்சார். நாட்கள் மாதங்களாச்சு... மாதங்கள் வருஷங்களாச்சு. 50 கிராம், 100 கிராம், 200 கிராம் என ஜோயலோட பந்தின் எடையும், அளவும் பெருசாயிட்டே போச்சு. பந்து பெருசாகப் பெருசாக சாதாரண ரப்பர் பேண்டைப் பயன்படுத்த முடியலை. பல பெரிய கேபிள் கம்பெனிகளிடம் போய் உதவி கேட்டார். அங்கே வீணாகிற ரப்பரை எல்லாம் கொண்டு வந்து இணைச்சார். இப்படியே ஆறு வருஷம் ஆச்சு. 2008-ல், உலகின் மிகப் பெரிய ரப்பர் பேண்ட் பந்தை உருவாக்கிட்டார். இதோட எடை 4700 கிலோ. இதுக்காக 7 லட்சத்து 20 ஆயிரம் ரப்பர் பேண்ட்களைப் பயன்படுத்தி இருக்கார் ஜோயல். 
 
 
உலகில் பல இடங்களில் உள்ள ஒரு பிரபலமான சிறுவர் அமைப்பு, 'பாய்ஸ் டவுன்’. ஐக்கிய அமெரிக்காவின் நெப்ரஸ்கா மாநிலத்திலும் கிளை இருக்கு. இவர்களின் பல்வேறு பொழுதுபோக்குகளில் தபால்தலை சேகரிப்பதும் ஒன்று. இதில் வித்தியாசமா செய்யணும்னு தோணிச்சோ என்னவோ... இங்கே உறுப்பினர்களாக இருக்கிறவங்க ஒண்ணு சேர்ந்து, உலகின் பெரிய தபால்தலைப் பந்தை உருவாக்கி இருக்காங்க. 46,55,000 தபால்தலைகளை ஒன்றின் மேல் ஒன்றாக பந்து வடிவில் ஒட்டி, இதைச் செய்து இருக்காங்க.
 எடை 300 கிலோ!
 
இண்டியானா மாநிலத்தில் உள்ள அலெக்சாண்ட்ரா நகரில் வசிப்பவர், மைக்கேல் கார்மைக்கேல். ஒருமுறை வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் ஓரம் கட்டிட்டு, பெயின்ட் அடிச்சுட்டு இருந்தார். அப்ப அங்கே இருந்த பேஸ்பால் ஒண்ணை எடுத்து, அது மேலே பெயின்ட் அடிச்சு உலர வெச்சார். காய்ந்ததும் மறுபடியும் அடிச்சார். இப்படி ஒரு வருஷம் இல்லே... ரெண்டு வருஷம் இல்லே... 25 வருஷங்கள். கிட்டத்தட்ட 20,000 முறை அடிச்சு, பெரிய பந்தையே உருவாக்கிட்டார். இதன் எடை 650 கிலோ. 'உலகின் பெரிய வண்ணப்பூச்சு பந்து’ என்று கின்னஸ் புத்தகத்திலும் பெயர் வந்துடுச்சு.
 
 
இது தவிர, சில நிறுவனங்கள் விளம் பரத்துக்காக கிறிஸ்துமஸ் போன்ற சமயங் களில் பெரிய பெரிய பந்துகளை உருவாக்கி காட்சிக்கு வைப்பாங்க. குளிர்ப்பிரதேச நாடுகளில் கடுமையான பனிப் பொழிவின்போது... பல கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் ஒண்ணு சேர்ந்து, 'உங்க பந்துக்கும் எங்க பந்துக்கும் போட்டி வெச்சுக்குவோமா போட்டி?’ என்றபடி பெரிய பெரிய பனிப் பந்துகளை உருவாக்குவாங்க. அதை நண்பர்களோடு சேர்ந்து தங்களோட கல்லூரிக்கோ, வீட்டுக்கோ 'ஏய் தள்ளு...தள்ளு தள்ளே...!’ என்று தள்ளிட்டுப் போவாங்க! 
 

Thursday, September 22, 2011

விஜயகாந்த்தை ஜெயலலிதா உதாசீனப்படுத்த இரண்டு காரணங்கள்...

