Search This Blog

Sunday, July 10, 2011

டெபிட் கார்டு - அன்லிமிடேட் அவஸ்தைகள்!


சமீபத்தில் நண்பர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் பிரபல நகைக் கடைக்குச் சென்றிருந்தார். சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான நகையை வாங்க வேண்டும் என்பது அவரது திட்டம். கையில் சுமார் எழுபதாயிரம் ரொக்கம் இருந்தது. மீதியை டெபிட் கார்டு மூலம் 'ஸ்வைப்’ செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தார்.நகையைத் தேர்வு செய்து, பில் போட்டு, கையிலிருந்த பணத்தோடு, மீதிப் பணத்துக்கு டெபிட் கார்டை எடுத்து நீட்ட, கடைக்காரரோ கார்டிலிருந்து வெறும் 25,000 ரூபாய் மட்டுமே 'ஸ்வைப்’ செய்ய முடியும் என்று சொல்ல, நண்பர் டென்ஷனாகி விட்டார். சரி பக்கத்திலிருக்கும் ஏ.டி.எம். சென்டரிலிருந்து பணமாக எடுத்து பில் செட்டில் செய்துவிடலாம் என்ற யோசனையோடு அங்கு சென்றால், அந்த மெஷின் அவுட் ஆப் ஆர்டர்... பிறகென்ன நல்ல நேரத்தில் நகை வாங்கலாம் என வந்த  குடும்பத்தினரோடு, அவர்  மல்லுகட்டிய அவஸ்தை தனிக் கதை..

உள்ளபடி பார்த்தால், டெபிட் கார்டுகளின் வசதிகள், சௌகர்யங்கள் என்னென்ன? எப்படி பயன்படுத்த வேண்டும்? ஏ.டி.எம்-மில் பணம் எடுப்பது தவிர, வேறு வகைகளில் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்? என்கிற விஷயங்கள் பலருக்குத் தெரிவதில்லை. இதனால்தான் மேற்சொன்னதுபோல பல குழப்பங்கள் நடக்கின்றன.உங்கள் டெபிட் கார்டு பற்றி அடிப்படைத் தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள்..

ஏ.டி.எம். பரிவர்த்தனைகள்!


கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் அல்லாமல் மற்ற வங்கி ஏ.டி.எம். மையங்களில் ஒரு மாதத்தில் ஐந்து முறைதான் பணமெடுக்கலாம். அதன்பிறகு நடக்கும் ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்கும் 20 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மினி ஸ்டேட்மென்ட், பேலன்ஸ் என்கொயரி மற்றும் பின்நம்பர் மாற்றுவது போன்ற பணமல்லாத பரிவர்த்தனைக்கு எந்தவிதமான கட்டணமும் கிடையாது என்றுதான் இதுநாள்வரை இருந்தது. ஆனால், கடந்த ஒன்றாம் தேதி முதல் பிற வங்கி ஏ.டி.எம்.களில் பண பரிவர்த்தனை மட்டுமின்றி நிதியல்லா பரிவர்த்தனையும் சேர்த்து மொத்தம் ஐந்து முறைக்கு மேல் சென்றால் இனி கட்டணம் வசூலித்து விடுவார்கள்.  ரிசர்வ் வங்கியின் புதிய ஆணை இது.

இருப்பினும், வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க சில வங்கிகள் சில சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளன. குறிப்பாக இதர வங்கி ஏ.டி.எம். மையங்களில் ஐந்து முறைக்கு மேல் செய்யப்படும் நிதியல்லா பரிவர்த்தனைகளுக்கு இருபது ரூபாய்க்குப் பதில் 8.50 ரூபாய் மட்டுமே கட்டணம் என சில வங்கிகள் அறிவித்துள்ளன.

ஏழு நாட்களில் திரும்பக் கிடைக்கும்!

சில இடங்களில் ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது பணம் வராமல் போய்விடும். ஆனால், நமது கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டிருக்கும். இது சம்பந்தமாக புகார் கொடுத்தால் பன்னிரண்டு நாட்களுக்குள் அந்த தொகையை வாடிக்கையாளருக்கு திரும்பக் கொடுக்க வேண்டும் என்று இருந்தது. ஆனால், பன்னிரண்டு நாட்கள் என்பதை புகார் வந்த ஏழு நாட்களுக்குள் திரும்பச் செலுத்த வேண்டும் என்றும், அதற்குமேல் தாமதமாகும் ஒவ்வொரு நாட்களுக்கும் 100 ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும் எனவும் ஆர்.பி.ஐ. சில மாதங்களுக்குமுன் கூறியிருக்கிறது. எனவே, இனி பணம் திரும்ப கைக்கு கிடைக்க தாமதமானால் வட்டியும் கிடைக்கும். 
 
எவ்வளவு பணம் எடுக்கலாம்?  
 
