Search This Blog

Monday, October 25, 2010

சென்னை சர்வதேச விமான நிலைய விரிவாக்க பணி ..

சென்னை சர்வதேச விமான நிலையத்தை நவீனமயமாக்கும் பணி இவ்வாண்டு செட்பம்பர் மாதம் முடிய 58 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 

சென்னை சர்வதேச விமான நிலையத்தை ரூ.1808 கோடி செலவில் மேம்படுத்துதல் மற்றும் நவீனமயமாக்கும் திட்டத்திற்கு 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனுமதி வழங்கப்பட்டது. 

இந்தப் பணிகளில் இவ்வாண்டு செப்டம்பர் முடிய 58 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளது. 

இத்திட்டமானது 67,700 சதுர மீட்டர் பரப்பில் புதிய உள்நாட்டு முனைய கட்டிடம் கட்டுதல், 59,300 சதுர மீட்டர் பரப்பில் தற்போதைய அண்ணா சர்வதேச முனையத்தை விரிவுபடுத்துதல், அடையாறு ஆற்றின் குறுக்கே 1032 மீட்டர்களுக்கு செகண்டரி ஓடுபாதையை விரிவாக்குதல், இணையான டாக்சி-பாதையை கட்டுதல் மற்றும் 10 நிறுத்தும் இடங்களை அமைத்தல் ஆகிய பணிகளைக் கொண்டதாகும். 

ரூ.1273 கோடி செலவில் முனையக் கட்டிடத்தை கட்டும் முக்கிய பணியானது 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வழங்கப்பட்டது. இந்தப் பணியை செய்து முடிப்பதற்கான உத்தேச காலம் அடுத்த ஆண்டு மே மாதம் ஆகும். டாக்கி பாதை விரிவாக்கம் மற்றும் நிறுத்தும் இடங்களைக் கட்டுகின்ற பணிகளை முடிப்பதற்கான உத்தேச காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆகும்.

இந்தப் பணிகள் செய்து முடிக்கப்பட்டதும் சென்னை சர்வதேச விமான நிலையத்தின் பயணிகளை கையாளும் திறன் 90 லட்சத்தில் இருந்து 2.30 கோடியாக அதிகரிக்கும்.
முனையக் கட்டிடமானது நகரம் படிக்கட்டுகள், மின்தூக்கிகள், நடைபாலங்கள், அடுக்குமாடி கொண்ட கார் நிறுத்தும் இடங்கள் போன்ற அதிநவீன வசதிகளுடன் நவீன வடிவமைப்பு கொண்டதாக இருக்கும். இந்த புதிய முனையக் கட்டிடத்திற்கு மெட்ரோ ரயில் சேவை இணைப்பும் இருக்கும். இந்த திட்டத்தின் திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ.2015 கோடியாக மாற்றப்பட்டுள்ளது.


சர்வதேச வெல்டிங் நிறுவன தலைவராக முதன் முறையாக இந்திய விஞ்ஞானி தேர்வு
 
 சர்வதேச வெல்டிங் நிறுவனத்தின் (International Institute of Welding - IIW) தலைவராக முதன் முறையாக ஓர் இந்தியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனரும், விஞ்ஞானியுமான டாக்டர் பல்தேவ் ராஜ், சர்வதேச வெல்டிங் நிறுவனத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், அடுத்த ஆண்டு முதல் 2014 வரை இந்தப் பதவியில் இருப்பார். 

துருக்கியில் நடைபெற்ற சர்வதேச வெல்டிங் நிறுவனத்தின் இயக்குனர்கள் கூட்டத்தில் டாக்டர் பல்தேவ் ராஜ் தேர்வு செய்யப்பட்டார். 

சர்வதேச வெல்டிங் நிறுவனத்தில் இந்தியாவையும் சேர்த்து 55 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இந்த நிறுவனம் 1948-ல் பிரான்சில் துவக்கப்பட்டது. 

வெல்டிங் துறையில் நவீன தொழில்நுட்பத்தை கண்டறிவது, உருவாக்குவது, மேம்படுத்துவது, பிற நாடுகளுக்கு அளிப்பது ஆகிய நோக்கங்களுக்காக இந்நிறுவனம் உருவாக்கப்பட்டது. 

வெல்டிங் தொழில் துறையில் பாதுகாப்பான சிறந்த செய்முறைகளை மதிப்பிடுவது மற்றும் பரிந்துரைக்கும் பணியையும் இந்த நிறுவனம் மேற்கொள்கிறது. 

வெல்டிங் துறையில் சர்வதேச அளவில் நிபுணராக விளங்கும் டாக்டர் பல்தேவ் ராஜ் இப்புதிய பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, இந்திய வெல்டிங் துறையின் செயல் திறனுக்கு ஓர் அங்கீகாரமாகும். 

அடுத்த ஆண்டு ஜூலையில் சர்வதேச வெல்டிங் நிறுவனத்தின் 64-வது, வருடாந்திர கூட்டம் முதன் முறையாக இந்தியாவில், சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் டாக்டர் பல்தேவ் ராஜ் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளார். 

உலக டெஸ்ட் லெவன் அணியில் சச்சின்!
 
உலக டெஸ்ட் லெவன் அணியில் இந்தியாவிலிருந்து சச்சின் டெண்டுல்கர் மட்டும் இடம்பெற்றுள்ளார். 

இஎஸ்பிஎன் - கிரிக்இன்போ வலைத்தளம் ஆகச் சிறந்த வீரர்கள் அடங்கிய உலக டெஸ்ட் லெவன் அணியின் பட்டியலை தேர்வு செய்து வெளியிட்டுள்ளது. 

இந்த அணியில் இந்தியாவிலிருந்து சச்சின் டெண்டுல்கர் மட்டும் இடம்பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 4 வீரர்கள் மற்றும் வெஸ்ட்இண்டீசை சேர்ந்த 3 வீரர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர். 

பிராட்மேன், கேரி சோபர்ஸ் மற்றும்ஷேன் வார்னே ஆகிய 3 வீரர்கள் இந்த அணியில் கட்டாயம் இடம்பெற வேண்டிய வீரர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சமகால கிரிக்கெட் வீரர்களில் சச்சின் மற்றும் வார்னே தவிர கில்கிறிஸ்ட், அக்ரம் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். 

அணியின் விவரம் வருமாறு:
ஜேக் ஹாப்ஸ், லின் ஹட்டன், பிராட்மேன், டெண்டுல்கர், ரிச்சர்ட்ஸ், சோபர்ஸ், கில்கிறிஸ்ட், மார்ஷல், வார்னே, அக்ரம், டென்னிஸ் லில்லி.
 

 

No comments:

Post a Comment