ரி... அது உறுதி என்று சொல்லலாம். பிடிவாதம் என்றும் அழைக்கலாம். முதல்வராக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி... அவருடைய செயல்பாடுகளில் எப்போதும் மாற்றம் இருக்காது. கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் தொகுதிப் பேச்சுவார்த்தை கள் நடந்துகொண்டு இருக்கும்போதே... தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியலை அறிவித்து, அத்தனை தலைவர்களுக்கும் ஷாக் கொடுத்தார். அடித்துப் புரண்டு அனை வரும் விஜயகாந்த் அலுவலகத்துக்குப் போய் கண்ணீர் மல்க உட்கார்ந்தார்கள். இந்தப் பேச்சுவார்த்தைகள் நெகடிவ்வாக மாறி வெற்றி-தோல்வியைப் பாதித்துவிடக் கூடாதே என்று கூட்டணித் தலைவர் களை அழைத்துப் பேசினார் ஜெயலலிதா. சில தொகுதிகளை விட்டுக்கொடுத்தார். பல தொகுதிகள் பறித்தபடியே இருந்தன. கடைசி யில் தேர்தலும் முடிந்தது. கருணாநிதியின் எதிர்ப்பு வாக்குகளால் கூட்டணி பெருவாரியான இடங்களைக் கைப்பற்றியது. அதாவது, ஆளும் கட்சியாக ஆவோமா, இல்லையா என்று தெரியாத நிலையி லேயே, கூட்டணிக் கட்சித் தலைவர்களின் மூக்கில் ரத்தம் வரவைத்தார் என்றால், ஆளும் கட்சியாக ஆன பிறகு என்ன ஆகும்?

அதிகப்படியான வேதனையை அனுபவித்துக்கொண்டு இருக் கும் விஜயகாந்த் நிலைமையைப் பார்த்தாலே தெரியும்!கருணாநிதி ஆட்சியில் பிய்த்துக்கொண்டு ஓடிய விஜயகாந்த் படம், ஜெயலலிதா ஆட்சியில் இவ்வளவு சீக்கிரம் ஃப்ளாப் ஆகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இதற்குக் காரணம் ஜெயலலிதா என்பதைவிட விஜயகாந்த்தான் அதிகம் பொறுப்புஏற்க வேண்டும். தன்னைப் பற்றிய மித மிஞ்சிய நினைப்பும் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பும் வைத்திருப்பவர்கள் எப்படி நடந்துகொள்வார்களோ... அப்படித்தான் கடந்த மூன்று மாதங்களாக விஜயகாந்த் செயல்பட்டுவருகிறார். எதிர்க் கட்சித் தலைவர் என்ற அஸ்திரத்தை அவர் முறையாகப் பயன்படுத்தவே இல்லை. ''நான் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேச மாட்டேன். புதிய ஆட்சிக்கு ஆறு மாத காலம் அவகாசம் கொடுக்க வேண்டாமா? அதனால்தான் அமைதியாக இருக்கிறேன்'' என்று விஜயகாந்த் சொன்னார். அதைப் பெருந்தன்மை என்று யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ''ஏதோ ஒரு விஷயத்துக்காக விஜயகாந்த் அமைதியாக இருக்கிறார்'' என்றே அனைவராலும் சொல்லப்பட்டது. அந்த விஷயம்... உள்ளாட்சித் தேர்தல்.

