Search This Blog

Saturday, April 30, 2011

இரண்டு குற்றப்பத்திரிகைகள்! (இலங்கை போர் & 2ஜி ஸ்பெக்ட்ரம் ) - ஓ பக்கங்கள், ஞாநி

குற்றப்பத்திரிகை 1 :


ஈழத் தமிழர்களின் மாபெரும் துயரங்களுக்கு ராஜபக்‌ஷே அரசும் விடுதலைப் புலிகளும் பொறுப்பு என்று நேர்மையான விமர்சகர்கள் இதுவரை சொல்லி வந்ததைத்தான் இப்போது ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்குழு அறிக்கையும் உறுதிப்படுத்தியிருக்கிறது.கடைசியாக நடந்த உள்நாட்டு யுத்தத்தில் இருதரப்பும் குற்றங்கள் இழைத்திருப்பதை ஐ.நா. நிபுணர் அறிக்கை தெளிவாகச் சுட்டிக் காட்டியிருக்கிறது.

இந்த அறிக்கையின் விளைவாக ஏதேனும் உருப்படியாக நடக்குமா என்பது சந்தேகத்துக்குரியதுதான். ஏனென்றால் இதன் அடிப்படையில் சர்வதேச விசாரணை நடத்தப்படுமா என்பதையெல்லாம் ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில்தான் தீர்மானிக்குமே ஒழிய அதன் செயலாளர் முடிவு எடுத்துவிட முடியாது. ஐ.நா. என்பது உலகின் பல்வேறு வல்லரசு நாடுகளின் கைப்பாவையாக இருந்து வருகிறது என்பதுதான் கடந்த கால நிகழ்ச்சிகள் காட்டும் உண்மை. எனவே, அது அதிகபட்சம் பல் இல்லாத பாம்பாகவே இருக்கிறது.

இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களுக்காக, சாதாரண பொது மக்களான ஈழத் தமிழர்களுக்குச் செய்யப்பட்ட கொடுமைகளுக்காக சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பாக்கப்பட வேண்டுமென்று ஐ.நா. அறிக்கை சொல்லியிருக்கிறது.

அதன்படி இலங்கை (ராஜபக்‌ஷே) அரசாங்கம் மீது அறிக்கை தெரிவிக்கும் முக்கியக் குற்றச்சாட்டுகள் ஐந்து : 

1.மூன்று அமைதி வளையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கணக்கற்ற ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்திப் பொது மக்களைக் கொன்றது. 

2.மருத்துவமனைகள் போன்ற போருக்கு விலக்கப்பட்ட பகுதிகள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் செய்தது. 

3. மனிதாபிமான அடிப்படையில் செய்யப்பட வேண்டிய உதவிகளைச் செய்யவும் அனுமதிக்கவும் மறுத்தது. 

4. அகதிகளாக வந்த மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியது. புலிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களைச் சித்ரவதை செய்தது. 

5. யுத்தம் நடந்த பகுதிகளுக்கு வெளியே ஊடகங்களைப் பல வழிகளில் ஒடுக்கியது. அங்கு மனித உரிமைகளை மீறியது.

இதில் விசித்திரம் என்னவென்றால் இலங்கை அரசு மீது நிபுணர் குழு தெரிவித்துள்ள முதல் இரு குற்றச்சாட்டுகளுக்கும் அரசு மட்டுமல்ல, விடுதலைப் புலிகளும் பொறுப்பேற்க வேண்டியிருக்கிறது என்று அடுத்ததாக புலிகள் மீது ஐ.நா குழு பட்டியலிட்டுள்ள குற்றச்சாட்டுகளைப் பார்க்கும் போது தெரிகிறது. 

புலிகள் மீதான குற்றச்சாட்டுகள்:  


1.    பொது மக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியது. 

2. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற பொதுமக்களைக் கொன்றது. 

3. பொதுமக்கள் இருந்த பகுதிகளிலிருந்து ஆயுதங்களுடன் தாக்குதல்கள் நடத்தியது. 

4. சிறுவர்களையும் பிறரையும் பலவந்தப்படுத்தித் தங்கள் படையில் சேர்த்தது. 

5. பொது மக்களை ஊழியர்களைக் கட்டாயப்படுத்திப் பதுங்குகுழிகள் வெட்டுவது போன்ற வேலை வாங்கியது.

6. தற்கொலைத் தாக்குதல்கள் செய்து பொது மக்களைப் படு கொலை செய்தது.

மேற்படி குற்றங்களுக்காக இலங்கை அரசின் அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், ராணுவத் தளபதிகள், ராணுவத்தினர், விடுதலைப்புலிகளின் அரசியல் தலைவர்கள், ஆகியோர் பொறுப்பேற்கச் செய்யப்பட வேண்டும் என்று ஐ.நா. குழு அறிக்கை சொல்கிறது.

ராஜபக்‌ஷே, கோத்தபயா, பொன்சேகா முதலானோர் இலங்கை அரசின் போர்க் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள். அவர்கள் மீது விசாரணை நடத்த வாய்ப்பு இருக்கிறது. புலிகளின் போர்க் குற்றங்களுக்காக யாரை இப்போது பொறுப்பாக்குவது? வெளிநாடுகளில் இன்னமும் தங்களைப் புலிகளின் தலைவர்களாக அறிவித்துக் கொள்வோரையா? இலங்கை அரசு வசம் இருக்கும் கே.பி.யையா? அல்லது புலிகள் எந்தத் தவறும் செய்யவே இல்லை என்று அரசியல் தளத்தில் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் நெடுமாறன், வைகோ, சீமான் போன்றவர்களையா? யாரைப் பொறுப்பாக்குவது?


ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை உண்மையானது என்று வாதிட்டால் இலங்கை அரசு பற்றிச் சொல்லப்பட்டது மட்டும்தான் உண்மை என்றோ, புலிகள் பற்றிச் சொல்லப்பட்டது மட்டும்தான் உண்மை என்றோ யாரும் வாதிடமுடியாது. முழுவதும் உண்மை என்று ஏற்கப்பட்டால், இரு தரப்பிலிருந்தும் பொறுப்பானவர்கள் கண்டறியப்பட்டு போர்க் குற்றங்களுக்காக விசாரிக்கப்பட வேண்டும் என்பதே நியாயமாக இருக்க முடியும்

ஐ.நா.வைப் பொறுத்தமட்டில் நடைமுறையில் இவை எதுவும் சாத்தியம் இல்லை. இலங்கை அரசுடன் சீனா, ரஷ்யா, இந்தியா, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, பிரிட்டன்... ஆகிய வற்றுக்கு இருக்கும் இப்போதைய உறவு, அவற்றுக்கு இலங்கையில் இருக்கும் லாப நஷ்டங்கள் அடிப்படையிலேயே ஐ.நா.வின் அடுத்த முடிவுகள் எடுக்கப்படும். நாம் எழுப்பும் குரல்களுக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.

பெரும் கொடுமைகளுக்கு உள்ளாகி யுத்தத்தில் இறந்த ஈழத்தமிழர்களுக்கான உண்மையான நியாயம் என்பது இனி எஞ்சியிருக்கும் தமிழர்களுக்கு புனர்வாழ்வும், சம உரிமையும், சம அரசியல் அதிகாரமும் பெற்றுத் தருவதேயாகும். அதற்கான வழிகள் என்ன என்று ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுப்பதுதான் சரியான அடுத்தகட்ட அரசியலாக இருக்க முடியும்.

குற்றப்பத்திரிகை 2:


கனிமொழி கூட்டுச் சதிகாரராக இருந்தார் என்று சொல்லியிருக்கிறது சி.பி.ஐ.ஸ்பெக்ட்ரம் ஊழல் முன் கூட்டித் திட்டமிடப்பட்ட ஊழல் என்பது அம்பலமான நிகழ்ச்சிகளை அடுத்தடுத்து வைத்துப் பார்த்தாலே சாதாரண மனிதர்களுக்குக் கூடப் புரிந்துவிடும். மன்மோகன் அமைச்சரவையை அமைக்கும்போதே யாருக்கு டெலிகாம் இலாகா என்பது பற்றிச் சதி செய்யப்படுகிறது. ஆ.ராசா நிச்சயம் அமைச்சராக வேண்டும், அவருக்கே டெலிகாம் தரப்படவேண்டும் தயாநிதி மாறனுக்குத் தரப்படக் கூடாது என்றெல்லாம் விவாதிக்கப்படுகிறது. இந்த விவாதத்தில் தரகர் நீரா ராடியா, கனிமொழி, ராசா மூவரும் பங்கேற்கிறார்கள். நீரா ராடியா வாக்களித்தபடியே ராசாவுக்கு டெலிகாம் கிடைக்கிறது. நீரா ராடியா டாடா நிறுவனத்தின் தரகர். தவிர இன்னும் அம்பானி உள்ளிட்ட பல நிறுவனங்களுக்குத் தரகர். ராடியா தொடர்புள்ள நிறுவனங்கள் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸில் பயனடைகின்றன.


2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்கும் போது, ராசாவுக்கு எதிராகப் பெரும் விமர்சனம் எழும்போது, தொழிலதிபர் டாடா. ராசாவுக்கு ஆதரவாகக் குரல் எழுப்புகிறார். கருணாநிதிக்குக் கடிதமே எழுதுகிறார். அதை நீராவிடமே கொடுத்தனுப்புகிறார்.அடுத்து கலைஞர் டி.வி. சேனல் ஆரம்பிக்கப்படும்போது அதற்கு வருகிற சுமார் 214 கோடி ரூபாய் பணம், ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்ற கம்பெனியிடமிருந்து பல கை மாறி வருகிறது. கலைஞர் சேனலை டாடாஸ்கை டிஷ்ஷில் இடம் பெறச் செய்ய சேனலின் இயக்குனரான கனிமொழி தீவிர முயற்சிகள் எடுக்கிறார். டாடா தொடர்பான அண்ணா சாலை கட்டட பேரத்தில் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் பெயர் சம்பந்தப்படுகிறது, அவருடைய ஆடிட்டர் ரத்னம் நீரா ராடியாவுடன் பேசியது பதிவாகியிருக்கிறது.


ராசாவின் தயவில் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்ற கம்பெனிகளுக்கெல்லாம் தமிழ்நாட்டில் கிராமியக் கலைகளை வளர்க்கும் சமூக அக்கறை வந்துவிடுகிறது. கனிமொழியும் ஜகத் கஸ்பரும் நடத்தும் தமிழ் மையத்துக்கு நன்கொடை வழங்குகிறார்கள்.இப்படி மிகத்தெளிவாக கனிமொழியின் பங்கு, கருணாநிதியின் குடும்பத்தினரின் பங்கு நீரா ராடியா டேப் உரையாடல்களிலும் அடுத்தடுத்து அம்பலமான சில ஆவணங்களிலும் வெளிச்சமாகிவிட்டது. இவற்றையெல்லாம் மேலும் ஆவணங்களின் உதவியுடன் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டியது மட்டும் தான் பாக்கி. இதுவரை சி.பி.ஐ. சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம் விசாரணையை நேரடியாக உச்ச நீதிமன்றம் மேற்பார்வையிடுவதுதான். 


அரசியல்ரீதியாக கனிமொழி மீதான குற்றப்பத்திரிகை என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம். மே 13 அன்று தமிழகத் தேர்தல் முடிவுகள் எப்படி அமைகின்றன என்பதுதான் விளைவை ஏற்படுத்துமே தவிர வேறு எதுவும் ஒன்றும் செய்யாது. சுரேஷ் கல்மாடியைக் கைது செய்தது போல அடுத்து கனிமொழியைக் கைது கூடச் செய்யலாம். ஆனாலும் மே 13 முடிவுகள்தான் தி.மு.க.வின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். அதுவரை ஓரிரு மிரட்டல் அறிக்கைகள் தவிர வேறு எதுவும் தி.மு.க. வுக்குச் சாத்தியமில்லை.

தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்தால், நிச்சயம் கலைஞர் கருணாநிதி, மகளுக்காக மத்திய அரசுடன் மோதத் தயாராகிவிடுவார். மன்மோகன் ஆட்சிக்கு ஆதரவைத் திரும்பப் பெற்று அமைச்சரவையிலிருந்து விலகி காங்கிரசுக்கு நெருக்கடிகளை உருவாக்கலாம்.  தி.மு.க., ஆட்சியை இழந்தால், என்னவானாலும் காங்கிரசுடன் உறவை முறிக்காமல் தொடர அரும்பாடுபடும். ஏனென்றால் தமிழக ஆட்சியில் இருக்கும் ஜெயலலிதாவும் காங்கிரஸ் மத்திய ஆட்சியும் ஒன்று சேர்ந்து விட்டால் தி.மு.க. நிலை கடினமான தாகிவிடும்.

கனிமொழியின் அரசியல் எதிர்காலம், இனி சகோதரர்களின் கருணையை மட்டுமே நம்பியிருக்கிறது. கருணை காட்ட வேண்டிய எந்த அவசியமும் அவர்களுக்கு இல்லை. அப்பாவுக்காக அவர்கள் சற்று நெகிழ்ந்து கொடுக்கலாம். முற்றிலும் அரசியலை விட்டு விலகிச் செல்வதென்ற நிபந்தனையை கனிமொழி ஏற்றுக் கொண்டால் மட்டுமே அவர்கள் கனிமொழிக்கு உதவ முன்வரக் கூடும்.  

கனிமொழியின் நிமித்தம் தி.மு.க.வின் எதிர்காலத்தைப் பணயம் வைக்க ஒருபோதும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். கட்சிக்கு ஸ்டாலினால், அழகிரியால், மாறன்களால் லாபம் என்ன நஷ்டம் என்ன என்று கணக்குப் பார்த்தால் லாபங்களே அதிகம். ஆனால் கனிமொழியால் கட்சிக்கு எந்த லாபமும் இது வரை இல்லை. நஷ்டமே அதிகம்.

சர்க்காரியா கமிஷன் விசாரணையின் அடிப்படையில் எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் தொடக்கத்திலும் கருணாநிதி மீது போடப்பட்ட ஊழல் வழக்குகளிலிருந்து மத்திய அரசின் உதவியுடன் தப்பியது போன்ற சூழ்நிலை இப்போது இல்லை. மத்திய அரசே உதவினாலும், நீதிமன்றங்களிடமிருந்து தப்பமுடியாது என்ற நிலை அண்மைக் காலமாக ஏற்பட்டிருக்கிறது. 

தொடர்ந்து உச்சநீதி மன்றம் இப்படியே இயங்கினால், இன்னும் பல பிரபலங்களை நாம் அவர்களுக்குரிய இடத்தில் (சிறையில்)வைத்துப் பார்க்கும் ஆச்சர்யம் நிகழும்.

இந்த வார சந்தேகம்!


உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பின் பத்தாண்டு காலம் எந்தக் குற்றச் செயலிலும் ஈடுபடாமல் நேரான வாழ்க்கையை வாழ்ந்திருக்கும் ஜான் டேவிட்டை, உச்சநீதி மன்றம் மீண்டும் பழைய குற்றத்துக்காகச் சிறையில் அடைப்பது எப்படிச் சரியாகும்? சிறை தண்டனை சீர் திருத்தவா? தண்டிக்கவா? பத்தாண்டு தாமதமாகத் தீர்ப்பு வழங்கியது யார் குற்றம்?

இந்த வார பூச்செண்டு!


எண்டோசல்பான் பூச்சி மருந்தைத் தடை செய்யக் கோரி நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கேரள முதலமைச்சர் அச்சுதானந்தனுக்கு இ.வா.பூ.


Friday, April 29, 2011

உஷார் - தங்கம் , வெள்ளி


திர்வரும் மே மாதம் 6-ம் தேதி அட்சயதிருதியை... 

கடந்த சில ஆண்டுகளாக பரபரப்பாக கொண்டாடப்பட்டு வரும் இந்த பண்டிகையின்போது ஒரு கிராம் தங்கத்தையாவது வாங்கினால்தான் ஆச்சு என மக்கள் ஒற்றைக் காலில் நிற்கிறார்கள். இந்த தங்க ஜுரம், தேர்தல் ரிசல்ட் ஜுரத்தையும் தாண்டி நிற்க, கடந்த ஒரு மாத காலமாகவே தங்கம், வெள்ளி விலை ஏகத்துக்கும் எகிறிக் கொண்டிருக்கிறது. வருகிற அட்சயதிருதியைக்குள் பத்து கிராம் தங்கம் விலை 25,000 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 75,000 ரூபாய்க்கும் போய்விடும் என்று அடித்துச் சொல்கிறார்கள்.

அசத்தல் லாபம்!


தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயரக் காரணம், கடந்த சில ஆண்டுகளில் அது கொடுத்த அசத்தல் லாபம்தான். கடந்த வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி பத்து கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 21,830 ரூபாய். ஆனால், ஓராண்டுக்கு முன்பு, அதாவது 2010, ஏப்ரல் 1-ம் தேதி அன்று அதே பத்து கிராம் தங்கத்தின் விலை 16,302 ரூபாய்தான். 2008, ஆகஸ்ட் முடிவில் 11,852 ரூபாய் மட்டுமே. இரண்டரை ஆண்டுக்குள் தங்கத்தில் போட்ட முதலீடு ஏறக்குறைய இரண்டு மடங்காக உயர்ந்திருப்பது ஆச்சரியம்தான். கடந்த மூன்றாண்டு காலத்தில் வேறு எதிலும் இந்த லாபம் கிடைக்கவில்லை என்பது முக்கியமான விஷயம். 
 
தங்கம்தான் இப்படி தகதகவென லாபம் கொடுத்தது என்றால் வெள்ளியும் போட்டி போட்டுக் கொண்டு லாபம் தந்தது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி ஒரு கிலோ வெள்ளியின் விலை 67,750 ரூபாய். ஆனால், 2010 ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று அதே ஒரு கிலோ வெள்ளி விலை 26,905 ரூபாய்தான். 2008, ஆகஸ்ட் முடிவில் 20,223 ரூபாய் மட்டுமே. தங்கம் இரண்டு மடங்காகி பெருகி லாபம் கொடுத்தது என்றால் வெள்ளி மூன்றரை மடங்கு பெருகி, முதலீட்டாளர்களை திக்குமுக்காட வைத்தது!
டாலர்தான் காரணமா? 
 
 
''தங்கம் விலை கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி 20,700 ரூபாய்தான். ஆனால், இன்று 21,830 ரூபாய். கடந்த மூன்றாண்டுகளில் தங்கம் இந்த அளவுக்கு வேகமாக உயர்ந்ததே இல்லை. இதற்கு முக்கிய காரணம், அமெரிக்க டாலர் இண்டெக்ஸ் 2008 ஜூன் மாத வாக்கில் 71.89 வரை சென்றது. பிற்பாடு கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து, 2009 மார்ச்சில் 89 புள்ளி வரை சென்றது. 2009 அக்டோபரில் மீண்டும் இறங்கி 74 புள்ளி வரை வந்தது. 2010 ஜூலையில் மீண்டும் உயர்ந்து 88 புள்ளிகள் வரை சென்றது. ஆனால், அதற்கு மேல் செல்லாமல் தொடர்ந்து கீழே இறங்கிக் கொண்டே இருக்கிறது. இப்போது 74 புள்ளிகள் என்கிற அளவில் இருக்கிறது. டாலர் மதிப்பு தொடர்ந்து குறைவதால் அதை கையில் வைத்திருப்பதைவிட தங்கமாக வாங்கி விட்டனர் வெளிநாட்டு மக்கள்''.
 
இன்னும் உயருமா?  
 
கடந்த மூன்றாண்டுகளில் தங்கம், வெள்ளியை குண்டுமணி அளவுக்குக்கூட வாங்காதவர்கள் தற்போது கடன் வாங்கியாவது அதை வாங்க வேண்டும் என்று துடிக்கிறார்கள். இதன் காரணமாக அதன் விலை உயர்ந்து கொண்டே போகிறது. ''வருகிற அட்சயதிருதியைக்குள் பத்து கிராம் தங்கம் 25,000 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 75,000 ரூபாயையும் தாண்டிவிடும் என்பது  எதிர்பார்ப்பு. 
 
தங்கமா? வெள்ளியா?  
 
 
கடந்த ஆண்டுகளில் தங்கமும் வெள்ளியும் போட்டி போட்டுக் கொண்டு உயர்ந்திருக்கிறது. இனி தங்கம் வாங்கினால் லாபம் கிடைக்குமா? அல்லது வெள்ளி வாங்கினால் லாபம் கிடைக்குமா?  
 
''உலக அளவில் மிகக் குறைவாக தங்கம் இருக்கிறது. இதில் பெரும்பகுதியை உலகில் உள்ள பல வங்கிகள் வாங்கி வைத்திருக்கின்றன. என்ன கஷ்டம் வந்தாலும் இந்த வங்கிகள் தங்களிடம் உள்ள தங்கத்தை விற்கப் போவதில்லை. சமீபத்தில் ஜப்பானில் சுனாமி வந்து மிக மோசமாக பாதிக்கப்பட்டபோதும் அந்நாடு ஒரு கிராம் தங்கத்தைக்கூட விற்கவில்லை. எனவே, எதிர்வரும் நாட்களில் தங்கம் விலை கொஞ்சம் குறைந்தாலும் பெரிய அளவில் குறைய வாய்ப்பில்லை. ஆனால், விலை இன்னும் உயரவே வாய்ப் பிருக்கிறது''  
 
''தங்கம் என்பது வெறும் ஆடம்பரம்தான். ஆனால், வெள்ளிக்கு தொழில் துறை பயன்பாடு உண்டு. அடுத்துவரும் காலங்களில் வெள்ளியின் பயன்பாடு அதிகரிக்கும் என்பதால் வெள்ளி விலையும் நிச்சயம் உயரும்''  
 
கவனம்! விலை இறங்கலாம்! 
 
தங்கம், வெள்ளி கடந்த மூன்று ஆண்டுகளில் அளவுக்கதிகமான லாபத்தைக் கொடுத்தாலும் அதேபோன்ற லாபத்தை அடுத்து வரும் ஆண்டுகளிலும் கொடுக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது.  ''உலக அளவில் கமாடிட்டி விலைகள் பாரதூரமாக உயர பல காரணங்கள் இருந்தன. இக்காரணங்கள் தொடர்ந்து இருக்கும் என்று சொல்ல முடியாது. தவிர, நல்ல லாபம் பார்த்தவர்கள் அதை விற்கவும் முயற்சி செய்வார்கள். அப்போது தங்கம், வெள்ளி விலை குறையும். தவிர, வெள்ளி விலை கடந்த சில மாதங்களில் உயர்ந்த விதத்தை பார்த்தால் 1970-களில் நடந்ததுபோல நடக்கிறதா என்பதும் சந்தேகமாக இருக்கிறது.
 
