Search This Blog

Saturday, April 16, 2011

மூக்கில் இரத்தம் வடிந்தால்...!

மூக்கில் அடிபட்டால் இரத்தம் வருவது இயல்பு. அடிபடாமல், காயம் எதுவும் ஏற்படாமல், சிலருக்கு மூக்கிலிருந்து இரத்தம் வடிவதுண்டு. இதற்குச் ‘சில்லுமூக்கு’ என்று பெயர். ஆங்கிலத்தில் ‘எபிஸ்டேக்சிஸ்‘ (Epistaxis). 

மூக்கு ஒரு தொட்டாச்சிணுங்கி!

மூக்கு பார்ப்பதற்குத்தான் பலமானது போல் தோன்றுகிறதே தவிர. உள்ளுக்குள் அது மிக மென்மையானது. வெளிப்பக்கம் தெரிகின்ற மூக்கின் இரு பக்கங்களிலும் துவாரங்கள் உள்ளன. அந்தப் பகுதிக்கு ‘மூக்குப் பெட்டகம்’ (Nasal Box) என்று பெயர். இதன் ஆரம்பப் பகுதியில், முகத்தின் பல பகுதிகளி லிருந்து மிக நுண்ணிய இரத்தக்குழாய்கள் வந்து சேருகின்றன. இப்பகுதிக்கு ‘லிட்டில்ஸ் ஏரியா’ (Little's Area) என்று பெயர். இது தொட்டாச்சிணுங்கி பகுதி. லேசாக சீண்டப்பட்டால்கூட மூக்கி லிருந்து இரத்தம் கொட்டிவிடும். மூக்கிலிருந்து இரத்தம் வடிவதற்கு 80 சதவீதக் காரணம் இந்தப் பகுதியில் உண்டாகும் கோளாறுதான்.


என்ன காரணம்?

மூக்கிலிருந்து இரத்தம் வடிவதற்கு, விபத்துகளில் அடிபடுவது, மூக்கைப் பலமாகச் சிந்துவது போன்ற சாதாரண காரணங்களில் தொடங்கி, மூக்கில் ஏற்படும் கட்டி மற்றும் புற்றுநோய் போன்ற பெரிய அளவு காரணங்களும் இருக்கின்றன.

சில குழந்தைகளுக்கு ஒவ்வாமை காரணமாக அடிக்கடி ஜலதோஷம் பிடிக் கும். மூக்கில் சளி ஒழுகும். அப்போது மூக்கினுள் அளவுக்கு அதிகமாக ஈரத் தன்மை காணப்படும். இதனால் மூக்கில் வெடிப்புகள் தோன்றும். அப்போது மூக்கிலிருந்து இரத்தம் வடியும். அல்லது மூக்கிலிருந்து சளியை வெளியேற்ற மூக்கைப் பலமாகச் சிந்துவார்கள். இதனாலும் இரத்தக் குழாய்கள் வெடித்து இரத்தம் வரலாம்.

மூக்கில் சதை வளர்ச்சி!

மூக்கில் ‘நீர்க்கோப்புச் சதை’ (Nasal Polyp) வளர்கின்ற வாய்ப்பு குழந்தைகளுக்கே அதிகம். தவிர, மூக்கும் தொண் டையும் இணைகின்ற பகுதியில் ‘அண்ணச்சதை’ (Adenoid) வீங்குவதும் உண்டு. இந்த இரண்டு காரணங்களால், மூக்கு அடைத்துக் கொள்ளும். அடைப்பை விலக்க குழந்தைகள் அடிக்கடி மூக்கைக் குடைவார்கள் அல்லது சிந்துவார்கள். விளைவு, மூக்கிலிருந்து இரத்தம் கொட்டும்.

வினையாகும் விளையாட்டு!

குழந்தைகள் விளையாட்டாக குச்சி, பேப்பர் துண்டு, ரப்பர் துண்டு, பலப்பம், பஞ்சு, பயறு, பொத்தான், நிலக்கடலை, பருத்தி விதை, ஆமணக்கு விதை, வேப்பமுத்து, பிளாஸ்டிக் பொருள்கள் முதலிய அந்நியப்பொருள்களை மூக் கில் திணித்துக் கொள்வார்கள். இவை மூக்கினுள்ளே ஊறி, புடைத்து, புண் ஏற்படுத்தும். அப்போது அப்புண்ணிலிருந்து இரத்தம் கசியும்.


வெப்பமான சூழல் ஒரு காரணம்!

மூக்குக்கு மிகுந்த குளிர்ச்சியும் ஆகாது; மிகுந்த வெப்பமும் ஆகாது. குளிர்காலங்களில் குளிர்ந்த காற்றைச் சுவாசித் தால், மூக்கில் இரத்தம் வடியும். கோடையில் வெப்பம் மிகுந்த காற்றைச் சுவாசிக்க நேரிட் டால், மூக்கில் இரத்தம் வடியும். ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட பள்ளி அறைகளில் படிக்கின்ற குழந்தைகளுக்கு அதிக வெப்பம் காரணமாக, மூக்கில் இரத்தம் வடியும் வாய்ப்பு அதிகம்.

நோய்களும் காரணமாகலாம்!