முந்தைய தேர்தலின் மூலம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் விருத்தாசலம் என்ற ஒரே ஒரு தொகுதியை மட்டும் பெற்று பிரதி நிதித்துவப்படுத்திய    தே.மு.தி.க.,  இந்தச் சட்டமன்றத் தேர்தலில் 29 தொகுதிகளைக் கைப்பற்றியது. இது சாதாரணமான வளர்ச்சி அல்ல. தத்துவார்த்தப் பின்புலமும் திரும்பிய பக்கம் எல்லாம் தலைவர்களும் குக்கிராமங்களில் கூட கிளைக் கழகங்களும் கொண்ட தி.மு.க-கூட திடீர் என 30 இடங்களைத் தொட முடியவில்லை. ஆனால், இவை எதுவும் இல்லாத தே.மு.தி.க. பெற்றதற்குக் காரணம், கடந்த காலத்தில் அவருக்குக் கிடைத்த சினிமா செல்வாக்கு மட்டும் அல்ல... கடந்த தி.மு.க. ஆட்சி மீது அவர் வைத்த பதில் சொல்ல முடியாத விமர்சனங்களும்தான். அன்றைக்குப் பிரதான எதிர்க் கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா மௌனமாக இருந்தபோது, விஜயகாந்த்தின் சத்தம்தான் அதிகமாகக் கவனிக்கப்பட்டது. யாருக்கும் பயப்படாமல் விமர்சனங்களை அள்ளித் தெளித்தார். அதன் மூலமாகத்தான் ஜெயலலிதாவால் கவனிக்கப்பட்டார். 41 இடங்கள் அவருக்குத் தரப்பட்டன. அவற்றில் 11 இடங்கள் நீங்கலாக மற்றவற்றில் வென்றும் காட்டினார். எதிர்க் கட்சித் தலைவர் அந்தஸ்து விஜயகாந்த்துக்குக் கிடைத்தது. அந்த வெற்றியைத் தக்கவைத்துக்கொண்டு கட்சியை வழிநடத்தாமல் மௌனம் காக்க நினைத்தார். சட்ட மன்றத் தேர்தலில் கூட்டணியில் இருந்து கணிசமான இடங்களைக் கைப்பற்றியதுபோல உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க-வுடன் அண்டி நின்று பதவிகளைப் பெறலாம் என்று அவர் திட்டமிட்டார். ஆனால், அதை ஜெயலலிதா விரும்பவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயிக்க ஜெயலலிதாவுக்கு விஜயகாந்த் தேவைப்பட்டார். இப்போது அந்தத் தேவை இல்லை.

அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துக் கணிசமான தொகுதிகளைக் கைப்பற்றிய விஜயகாந்த்... வெற்றிக்குப் பிறகு ஜெயலலிதாவை மதிக்கவில்லை என்பதைவிட உதாசீனப்படுத்தினார் என்பது முதல் காரணம். சட்டசபைக்கு வரவில்லை. சுதந்திர தின விழாவிலும் ஆள் இல்லை. ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆன விழாக் கொண்டாட்டத்தின்போதும் சபையில் இல்லை. ''இந்தக் குறைந்தபட்ச நன்றியைக்கூட காட்டாதவர் எப்படிக் கூட்டணியில் இருக்கலாம்?'' என்பது ஜெயலலிதாவின் மனதுக்குள் உள்ள கேள்வி.இரண்டாவது, எதிர் அணியில் எப்போதும் பல கட்சிகளை இணைத்து பலமானவர் என்ற தோற்றத்தை உருவாக்கும் கருணாநிதி, இந்த முறை தனியாக நிற்கப்போகிறேன் என்று அறிவித்துவிட்டார். ஒப்புக்காவது 11 கட்சிக் கூட்டணி, 13 கட்சிக் கூட்டணி என்று துக்கடாக்களைக்கூட இணைத்துக்கொள்ளும் கருணாநிதியே தனியாக நிற்கும்போது, ஆட்சியில் பலம் பொருந்திய ஆளும் கட்சியாக இருக்கும் தனக்கு எதற்கு விஜயகாந்த்? தேர்தலில் அனைவரும் வென்றால் தன்னால்தானே அ.தி.மு.க. வென்றது என்று அவர்கள் சொந்தம் கொண்டாடாடும் கொடுமை தேவையா என்று ஜெயலலிதா நினைக்கிறார். அதனால்தான், தேர்தல் தேதியும் அறிவிக்காமல், எந்தத் தொகுதி யாருக்கு என்ற இட ஒதுக்கீட்டுக் கொள்கையையும் அறிவிக்காமல் இருக்கும் நிலையில், மேயர் மற்றும் நகராட்சித் தலைவர்கள் பதவிகளுக்கான வேட்பாளர்களை அவசரப் பட்டு ஜெயலலிதா அறிவித்தார். கூட்டணி என்று சொல்லிக்கொண்டு இனிமேலாவது யாராவது வருவார்களா என்று மனசுக்குள் கேட்டுக்கொண்டார். அதையும் மீறி கம்யூனிஸ்டுகள் பேச்சுவார்த்தைக்கு வந்தது அவர்களுடைய 'பரந்த உள்ள’த்தைக் காட்டியது. ஆனால், சிக்கிக்கொண்டார் விஜயகாந்த்!ஜெயலலிதாவுக்குக் கோபம் வந்துவிடக் கூடாது என்பதற்காக எதையும் பேசாமல் இருந்துவிட்டார் விஜயகாந்த். மிகப் பெரிய சறுக்கலான சமச்சீர்க் கல்வி விஷயத்தில்கூட 'வெண்டைக்காயை விளக்கெண்ணெயில் தோய்த்த’ அறிக்கையே அவரிடம் இருந்து வந்தது. 100 நாள் ஆட்சி நிறைவுக்கு எதிர்க் கட்சித் துணைத் தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் பேசிய பேச்சு... செங்கோட்டையன் பேசியதைப் போலவே இருந்தது. பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு 'விசாரணை கமிஷன் தேவை இல்லை’ என்பதே இவருடைய கருத் தாக இருந்தது. அத்தனை கட்சிகளும் விசாரணை கமிஷன் கேட்டன. அ.தி.மு.க-வும் தே.மு.தி.க- வும் மட்டுமே இதை மறுதலித்த கட்சிகள். இப்படி எல்லாம் பவ்யம் காட்டினோமே... ஏன் எங்களை ஒதுக்குகிறீர்கள் என்று தே.மு.தி.க. கேட்கலாம். அது 'உள்ளாட்சித் தேர்தலுக்கான நடிப்பு’ என்று நினைக்கிறார் ஜெயலலிதா. அவரிடம் இருந்து கிடைக்க வேண்டிய நல்ல பெயரும் கிடைக்காமல், ஆளும் கட்சி செய்த தவறுகளை விமர்சித்தவர் என்று பொது மக்களிடம் கிடைத்திருக்க வேண்டிய நல்ல பெயரும் கிடைக்காமல், நட்டாற்றில் நிறுத்தப்பட்டு உள்ளார் விஜயகாந்த்.