முன்பொரு காலத்தில் அமெரிக்காவில் ஹண்ட் பிரதர்ஸ் என்கிற இருவர் வெள்ளி விலையை திட்டமிட்டு உச்சத்துக்கு கொண்டு போனார்கள். ஒரு அவுன்ஸ் வெள்ளி 50 டாலருக்கு போனது. பிற்பாடு திடீரென குறைந்து 6 டாலருக்கு வந்தது. அதேமாதிரி இப்போது ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில் இப்போதுள்ள விலையில் தங்கத்தையோ, வெள்ளியையோ அதிக அளவில் வாங்காமல் இருப்பதே நல்லது'' 
 
எஸ்.ஐ.பி-யில் தங்கம் சேருங்க! 

மாடிட்டி எக்ஸ்சேஞ்சான எம்.சி.எக்ஸ். 'கோல்ட் பெட்டல்’ என்கிற புதிய திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதில் மே மற்றும் ஜூன் மாதத்திற்கான கான்ட்ராக்ட்டில் 3.25 கோடி ரூபாய்க்கு டேர்ன் ஓவர் ஆகி,  அன்று ஒரு தினம் மட்டுமே 14,718 கிராம் மதிப்பிலான தங்கம் வர்த்தகம் ஆகியுள்ளது. டீமேட் வடிவத்தில் வாங்கி வைத்திருக்கும் தங்கத்தை பிஸிக்கல் தங்கமாகவும் வாங்கலாம். டெல்லி, அகமதாபாத், ஹைதராபாத், பெங்களூரூ, கொல்கத்தா, சென்னை ஆகிய ஆறு இடங்களில் டெலிவரி எடுத்துக் கொள்ளலாம். இதனை 8, 16, 24 கிராம் என தங்கக் காசுகளாக டெலிவரி எடுத்துக் கொள்ளலாம். ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 10 கிலோ வரை 'கோல்டு பெட்டல்’ மூலம் தங்கத்தை சேர்த்து வாங்கலாம். எஸ்.ஐ.பி. முறையிலும் முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்ய முடியும் என்பது கூடுதல் சிறப்பு!


பானுமதி 
 
 

Thursday, April 28, 2011

எப்படி இருக்க வேண்டும் லோக்பால்?


இந்திய அரசியலமைப்புச் சட்டம் அற்புதமானது. உலகமே போற்றும் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. விடுதலை அடைந்து நமது நாடு இத்தனை பெரிய ஜனநாயக நாடாகத் திகழ்கிறது என்றால் அதில் நமது அரசியல் சட்டத்தின் அளப்பரிய பங்கு இருப்பதை மறுக்க முடியாது. இவ்வளவு சிறப்புக்கு மத்தியிலும் துரதிருஷ்டவசமான ஒரு குறை இருக்கிறது. எல்லாவகையினரையும் கண்காணிக்கும் நமது அரசியல் சட்டம், அரசியல்வாதிகளை மட்டும் ஏனோ விட்டுவிட்டது.

அவர்கள்தானே சட்டங்களை இயற்றப் போகிறார்கள், அதனால் சுய கட்டுப்பாட்டுடனும் ஒழுக்கத்துடனும் நடந்துகொள்வார்கள். அவர்களைக் கண்காணிப்பது தேவையற்றது என நமது அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் நினைத்தார்கள். அதனால்தான் அவர்களைக் கட்டுப்படுத்தும் சட்ட விதிமுறைகளை நமது அரசியல் சட்டத்தில் சேர்க்காமலேயே விட்டுவிட்டார்கள். இதுதான் நமது நாட்டுக்கே மிகப்பெரிய சோதனையாக உருவெடுத்திருக்கிறது.


அரசியல்வாதிகள் எங்கெல்லாம் நுழைந்தார்களோ அங்கெல்லாம் அதிகாரம் தவறான வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எல்லா நிலையிலும் ஊழல், மோசடி, நிர்வாகச் சீர்கேடு என நாடே செல்லரித்துப் போயிருக்கிறது. தங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு நமது நிர்வாக அமைப்பை அரசியல்வாதிகள் கெடுக்கிறார்கள். இதைத் தடுப்பதற்குத்தான் லோக்பால் என்கிற அமைப்பு தேவை என வலியுறுத்தப்பட்டு வருகிறது.ஆனால், இந்தச் சட்டத்தையும் நமது அரசியல்வாதிகள்தானே இயற்ற வேண்டும். தாங்களே தங்களுக்குக் குழிதோண்டிக் கொள்ளும் அளவுக்கு நமது அரசியல்வாதிகள் யோசிக்கத் தெரியாதவர்களா என்ன? அதனால்தான் இதோ வருகிறது, அதோ வருகிறது என கடந்த 40 ஆண்டுகளாக லோக்பால் மசோதாவை இழுத்தடித்து வருகிறார்கள்.

இனிமேலும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று அப்படியே விட்டோமானால், இன்னும் ஒரு 40 ஆண்டுகள் ஆனாலும், லோக்பால் சட்டம் நிறைவேற்றப்படுவதை நாம் பார்க்கவே முடியாது. அண்ணா ஹஸாரேயின் உறுதியாலும் விடாமுயற்சியாலும் லோக்பால் மசோதா அடுத்த கட்டத்துக்குச் சென்றிருக்கிறது. அண்ணா ஹஸாரேயின் போராட்டத்துக்குக் கிடைத்த ஆதரவையும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மக்கள் எழுச்சியையும் பார்த்த அரசியல்வாதிகள் நடுங்கிப் போயிருக்கிறார்கள். கடந்த 40 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த ஒரு விஷயத்தை 4 நாளில் சாதித்துக் காட்டியிருக்கிறார் ஹஸாரே.


ஆனால், அண்ணா ஹஸாரேவுக்கும் எதிர்ப்பு இருக்கிறது. அரசை மிரட்டும் முயற்சி என்றும், அரசியல் சட்டத்துக்கு எதிரான நடவடிக்கை என்றும் அவரது போராட்டத்தை சிலர் குறை கூறுகிறார்கள். பிரிட்டனின் மகா சாசனம் எழுதப்பட்டபிறகு, மக்கள் புரட்சியின் காரணமாகவே அது 10 முறை திருத்தப்பட்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எந்த அரசியலமைப்புச் சட்டமும் முழுமையானதாக இருக்க முடியாது. குறைகள் இருப்பின் அதை ஏதாவது ஒரு வழியில் களைவதற்கு முயற்சி எடுக்கப்பட வேண்டும்.இன்று ஹஸாரே மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள்தான் விடுதலைப் போராட்ட காலத்தில் காந்திஜி மீதும் கூறப்பட்டன. அரசியல் சட்டத்துக்கு எதிராக உண்ணாவிரதம், சட்டமறுப்பு, ஒத்துழையாமைப் போராட்டங்களை நடத்தினார் என்று காந்திஜியைக் குறை கூறியவர்களும் உண்டு. ஆனால், நோக்கம் சரியானதாக இருந்ததால் அவருக்கு வெற்றி கிடைத்தது.

அதுபோலத்தான் இப்போது ஹஸாரேயும் விமர்சிக்கப்படுகிறார். சுயநல நோக்கம் ஏதாவது இருக்கும் என்றாலோ, போராட்டம் முறையற்றது என்று கருதினாலோ அரசே அதைப் புறந்தள்ளியிருக்கலாம். ஆனால், ஹஸாரேயின் போராட்டத்தில் எந்த விதமான சுயநலமும் இல்லை. நாடு முழுவதுமே கிளர்ந்து எழுந்த நிலையில், இதை மிரட்டலாகவும் கருத முடியாது.லோக்பால் சட்டத்தால், எந்தவிதமான பெரிய மாற்றமும் வந்துவிடப்போவதில்லை என்று மூத்த அமைச்சர் ஒருவரே பொறுப்பற்ற வகையில் கருத்துத் தெரிவித்திருக்கிறார். தொடக்கக் கல்வி உள்ளிட்ட வகையில் இந்தச் சட்டத்தால் எந்தப் பயனும் இல்லை என்பது அவரது விளக்கம். பெரும்பாலான விமர்சனங்கள் இதே மாதிரியானவைதான்.


ஆனால், நாட்டின் வளர்ச்சிக்கோ அத்தியாவசியக் கட்டமைப்பு வசதிகளுக்கோ லோக்பால் சட்டம் பயன்படாது என்று கூறுவது அறியாமை. நாட்டில் எல்லாத் துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது என்பதை அனைவரும் அறிவார்கள். நாட்டில் பலர் வறுமையால் கீழ்நிலையில் துன்புற்றிருக்க, சிலர் மட்டும் ஆடம்பரமாகச் செல்வச் செழிப்பில் வாழ முடிவதற்கு இந்த ஊழல்தான் காரணம். அடிப்படைச் சுகாதாரம், கல்வி, ஏழ்மை போன்ற எல்லாவற்றிலும் ஊழலுக்குத் தொடர்பு உண்டு. ஊழலை ஒழிப்பதன் மூலம் நாட்டை வளர்ச்சியடையச் செய்யலாம் என்பதுடன், அனைவருக்கும் அதன் பலனைக் கொண்டுபோய்ச் சேர்க்க முடியும் என்பதும் நூறு சதவீத உண்மை.

இருப்பினும், எல்லா விமர்சனங்களுக்கும் பதில் சொல்லும் வகையில் லோக்பால் மசோதா அமைய வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசில் பங்குபெறும் அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் போன்றவர்களைக் கண்காணிக்கும் வகையிலான சட்டப் பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும். எந்த வகையில் நெருக்கடி தரப்பட்டாலும், அதற்கு அப்பாற்பட்ட வகையில் தன்னிச்சையாக முடிவெடுக்கக்கூடிய வகையில் அதிக அதிகாரம் கொண்டதாக லோக்பால் அமைப்பு இருக்க வேண்டும். இந்த அமைப்பின் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர் அப்பழுக்கற்றவராகவும், அனுபவம் மிக்கவராகவும், நம்பகமானவராகவும், பாரபட்சமாக நடந்து கொள்ளாதவராகவும் இருக்க வேண்டும். இப்பேர்ப்பட்ட நபர்களை இந்தக்காலத்தில் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமான செயல்தான் என்றாலும், ஊழலை ஒழிக்கும் அதிகாரத்தில் இருப்போருக்கு இத்தனை தகுதிகளும் இருப்பது அவசியம். இதற்கான நபர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை மிகவும் வெளிப்படையாக இருக்க வேண்டும். அனைத்துத் தரப்பினரின் ஒப்புதலையும் பெற வேண்டும்.

லோக்பாலுக்கு முக்கியத்துவமும் கூடுதல் அதிகாரமும் கொடுக்கும் அதேவேளையில், வழக்கமான நீதித்துறைப் பணிகளில் அது குறுக்கிட்டு மோதல் ஏற்படாதவண்ணம் சட்டப்பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும். நீதித்துறையின் அதிகாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். எந்தவிதத்திலும் இதில் சமரசம் செய்து கொள்ளவேகூடாது. இதற்கு லோக்பால் எந்தவிதத்திலும் தடையாக இருக்கக்கூடாது. நீதித்துறையிலும் ஊழல் மலிந்திருக்கிறது. அதிலும், களையெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது என்றாலும், அந்தப் பணியை லோக்பால் அமைப்பிடம் ஒப்படைப்பது சரியாக இருக்காது.

