Search This Blog

Monday, December 06, 2010

வங்கிகளின் சேவைக் கட்டணம்!

 ப்போதெல்லாம் வங்கிகள் சர்வீஸ் விஷயத்தில் பின்னி எடுக்கிறார்கள்... வாரத்துக்கு ஒரு வசதியை அறிமுகம் செய்துகொண்டிருக்கிறார்கள். நாமும் ஆகா பிரமாதம் என்று எஞ்சாய் பண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அதற்காக நம்மிடம் எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பதைப் பற்றி கண்டுகொள்வதே இல்லை. வங்கிகள் எந்தெந்த சேவைக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கின்றன என்பது நமக்குத் தெரிந்தால், நிச்சயமாக நியாயமான காரணங்களுக்காக மட்டுமே அதைப் பயன்படுத்துவோம். உங்களுக்காக சேவைக் கட்டணங்கள் குறித்து இதோ ஒரு லிஸ்ட்...

குறைந்தபட்ச பணம் குறைந்தால்? 

ஒவ்வொரு வங்கியும் நம் வங்கிக் கணக்கில் குறைந்தபட்சம் இவ்வளவு பணம் இருக்க வேண்டும் என ஒரு தொகையை நிர்ணயித்துள்ளது. அந்தத் தொகை குறைந்தால் வங்கி அபராதம் விதிக்கும். குறைந்தபட்சத் தொகையைப் பராமரிக்காததில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஒரு மாதத்துக்கு பராமரிக்காதது, மற்றொன்று காலாண்டுக்கு பராமரிக்காதது. பொதுத் துறை வங்கிகளில் காசோலையுடன் கூடிய கணக்கு என்றால் 1,000 எனவும், காசோலை இல்லை எனில் 500 எனவும் குறைந்தபட்ச தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுவே தனியார் வங்கிகளில் வேறு மாதிரி இருக்கிறது. மாநகரங்களில் குறைந்தபட்சம் 10,000 எனவும் நகரங்களில் 5,000 எனவும் கிராமப் பகுதியில் 2,000 என்றும் இருக்கிறது. இதைக் கடைப்பிடிக்காத பட்சத்தில் சம்பந்தப்பட்ட வங்கிகள் கட்டாயம் நமக்கு அபராதம் விதிக்கும். அபாரத் தொகை அதிகமில்லை ஜென்டில்மேன், காலாண்டுக்கு சுமார் 600-ம் (தனியார் வங்கிகள்) மாதமொன்றுக்கு சுமார் 20-ம் (பொதுத்துறை வங்கிகள்) நம்மிடமிருந்து கறந்துவிடுவார்கள்.

மற்ற வங்கி ஏ.டி.எம்-ல் பணம் எடுத்தால்...? 

பிற வங்கிகளின் ஏ.டி.எம்-ல் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம் என்கிற நிலையை ஓராண்டுக்கு முன்பு மாற்றிவிட்டது ரிசர்வ் வங்கி. பிற வங்கிகள் ஏ.டி.எம்-ல் ஐந்து முறை மட்டுமே கட்டணமின்றி பணம் எடுக்க முடியும். அதற்கு மேல் ஒவ்வொரு முறையும் 20 கட்டணம் வசூலிக்கப்படும். இது தெரியாமல் கண்ணில்பட்ட ஏ.டி.எம்-களில் பணத்தை எடுத்துத் தள்ளுகிறார்கள் சில அப்பிராணிகள். 

கார்டுக்கான கட்டணம்! 

எந்த வங்கியில் உறுப்பினரானாலும் நமக்கு ஒரு டெபிட் கார்டை அந்த வங்கிகள் கேட்காமலே கொடுத்துவிடுகின்றன. சும்மா கிடைப்பதாக நாம் இதை நினைக்கிறோம். ஆனால் இதற்கும் கட்டணம் உண்டு. ஒவ்வொரு வங்கியும் டெபிட் கார்டுக்கு ஆண்டுக் கட்டணம் வசூலிக்கிறது. இது வங்கிக்கு வங்கி கார்டுக்கான சலுகையைப் பொறுத்து மாறுபடும். இதற்கான ஆண்டுக் கட்டணம் 100. கார்டு தொலைந்தால் புதிய கார்டு வாங்க, புதிய பின் நம்பர் வாங்க என ஒவொன்றுக்கும் தனித்தனியாகக் கட்டணம் உள்ளது.