பொதுவாக, அரசியலில் 'ஹிடன் அஜெண்டா’ ரொம்ப நாளைக்குச் செல்லுபடி ஆகாது என்பார்கள். எல்லா அரசியல்வாதிகளும் ஒருவரைச் சேர்ப்பதும் விலக்குவதும் இந்த மாதிரியான 'மறைமுக வேலைத் திட்டப்படி’தான் என்பதால், விஜயகாந்த்தின் அரசியல் வெகு சீக்கிரமே ஜெயலலிதாவால் உணரப்பட்டுவிட்டது. இந்தக் கட்டுரை எழுதப்படும் திங்கள் கிழமை மாலை வரை தே.மு.தி.க.  பிரதிநிதிகளுடன் அ.தி.மு.க. குழுவினர் பேசவில்லை. கம்யூனிஸ்டுகளாவது இரண்டு முறை பேசித் திரும்பிவிட்டார்கள். தே.மு.தி.க- வுடன் பேசுவதற்கான முஸ்தீபுகளும் இல்லை. என்ன செய்வது என்று விஜயகாந்த்துக்கும் தெரியவில்லை. வழக்கம்போல தனியாக நின்றால், எத்தனை இடங்களைப் பிடிக்க முடியும்? தோற்றால், 'அ.தி.மு.க. செல்வாக்குடன்தான் எம்.எல்.ஏ. ஆனோம்’ என்று குறை சொல்வார்களே? இப்படி எத்தனையோகேள்விகள் தொக்கி நிற்கின்றன.

பொறுப்பான எதிர்க் கட்சியாக இருந்து ஜெயலலிதா செய்த தவறுகளை விமர்சித்து வந்திருந்தால், இன்று விஜயகாந்த்தின் நிலைப்பாடுகளுக்குக்கூட பொதுமக்கள் மத்தியில் ஒருவிதமான செல்வாக்குக் கிடைத்திருக்கலாம். அதையும் இழந்து... இதையும் இழந்து... என்ன செய்வதாக உத்தேசம் கேப்டன்?

விகடன்

கருணாநிதியின் கோபம்... ஜெயலலிதாவின் பாசம்! - கலங்கி நெகிழும் அஜீத்


மராவதி’யில் ஆரம்பிச்ச ஆட்டம்... இப்போ 'மங்காத்தா’ என் 50-வது கேம். முதல் படம் செய்யும்போது ரொம்பச் சின்ன வயசு. சினிமாவுல ஒரு இடத்தைப் பிடிக்கணும்னு கடுமையா உழைச்சேன். இப்போ 40 வயசு. முன்பைவிட இப்போதான் அதிகமா உழைக்கிறேன். உடம்பில் நிறையக் காயங்கள். அதைவிட மனசுலயும் காயங்கள் அதிகம். சுமந்துக்கிட்டு ஓடிக்கிட்டே இருக்கேன்!'' - அஜீத் வீட்டு வரவேற்பறையில், காபி வித் அஜீத். அவரே தயாரித்த காபி!