அரசியல் சட்டப்படி பேசவும், வேலை செய்யவும் அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், குற்றம்சாட்டப்பட்ட ஒருவர், அமைச்சராகப் பணியாற்றுவது எனது அடிப்படை உரிமை என யாரும் கோர முடியாது. இந்த விஷயத்தில் லோக்பால் அமைப்பின் பணி தேவைப்படுகிறது. யார் மீதெல்லாம் குற்றச்சாட்டுகளுக்கான போதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக லோக்பால் கருதுகிறதோ, அவர்கள் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படும்வரை பதவி விலகச் சொல்வதற்கு லோக்பால் அமைப்புக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

குற்றம்சாட்டப்பட்ட அமைச்சரோ, அதிகாரியோ தொடர்ந்து பதவியில் இருப்பது வழக்குக்கும், நிர்வாகத்துக்கும் நல்லதல்ல. வழக்கு நடைபெறும் காலத்தில் அவர்கள் எடுத்த முடிவுகளை மாற்றியமைக்க முடியாது. அதனால் அவர்களைப் பதவி விலகுமாறு உத்தரவிடுவதே சரியானதாக இருக்கும்.அதேநேரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான ஆதாரங்களை ஆய்வு செய்வதில் லோக்பால் அமைப்பு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அரசியல் பாரபட்சமற்ற முறையில், ஆதாரங்களை உரிய முறையில் சரிபார்க்கும் பணியில் லோக்பால் ஈடுபட்டால், இதுவே அந்த அமைப்பின் மிகமிக முக்கியமான பணியாகவும் இருக்கும். தாமாகவே முன்வந்து ஊழல் விவகாரங்களை விசாரிக்கவும், தன்னிச்சையாக முடிவு எடுக்கவும் லோக்பாலுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டால்தான் இதெல்லாம் சாத்தியம்.

லோக்பால் அமைப்பின் நோக்கம் முழுமையாக நிறைவேற வேண்டுமானால், சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளின் ஒத்துழைப்பும் அவசியம்.லோக்பால் பரிந்துரைக்கும் வழக்குகளை விசாரிப்பதற்கென சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். இந்த நீதிமன்றங்களில் வழக்குகள் விரைவாகத் தீர்வு செய்யப்பட வேண்டும். இப்போது மக்களின் பேராதரவைப் பெற்றிருக்கும் ஹஸாரே, மசோதாவை உருவாக்கும்போது இந்த அம்சங்கள் பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எந்த நற்செயலைச் செய்ய முற்படும்போதும் அதற்குப் பல முட்டுக்கட்டைகள் வரத்தான் செய்யும். நமது நோக்கம் நிறைவேற வேண்டுமானால் கொஞ்சம் நெகிழ்வாக நடந்து கொள்ளத்தான் வேண்டும். அதேநேரத்தில் மேற்சொன்ன முக்கிய அம்சங்கள் எதையும் மறந்துவிடவும் கூடாது. மசோதாவை உருவாக்குவதுடன் நின்றுவிடாமல், வரும் மழைக்காலக் கூட்டத்தொடரிலேயே அதைச் சட்டமாக்குவதிலும் உறுதியாக இருக்க வேண்டும். தேவையெனில் போராடவும் தயங்கக்கூடாது.     

டி .எஸ்.ஆர். சுப்பிரமணியன்       

Wednesday, April 27, 2011

கலைஞர் டி.வி-க்கு ஸ்பெக்ட்ரம் பணம்!


.ராசாவின் தயவில், ஏர்​டெல், பி.எஸ்.​என்.எல். தவிர, கிட்டத்தட்ட எல்லாத் தொலைபேசி நிறுவன அதிகாரிகளும் திகார் ஜெயில் நோக்கிப் பயணமாகிறார்கள். அடுத்த கட்டக் காட்சிகள் பரபரப்பாக அரங்கேறி வருகின்றன!  

கடந்த 2-ம் தேதி, சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் யுனிடெக் வயர்​லெஸ் (தமிழ்நாடு) லிமி​டெட், ஸ்வான் டெலிகாம், ரிலையன்ஸ் டெலிகாம் ஆகிய மூன்று நிறுவனங்கள் உட்பட 12 நபர்களைக் குற்றவாளி​களாக அறிவித்தது. இந்த விவகாரத்தில் கைதான ஷாகித் பால்வா மட்டுமே, டெலிகாம் நிறுவனம் சம்பந்தப்​பட்டவர். மற்ற டெலிகாம் நிறுவன உரிமையாளர்களை சி.பி.ஐ. அழைத்து விசாரித்ததே தவிர, யாரையும் கைது செய்ய​வில்லை. ஆனால், சி.பி.ஐ. அவர்களின் பெயர்களை நேரடியாகக் குற்றப் பத்திரிகையில் சேர்த்தது. இந்த டெலிகாம் நிறுவன உரிமையாளர்களும், நிர்வாகிகளும், பலம்மிக்க தொழில் அதிபர்களின் பின்புலத்தில் இருந்த காரணத்தால், நேரடியாக நீதிமன்றத்தின் மூலம் சி.பி.ஐ. நினைத்ததை சாதித்தது.
 

குற்றப் பத்திரிகையில் இடம் பெற்று இருந்த மூன்று நிறுவனங்களுக்கும் பயம் தொற்றிக்கொண்டது. 'இவர்கள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகும்போது, சி.பி.ஐ. நீதிமன்றக் காவலில் வைக்க அனுமதி கோரும்’ என்று தகவல் வரவே, இந்த டெலிகாம் நிர்வாகிகள் கடந்த 13-ம் தேதி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது, முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.

நினைத்ததை முடித்தது சி.பி.ஐ.  

ஷாகித் பால்வாவின் கூட்டாளியும் ஸ்வான் டெலிகாம் இயக்குநர் மற்றும் டிபி ரியாலிட்டி எம்.டி. ஆகிய பொறுப்பில் உள்ள வினோத் கோயங்கா, மற்றும் யுனிடெக் டெலிகாம் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, மற்றும் ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த கௌதம் தோஸி, ஏ.டி.ஏ.ஜி. தலைவர் சுரேந்தர பைப்பாரா, இதே நிறுவனத்தின் உதவித் தலைவர் ஹரி நாயர் ஆகிய ஐந்து பேரும் முன் ஜாமீன் மனுவை சி.பி.ஐ. கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இவர்களுக்காக, முகுல் ரோத்தாக், கே.டி.எஸ்.துள்சி போன்ற பிரபல வழக்கறிஞர்கள் ஆஜாரானார்கள்.

''இவர்கள் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு​களுக்கு, ஆயுள் தண்டனையோ, தூக்கு தண்டனை​யோ கிடைக்கப்போவது இல்லை. ஒரு வேளை, குற்றச்சாட்டு நிரூபணம் ஆனாலும், அதிகபட்சம் ஒரு வருடம் முதல் ஏழு வருடங்கள் வரை தண்டனை கொடுக்கப்படும். சி.பி.ஐ. புலன் விசாரணை மேற்கொண்ட சமயத்தில், அல்லது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, இவர்களைக் கைது செய்யவில்லை. சி.பி.ஐ. அழைத்த நேரத்தில் எல்லாம் விசாரணைக்கு ஒத்துழைத்தனர். இப்போது குற்றப் பத்திரிகை தாக்கல்செய்த பின்னர், இவர்களைக் கைது செய்ய வேண்டியது இல்லை. அப்படிக் கைது செய்தால், ஜாமீனில் விடுவிக்கவேண்டும்!'' என்று வாதாடினார்கள்.


இவர்களது மனுவுக்குப் பதில் அளித்த சி.பி.ஐ., ''இவர்களை வெளியேவிட்டால், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சியங்களைக் கலைத்து​விடுவார்கள்!'' என்றது. மூன்று நாட்கள் தொடர்ந்து வாதங்கள் நடந்தன. இறுதியில், கடந்த 20-ம் தேதி, சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.பி.சைனி, இவர்களது முன் ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்தததோடு, ஐந்து பேர்களையும் நீதிமன்றக் காவலில், திகார் ஜெயிலிலுக்கு அனுப்பினார்.  


ஸ்வான் டெலிகாம் டைரக்டர் வினோத் கோயங்கா கதறி அழ, ஆ.ராசாவும் ஷாகித் பால்வாவும் அவரைத் தேற்றினார்கள். ரிலையன்ஸ் நிர்வாகிகளின் குடும்பத்தினரும் கண்ணீர்விட்டனர். ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத் தலைவர் சுரேந்திர பைப்பாரா, தனக்கு உள்ள இருதய நோய் மற்றும் சிறுநீரகக் கோளாறுகளைச் சொல்ல, சி.பி.ஐ. வழக்கறிஞர் லலித், 'அவருக்கு முன் ஜாமீன் வழங்குவதில் தடை இல்லை’ என்றார். ஆனால் நீதிபதி அதை ஏற்றுக்கொள்ள​ வில்லை. 'அவரது உடல்​நிலை அவ்வளவு மோசம் இல்லை’ என்றும், 'இந்த சமயத்தில் இவர்கள் வெளி​யே இருந்தால், விசாரணை பாதிக்கும்’ என்று கூறி முன் ஜாமீன் தர மறுத்தார்.

நஷ்டம் மேல் நஷ்டம் 

இதன் எதிரொலியாக இந்த மூன்று டெலிகாம் நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பும் சந்தையில் மளமளவென இறங்கின. டிபி ரியாலிட்டி நிறுவனம் 2ஜி ஊழலுக்குப் பின்னர் 77 சதவிகிதம் வரை பங்கு மார்க்கெட்டில் வீழ்ச்சி அடைந்தது. இதே மாதிரி, யுனிடெக் நிறுவனத்துக்கும் 5,000 கோடி வரை நஷ்டமாம். அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும் ஒட்டுமொத்தமாக சுமார் 26,000 கோடி வரை இழந்து உள்ளது.

புதுமுகம்... அறிமுகம்!  

கைதாகியுள்ள வினோத் கோயங்காவின் சொத்து மதிப்பு ஒரு பில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது. ஷாகித் பால்வாவைப் போன்று கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, தனது தந்தையின் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் முதலில் குதித்தார். குறுகிய காலத்தில் ரியல் எஸ்டேட், ஹோட்டல், பால் என்று 30 விதமான தொழில்​களில் முத்திரை பதித்தவர். சரத்பவார் குடும்பத்தினரோடு பல தொழில்களில் சம்பந்தப்பட்டவர். அதுவும், ஆ.ராசா சுற்றுச்சூழல் அமைச்சரான பின்னர், வினோத் கோயங்காவின் ரியல் எஸ்டேட் தொழில் கிடுகிடுவென வளர்ந்தது. பின்னர், ஷாகித் பால்வாவுடன் சேர்ந்து, டிபி ரியாலிட்டி நிறுவனத்​தை உருவாக்கி, டெலிகாம் பிசின​ஸில் ஈடுபட்டார்.

அனுபவ ரீதியில் வினோத் கோயங்காவின் ரியாலிட்டி ரியல் எஸ்டேட் பிசினஸ் வளர்ந்தது என்றால், சஞ்சய் சந்திராவும் அவரது தந்தையும் யுனிடெக் நிறுவனத்தை முறைப்படி தொழில்நுட்பத்தைப் படித்து வந்து உயர்த்தினார்கள். சஞ்சய் சந்திராவின் தந்தை ரமேஷ் சந்திரா, ஐ.ஐ.டி. காரக்பூரில் படித்து, ரூர்க்கி அரசு ஆய்வுக் கூடத்தில் பணியாற்றியவர். தந்தை வழியிலேயே மண்ணியல் சம்பந்தப்பட்ட தொழில்​நுட்பப் படிப்பைப் படித்து, அமெரிக்காவில் எம்.பி.ஏ. முடித்து, அங்கேயே பணியாற்றினார் சஞ்சய். பின்னர் 1965-ல் தந்தையும் மகனும், மண்ணியல் சம்பந்தப்பட்ட ஆய்வுக்கூடங்களைத் தொடங்கி, ரியல் எஸ்டேட்டில் இறங்கினார்கள். அதன் பின்னர் மின்சாரம், ஹோட்டல், சிறப்புப் பொருளாதார மண்டலம் என்று ஒவ்வொன்றாகக் கால் பதிக்க, இவர்களின் சொத்து மதிப்பு 40,000 கோடி வரை உயர்ந்தது.  