ஒவ்வாமை, தடுமம், மூக்குச்சளி, மூக்குத்தண்டு கோளாறு, காசநோய், தொழுநோய், காளான்நோய், புற்று நோய்க் கட்டி, ‘ஹீமோபிலியா’ போன்ற இரத்த உறைவுக் கோளாறுகள், சைனஸ் பிரச்சனை, டைபாய்டு காய்ச்சல், டெங்கு காய்ச்சல், வைட்டமின் சி மற்றும் வைட் டமின் கே சத்துக்குறைவு, இரத்தசோகை, கபாலக் கோளாறுகள், உயர் இரத்த அழுத்தம், ஆஸ்பிரின் போன்ற மருந் துகள் ஆகிய பல காரணங்களாலும் மூக்கு வழியாக இரத்தம் வடியலாம். 

என்ன முதலுதவி செய்வது?

* பாதிக்கப்பட்ட குழந்தையை லேசாகத் தலையைக் குனிந்து கொண்டு உட்காரச் சொல்லுங்கள். வாயைத் திறந்து மூச்சுவிடச் சொல்லுங்கள்.

* இப்போது மூக்கின் இரண்டு துவா ரங்களையும் பெருவிரல் மற்றும் ஆட்காட்டி விரல்களால் அழுத்தமாகப் பிடித்துக் கொள்ளுங்கள். இவ்வாறு பத்து நிமிடங்களுக்குத் தொடர்ச்சியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். இரத்தம் வடிவது நின்றுவிடும்.

* மூக்கைப் பிடித்திருப்பதால், வாய் வழியாக இரத்தம் வர வாய்ப்புள்ளது. பயப்பட வேண்டாம். வாயிலிருக்கும் இரத்தத்தைத் துப்பச் செய்யுங்கள்.

* இந்த முயற்சியில் இரத்தம் நிற்கவில்லை என்றால், அடுத்த வழி இது: குளிர்ந்த நீரில் பருத்தித் துணியை முக்கி எடுத்துப் பிழிந்து கொண்டு, மூக் கின்மேல் பத்து நிமிடம் வைக்கவும்.

* ஐஸ் கட்டி கைவசமிருந்தால் அதனையும் மூக்கின் மீதும், மூக்குக்கு இரு பக்கங்களிலும் வைக்கலாம். 

* பஞ்சு அல்லது சுத்தமான துணியைக் குளிர்ந்த நீரில் நனைத்து, திரி போல் செய்து, மூக்கினுள் அழுத் தமாகத் திணித்து, மூக்கை அடைக்கலாம். 

* அப்படியும் இரத்தக்கசிவு நிற்க வில்லை என்றால், இரத்தக்கசிவு மூக்கின் மேற்பகுதியிலிருந்துதான் வருகிறது என்று பொருள். அதற்கு மருத்துவர் உதவியை நாடுங்கள்.

என்ன செய்யக் கூடாது?

* எந்தக் காரணத்தைக் கொண்டும் மூக்கைச் சிந்தக்கூடாது.

* விரலை நுழைத்து அடைக்கக் கூடாது.

* மூக்கிலிருந்து இரத்தம் வடியும் போது, தலையை நிமிர்த்தக் கூடாது. காரணம், மூக்கிலிருந்து இரத்தம் தொண்டைக்குச் சென்று குமட்டலை ஏற்படுத்தும். வாந்தி வரலாம். சமயங்களில் புரையேறி, இருமல் வந்து சேரும்.

* மருத்துவர் சொல்லாமல் எந்த சொட்டு மருந்தையும் மூக்கில் விடாதீர்கள். 


பாதுகாப்புக்கு 10 வழிகள்! 

* குளிக்கும்போது தினமும் மூக்கையும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

* தேவையில்லாமல் மூக்கைக் குடை யக்கூடாது

* மூக்குக்குள் குச்சி, ரப்பர் போன்ற அந்நியப் பொருள்களைப் போடக் கூடாது. 

* மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதும், மிகக் குளிர்ச்சியான உணவுப் பொருள்களைச் சாப்பிடுவதும் கூடாது.

* அதிக வெப்பச்சூழல் உள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும். 

* ஒவ்வாமை நோய் உள்ளவர்கள் அதற்குரிய சிகிச்சையைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியது முக்கியம்.

* அடிக்கடி மூக்கடைப்பு ஏற்படுமானால், ‘உடல் சூடு.... சில்லுமூக்கு உடைஞ்சிருக்கு’ என்று சொல்லி, சும்மா இருக்கக்கூடாது. காரணம் அறிந்து, சிகிச்சை பெற வேண்டும்.

* குளிர்காலங்களில் மூக்கடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்க, மருத்துவர் யோசனைப்படி மூக்குச் சொட்டு மருந்து விடலாம்.

* சத்துள்ள உணவுகளைத் தினமும் சாப்பிட்டு, சத்துக்குறைவு நோய்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 

* அடிக்கடி மூக்கிலிருந்து இரத்தம் வடிந்தால், உயர் இரத்த அழுத்தம் உள்ளதா என்று சோதித்துக் கொள்ளவும். குழந்தைகளுக்கும் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புண்டு.

டாக்டர் கு.கணேசன்


No comments:

Post a Comment