''கோடம்பாக்கத்தின் ஸ்டார் ஹீரோக்கள் 'எங்க படத்துல அஜீத் வில்லனா நடிப்பாரா?’னு விசாரிச்சுட்டு இருக்காங்களாமே! ஒரு ரேஞ்சுக்குப் பிறகு, ஹீரோக்கள் வில்லனா நடிக்கத் தயங்குவாங்க. ஆனா, அஜீத் வழி தனி வழியா?''  

''நான் 'மங்காத்தா’வில் முதல்முறையா வில்லனா நடிக்கலையே! 'வாலி’, 'வில்லன்’, 'வரலாறு’னு தொடர்ச்சியா நெகட்டிவ் ரோல் பண்ணிட்டுத்தான் இருக்கேன். இடையில சின்ன கேப் விழுந்துடுச்சு. சினிமாவுல மட்டும்தான் நெகட்டிவ். நிஜ வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிஷத்தையும் பாசிட்டிவா கழிக்கிறவன் நான். நான் ஒண்ணும் வானத்துல இருந்து திடீர்னு குதிச்ச தேவகுமாரன் இல்லை. பாவமே செய்யாத பரிசுத்த ஆவியும் இல்லை. சாதாரண சராசரி மனுஷன். உலகத்துல இருக்குற எல்லாரையும் போலவே நானும் குறைகள் நிரம்பப்பெற்ற மனுஷன். அம்மா - அப்பாவுக்கு நல்ல மகனா, அண்ணனுக்கு ஆதரவான தம்பியா, ஷாலினிக்கு பெர்ஃபெக்ட் கண வனா, அனோஷ்காவுக்குப் பாசமான அப்பாவா, மாமனார் பெருமைப்படக் கூடிய மருமகனா நடந்துக்கிறேன்னு நம்புறேன். அவங்ககிட்ட கேட்டா... உண்மை தெரியும்!''

''அஜீத் படத்துக்கு மாஸ் ஓப்பனிங் இருக்கும்; ஆனா, கலெக்ஷன் கல்லா கட்டாதுனு ஒரு பேச்சு இருக்கும். 'மங்காத்தா’ அதை உடைச்சிடுச்சே...''

''இந்த இடத்துலதான் நான் ரொம்ப அலெர்ட்டா இருக்கணும். 'மங்காத்தா’ வெற்றி என் நீண்ட மௌனத்துக்குக் கிடைச்ச வெற்றி. சட்டமன்றத் தேர்தலப்போ வாய் திறந்து ஏதாவது பேசுவேன்னு நிறையப் பேர் எதிர்பார்த்தாங்க. அப்பவும் அதுக்கு அப்புறமும் நான் எந்தச் சத்தமும் போடலை. இப்போ 'மங்காத்தா’ பார்த்துட்டுப் பாராட்டுறாங்க. ஏத்துக்கறேன். அதேபோல, 'என்னடா, படத்துல அஜீத் எப்பவும் தண்ணி, தம்முனு இருக்கான்’னு வர்ற விமர்சனங்களையும் தலை வணங்கி ஏத்துக்குறேன். அஜீத் படம் ஓடினாலும் ஓடலைன்னாலும் அவன் எப்பவும் ஒரே மாதிரிதான்!''

''தத்துவ மழை பொழியுறீங்களே... உங்க தலைவர் ரஜினி பாணியில் ஆன்மிகத்திலும் ஈடுபாடு காட்ட ஆரம்பிச்சுடுவீங்களோ?''

''ஏற்கெனவே எனக்கு ஈடுபாடு உண்டே! தமிழ்நாட்டுல வேளாங்கண்ணி, நாகூர், நவக்கிரகக் கோயில்கள் ஒண்ணு விடாமப் போயிட்டு வந்திருக்கேன். கேரளாவில் குருவாயூர், சோட்டாணிக்கரை பகவதி அம்மன்; கர்நாடகாவுல சாமுண்டீஸ்வரி, மூகாம்பிகை கோயிலுக்கு எல்லாம் போயிருக்கேன். திருவான்மியூர்ல என்னோட வீட்ல இருந்து நாலு தடவை திருப்பதிக்கு நடந்தே போயிருக்கேன். என்னை யாரும் கண்டுபிடிச்சிடக் கூடாதுனு மாறுவேஷத்துல நண்பர்களோட ராத்திரியில் நடந்தேன். அஞ்சு நாள் நடந்தோம். ரஜினி சார் கொடுத்த இமயமலை பத்தின புத்தகம் படிச்சதுல இருந்து அங்கேயும் போகணும்னு ஆசையா இருக்கு. சீக்கிரமாக் கிளம்பிடுவேன்னு நினைக்கிறேன்!