சிக்கிய கலைஞர் டி.வி.!? 

 
ஷாகித் பால்வாவின் டிபி ரியாலிட்டி மற்றும் டைன​மிக்ஸ் ரியாலிட்டி நிறுவனத்தில் இருந்து வந்த பணம், குஸேகான் ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் ரியாலிட்டி நிறுவனத்துக்கு வந்து, பின்னர் சினியுக் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்குக் கொடுத்துள்ளது. அதன் பிறகு, சினியுக் நிறுவனம் அதை, கலைஞர் டி.வி-க்கு கொடுத்து இருக்கிறது. டிபி ரியாலிட்டி, குஸேகான், சினியுக் ஃபிலிம்ஸ் என்று வெவ்வேறு பெயர்களில் இருந்தாலும், இயக்குநர்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டவர்கள். கலைஞர் டி.வி-க்குக் கொடுக்கப்பட்ட பணம் தங்களுக்குத் திரும்பிவிட்டது என்று இவர்கள் கணக்கு சொல்ல, சி.பி.ஐ. சந்தேகித்துக் கைது செய்துள்ளது. சினியுக் நிறுவனத்தின் இயக்குநர் கரீம் முரானி, பணத்தை கலைஞர் டி.வி-க்கு முன்பணமாகக் கொடுத்தாகக் குறிப்பிட்டார். தங்களுக்கு இந்தப் பணத்தைக் கொடுத்த குஸேகான் நிறுவனம், இதை கலைஞர் டி.வி-க்கு கொடுக்கக் கூறியதாக முரானி குறிப்பிட்டார். குஸேகான் நிறுவனம், பணத்தைக் கடனாகக் கொடுத்ததாகவும், பின்னர் கலைஞர் டி.வி. பங்குகளை வாங்கத் திட்டம் இட்டதாகவும், ஆனால் விலை வித்தியாசத்தில் பணத்தைத் திரும்பப் பெற்றதாகவும் குறிப்பிட்டது. ஆனால், ஆதாரங்​களை சரியாகக் கொடுக்கத் தவறியதற்காக, குஸேகான் நிறு​வனத்தின் இயக்குநர்கள் ஆசிப் பால்வாவையும், ராஜீவ் பி. அகர்வாலையும், சி.பி.ஐ. கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த விவகாரத்தில் கருணாநிதி குடும்பத்தில் தயாளு அம்மாள் மற்றும் கனிமொழி போன்றோர் சிக்குவார்களா அல்லது சரத்குமார் மட்டும் சிக்குவாரா என்று கேள்​விகள் எழுந்த்துள்ள நிலையில், இரண்டாவது குற்றப்பத்திரிகையில் சரத்குமார், கனிமொழி பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் கொடுக்கப்பட்டதற்காகவே, ஆ.ராசா சம்பந்தப்பட்ட கட்சியின் தொ​லைக்காட்சிக்கு இந்தப் பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்று சி.பி.ஐ. கருதுகிறது. ஆனால் சரத்​குமார், ''கடனாக வாங்கினோம், பின்னர் வட்டியோடு சேர்த்து திருப்பிக் கொடுத்துவிட்டோம்!'' என்று கூறியுள்ளார். கடன் கொடுத்த காரணத்தை சி.பி.ஐ. கேட்டபோது, குஸேகான் நிறுவனத்தினர், 'போர்டு மீட்டிங்கில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக’ சொன்னது. அந்த மீட்டிங்கின் மினிட்ஸ் குறிப்பு என ஒரு நகலை மட்டும் சி.பி.ஐ-யிடம் ஒப்படைத்தனர். ஒரிஜினல் மினிட்ஸ், கலைஞர் டி.வி-க்கு அனுப்பியதாகச் சொல்​கிறார்கள். ஆனால் சரத்குமார், 'எங்களுக்கு தகவல்தான் கொடுத்தார்களே தவிர, குறிப்பு அனுப்பவில்லை’ என்று பதில் கொடுத்தார். ஒரிஜினல் மினிட்ஸ் கொடுக்காத குஸேகான் நிறுவனத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் ஆசிப் பால்வாவும் ராஜீவ் பி. அகர்வாலும் கைது செய்யப்​பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்த கைதுகள் இனி தொடரலாம்!


Tuesday, April 26, 2011

செம்பருத்தி ! - அதிக பராமரிப்பு தேவையில்லை


அதிக தண்ணீர் தேவையில்லை.
வேலையாட்கள் பிரச்னையில்லை.  
ஆண்டுக்கு ரூ.1,50,000. 

வீடுகளில் வளர்க்கப்படும் செடிகளில் முக்கியமானது செம்பருத்தி. இதன் பூவை பூஜைக்காக பலர் உபயோகப்படுத்துகின்றனர். ஆனால், அது அதிக மருத்துவ குணம் வாய்ந்தச் செடி என்பது பலருக்கும் தெரியாத விஷயம். சித்த மருத்துவம் மற்றும் அலோபதி மருத்துவத்தில் இதய நோய்க்கான மருந்து தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளாக இருப்பது செம்பருத்தி. அதனால் மருந்து உற்பத்தித் துறையில் இதற்கு மிகப்பெரிய தேவை இருக்கிறது. இதைச் சரியாக புரிந்துகொண்ட சிலர் செம்பருத்தியைத் தனிப்பயிராக சாகுபடி செய்து வருகிறார்கள்.
ஆலோசனைகள் :

ஏக்கருக்கு 1,200 செடிகள்! 

'வணிகரீதியாக சாகுபடி செய்ய ஐந்து இதழ் கொண்ட சிவப்பு நிற செம்பருத்தி மட்டுமே ஏற்றது. செம்மண், கரிசல் மண் நிலங்களில் நன்றாக வளரும். மழைக் காலத்துக்கு முன்பு (ஜூலை, ஆகஸ்ட்) நடவு செய்ய வேண்டும். ஒரு முறை நடவு செய்தால், குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் வரை மகசூல் கொடுக்கும். ஏக்கருக்கு 5 டன் தொழுவுரத்தை இறைத்து நிலத்தை நன்றாக உழுது, மண்ணைப் புழுதியாக்கிக் கொள்ளவேண்டும். 15 அடி நீளம், 4 அடி அகலத்தில் பாத்தி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பாத்திகளில் செடிக்கு செடி 6 அடி, வரிசைக்கு வரிசை 6 அடி இடைவெளியில், அரையடி ஆழத்தில் குழியெடுத்து, செம்பருத்திச் செடிகளை நடவேண்டும். ஏக்கருக்கு 1,200 செடிகள் வரை தேவைப்படும். இதற்கான செடிகள் நாற்றுப் பண்ணைகளில் கிடைக்கும்.

10 நாட்களுக்கு ஒரு தண்ணீர்! 

இரண்டு செம்பருத்தி வரிசைக்கு இடையில் மற்றும் செம்பருத்திச் செடிகளுக்கு இடையில் என கறிவேப்பிலையை நடவு செய்யலாம். செம்பருத்தி வரிசை மற்றும் செம்பருத்திச் செடிகளுக்கு நடுவில் 3 அடி இடைவெளியில், கறிவேப்பிலைச் செடியை நடவேண்டும். தண்ணீர் பாயும் வாய்க்கால் கரைகளின் இருபுறமும் இரண்டு அடி இடைவெளியில் அகத்தி விதையை ஊன்றவேண்டும். எட்டு முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

ஆரம்பத்தில் உழவு செய்யும்போது, தெளிக்கும் தொழுவுரமே போதுமானது. அதிக அளவு உரங்களைக் கொடுக்கக்கூடாது. ஊட்டம் அதிகமானால் செடிகள் கொழுத்துப் போய் இலைகளில் மொறமொறப்புத் தன்மை அதிகமாகி, பூக்கள் அதிகம் பூக்காமல் போகக்கூடிய நிலை ஏற்பட்டுவிடும். முதல் எட்டு மாதம் வரை, மாதம் ஒரு களை எடுக்க வேண்டும். பிறகு செடிகள் அடர்த்தியாகி நிழல் கட்டிக் கொள்ளும். பத்தாவது மாதம் முதல் தினமும் பூக்களை அறுவடை செய்யலாம்.

பத்து மாதத்துக்குப் பிறகு, ஆண்டுக்கு ஒரு தடவை கவாத்து, 10 நாட்களுக்கு ஒரு பாசனம் மட்டும் செய்தால் போதும். வேறு எந்தப் பராமரிப்பும், செலவும் தேவைப்படாது. நோய் எதுவும் தாக்குவதில்லை. எப்போதாவது மாவுப்பூச்சித் தாக்குதல் இருக்கும். வேப்பெண்ணைய் கரைசல் அல்லது மாவுப்பூச்சிகளைப் பிடித்து தின்னும் பொறிவண்டுகள் மூலமாக இதையும் கட்டுப்படுத்தி விடலாம்.

நன்கு வெயில் ஏறிய பிறகுதான் செம்பருத்தி இதழ் மலரும். அப்போதுதான் அறுவடை செய்ய வேண்டும். பூக்களைக் காம்புகளுடன் அறுவடை செய்து, இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும். பிறகு, எடை போட்டு விற்பனைக்கு அனுப்பலாம். ஒரு ஏக்கரில் இருந்து தினமும் 5 கிலோ வரை காய்ந்தப் பூக்கள் கிடைக்கும். ஆண்டுக்கு சராசரியாக 1,000 கிலோ கிடைக்கும். ஒரு கிலோ 160 ரூபாய் என்று விலை வைத்து நமது இடத்துக்கே வந்து வியாபாரிகள் வாங்கிக் கொள்கிறார்கள். இதன் மூலம் ஓராண்டில் 1 லட்சத்தி 60 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலத்துக்கு முன்பு தரையில் இருந்து ஒரு அடிக்கு மேலே உள்ள செடிகளை வெட்டி எடுத்து விடவேண்டும். வெட்டியக் குச்சிகளை இரண்டு நாட்களுக்கு வயலில் போட்டு வைத்தால், இலைகள் உதிர்ந்து விடும். காய்ந்த இலைகளை எடை போட்டு விற்பனை செய்யலாம். ஒரு ஏக்கரில் ஆண்டுக்கு 500 கிலோ காய்ந்த இலைகள் கிடைக்கும். இவற்றையும் ஒரு கிலோ ரூ.25 ரூபாய் வீதம் வியாபாரிகள் வாங்கிக் கொள்கிறார்கள். இதன் மூலம் 12,500 ரூபாய் கிடைக்கும்!


ஆண்டுக்கு 5 டன்! 

கறிவேப்பிலையைப் பொறுத்தவரை தனியாக எந்தப் பராமரிப்பும் செய்யத் தேவையில்லை. செம்பருத்திக்குக் கொடுக்கும் தண்ணீர், களையெடுப்பு ஆகியவையே போதும். பத்தாவது மாதத்தில் இருந்து சுழற்சி முறையில் தினமும் கறிவேப்பிலையை அறுவடை செய்யலாம். நடவு செய்ததில் இருந்து குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் வரை மகசூல் கொடுக்கும். ஒரு ஏக்கரில் இருந்து வாரம் ஒருமுறை குறைந்தபட்சம் 100 கிலோ கறிவேப்பிலையை அறுவடை செய்யலாம். ஒரு கிலோ குறைந்தபட்சம் 10 ரூபாய் வீதம் விற்பனையாகிறது. ஆண்டுக்கு 5 டன் கறிவேப்பிலை குறைந்தபட்சம் கிடைக்கும். இதன் மூலம் 50 ஆயிரம் ரூபாய் வருமானமாகக் கிடைக்கும்.  வாய்க்காலில் இருக்கும் அகத்திக் கீரைகளை ஆடு, மாடுகளுக்கு தீவனமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.’