பணம் அனுப்ப! 

ஒரே வங்கியில் இருக்கும் கணக்குகளுக்கு ஆன்லைன் பணப் பரிமாற்றம் செய்யும்போது எந்தவித கட்டணமும் கிடையாது. ஆனால், ஒரு வங்கியில் இருந்து மற்ற வங்கிக்கு ஆன்லைன் பரிமாற்றம் செய்யும் போது கட்டணம் உண்டு.

கட்டண விகிதம்:
ஒரு லட்சம் வரை - 5
ஒரு லட்சம் முதல் 5
லட்சம் வரை - 25
ஐந்து லட்சத்துக்கு மேல் - 50
செக் பவுன்ஸ் கட்டணம்! 

செக் கொடுக்கும் போதோ அல்லது ஈ.சி.எஸ். முறையில் பணம் செலுத்தும் போதோ வங்கிக் கணக்கில் பணமில்லை என்றால் வங்கிகள் செக் பவுன்ஸ் கட்டணம் விதிக்கும். தனியார் வங்கியாக இருந்தால் 350.  பொதுத் துறை வங்கியாக இருந்தால் 50. நம் கணக்கில் டெபாசிட் செய்யும் செக் பவுன்ஸ் ஆனாலும், அபராதம் உண்டு. சுமார் 100 வரைக்கும் கட்டணம் இருக்கும்.

ஸ்டேட்மென்ட்! 

பொதுத் துறை வங்கிகளைப் பொறுத்தவரை ஸ்டேட்மென்ட் என்பது பிரச்னையில்லை. அனைத்து வங்கிகளும் கணக்குப் புத்தகம் வைத்திருக்கின்றன. தேவைப்படும் நேரத்தில் அதை இலவசமாக அப்டேட் செய்து கொடுத்துவிடுகிறார்கள். ஆனால் தனியார் வங்கியில் கணக்குப் புத்தகம் கிடையாது. காலாண்டுக்கு ஒரு ஸ்டேட்மென்ட் கொடுப்பார்கள். அதற்கு மேல் தேவை என்றால் கட்டணம் உண்டு. கட்டணம் சுமார் 100.
அட்டஸ்ட்டேஷன் கட்டணம்! 

சில சமயம் பான் கார்டு, டீமேட் கணக்கு போன்ற பல காரணங்களுக்காக வங்கிக் கணக்கின் அட்டஸ்ட்டேஷன் தேவைப்படும். அப்படிக் கேட்கும் பட்சத்தில் அதற்கும் கட்டணம் உண்டு. கட்டணம் 40-லிருந்து ஆரம்பிக்கிறது. இதுவும் பெரும்பாலும் தனியார் வங்கிகளில்தான்!
ஸ்டாப் பேமென்ட் கட்டணம்! 

சில சமயம் நாம் மற்றவர்களுக்கு செக் கொடுத்திருப்போம். அந்த சமயத்தில் நம் வங்கிக் கணக்கில் பணம் இருக்காது. பணம் இல்லாமல் செக் பவுன்ஸ் ஆவதைவிட செக்கை நிறுத்தி வைக்கலாம் என்று தோன்றும். அதற்கும் வங்கியில் கட்டணம் உண்டு. முதல் செக்குக்கு 50,  அடுத்தடுத்த செக்குகளுக்கு 100 முதல் 200 வரை விதிக்கப்படும். ஆனால் ஆன்லைன் அல்லது கஸ்டமர் கேரில் சொல்லி ஸ்டாப் செய்யும் செக்குகளுக்கு கட்டணம் ஏதும் இல்லை.

இனியாவது வங்கிகள் கொடுக்கும் சேவையை அவசியமென்றால் மட்டுமே பயன்படுத்தி பணத்தை சேமியுங்க! 




No comments:

Post a Comment