'' 'விழாவுக்கு வரச் சொல்லி மிரட்டுறாங்க’னு நீங்க பொது மேடையில் பேசிய பிறகு, கோபாலபுரத்துக்கு வரவழைத்து உங்கள் மேல் கோபம் காட்டினாராமே கருணாநிதி... உண்மையா?''

 ''ஜனநாயகப் பண்புகளை நம்புறவன் நான். அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எப்பவும் அதிகபட்ச மரியாதை கொடுப்பேன். என் மனசுல பட்டதை விழாவில் பேசினேன். அதுல எந்த உள்நோக்கமும் இல்லை. என் திருமணத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அய்யா நேரில் வந்து வாழ்த்தினார். அது எப்பவும் என் மனசில் நீங்காமல் இடம் பிடிச்சிருக்கும்!''

''முதல்வர் ஜெயலலிதான்னாலே எல்லாருக்கும் பயமும் பவ்யமும்தான். ஆனா, உங்க கல்யாணத்துக்கு வாழ்த்த வந்த ஜெயலலிதாவிடம் தைரியமாக் கை குலுக்கிப் பேசிட்டு இருந்தீங்க. உங்களை 'ஜெ-வின் செல்லம்’னு சொல்றாங்களே?''

''அப்படியா என்ன? அம்மா கல்யாணத்துக்கு வந்து வாழ்த்தியதை எப்போதும் மறக்கவே மாட்டேன். அம்மாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு நானும் ஷாலினியும் போயிருந்தோம். சொந்த மகனைப்போல அப்போ பாசம் காட்டினாங்க அம்மா!''  

''உங்களைப்பற்றிய விமர்சனங்களை எப்படி எடுத்துக்குவீங்க?''

''என்னைத் திட்டுறது மூலமா சிலருக்குச் சந்தோஷம் கிடைக்குதுன்னா, அதுக்கு நான் எவ்வளவு கொடுத்துவெச்சிருக்கணும். அதுக்காக கடவுளுக்கு நன்றி சொல்லிக்கிறேன். என் துயரம், சந்தோஷம் எல்லாத்துக்கும் காரணம் என் விதிதான்னு முழுசா நம்புறவன் நான். ஆனா, என்னைத் திட்டும் மனிதர்களைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புதான் வருது. ஏதோ 100 வருஷம் உயிரோட வாழப் போறோம்னு கற்பனை கோட்டை கட்டிக்கிட்டு வாழ்றாங்க. ராத்திரி தூங்கப் போனா காலையில உயிரோட எந்திரிப்போமானு யாருக்குமே தெரியாது. அந்த அளவுக்கு இங்கே உயிருக்கு உத்தரவாதமே இல்லாமப்போச்சு. அதுக்குள்ள ஆயிரத் தெட்டு சண்டைகள், பிரச்னைகள்.எனக்கு இப்போ 40-வயசாகுது. இன்னும் 20-வருஷம் உயிரோட இருப்பேனானுகூடத் தெரியாது. ஒவ்வொரு மனுஷனும் எப்படி வாழ்ந்தான் என்கிற அடையாளம், அவன் சாவுக்குக் கூடுற கூட்டத்தில்தான் தெரியும்னு சொல்வாங்க. என் சாவுக்குக் கூடுற கூட்டம், அஜீத்குமார் யார்னு நிச்சயமா இந்த உலகத்துக்கு எடுத்துக்காட்டும்.

என் வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமைப்பட்டவங்க... என்னைத் திட்டுறது மூலமா சந்தோஷம் அடைஞ்சவங்க எல்லாரும் 'அஜீத் நல்லவன்தான்டா. நாமதான் தப்பாப் புரிஞ்சுக்கிட்டோம்’னு ஒரு வார்த்தை சொல்வாங்க... சொல்லணும்! அப்பதான் என் ஆன்மா சாந்தி அடையும்!''


உற்சாகமாகத் தொடங்கி உருக்கமாக முடிக்கிறார் தல!


விகடன்