Sunday, April 24, 2011

இரண்டு கவலைகள் - ஓ பக்கங்கள், ஞாநி


கவலை 1:

ஒளிவு மறைவற்ற பகிரங்கமான நிர்வாகம் அமையாமல் நம்முடைய எந்தப் பிரச்சினைக்கும் நம்மால் தீர்வு காணவே முடியாது. என்ன நடக்கிறது என்பதை முழுக்க முழுக்க மூடி மறைக்கும் அரசுத் துறைகளில் முதல் இடத்தில் இருப்பது நம்முடைய அணுசக்தித் துறைதான். 

இந்தியா இதுவரை தன் அணு உலைகளை சர்வதேச அணு உலைக் கண்காணிப்பு அமைப்பின் ஆய்வுக்கு உட்படுத்த மறுத்தே வந்திருக்கிறது. அதற்குக் காரணம், ரகசியமாக அணு ஆயுதங்களைத் தயாரித்துக் கொண்டிருந்ததுதான். இரண்டாம் பொக்ரான் குண்டு வெடிப்பில் பகிரங்கமாக நாங்களும் அணு குண்டர்கள்தான் என்று அறிவித்தபிறகு, அணு ஆயுத தயாரிப்பை தனியாகவும் அணுமின்சாரத் தயாரிப்பைத் தனியாகவும் பிரிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. காரணம் அணு மின்சாரத் தயாரிப்பில் அமெரிக்கா, ரஷ்யா முதலிய நாடுகளின் கம்பெனிகளிடமிருந்து உலைகளை வாங்கவும் இங்கே அதில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கவும் மன்மோகன் அரசு முடிவு செய்ததுதான்.

அப்படி முடிவு செய்ததும் அணுமின்சார உலைகளை சர்வதேச கண்காணிப்புக்கு உடபடுத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே 2000மாவது ஆண்டில், இந்திய அரசு அதுவரை தன்னுடைய அணு சக்தித்துறையைக் கண்காணிப்பதற்காக தானே ஏற்படுத்தி வைத்திருந்த கட்டுப்பாட்டு வாரியத்தின் கண்காணிப்பிலிருந்து அணு ஆயுத தயாரிப்பு ஆலைகளை நீக்கி உத்தரவிடுகிறது. இனி அவற்றைக் கண்காணிக்க தனியே உள் அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கிறது.


வாரியத்தின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் இது தொடர்பாக அண்மையில் தெரிவித்திருக்கும் தகவல்கள் மிகவும் அச்சமூட்டுபவையாக இருக்கின்றன. அணு ஆயுத ஆலைகளை வாரியக் கண்காணிப்பிலிருந்து பிரித்தபின்னர், என்ன உள் கண்காணிப்பு முறை ஏற்படுத்தப்பட்டதென்று தெரியவில்லை என்கிறார். பதினோரு வருடங்களாக அணு ஆயுத ஆலைகளின் பாதுகாப்பு நிலை பற்றி தன் வாரியத்துக்கு எதுவும் தெரியாது என்கிறார்.


இந்தியாவில் அணு ஆயுத தயாரிப்பு ஆராய்ச்சி ஆலைகள் பல இடத்தில் உள்ளன. பெரும் மக்கள் தொகை இருக்கும் மும்பைக்கும் சென்னைக்கும் அருகே அணு ஆயுத தயாரிப்பு ஆலைகள் உள்ளன. சென்னை அருகே உள்ள கல்பாக்கத்தில்தான் அணுகுண்டுக்கு தேவையான புளுட்டோனியத்தைப் பிரித்து எடுக்கும் ஆலையும் அணு நீர்மூழ்கிக் கப்பல் ஆய்வு ஆலையும் உள்ளன. இவற்றை நடத்துபவர்களே கண்காணிப்பவர்களாகவும் இருப்பது எப்படி நியாயம் என்ற கேள்வியை கோபாலகிருஷ்ணன் எழுப்பியிருக்கிறார். சுயேச்சையான மேற்பார்வை அமைப்பு இல்லாதவரைக்கும் பாதுகாப்பு ஒழுங்காகத்தான் இருக்கிறதா என்பது உறுதிப்படுத்தமுடியாததாகவே இருக்கும். 

அமெரிக்காவில் இது இப்படி இல்லை என்று கோபாலகிருஷ்ணன் சுட்டிக் காட்டியிருக்கிறார். 1988ல் அங்கே இதற்கென்றே உருவாக்கப்பட்ட கண்காணிப்பு வாரியத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி செனட்டின் ஒப்புதலுடன் ஐந்து உறுப்பினர்களை, அரசு நிர்வாகத்துக்கு வெளியிலிருந்து பொது மக்களிலிருந்து நியமிக்க வேண்டும். ஐவரில் மூவருக்கு மேல் ஒரே அரசியல் சார்புடையவர்களாக இருக்கக்கூடாது. அவர்கள் அணுத் துறை அறிஞர்களாக இருக்க வேண்டும். 

அணுத்துறையின் ஏதேனும் ஒரு செயல்பாடு பொதுமக்களின் உடல் நலம், பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக இந்த வாரியம் கருதினாலும அது தொடர்பாகக் கோரும் தகவல்களை எல்லாம் அணுத்துறை செயலாளர் கொடுத்தே ஆகவேண்டும். அவை ரகசிய தகவல்களாக இருந்தாலும் கூட ! இவற்றை பரிசீலித்தபிறகு வாரியம் தெரிவிக்கும் பரிந்துரைகளைப் பொது மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். அதன் மீது அணுத் துறை செயலாளர் சொல்லும் கருத்துகளையும் பொதுமக்கள் மும்பு வைக்க வேண்டும். பொது மக்கள் கருத்து தெரிவிக்க 45 நாட்கள் அவகாசம் தரவேண்டும். அதன் பின்னர் வாரியம் மீண்டும் எல்லாவற்றையும் பரிசீலிக்கும்.
இந்தியாவில் இது போல ஒப்புக்கு கூட எதுவும் கிடையாது. அஃபிஷியல் சீக்ரெட்ஸ் ஆக்ட் எனப்படும் அதிகாரப்பூர்வமான ரகசியங்கள் சட்டத்தின் கீழ் அணு உலைகள் பற்றி எந்தத் தகவலையும் ஒரு குடிமகனும் தெரிந்துகொள்ள முடியாது. தனியார்வசம் அணு மின்சாரம் தயாரிப்பது ஒப்படைக்கப்படுவதற்கு மன்மோகன் அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வரும் சூழலில் உடனடியாக அணுத் துரை முழுவதும் பகிரங்கக் கண்காணிப்பின் கீழ் வருவது அவசியமாகிறது. 

ஜப்பான் அணு உலை விபத்துக்குப் பின் இந்தியாவில் அணு உலைஉ பாதுகாப்பு இன்னும் கடுமையாக்கப்படும் என்று ஒப்புக்கு மன்மோகன்சிங் அறிவித்ததுடன் சரி. எப்படி கடுமையாகும், யார் அதை பொறுப்பேற்று செய்வார்கள் என்பது பற்றியெல்லாம் எந்த விவரமும் இல்லை. கோபாலகிருஷ்ணன் சொல்வது போல, தவறு செய்யக்கூடிய அதே அணு உலை நிர்வாகமே கண்காணிக்கும் அதிகாரத்துடனும் இருக்கும் அவலநிலைதான்.சுயேச்சையான ஓர் அணு சக்தி அறிஞர் குழுவை நாடாளுமன்ற சர்வகட்சி ஒப்புதலுடன் நியமித்து அதன் அறிக்கை வரும்வரை புதிய அணு உலைகள் தொடங்கமாட்டோம் என்று அறிவிப்பதுதான் நியாயம். ஆனால் மராட்டியத்தில் ஜெய்தாபூரில் அணு உலை தொடங்குவதை எதிர்க்கும் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி ஒருவரைக் கொன்றதுதான் இந்த வாரம் மன்மோகன் அரசு எடுத்த நடவடிக்கை.


மொத்த மின்சார தேவையில் வெறும் மூன்று சதவிகிதம் மட்டுமே தரும் அணு உலைகளை நிறுத்திவைத்து ஆய்வு செய்வதால் ஒன்றும் குடி முழுகிப் போய்விடாது. திட்டமிட்டபடி புது உலைகள் தொடங்கினாலும் மொத்த மின் உற்பத்தியில் அவை வெறும் ஐந்து சதவிகிதத்தை அடைவதற்கே ஐம்பது வருடங்கள் ஆகும். ஆனால் அந்த உலைகளில் விபத்து ஏற்பட்டால் விளைவுகள் பல தலைமுறைகளுக்கு நம்மை பாதித்துவிடும்.


தன் மொத்த மின் உற்பத்தியில் 25 சதவிகிதத்தை அணு உலைகளிலிருந்து தயாரித்து வரும் ஜெர்மனி இப்போது எல்லா அணு உலைகளையும் படிப்படியாக மூடிவிட முடிவு செய்திருக்கிறது. இதில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் ஒரே கருத்தில் இருக்கின்றன. ஜப்பான் விபத்துக்குப் பின் ஜெர்மனி தன் மொத்த 17 உலைகளில் எட்டை 90 நாட்களுக்கு மூடிவைத்து ஆய்வு செய்து வருகிறது. மக்களிடையே கருத்து கணிப்பு எடுத்ததில் மொத்த 17 உலைகளையும் மூடிவிடலாம் என்று ஆதரவு தெரிவித்தவர்கள் 76 சதவிகிதம் பேர். இங்கே மக்களிடம் இதற்கெல்லாம் கருத்தே கேட்பதில்லை. கருத்து சொல்ல வருபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு.


ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை விட, இந்திய அணு உலைகளை ஆய்வுக்குட்படுத்த சுயேச்சையான ஒரு லோக்பாலை உருவாக்குவதுதான் என்னைப் பொறுத்த வரையில் இன்னும் அவசரமான பிரச்சினை. ஏனென்றால் உயிரோடு இருந்தால்தான் லஞ்சம் கொடுப்பது வாங்குவது அதை விசாரிப்பது பற்றியெல்லாம் பேசமுடியும்.


கவலை 2: 

படித்த இளைஞர்கள் பலர் லஞ்சம் பற்றிக் கவலைப்படுகிறார்கள். நேர்மையான, திறமையான நிர்வாகம் வேண்டுமென்பதற்கான அக்கறையோடு இருக்கிறார்கள். அதனால்தான் எதற்காக அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருக்கிறார் என்ற விவரம் கூடத் தெரியாமல் பல இளைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு அவர் பின்னால் குவிந்தார்கள். இதை நீங்கள் அலட்சியப்படுத்தலாமா என்று சில வாசகர்கள் என்னிடம் கேட்கிறார்கள்.இல்லை. இந்த உணர்வுகளால் உந்தப்படுவதை நான் அலட்சியப்படுத்தவில்லை. ஆனால் வெறும் உணர்ச்சி போதாது. கூடவே அறிவு வேண்டும் என்பதுதான் நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் விஷயம். ஊழல் ஒழியவேண்டும் என்பது உணர்ச்சி. அதற்கு லோக்பால் மசோதா போதுமானதா, இருக்கும் சட்டங்கள் ஏன் செயல்படுத்தப்படுவதில்லை என்று ஆராய்வது அறிவு. அறிவின் அடிப்படையில்தான் தீர்வுகளை அடையமுடியும்.