சம்பளக் கணக்கு அல்லது சேமிப்புக் கணக்கை வைத்திருப் பவர்கள் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 40,000 ரூபாய் வரை ஏ.டி.எம்.-மிலிருந்து பணம் எடுக்கலாம். சில வங்கிகள் 25,000 ரூபாய் மட்டுமே எடுக்க அனுமதிக்கின்றன. அதுவும், கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் மட்டுமே இந்த அளவுக்கு எடுக்க முடியும். மற்ற வங்கிகளின் ஏ.டி.எம். மையம் எனில் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும். அதனால் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டெபிட் கார்டு மூலம் ஒரு நாளைக்கு எவ்வளவு பண பரிவர்த்தனை செய்ய  முடியும் என்பதை வங்கி அதிகாரிகளைச் சந்தித்து தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
 
ஷாப்பிங் செய்யும்போது...
 
ஒரு நாளைக்கு ஏ.டி.எம்.-மில் எவ்வளவு பணம் எடுக்க முடியுமோ, அதே மதிப்பிலான தொகைக்கு மட்டுமே ஷாப்பிங்கில் 'ஸ்வைப்’ செய்ய முடியும். சில வங்கிகள் உங்களது பேலன்ஸ் தொகைக்கு ஏற்ப ஷாப்பிங் செய்யும் லிமிட்டை வரையறுத்துள்ளன. சம்பளக் கணக்கு எனில் அதிகபட்சமாக 25,000 ரூபாய் வரை மட்டுமே ஒரு நாளைக்கு ஷாப்பிங்கின்போது 'ஸ்வைப்’ செய்ய முடியும். ஐந்து லட்சம் ரூபாய் வரை மினிமம் பேலன்ஸாக வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், நாளன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் எடுக்கலாம், அதுபோல ஷாப்பிங் செய்யவும் முடியும்.
 
டெபிட் கார்டு தொலைந்தாலோ, அல்லது திருடு போய்விட்டது என்றாலோ அதனால் நமக்கு பெரிய அளவில் பாதிப்புகள் வராமல் தடுக்கவே இது மாதிரியான கட்டுப்பாடுகளை வங்கிகள் வைத்துள்ளன. ஷாப்பிங் செய்யும்போது டெபிட் கார்டைப் பயன்படுத்துவது பற்றி ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொருவிதமான நடைமுறையைப் பின்பற்றுகிறது. அனைத்து வங்கிகளும் ஒரே நடைமுறையைக் கொண்டுவந்தால் பெரும்பாலான சிக்கல்கள் தீரும். ஷாப்பிங் மையங்களில்  டெபிட் கார்டை ஸ்வைப் செய்யும்போதும், பின் நம்பரையும் சேர்த்தே பயன்படுத்துவதாக இருந்தால் இன்னும் பாதுகாப்பாக இருக்கும். சில வங்கிகளின் ஸ்வைப் மெஷினில் இந்த வசதிகள் உள்ளன.
 
ஆன்லைன் ஷாப்பிங்!
 
ஆன்லைன் ஷாப்பிங்கில் ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் ரூபாய் அளவுக்கு பொருட்களை வாங்கலாம். ஆன்லைனில் ஷாப்பிங் எனில் உங்கள் டெபிட் கார்டின் ரகசிய குறியீடு எண் கொடுக்க வேண்டியிருக்கும். இதிலும் எச்சரிக்கை தேவை.ஷாப்பிங் போவதே ஒரு ஜாலி அனுபவம்தான். டெபிட் கார்டு இருக்கே என்று ஹாயாகப் போகிறவர்கள் உங்கள் லிமிட் எவ்வளவு எனத் தெரிந்து கொண்டு போனால் தேவையில்லாத அவஸ்தைகளைத் தவிர்க்கலாம்!
 
மொத்தமாக எடுப்பதில் ஆபத்தா?

ஏ.டி.எம். குறித்து ஜோக்குகளுக்கு மட்டுமல்ல, பரபரப்பு செய்திகளுக்கும் எப்போதும் பஞ்சமிருப்பதில்லை. லேட்டஸ்ட் பரபரப்பு நூறு ரூபாய் நோட்டுகளாக வந்தால் அதில் ஒரு சிக்கல் ஏற்படும் என்பதுதான்! உதாரணமாக அதிக தொகை எடுக்கும்போது எல்லாமே நூறு ரூபாயாக வரும்பட்சத்தில் பாதிப் பணம் வராமலே போய்விடும் என்ற பரபரப்பு செய்திதான் அது.

''ஆனால் இது உண்மை கிடையாது. இப்படி ஒரு குறைபாட்டுடன் யாராவது ஏ.டி.எம். வைப்பார்களா என்ன?! பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களில் உள்ள இயந்திரங்களின் வாய்ப்பகுதி, அதிகளவிலான நோட்டுகளைத் தரும்படியே வடிவமைக்கப்பட்டுள்ளது. அப்படி இல்லாதபட்சத்தில், அந்த ஏ.டி.எம். மெஷினே நூறு ரூபாய் நோட்டுக்குப் பதில் ஐந்நூறு ரூபாய் வேண்டுமா, ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக வேண்டுமா என்பதில் ஆரம்பித்து இவ்வளவு தொகையை ஒரே தடவையில் தரமுடியாது என்பது வரை தெரிவித்து விடும். அதனால் பிரச்னை எழுவதற்கே வாய்ப்பில்லை'' என்கிறார்கள் வங்கி அதிகாரிகள்.எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!   

No comments:

Post a Comment