அறிவைப் பரப்புவதில் இருக்கும் தடைகள்தான் என் இந்த வார இரண்டாவது கவலை. திருச்சியில் இருக்கும் எஸ்.ஆர்.வி பள்ளியின் தலைமையாசிரியர் என் நண்பர் துளசிதாசனும் நானும் கடந்த சில ஆண்டுகளாக பள்ளியில் ப்ளஸ் ஒன் படிக்கும் மாணவர்களின் தலைமைப் பண்புகளை வளர்க்கவும் பாடப்புத்தகங்களுக்கு வெளியிலான அறிவை விசாலப்படுத்தவும் பயிற்சி முகாம்களை வடிவமைத்து செயல்படுத்தி வருகிறோம்.பள்ளிப் பருவத்தில் மாணவர்களுக்கு பெரும்பாலும் பாடப்ப் புத்தகத்துக்கு வெளியே படிக்கும் பழக்கம் இல்லை. முதலில் அதை உருவாக்க வேண்டியிருக்கிறது. அது எளிதில் ஒரு நாளில் உருவாக்கக்கூடியது அல்ல. குடும்பம், பள்ளி, கல்லூரி, நண்பர்கள் என்று பலரின் செல்வாக்கில் வளரக்கூடியது அல்லது கருகக்கூடியது. படிக்கும் பழக்கம் பலருக்கு எட்டாம் வகுப்பில் தொடங்கினாலும், அவர்களுக்கேற்ற பல துறைப் புத்தகங்களெழுத தமிழில் மிக சிலரே இருக்கிறார்கள். அவர்களில் பலர் மேம்போக்காக எழுதுகிறார்கள். எளிமையாக, ஆழமாக எழுதுபவர்கள் பெருமளவில் தேவைப்படுகிறார்கள்.

எனவே சிறுவர்களிடம் இப்போதைக்கு உரையாடல் மூலம்தான் பல விஷயங்களைப் பகிர வேண்டியிருக்கிறது. 1975-76 எமர்ஜென்சி, தலித் இயக்கங்கள், காந்திய இயக்கம், பொதுவுடமை இயக்கம், திராவிட இயக்கம், சுற்றுச் சூழல், சுதேசி இயக்கம், மகளிர் இயக்கம், இசை, ஓவியம், நாடகம், பாட்டு, கவிதை, அறிவியல், வேளாண்மை, தன் உடற்கூறு ஆரோக்கியம், என்று ஏராளமான விஷயங்களைப் பற்றி அரைகுறையாகக் கூட தெரியாமலேதான் பெரும்பாலோர் வளர்கிறார்கள். தெரிந்திருக்கும் சினிமா, டெலிவிஷன் பற்றிக் கூட முழுமையாக தெரியாது.பல துறைகளிலும் அனுபவமும் அறிவும் உள்ள மூத்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆனால் அதில் பெரும்பாலோருக்கு, ப்ளஸ் ஒன் படிக்கும் 15,16 வயதினருக்குப் புரியும் விதத்திலும் சுவையாகவும் தங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லத் தெரியவில்லை. ஒரு சப்ஜெக்டில் 40 மாணவர்களுக்கு ஒரு பயிற்றுநர் வீதம் குறைந்தது ஐந்து பேராவது தேவை. ஆனால் ஒவ்வொன்றிலும் ஒருவர் கிடைப்பதற்கே ஒவ்வோராண்டும் நானும் துளசிதாசனும் அல்லாட வேண்டியிருக்கிறது.

ஒவ்வொரு அமர்விலும் சிறப்பாக தங்களுடன் விஷயங்களைப் பகிர்வோரிடம் மாணவர்கள் உற்சாகமாக விவாதிப்பதைப் பார்க்கும்போதெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே சமயம், தரமான, திறமையான, பயிற்றுநர்களுக்கு இருக்கும் பஞ்சம் பெரும் கவலை தருகிறது. ஒரு பெரும் எண்ணிக்கையில் இளம் தலைமுறை காத்துக் கிடக்கிறது. அதனிடம் தன் அறிவையும் அனுபவத்தையும் பார்வையையும் பகிர்வதற்கு தன்னைத் தயாரித்துக் கொண்ட மூத்த தலைமுறையைக் காணோம். உணவுப் பஞ்சத்துக்கு நிகரான பெரும் பஞ்சம் இது. 

Thursday, April 21, 2011

'மங்காத்தா’ - அஜீத்!

''மும்பை தாராவி கிட்டத்தட்ட ஒரு குட்டித் தமிழ்நாடு. 'நாயகன்’ படத்துக்குப் பிறகு தாராவிக்குள் முழுமையாகப் புகுந்த படம் 'மங்காத்தா’!

மொத்த தாராவியும் அஜீத்தைப் பார்க்கும் ஆசையில், அந்தச் சின்ன சந்துக்குள் திமிறி நிக்குது. 'தல... தல... மங்காத்தா சூப்பர் ஹிட்டாகும் தல’ன்னு அவங்க பக்கம் அஜீத் திரும்புறப்பலாம் சவுண்டு கொடுப்பாங்க. 'முதல்ல படத்தை எடுக்கவிடுங்கப்பா. அப்பதானே அது ஹிட் ஆகும்’னு ஜாலியும் கேலியுமா அஜீத்தே கூட்டத்தை கன்ட்ரோல் பண்ணி ஷூட்டிங் நடக்க உதவி பண்ணுவார். ரொம்ப ஜாலியா ஷூட்டிங் முடிச்சு இப்பத்தான் மும்பைல இருந்து பேக்கப் ஆகி வந்திருக்கோம்!'' - பெசன்ட் நகர் வீட்டில் கடல் காற்றுக்கு இடையே 'மங்காத்தா’ கதை சொல்கிறார் வெங்கட் பிரபு.


 'படத்தில் 'அவங்க நடிக்கிறாங்க... இவங்க நடிக்கிறாங்க’ன்னு ஏகப்பட்ட தகவல்கள். யார் யார் நடிக்கிறாங்கன்னு இப்பவாது சொல்லலாம்ல?''

''இவ்வளவு பெரிய ஸ்டார் காஸ்ட்டோடு படம் உருவாகும்னு நானே எதிர்பார்க்கலை. 'உங்க டீமே இல்லாம ஃப்ரெஷா ஒரு படம் பண்ணலாம். பிரேம்ஜியை மட்டும் வெச்சுக்குங்க’ன்னு துரை தயாநிதி சொன்னார். அப்ப அஜீத் சார் மட்டும்தான் உள்ளே வந்தார். அப்புறம் படத்துக்கே வேற கலர் வந்துடுச்சு. இப்போ அர்ஜுன் சார், த்ரிஷா,  வைபவ், அஞ்சலி, ஆண்ட்ரியா, லட்சுமி ராய், ஜெயப்பிரகாஷ்னு ஏகப்பட்ட பவர் பெர்ஃபார்மர்ஸ் உள்ளே வந்துட்டாங்க. அஜீத்துக்கும் அர்ஜுனுக்கும் இடையிலான போட்டிதான் 'மங்காத்தா’. ஒரு பிரச்னை, அதனால் பாதிக்கப்படும் குடும்பங்கள்னு முதல் பாதி நகரும். அந்தப் பிரச்னைக்கான தீர்வு இரண்டாம் பாதி. ஒருநாளில் நடக்கும் சம்பவங்கள்தான் செகண்ட் ஆஃப். அர்ஜுன் சாருக்கு ஸ்பெஷல் பிராஞ்ச் சி.ஐ.டி. மாதிரியான கேரக்டர். அஜீத் சாரின் 50-வது படத்தில் அவருக்குத்தான் முக்கியத்துவம் இருக்கும்னு தெரிஞ்சும், அர்ஜுன் சார் நடிச்சுக் கொடுத்தது பெரிய விஷயம். 'படத்தில் ஒரு சின்ன கேரக்டர் இருக்கு. நீங்க ஃப்ரெண்ட்லியா பண்ணித் தரணும்’னு ஆண்ட்ரியாகிட்ட கேட்டேன். 'எனக்கு ஓ.கே. ஆனா, உங்க படத்துல எனக்கு ஒரு பாட்டு தரணும்’னாங்க. 'அதுக்கென்ன கொடுத்துட்டாப் போச்சு’ன்னு அவங்களைப் பிடிச்சுப் போட்டாச்சு!'
''அஜீத் ஹிட் கொடுத்து கொஞ்சம் இடைவெளி ஆயிருச்சே... இந்தப் படம் அதுக்குப் பதில் சொல்லுமா?''  

''ஒரு வரியில் சஸ்பென்ஸ் உடைக்கவா? படத்தில் அஜீத் சார் முதல் முறையா முழு நெகட்டிவ் கேரக்டர் பண்ணி இருக்கார். அவர் கேரக்டர் பேரு விநாயக் மகாதேவன். 'பாஸிகர்’ ஷாரூக் மாதிரியான கேரக்டர். காமெடி, திரைக்கதைன்னு எல்லாத்தையும் தாண்டி அவரின் கேரக்டர்தான் நிக்கும். டான்ஸ், சண்டைக் காட்சிகளுக்கு ரொம்ப டெடிகேட்டடா வொர்க் பண்ணினார். அவர் இயல்பா கிரே ஹேர், சால்ட் அண்ட் பெப்பர் லுக்னு எப்படி இருக்காரோ அப்படியே விட்டுட்டோம். 'ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி மாதிரி இருந்தா, நல்லா இருக்கும்’னு சொன்னேன். அப்படியே ரெடி ஆகி வந்து நின்னார். படம் ரிலீஸானதும் பசங்க டை அடிக்கிறதை விட்டுட்டு கிரே ஹேர் ஸ்டைலை டிரெண்ட் ஆக்கிருவாங்க. எங்க டீம் பசங்களைவிட குத்துப் பாட்டுக்கு செமத்தியா ஆட்டம் போட்டாரு. அவர் நல்லா ஆடிட்டு இருக்கும்போது பசங்க யாராவது மிஸ்டேக் பண்ணா, 'டேய் நானே நல்லா ஆடுறேன். உங்களுக்கு என்னடா வந்துச்சு?’ன்னு செல்லமாத் திட்டி வேலை வாங்குவார். 'இந்த கேரக்டரை ஆடியன்ஸ் ஏத்துக்குவாங்க. ஆனா, என் ஃபேன்ஸை நாமதான் தயார் பண்ணணும். டிரெய்லர், இன்டர்வியூன்னு கொஞ்சம் கொஞ்சமா என் கேரக்டர் பிடிக்கிற மாதிரி அவங்களைத் தயார் பண்ணுங்க’ன்னார். அதுக்கு இந்தப் பேட்டிதான் பிள்ளையார் சுழி!''  


 ''அப்போ வில்லன் அஜீத்துக்கு ஏகப்பட்ட பன்ச் டயலாக் இருக்குமே!''

''சான்ஸே இல்லை. பொதுவா எல்லாப் படங்களிலும் ஒரு ஹீரோ கெட்டது பண்ணா, உடனே அவருக்கு ஒரு ஃப்ளாஷ்பேக் வெச்சு அந்த ஹீரோ எதனால் கெட்டவன் ஆனார்னு சொல்வாங்க. ஆனா, நாங்க அதெல்லாம் பண்ணலை. கெட்டவன்னா... கெட்டவன்தான். 'நான் கெட்டவன்... நீ நல்லவன்’னு எந்த பன்ச்சும் கிடையாது. டயலாக் எல்லாமே யதார்த்தமா இருக்கும்!''
''இதை அஜீத் ரசிகர்கள் ஏத்துக்குவாங்களா?''

''அவர் பெர்சனல் விஷயங்கள் எதையும் படத்தில் சேர்க்கலை. அவர் சேர்க்கவும் சொல்லலை. 'நாட்டு மக்கள் திருந்தி வாழணும்’னுலாம் எந்த மெசேஜும் இல்லை.  இதுல அஜீத்-பிரேம்ஜிதான் காமெடி கூட்டணி. ஆனா, என் மத்த மூணு படங்களைக் காட்டிலும், இதுல சீரியஸ்னெஸ் ஜாஸ்தியா இருக்கும். அஜீத் ரசிகர்களுக்கு 'மங்காத்தா’ டபுள் ஜாக்பாட்!'' 

''அஜீத் அரசியல், எலெக்ஷன் பத்தி ஏதாவது பேசுவாரா?''

'' 'யார் பிரபு வருவாங்க? வேர்ல்டு கப் மாதிரி பயங்கர டஃப்பா இருக்கு’ன்னு ஏதாவது கமென்ட் அடிப்பார்.  தினமும் அரை மணி நேரமாவது அரசியலைப்பத்தி டிஸ்கஸ் பண்ணுவார். அஜீத் சாருக்கு இவ்வளவு டீடெய்ல்டா அரசியல் தெரியுமான்னு ஆச்சர்யமா இருக்கும்!''  

விகடன்  

செய்வீர்களா?வருங்கால முதல்வருக்கு ஒரு திறந்த மடல்

இன்றைய நாளேடு தினமலரில் வந்த செய்தி தொகுப்பு 

ஐயா, அம்மணி, உங்களில் யாரோ முதல்வராக வரப்போகிறீர்கள். உங்களுக்கும் இப்போது அது சஸ்பென்ஸ். உங்கள் உறக்கத்தைக் கெடுத்துள்ள ஓட்டுப் பெட்டிகள் உறக்கத்தில் இருக்கின்றன. அவை எழுந்ததும், நீங்கள் யார் என்பது எங்களுக்கு தெரிந்துவிடும். மக்கள் எஜமானர்கள், நீங்கள் வேலைக்காரர்கள் என்கிறீர்களே... அது உண்மை, எங்கள் காதில் சுற்றிய பூ இல்லை என்பதை நம்பி, நாங்கள் எழுதும் திறந்த மடல் இது.

உங்கள் எதிர்பார்ப்புகள் இருக்கட்டும், எங்கள் எதிர்பார்ப்புகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா, அதற்காகவே இந்த கடிதம்.நீங்கள் பதவியேற்கும் முன்பே ஆரவாரம் தொடங்கும்; ஆடம்பரம் தொடரும். அதை நினைத்தால் பயமாக இருக்கிறது. ஐயாவே, அம்மணியே, நீங்கள் இப்போதே உங்கள் தொண்டர் படைக்குச் சொல்லி வைத்துவிட்டால், ஆரவாரமில்லாமல், உங்கள் வெற்றியை கொண்டாடலாம். அமைதிக்கு கவுரவம் உண்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களை மட்டும் குறை சொல்லக்கூடாது... நாங்களே வெறும் கைதட்டிக் கூட்டம்... காக்காய் பிடிக்கும் கும்பல். புண்ணாக்கு சங்கம், பருத்திக்கொட்டை சங்கம், குதிரைக் குஞ்சு சங்கம், கோழிக்குட்டி சங்கம் என்று பல சங்கங்கள் வைத்திருக்கிறோம்.  இதுதான் எங்கள் சங்க காலம். ஒவ்வொரு சங்கமும் பத்திரிகைகளில், "போற்றி, போற்றி' என்று போட்டி போட்டு உங்களை புகழ்ந்து விளம்பரங்கள் வெளியிடும்.அப்படி செய்யாதீர்கள் என்று நூற்றுக்கணக்கான சங்க நிர்வாகிகளை வேண்டிக்கொள்வீர்களா? நீங்கள் தீர்மானித்து விட்டால், இந்த விளம்பரங்கள் வராது. இப்படிப்பட்ட விழாக்களில் கலந்துகொண்டு நானும் உங்களைப் போல் கலப்பைக்காரன், கரண்டிக்காரி, சட்டிக்காரன், முட்டைக்காரி என்று சொல்வதைத் தவிர்ப்பீர்களா?

நீங்கள் இந்த மாதிரி சில குழுக்களுக்காக மட்டுமல்ல, எல்லாருக்குமே முதல்வர் என்பதை முழுமையாக புரிந்து கொள்வீர்களா? உங்களுக்கு வாக்களிக்காதவர்களுக்கும் நீங்களே முதல்வர்; சரிதானே.இந்த புதிய ஆட்சிக் காலத்தில் நீங்களோ, உங்கள் அமைச்சர் பெருமகன்களோ, பெருமாட்டிகளோ செல்லும் வழி நெடுக, கட்-அவுட்கள், படத்தட்டிகள், கொடிகள் வைப்பதைத் தடுப்பீர்களா? எந்த ஆரவாரமும் எவருக்கும் கவுரவம் சேர்ப்பதில்லை என்பதை கட்சித் தலைவர், கட்சித் தலைவி என்ற முறையில் புரிந்து கொள்வீர்களா?அரசுத் திட்டங்களின் அறிமுகமா? புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதா? பாலமோ, கழிப்பறையோ திறப்பதா? அங்கெல்லாம் முதல்வர் தன் பரிவாரத்துடன் சென்று விழா நடத்தும் சடங்குகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்களா? விழாக்கள் மூலம் கிடைக்கும் விளம்பரம் வேறு வழிகளிலும் கிடைக்கும்; அதை நாடுங்களேன்.மறுபடியும் நீங்கள் ஆட்சிக்கு வர இருக்கும் நேரத்தில், உங்கள் தேர்தல் அறிக்கை, இலவசங்கள், சலுகைகள், மானியங்கள் பற்றி எதுவும் சொல்லாமல், இருக்கும் அளவுக்கு அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டுமே. அவர்கள் என்றென்றும் கையேந்திகளாக இருந்தால் நீங்கள் அடிக்கடி சொல்லிக் கொள்ளும் சுயமரியாதைக் கொள்கைக்கு அது பொருத்தமாக இல்லையே. அதை உடனடியாக செய்துவிட முடியாது. ஆனால், ஆடம்பரங்களைக் குறைத்துக் கொண்டால், உருப்படியான திட்டங்களுக்கு பணம் செலவிடப்படலாம். இனி, இலவசங்கள் தேவைப்படாது என்ற நிலை உருவாக்கப் பாடுபடுவீர்களா?மக்களுக்கு கிரைண்டர், மிக்சி, பேன் தரும்போது, இதை முதலமைச்சராக உள்ள நான் தரவில்லை. அரசாங்கம் மூலம் இதை நீங்கள் இவற்றைப் பெறுவதற்குக் காரணம், வரி செலுத்தும் உங்கள் சகோதரர்களே என்ற உண்மையை பகிரங்கமாக சொல்லி, உங்கள் சுயமோகத்தை விரட்டிவிட்டு சகோதரத்துவத்தை வளர்ப்பீர்களா?கட்சிக்காரர்களை கட்சி அலுவலகத்துடன் நிறுத்திவிட்டு, கோட்டை பக்கம் வரவிடாமல் தடுப்பீர்களா? 

கோட்டையில் அதிகாரிகளும், அமைச்சர்களும் பொது நலன்களுக்காக அல்லாத உரிய வேலைகளுக்காக வரும் மக்களே தென்பட வேண்டும், கரை வேட்டிகள் அல்ல. இதற்கான கறாரான ஏற்பாடுகளை செய்வீர்களா?காவல்துறையை ஏவல் துறையாக மாற்றாமல் இருப்பீர்களா?உங்கள் பி.ஏ.,க்கள், அமைச்சர்களின் பி.ஏ.,க் கள் ஒவ்வொருவரும் ஒரு குட்டி சமஸ்தானமாக மாறிவிடாமல் இருக்க, அவர்களைக் கண்காணிப்பீர்களா? நீங்கள் சரியாக இருந்தால் அவர்களும் சரியாக இருப்பார்கள் அல்லவா?அறைக்கு வெளியே இரு பக்கங்களிலும் பெரிய, மிகப்பெரிய "டிவி' அளவுக்கு இரண்டு கம்ப்யூட்டர் மானிட்டர்கள் பொருத்தி, ஒன்றில் உங்களை அறையில் சந்திக்க வருகிறவர்கள் யார் என்ற தகவலையும், மறு திரையில் உங்கள் வசம் முடிவுக்காக காத்திருக்கும் கோப்புகள் எவை என்பதையும் தெரிவிப்பீர்களா? அதுதானே ஒளிவு மறைவு இல்லாத நிர்வாகம். செய்வீர்களா?உங்கள் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் இதைச் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவீர்களா?அலுவலகத்தில் இருக்கும்போது, அலுவலக வேலையை மட்டுமே பாருங்கள்; வீட்டில் நீங்கள் குடிமக்கள் என்ற தினசரி நடைமுறையை வகுத்துக் கொள்ளுங்கள்; அதை அப்படியே செய்துவிட முடியாது. மாநிலத்தில் எங்காவது நெருக்கடி என்றால், நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் எங்களது, 24 மணி நேர ஊழியர். அப்படி ஊழியம் செய்ய கூப்பிட்ட குரலுக்கு முக்கிய அதிகாரிகள் வரவேண்டும். அவர்கள் வரட்டும், அருகில் இருக்கட்டும். மற்றபடி கட்சிக்காரர்களை கட்சி அலுவலகத்துடன் நிறுத்திக் கொள்ளலாமே... செய்வீர்களா?

ஆட்சியிலும், கட்சியிலும் ஆடம்பரத்தையும், ஆரவாரத்தையும் அறவே ஒழிப்பீர்களா? பதவியேற்று மூன்று அல்லது ஆறு மாதம் கடந்த பிறகு வளர்ந்த நாடுகளுக்கு சென்று வாருங்கள். அங்கே அரசு சட்ட திட்டங்கள்படி நடைபெறுகிறதா, கட்-அவுட்களின்படி நடந்து வருகிறதா என்று பார்த்து வாருங்கள். அந்த ஒழுங்கு முறையை சாலைகளிலும், அரசு அலுவலகங்களிலும் கொண்டு வாருங்கள். அதுதான் முன்னேற்றத்தின் முதல்படி. உங்கள் வெளிநாட்டுப் பயணங்கள் வேறு காரணங்களுக்காக அமைய வேண்டாம். கமிஷன் என்றால், கமிஷனும் வரும். புரிகிறதா? மக்களுக்கு இப்போது அதிக விவரம் தெரிந்து விட்டது.வீட்டில் இல்லாத ஒழுக்கம் வீதியில் வராது. வீதியில் இல்லாத ஒழுக்கம் சமூகத்தில் வராது. சமூகத்தில் இல்லாத ஒழுக்கம் அரசாங்கத்தில் வராது.

இப்போது சீர்திருத்தத்தை உங்களிடமிருந்துதான் தொடங்க வேண்டும். வருங்கால முதல்வரே, நீங்கள் யாராக இருந்தாலும் சரி... மக்கள் இனி புதிய தொடக்கத்தை எதிர்பார்க்கலாமா? எங்களால் ஏற முடியவில்லை; முடங்கிப் போய்விட்டோம். நீங்கள் இறங்கி வருவீர்களா, எங்களை ஏற்றிவிட?  

ஆர்.நடராஜன், அமெரிக்க தூதரக முன்னாள் அரசியல் ஆலோசகர்.